Skip to main content

உன் மனைவி, பிள்ளைகளை நினைச்சியா நீ...: ரவியிடம் அழுத வைகோ

Published on 02/04/2018 | Edited on 03/04/2018

 

ravi- vaiko


 

ravi - vaiko


நியூட்ரினோ எதிர்ப்பு இயக்கத்தின் தலைவர் என்ற முறையில் மதிமுக பொதுச்செயலர் வைகோ நியூட்ரினோ எதிர்ப்பு விழிப்புணர்வு நடைபயணத்தை அறிவித்தார். அதன் தொடக்க நிகழ்ச்சி மதுரை பழங்காநத்தத்தில் சனிக்கிழமை (மார்ச் 31) காலை நடைபெற்றது. அப்போது கூட்டத்தில் விருதுநகர் மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் ரவி, நியூட்ரினோ திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து மண்ணெண்யை ஊற்றி உடலில் தீ வைத்துக் கொண்டார். உடனடியாக அவரை மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கமாறு வைகோ கூறினார்.  
 

மருத்துவமனையில் ரவி சிகிச்சை பெறும்போது அவரை வைகோ சந்தித்தார். அப்போது ரவியிடம் பேசிய வைகோ, விரும்பி காதல் திருமணம் பண்ணுன. உன் மனைவி, பிள்ளைகளை நினைச்சியா நீ, நாட்டுக்கு போராடலாம் எவ்வளவோ, மனைவி, ரெண்டு பையன்கள, என்னைய, என்னால எப்படியா இத தாங்க முடியும் என அழுதார். 
 

இந்த நிலையில் ரவி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு வரப்பட்டது. ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ இன்று அரசு மருத்துவமனைக்கு வந்து ரவியின் உடலுக்கு மாலை வைத்து அஞ்சலி செலுத்தினார்.


 

vaiko - ravi 01.jpg


முன்னதாக அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
 

என் ஆரூயிர் தம்பி ரவியின் மறைவு வேதனை தருகிறது. என்னை மீளாத்துயரில் ஆழ்த்திவிட்டு போய் விட்டான். அவன் தீயில் எரிந்தது கண்ணுக்குள்ளேயே நிற்கிறது.
 

நியூட்ரினோ விழிப்புணர்வு நடைபயண விழா மேடையில் நான் அமர்ந்திருந்த போது யாரோ ஒருவர் தலையில் பெட்ரோலை ஊற்றி சிகரெட் லைட்டரால் தீ வைக்க முயன்றது எனக்கு சி.சி.டி.வி. வாயிலாக தெரிந்தது. உடனடியாக நான் தொண்டர்களிடம் அவரை காப்பாற்றுங்கள் என்று சொன்னேன்.
 

சிகரெட் லைட்டர் எரியாததால் தீப்பெட்டியால் ரவி பற்ற வைத்துள்ளார். அது பனைமரம் உயரத்துக்கு எரிந்தது.

 

vaiko - ravi 01.jpg


 

“வாழ வேண்டிய வயதில் என்னடா இப்படி பண்ணிட்டியே”ன்னு அவனிடம் கேட்டேன். அதற்கு அவர், நீங்கள் நாட்டுக்காக போராடுகிறீர்கள். உங்களுடைய சேவையுடன் ஒப்பிடுகையில் நான் செய்தது சிறிய தியாகம் தானே என்று சொன்னான்.
 

உடனடியாக அவரை அப்பல்லோ ஆஸ்பத்திரியில் அனுமதித்தோம். நேரிலும் சென்று பார்த்தேன். அப்போது மரண வாக்குமூலம் வாங்க நீதிபதியும் வந்திருந்தார்.
 

“என்னை யாரும் தீக்குளிக்க தூண்டவில்லை. நானே சுயமாக எடுத்த முடிவு இது. தமிழ்நாட்டை மோடி சுடுகாடாக ஆக்கப்பார்க்கிறார். நியூட்ரினோ திட்டம் தேனி மாவட்டத்துக்கு வரக்கூடாது” என்று மரண வாக்குமூலம் தந்தார்.

 

vaiko - ravi 01.jpg


 

அப்போது நான் கடைசியாக உனக்கு என்ன செய்ய வேண்டும்? என்று கேட்டேன். என் குடும்பத்தை பார்த்துக் கொள்ளுங்கள். என் பிள்ளைகளை நன்றாக படிக்க வையுங்கள் என்றார்.
 

நான் அவற்றை செய்து விடுவேன். ஆனால் தந்தையை இழந்து வாடும் பிள்ளைகள், அப்பா எங்கே என்று கேட்டால் நான் எப்படி பதில் சொல்வேன்?
 

ரவி கடைசியாக என்னிடம் பேசும்போது, என் உயிர்ப்பலி வாயிலாக உங்களது நடைபயணத்திற்கு ஒரு ஊக்கம் கிடைக்கும் என்று சொன்னது என் நினைவுகளில் அலை மோதுகிறது.
 

நியூட்ரினோ திட்டத்துக்கு எதிராக அவன் வைத்த தீப்பொறி என் இதயத்தில் எப்போதும் எரிந்து கொண்டே இருக்கும்.

 

vaiko - ravi 01.jpg


ம.தி. மு.க. தொண்டர்களுக்கு நான் சொல்வது என்னவென்றால் இனிமேல் யாரும் தீக்குளிக்கவோ, உயிர்ப்பலி செய்வதோ கூடாது என்று கூறி வைகோ கண்ணீர் விட்டு அழுதார்.
 

அதன் பிறகு சிவகாசிக்கு எடுத்துச் செல்லப்பட்ட ரவியின் உடலுடன் வைகோவும் புறப்பட்டுச் சென்றார். அங்கு நடைபெறும் இறுதிச் சடங்கில் பங்கேற்று விட்டு, உசிலம்பட்டியில் இருந்து அவர் நடைபயணத்தை தொடங்குகிறார்.
 

