Skip to main content

மாணவர்களுக்குத் தேர்வுகள் எப்போது நடைபெறும்..? மத்திய அமைச்சர் பதில்...

Published on 28/04/2020 | Edited on 28/04/2020

 

union minister about cbse final exam dates

 

கரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் உள்ள கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ள சூழலில், தேர்வுகள் எப்போது நடைபெறும் என்ற கேள்விக்கு மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் பதிலளித்துள்ளார்.

கடந்த ஒருமாதமாக நாடு முழுவதும் பள்ளி கல்லூரிகள் இயங்காததுடன், பொதுத்தேர்வுகளும், செமஸ்டர் தேர்வுகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், இந்த இக்கட்டான காலகட்டத்தில் மாணவர்கள் சந்திக்கும் உளவியல் பிரச்சனைகள் உள்ளிட்டவை குறித்து பெற்றோர்களிடம் காணொளிக்காட்சி மூலமாக உரையாற்றினார் ரமேஷ் பொக்ரியால். இதில் பெரும்பாலான பெற்றோர்களின் கேள்வி, பொதுத்தேர்வுகள் எப்போது நடைபெறும் என்பதாகவே இருந்தது.

இதற்குப் பதிலளித்த அமைச்சர், "ஊரடங்கு முடிவடைந்து நாடு முழுவதும் இயல்பு நிலை திரும்பும்போது மாணவர்களுக்குப் பொதுத் தேர்வுகள் நடத்தப்படும். இப்படிப்பட்ட சூழலில், பெற்றோர்கள் தங்களின் குழந்தைகளை எல்லா நேரங்களிலும் படிக்கச் சொல்லிக் கட்டாயப்படுத்தக் கூடாது. அதேநேரம் தேர்வுகளுக்கு மாணவர்கள் தயாராக இருப்பதைப் பெற்றோர் உறுதி செய்ய வேண்டும்.

என்னென்ன தேர்வுகள் நடைபெறும் என்பது குறித்து சிபிஎஸ்இ ஏற்கெனவே தெளிவுபடுத்தியுள்ளது. தேர்வுகள் நடத்தப்படாத பாடங்களுக்கு, முந்தைய தேர்வுகளின் மதிப்பெண்களை அடிப்படையாகக் கொண்டு மதிப்பீடு செய்யப்படும்" எனத் தெரிவித்தார். 10- ஆம் வகுப்பிற்கு, சில தேர்வுகள் நடைபெற்ற நிலையில், மீதமுள்ள பாடங்களுக்குத் தேர்வுகள் நடத்தப்படாது எனவும், 12- ஆம் வகுப்புக்கு முக்கியப் பாடங்களுக்கு மட்டும் தேர்வுகள் இருக்கும் எனவும் சிபிஎஸ்இ அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

புத்தகங்களைப் பார்த்து எழுதும் தேர்வு; விரைவில் அமல்படுத்த திட்டம்

Published on 22/02/2024 | Edited on 22/02/2024
Plan to implement soon on open book examination

கடந்த 2018ஆம் ஆண்டு மத்திய அரசு, தேர்வு சீர்திருத்தம் குறித்து ஆராய, கான்பூர் ஐ.ஐ.டி பேராசிரியர் பிரேம்குமார் கல்ரா தலைமையிலான வல்லுநர் குழுவை அமைத்தது. அந்த குழு. தேர்வு சீர்திருத்த வரைவு அறிக்கையை அப்போது வெளியிட்டது. அதில், கணினி முறையில் தேர்வு, உயர் சிந்தனை ஆய்வு திறன் தேர்வு, சிக்கலான பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பது, புத்தகங்களை பார்த்து தேர்வு எழுதுவது உள்ளிட்ட 12 பரிந்துரைகளை பரிந்துரைத்தது. 

பிரேம்குமார் கல்ரா தலைமையிலான வல்லுநர் குழு பரிந்துரைகளின்படி, புதிய முயற்சிகளை அவ்வப்போது மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சி.பி.எஸ்.இ) எடுத்து வருகிறது. அந்த வகையில் சி.பி.எஸ்.இ, கடந்த 2023ஆம் ஆண்டு வெளியிட்ட புதிய தேசிய பாடத்திட்டத்தில் உள்ள பரிந்துரைகளின்படி 9ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை, மாணவர்கள் புத்தகங்களைப் பார்த்து எழுதும் முறையை நடைமுறைப்படுத்த சி.பி.எஸ்.இ தீவிரம் காட்டி வருவதாக கூறப்படுகிறது.

அந்த வகையில், வரும் கல்வியாண்டில் நவம்பர் மாதம் நடைபெறும் தேர்வுகளில் 9ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை படிக்கும் சி.பி.எஸ்.இ மாணவர்கள் கணிதம்,அறிவியல் உள்ளிட்ட சில பாடங்களில் சோதனை முறையில் புத்தகங்களை பார்த்து தேர்வு எழுத சி.பி.எஸ்.இ ஏற்பாடு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. 

Next Story

இனிமேல் ஆண்டுக்கு இரண்டு முறை பொதுத் தேர்வுகள்; மத்திய அமைச்சகம் அறிவிப்பு

Published on 20/02/2024 | Edited on 20/02/2024
Union Minister announced From now on, public examinations will be held twice a year

கடந்த 2020ஆம் ஆண்டில் இருந்து நாடு முழுவதும் உள்ள கல்வி நிலையங்களில் தேசிய கல்விக் கொள்கையை அமல்படுத்த மத்திய அரசு முனைப்பு காட்டி வருகிறது. இந்த திட்டத்துக்கு தமிழ்நாடு உள்ளிட்ட சில மாநிலங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. 

இந்த நிலையில், 10 மற்றும் 12ஆம் வகுப்பு படிக்கும் சிபிஎஸ்சி மாணவர்களுக்கு, ஆண்டுக்கு இரண்டு முறை பொதுத்தேர்வுகள் நடத்தப்படும் என்று மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ‘வரும் 2025 - 2026ஆம் கல்வியாண்டுகளில், சிபிஎஸ்சி பாடத்திட்டத்தின் கீழ் 10 மற்றும் 12ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்கள், ஆண்டுக்கு இரண்டு முறை பொதுத் தேர்வுகள் நடத்தப்படும். மாணவர்களின் மன அழுத்தத்தை குறைப்பதற்காகவும், தேர்வில் நல்ல மதிப்பெண் பெறுவதற்காகவும் தேசியக் கல்வி கொள்கையின் கீழ் இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்படும்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

கடந்த 2023ஆம் ஆண்டு, சிபிஎஸ்சி பாடத்திட்டத்தின் கீழ் 10 மற்றும் 12 படிக்கும் படிக்கும் மாணவர்களுக்கு பொதுத்தேர்வுகள் ஆண்டுக்கு இரண்டு முறை நடத்தப்படும் என மத்திய கல்வி அமைச்சகம் தெரிவித்திருந்தது. மேலும், இந்த தேர்வை மாணவர்கள் விருப்பப்படி ஒரு முறை அல்லது இரண்டு முறையும் தேர்வை எழுதிக்கொள்ளலாம் எனவும் தெரிவித்திருந்தது. மாணவர்களின் செயல் திறன் எந்த தேர்வில் சிறப்பாக உள்ளதோ அதன் மதிப்பெண்கள் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும் எனவும் அறிவிக்கப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.