Skip to main content

இனிமேலும் எங்களால் தாங்க முடியாது... வண்ணாரப்பேட்டை ஜவுளி வர்த்தகர்கள் வேதனை..!

Published on 29/05/2020 | Edited on 29/05/2020

 

vannarpettai chennai Textile Market wholesale


ஜூன் 1 முதல் தங்களது கடைகளைத் திறக்க அரசு அனுமதி அளிக்க வேண்டும், இனிமேலும் கடைகளைத் திறக்க முடியவில்லை என்றால் எங்களால் தாங்க முடியாது என்கின்றனர் வண்ணாரப்பேட்டை ஜவுளி வர்த்தகர்கள்.
 


வண்ணாரப்பேட்டை கட்பீஸ் வியாபாரிகள் சங்க சரவணக்குமார் நம்மிடம் பேசுகையில், ''சென்னை வண்ணாரப்பேட்டை எம்.சி. ரோட்டில் துணிக்கடைகள் உள்ளன. இந்தத் துணிக்கடைகளில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை செய்கிறார்கள். மறைமுகமாக 5 ஆயிரம் பேர் வேலை செய்கிறார்கள். மொத்தம் 10 ஆயிரம் பேர் வேலை செய்கிறார்கள். அவர்களுடைய வாழ்வாதாரமும், இங்கு உள்ள துணிக்கடை வைத்திருப்பர்களின் வாழ்வாதாரமும் மிகப் பெரிய அளவில் கேள்விக்குறியாகி உள்ளது. எம்.சி. ரோட்டில் தினமும் ரூபாய் 25 கோடியில் இருந்து 30 கோடி வரை வர்த்தகம் நடைபெறும் இடம். இப்போது மிகப்பெரிய பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
 

துணிக்கடை வைத்திருப்பவர்களுக்கு என்ன பாதிப்பு என்றால், கடை வாடகை, வரி, மின்சாரக் கட்டணம் கட்ட வேண்டும். இதைவிட முக்கியமானது எங்களது தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தைக் காப்பாற்ற வேண்டும். எங்களால் முடிந்தவரை மார்ச் மாதச் சம்பளத்தைக் கொடுத்துவிட்டோம். ஏப்ரல் மாதத்திலேயும் பாதிச் சம்பளம் கொடுத்துவிட்டோம். இனிமேலும் சம்பளம் கொடுக்க வேண்டும் என்றால் எங்களது கடைகளைத் திறந்தால்தான் எங்களது தொழிலாளர்களுடைய வாழ்வாதாரத்தைக் காப்பாற்ற முடியும். அதற்குத் தமிழக அரசு எங்களுக்கு உதவி செய்ய வேண்டும்.

 

vannarpettai chennai textile wholesale

 


மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள டி.நகரில் கடைகள் திறக்கப்பட்டுள்ளது, புரசைவாக்கத்தில் கடைகள் திறக்கப்பட்டுள்ளது, சென்னையில் பெரும்பாலான இடங்களில் கடைகள் திறக்கப்பட்டுள்ளது. கடைகள் திறக்கப்படாதது வண்ணாரப்பேட்டை மற்றும் குடோன் தெரு ஆகியவைதான். முகக் கவசம், கைக் கழுவும் திரவம், சமூக இடைவெளி எனத் தமிழக அரசு சொல்லக்கூடிய அனைத்துக் கட்டுப்பாட்டுக்களையும் நாங்கள் கடைப்பிடிக்கிறோம்.ஏ.சி.யை இயக்க மாட்டோம் என தெரிவித்திருக்கிறோம். 


எல்லா பண்டிகைகளும் தற்போது முடிந்துவிட்டது. இப்போது எந்தப் பண்டிகைகளும் இல்லை. பிறகு ஏன் கடைகள் திறக்க வேண்டும் என்ற கேள்வி எழலாம். கடைகளைத் திறந்தால்தான் பாதி சம்பளமாவது தொழிலாளர்களுக்கு கொடுக்க முடியும். 65 நாட்களுக்கும் மேலாகக் கடைகள் அடைக்கப்பட்டுள்ளதால் எங்களிடம் வாங்கக் கூடிய சிறு வியாபாரிகள், அண்டை மாநிலங்களுக்கு செல்கிறார்கள். இதனால் வர்த்தகம் பாதிக்கப்படுகிறது. 
 

http://onelink.to/nknapp

 

கரோனா சிறப்பு அதிகாரி இராகிருஷ்ணன், சென்னை மாநகராட்சி கமிஷ்னர் உள்பட அரசு அதிகாரிகளிடம் மனு கொடுத்துள்ளோம். அவர்கள் முதலமைச்சரிடம் பேசி சொல்கிறோம் என்கிறார்கள். நல்ல முடிவு வரும் எனக் காத்திருக்கிறோம். வரும் ஜூன் 1ஆம் தேதி முதல் கடை திறக்க அனுமதி அளித்தாலும் நன்றாக இருக்கும். எங்களால் தாங்க முடியும் வரை தாங்கிக்கொண்டோம். இனிமேலும் கடையைத் திறக்க முடியவில்லை என்றால் எங்களால் எதுவும் செய்ய முடியாது என்றார் வேதனையுடன். 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

வெறுப்பு பிரச்சாரம்; மோடி மீது நடவடிக்கை எடுக்க வேண்டி போராட்டம் (படங்கள்)

Published on 24/04/2024 | Edited on 24/04/2024

 

ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாரா பரப்புரையில் பேசிய பிரதமர் மோடி, ''நாட்டின் சொத்தில் இஸ்லாமியர்களுக்கே முதல் அதிகாரம் என்று காங்கிரஸ் ஆட்சியில் சொன்னார்கள். இதனால் இந்துக்களின் சொத்துகள் போகிறது. இந்துக்களின் பணத்தை எடுத்து இஸ்லாமியர்களுக்கு கொடுக்க நினைக்கிறது காங்கிரஸ். இதன் பொருள் அவர்கள் இந்தச் செல்வத்தை அதிக குழந்தைகளைப் பெற்றவர்களுக்கும், ஊடுருவல்காரர்களுக்கும் பகிர்ந்தளிப்பார்கள்.

