ADVERTISEMENT

திமுக எம்.எல்.ஏக்கள், நிர்வாகிகளுக்கு தலைமை அவசர அழைப்பு..! - பரபரப்பு!

06:00 PM Jul 25, 2018 | Anonymous (not verified)


திமுக எம்.எல்.ஏக்கள், நிர்வாகிகள் மற்றும் கட்சியின் முக்கிய பிரமுகர்கள் சென்னைக்கு வருமாறு திமுக தலைமை அவசர அழைப்பு விடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

உடல்நலக்குறைவு, வயது முதிர்வு காரணமாக திமுக தலைவர் கலைஞர் கடந்த ஒன்றரை வருடத்திற்கு மேலாக சென்னை கோபாலபுரம் இல்லத்தில் ஓய்வு எடுத்து வருகிறார்.

சமீப காலமாக அவரது உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்து வருகின்றனர். அவர் பேரக்குழந்தைகளுடன் விளையாடுவது போன்ற வீடியோ காட்சிகளும் அவ்வப்போது வெளியாகி அவரது தொண்டர்களை மகிழ்ச்சியில் அழ்த்தியது.

கலைஞரின் மூச்சுக்குழாயில் அவருக்கு பிரச்சனை இருப்பதன் காரணமாக அவருக்கு ட்ரக்கியாஸ்டமி குழாய் பொருத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், கடந்த 18ம் தேதி அவருக்கு குழாய் மாற்றும் பொருட்டு, காவேரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று மாலையில் வீடு திரும்பினார்.

ADVERTISEMENT

ADVERTISEMENT

இந்நிலையில், இன்று கலைஞரின் உடல்நிலை மேலும் மோசமடைந்ததாகவும் அவர் வழக்கத்தைவிட அதிகமான சோர்வடைந்ததாகவும் தகவல்கள் பரவின. இதையடுத்து, கோபாலபுரம் இல்லத்தில் கலைஞரை சந்தித்துவிட்டு அவரது உடல்நிலை குறித்து பேட்டியளித்த மு.க.ஸ்டாலின், கலைஞர் உடல்நலத்துடன் இருக்கிறார். ட்ரக்கியாஸ்டமி குழாய் மாற்றப்பட்டதால் லேசான காய்ச்சல் ஏற்பட்டுள்ளதே தவிர மற்றபடி ஒன்றுமில்லை. அதனால் வதந்திகளை நம்பவேண்டாம் என விளக்கமளித்தார்.

இந்நிலையில், தற்போது திமுக எம்.எல்.ஏக்கள், நிர்வாகிகள் மற்றும் கட்சியின் முக்கிய பிரமுகர்களை சென்னைக்கு வருமாறு திமுக தலைமை அவசர அழைப்பு விடுத்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கலைஞரின் உடல்நிலை குறித்த தகவல்கள் பரவிய நிலையில், கட்சி நிர்வாகிகளுக்கும் எம்.எல்.ஏக்களுக்கும் ஸ்டாலின் அழைப்பு விடுத்திருப்பதாக வெளிவந்துள்ள தகவல் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT