Skip to main content

கலவரமான தூத்துக்குடி! போலீசார் துப்பாக்கி சூட்டில் 2 பேர் பலி!

Published on 22/05/2018 | Edited on 22/05/2018
dea


ஸ்டெர்லைட் ஆலைக்கு நிரந்திர தடைவிதிக்கக் கோரி தூத்துக்குடி ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட முயன்ற போராட்டக்காரர்கள் மீது போலீஸார் தடியடி நடத்தி கலைக்க முயன்றதால் இருதரப்பினருக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டது. இதனால் அந்த பகுதியே கலவரமானது. மேலும் போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டில் 2 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
 

dead


ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி குமாரரெட்டியார்புரம் கிராம மக்கள் நடத்திவரும் போராட்டம் இன்று 100வது நாளை எட்டியுள்ளது. இதனைதொடர்ந்து, ஸ்டெர்லைட் ஆலைக்கு நிரந்திர தடைவிதிக்கக் கோரி தூத்துக்குடி முழுவதும் இன்று ஒரு நாள் கடையடைப்பு போராட்டம் நடைபெறுகிறது. தொடர்ந்து பழைய பேருந்து நிலையம் ஏதிரில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டமும் நடைபெறுகிறது. இதனால் நேற்று இரவு தூத்துக்குடி சிப்காட் மற்றும் தெற்கு காவல் நிலைய எல்கைக்கு உட்பட்ட பகுதிகளில், 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
 

dea


இந்நிலையில், ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட பல்வேறு கிராம மக்கள் ஏராளமானோர் இன்று காலை பேரணியாக சென்றனர். அப்போது பேரணியாக சென்ற பொதுமக்களை ஆட்சியர் அலுவலகம் செல்ல விடாமல் ஒவ்வொரு பகுதியிலும் தடுப்புகளை வைத்து போலீசார் தடுத்து நிறுத்த முயன்றனர். ஆனால் தடையை மீறி போராட்டகாரர்கள் தொடர்ந்து சென்றனர். இதனால் போராட்டக்காரர்கள் மீது போலீஸார் தடியடி நடத்தி கலைக்க முயன்றனர்.

அப்போது போலீசார் மீது கல்வீசி பதில் தாக்குதல் நடத்திய போராட்டகாரர்கள் போலீசாரின் வாகனத்தையும் கவிழ்த்துப் போட்டு சேதப்படுத்தினர். போராட்டகாரர்கள் கல்வீசி தாக்கியதை தொடர்ந்து நிலைமையை கட்டுக்குள் கொண்டுவர போலீசார் கண்ணீர் புகைக்குண்டுகளை வீசினர்.

அதையும் பொருட்படுத்தாத மக்கள் கண்ணீர் புகைக்குண்டு வீசும் வாகனத்தையும், போலீசாரையும் ஓட ஓட விரட்டி அனுப்பினர். இதனால் நிலையை கட்டுக்குள் கொண்டு வர முடியாத போலீசார் திணறினர். இதில் போலீசார் துப்பாக்கி சூடு நடத்தியுள்ளனர். போலீசாரின் தூப்பாக்கி சூட்டில் 2 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

தொடர்ந்து திட்டமிட்டப்படி போராட்டக்காரர்கள் ஆட்சியர் அலுவலக வளாகத்திற்குள் நுழைந்தனர். அப்போது போராட்டகாரர்களை போலீசார் தடுக்க முயன்ற போன்ற கடும் வன்முறை ஏற்பட்டது. இதில் ஆட்சியர் அலுவலகத்திற்குள் இருந்த வாகனங்கள் அடித்து நொறுக்கப்பட்டன. 

சார்ந்த செய்திகள்

Next Story

சமூக விரோதிகளை எதிர்த்து கேள்விகேட்காத திமுகவும்தான் 13 பேர் கொலைக்கு காரணம்!! -பொன்.ராதாகிருஷ்ணன்

Published on 30/06/2018 | Edited on 30/06/2018

 

pon

 

 

 

 

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் 13 பேர் சுடப்பட்டதற்கு சமூக விரோதிகளை கேள்விகேட்காத திமுகவே காரணம் என மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் குற்றம்சாட்டியுள்ளார்.  

 

இன்று கன்னியாகுமரி நாகர்கோவிலில் செய்தியாளர்களை சந்தித்த மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறுகையில்,

 

தூத்துக்குடியில் ஏற்பட்ட துப்பாக்கி சூட்டு சம்பவத்திற்கு மக்கள் அதிகாரம் அமைப்பே காரணம். அமைதியாக நடந்த போராட்டத்தில் ஒரு பகுதி மக்களை திசை திருப்பி கொலைக்களமாக மாற்றிய அந்த அமைப்பின் மீது நடவடிக்கை எடுக்கா விட்டால் வருங்காலத்தில் இன்னும் நிறைய தூத்துக்குடி சம்பவங்களை போன்ற பல தூத்துக்குடி சம்பவங்கள்  உருவாக இதுவே காரணமாக இருந்துவிடும்.

 

 

 

மக்கள் அதிகாரம் அமைப்பு மட்டுமல்ல மக்கள் போராட்டத்தை திசை திருப்பிய அனைத்து அமைப்புகள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும். அந்த அமைப்புகள் மட்டுமல்ல, அந்த சமூக விரோதிகளை எதிர்த்து கேள்விகேட்காத திமுகவும்தான் தூத்துக்குடியில் நடந்த துப்பாக்கி சூட்டில் நடந்த 13 பேர் கொலைக்கு காரணம் எனக்கூறினார்.  

Next Story

நடிகரான என்னை பார்த்தால், தூத்துக்குடி மக்கள் மகிழ்ச்சி அடைவார்கள்: ரஜினிகாந்த்

Published on 30/05/2018 | Edited on 30/05/2018


நடிகரான என்னை பார்த்தால், தூத்துக்குடி மக்களும் மகிழ்ச்சி அடைவார்கள் என்று நம்புகிறேன் என நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வலியுறுத்தி கடந்த 22ஆம் தேதி போராட்டம் நடைப்பெற்றது. அப்போது ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டத்தில், போராட்டக்காரர்களுக்கு காவல்துறையினருடன் மோதல் ஏற்பட்டதன் காரணமாக கல் வீச்சு, கண்ணீர் புகை, தடியடி, துப்பாக்கிச் சூடு உள்ளிட்டவை நடத்தப்பட்டன. அதில் போராட்டக்காரர்கள் 13 பேர் உயிரிழந்தனர். மேலும் பலர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்நிலையில், துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் காயமடைந்தவர்களை நேரில் சந்தித்து துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் நலம் விசாரித்தார். இதேபோல், நேற்று ஆளுநர் பன்வாரிலால் புரோகித் துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறினார். தொடர்ந்து பல அரசியல் தலைவர்ளும், சமூக ஆர்வலர்களும் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து வருகின்றனர்.

அந்தவகையில் நடிகர் ரஜினிகாந்த் துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்தவர்களை சந்தித்து ஆறுதல் கூற இன்று தூத்துக்குடி செல்கிறார். இதுகுறித்து சென்னை போயஸ் கார்டன் இல்லத்தில் இன்று காலை செய்தியாளர்களை சந்தித்த அவர்,

தூத்துக்குடியில் காயமடைந்தவர்களை சந்திக்க செல்கிறேன். பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் சொன்னால்தான் எனக்கு மகிழ்ச்சி. நடிகரான என்னை பார்த்தால், தூத்துக்குடி மக்களும் மகிழ்ச்சி அடைவார்கள் என்று நம்புகிறேன். சட்டப்பேரவை கூட்டத்தொடரை திமுக புறக்கணித்தது குறித்து தான் கருத்து கூற விரும்பவில்லை.

தூத்துக்குடி சம்பவத்திற்கு திமுகதான் காரணம் என முதலமைச்சர் குற்றச்சாட்டு குறித்த பதில் அளித்த ரஜினி, திமுகவை அதிமுகவும், அதிமுகவை திமுகவும் விமர்சிப்பது தான் அரசியல், பழைய நிகழ்வுகளை பேசி பயனில்லை.

காலா படத்திற்கு கர்நாடகாவில் தடை விதித்திருப்பது குறித்து கேட்ட போது, கர்நாடக திரைப்பட வர்த்தக சபையுடன், தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை பேச்சு நடத்தி சுமூக தீர்வு காணும் என்றார்.