நீங்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணம் ஊடுருவல்காரர்களுக்கு செல்ல வேண்டுமா? இதை நீங்கள் அங்கீகரிக்கிறீர்களா? பெண்கள் வைத்திருக்கும் தங்கத்தைக் கணக்கிட்டு, அந்தச் செல்வத்தை பங்கீடு செய்வோம் என்று காங்கிரஸின் தேர்தல் அறிக்கை கூறுகிறது. மன்மோகன் சிங் தலைமையிலான அரசு, முஸ்லீம்களுக்கு செல்வத்தில் முதல் உரிமை உண்டு என்று கூறியது. இந்த நகர்ப்புற நக்சல் சிந்தனை என் தாய்மார்கள் மற்றும் சகோதரிகளின் மாங்கல்யத்தைக் கூட விட்டுவைக்காது.." எனச் சர்ச்சையாக பேசினார். இஸ்லாமியர்கள் ஊடுருவல்காரர்கள் என நாட்டின் பிரதமர் மோடி பேசிய பேச்சுக்கு நாடு முழுவதும் பலத்த கண்டனம் எழுந்து வருகிறது. பிரதமர் மோடியின் இந்த பேச்சுக்கு தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்க்கட்சியினர் கூறிவருகின்றனர்.

இந்த நிலையில், தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறி, வெறுப்பு பிரச்சாரம் செய்துவரும்  பிரதமர் மோடி மீது தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்கவும், வழக்கு பதிவு செய்திடவும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் மத்திய சென்னை மாவட்டம் சார்பில், சென்னை வள்ளுவர் கோட்டத்தில் இன்று காலை கண்டனம் முழக்கப் போராட்டம் நடைபெற்றது. பிறகு நுங்கம்பாக்கம் காவல் நிலையத்திற்கு புகார் அளிக்க, பேரணியாக சென்றனர்.

Next Story

ஷர்மிளா தற்கொலை விவகாரம்; ஆர்.டி.ஓ. விசாரணைக்கு உத்தரவு!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Sharmila incident RdO Order for investigation

சென்னை பள்ளிக்கரணை பகுதியைச் சேர்ந்தவர் பிரவீன். இவர் ஜல்லடையான் பேட்டையைச் சேர்ந்த ஷர்மிளா (வயது 22) என்ற பெண்ணை கடந்த சில வருடங்களாக பிரவீன் காதலித்து வந்துள்ளார். கடந்த சில மாதங்களுக்கு முன்னர் பிரவீன் - சர்மிளா இருவரும் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுடைய காதலுக்கு இரு வீட்டார் தரப்பிலும் எதிர்ப்புகள் எழுந்த நிலையில், எதிர்ப்பையும் மீறி இந்தத் திருமணமானது நடைபெற்றது. இந்த காதல் திருமணத்தை தொடர்ந்து அதே பகுதியில் இவர்கள் இருவரும் வசித்து வந்தனர்.

இத்தகைய சூழலில் கடந்த பிப்ரவரி மாதம் 24 ஆம் தேதி ஷர்மிளாவின் சகோதரன் தினேஷ் மற்றும் நண்பர்கள் சேர்ந்து இரவு அந்தப் பகுதியில் இளைஞர் பிரவீன் அமர்ந்திருந்தபோது அவரை சரமாரியாக பயங்கர ஆயுதங்களைக் கொண்டு தாக்கினர். படுகாயங்களுடன் மீட்கப்பட்ட இளைஞர் பிரவீன் குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். போலீசார் விசாரணையில் நடந்தது ஆணவக் கொலை என்பது உறுதியானது. கொலையில் ஈடுபட்ட பெண்ணின் சகோதரர் தினேஷ் உட்பட நான்கு பேரை போலீசார் கைது செய்தனர். இந்தச் சம்பவம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.

இதனையடுத்து காதல் கணவன் கொலை செய்யப்பட்டதால் ஷர்மிளா மன உளைச்சலில் இருந்த நிலையில் தற்கொலைக்கு முயன்றுள்ளார். உடனடியாக மீட்கப்பட்டு ராஜீவ் காந்தி மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில் 9 நாட்களாக கோமா நிலையில் சிகிச்சை பெற்றுவந்த ஷர்மிளா, சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் நள்ளிரவு (22.04.2024) உயிரிழந்தார். மேலும் தன்னுடைய காதல் கணவன் கொல்லப்பட்டது குறித்தும், தன்னுடைய தற்கொலை முடிவு குறித்தும் ஷர்மிளா கடிதம் ஒன்றையும் எழுதியுள்ளார். அதில், 'அவன் இல்லாத லைஃப் எனக்கு வேண்டாம். நானும் அவன் கூடவே போறேன்' என உருக்கமாக எழுதியுள்ளதோடு கொலைக்கு காரணமானவர்களின் பெயர்களையும் ஷர்மிளா குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையில் தற்கொலை செய்து கொண்ட ஷர்மிளா மரணம் தொடர்பாக கோட்டாட்சியர் (RDO - ஆர்.டி.ஓ.) விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. ஷர்மிளாவின் உடற்கூராய்வு சற்று நேரத்தில் நடைபெற உள்ளது எனவும், உடற்கூராய்வு வீடியோ பதிவு செய்யப்படும் எனவும் காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.