 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பாஜகவுக்குத் தீயாய் வேலை பார்க்கும் வைகோ சகோதரி மகன்!

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
Vaiko, who works as an opposite to mdmk, is his sister's son

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அதே சமயம் தமிழக அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரங்களை தீவிரப்படுத்தியுள்ளன.

இந்நிலையில், விருதுநகர் நாடாளுமன்றத் தொகுதி பாஜக வேட்பாளர் ராதிகா சரத்குமாருக்காக கிராமப்புறங்களில் தேர்தல் வேலை பார்த்துக்கொண்டிருந்தார் ஒருவர். அவரை நம்மிடம் சுட்டிக்காட்டிப் பேசிய நண்பர் “இவரோட தாத்தா மடத்துப்பட்டி கோபால் நாயக்கர் அந்தக் காலத்து காங்கிரஸ்காரர். பெருந்தலைவர் காமராஜரிடம் நெருக்கமாக இருந்தவர். அவருடைய பேரன்தான் இந்தக் கார்த்திகேயன். மதிமுகவுல இருந்தவர் 2019-ல் அதிமுகவுல சேர்ந்தார். இப்ப தேசிய நீரோட்டத்துல கலந்துட்டேன்னு பாஜகவுல சேர்ந்திருக்கார். மனுஷன் தீயா வேலை பார்க்கிறாரு. எதுக்கு கட்சி மாறிக்கிட்டே இருக்கீங்கன்னு கேட்டதுக்கு, கொள்கை பிடிக்காமத்தான் மதிமுகவுல இருந்து வெளிய வந்தேன். அப்புறம் அதிமுகவுல கடம்பூர் ராஜு கிட்ட என்னைப் பத்தி தப்பா சொல்லிட்டாங்க. அதனால அதிமுகவுல நீடிக்க முடியலன்னு சொல்லுறாரு. என்ன கொள்கையோ?” என்று சலித்துக்கொண்டார்.

‘தேர்தல் பணி எப்படிப் போகிறது?’ என்று கார்த்திகேயனிடம் கேட்டோம். “என்னோட நெருங்கிய வட்டத்துல.. சொந்தபந்தங்கள் கிட்ட தாமரைக்கு ஆதரவு திரட்டுறேன். இங்கே கிராமங்கள்ல என்னைத் தெரிஞ்சவங்க நிறைய பேர் இருக்காங்க. அவங்கள எல்லாம் பார்க்கிறேன். பாஜக வேட்பாளர்கள் வெற்றிக்கு அணில் மாதிரி உதவிக்கிட்டிருக்கேன். விருதுநகர், தென்காசின்னு ரெண்டு பார்லிமென்ட் தொகுதிக்கும் நான் வேலை பார்க்கிறேன்.” என்றார்.

பாஜக தலைமை கார்த்திகேயனைக் கட்சிக்குள் இழுத்ததற்கு ஒரு காரணம் இருக்கிறது. மதிமுக பொதுச்செயலாளர் வைகோ-வுடைய சகோதரி 
சரோஜாவின் மகன் என்ற அடையாளம் இவருக்கு உண்டு.  

Next Story

“பா.ஜ.கவின் தேர்தல் வாக்குறுதி தமிழகத்தில் எடுபடாது” - வைகோ

Published on 15/04/2024 | Edited on 15/04/2024
"BJP's election ,manifesto will not be taken in Tamil Nadu says Vaiko

ஈரோடு பெரியார் நகரில் உள்ள மறைந்த கணேசமூர்த்தி எம்.பி. வீட்டிற்கு  ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ மற்றும் அவரது மனைவி ரேணுகா தேவி ஆகியோர் சென்று கணேசமூர்த்தி படத்திற்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர். பின்னர் கணேஷ்மூர்த்தியின் மகன், மகளுக்கு வைகோ மற்றும் அவரது மனைவி இருவரும் ஆறுதல் கூறினர்.

பின்னர் வீட்டை விட்டு வெளியே வந்த வைகோ நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- திருவள்ளுவர் கலாச்சார மையம் அமைக்கப்படும் எனப் பா.ஜ.க தனது தேர்தல் வாக்குறுதியில் தெரிவித்து, புதிதாக (டெஸ்ட்)சோதனை செய்து பார்க்கின்றனர். இது வெற்றி பெறாது.

பா.ஜ.க.வின் தேர்தல் வாக்குறுதி தமிழகத்தில் எடுபாடாது. இந்தியாவிலேயே எந்த மாநிலத்திற்கும் செல்லாத அளவிற்கு தமிழகத்திற்கு 9 முறை பிரதமர் மோடி வந்துள்ளார். கொரோனா, வெள்ளம் வந்தபோது எட்டிக் கூட பார்க்காத பிரதமர்  எப்படியாவது பாராளுமன்றத் தேர்தலில் வெற்றிப் பெற வேண்டும் எனத் தமிழகத்திற்கு 9 முறை வந்துள்ளார். அது கனவாகவே போகும்.

நாற்பதிலும் இந்தியா கூட்டணி வெற்றிப் பெறும் என்றளவிற்கான தேர்தல் களம் உள்ளது. தேர்தலுக்காக மத்திய அமைச்சர்கள் தமிழகத்திற்கு வருவதால் எந்த வித்தியாசமும் ஏற்படாது. பா.ஜ.க மாநில தலைவர்  வாக்கு சேகரிப்பு நேரம் முடிந்த பிறகும் பிரச்சாரம் செய்து வருகிறார்‌. இதற்கு தேர்தல் ஆணையம்தான் நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனத் தெரிவித்தார்.