Skip to main content

"ஹலால் இஸ்லாமியர்களின் உணவுமுறை என சுருக்கிப் பார்க்கக்கூடாது" - தொல்.திருமாவளவன்

Published on 30/05/2022 | Edited on 30/05/2022

 

thirumavalavan speech in world halal summit

 

"ரஷ்யா-இஸ்லாமிய உலகம்: கசான் உச்சி மாநாடு" என்பது ரஷ்யக் கூட்டமைப்பு நாடுகளுக்கும் இஸ்லாமிய உலக நாடுகளுக்கும் (OIC) இடையிலான பொருளாதார ஒத்துழைப்பிற்கான முக்கிய கூட்டுத் தளமாகும். இதன் முதல் பொருளாதார உச்சி மாநாடு 2009 ல் நடைபெற்றது. ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் மற்றும் துருக்கி அதிபர் ரசிப் தைய்யிப் எர்டோகன் இருவரும் அந்த மாநாட்டை துவக்கி வைத்தனர். இரண்டு ஆண்டுகாலம் கரோனா பெரும்தொற்றினால் இந்த உச்சி மாநாடு நடைபெறாமல் இருந்தது. இந்த ஆண்டு ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின், டாடர்ஸ்தான் குடியரசின் தலைவர் ருஸ்தம் மின்னிகானோவ் ஆகியோரின் தலைமையில் "ரஷ்யா - இஸ்லாமிய உலகம்: கசான் 13வது உச்சி மாநாடு" மே மாதம் 19ம் தேதியிலிருந்து 21ம் தேதி வரை கசானில் நடைபெற்றது. ரஷ்யாவின் வோல்கா பல்கேரிய (VOLGA BULGARIANS) தேசிய இன மக்கள் இஸ்லாத்தைத் தழுவிய வருடாந்திர கொண்டாட்டங்களும் மிகச் சிறப்பாக நடைபெற்றது. நிகழ்ச்சியின் முக்கிய பகுதியாக "உலக ஹலால் தினம் "கருத்தரங்கம் மற்றும் கண்காட்சி நடத்தப்பட்டது.

 

இந்த உச்சி மாநாட்டின் நோக்கம் ரஷ்யா மற்றும் இஸ்லாமிய நாடுகளுக்கு இடையேயான வர்த்தகம், பொருளாதாரம், நிதி மேலாண்மை, மருத்துவம், விவசாயம், அறிவியல் ஒத்துழைப்பு மற்றும் கலாச்சார பரிமாற்றங்களை மேம்படுத்தும் திட்டங்களைக் கொண்டிருந்தது. மூன்று நாள் நிகழ்வில் 147 ஹலால் கண்காட்சிகள் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தது. UAE, துருக்கி, தென் ஆப்ரிக்கா, எகிப்து, இந்தோனேசியா, மலேசியா, ஜோர்டான், ரஷ்யா, கஜகஸ்தான், சிங்கப்பூர், பாகிஸ்தான், உஸ்பெகிஸ்தான், துர்க்மெனிஸ்தான், சூடான், ஈராக், நெதர்லேண்ட், மொரோக்கோ, ஸ்பெயின் உள்ளிட்ட 64 நாடுகளைச் சேர்ந்த சுமார் 10,000க்கும் மேற்பட்டவர்கள் பங்கு பெற்றனர்.

 

இந்த உச்சி மாநாட்டில் உலக ஹலால் கருத்தரங்கில் உரையாற்றிடுவதற்கு இந்தியாவிலிருந்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவனுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. அவருடன் இஸ்லாமிய ஜனநாயக பேரவையின் செயலாளர் அப்துர் ரஹ்மான் மற்றும் உலக ஹலால் பேரவையின் தலைவர் முகம்மத் ஜின்னா ஆகியோரும் கலந்து கொண்டார்கள். மூன்று நாட்கள் நடைபெற்ற இந்த சர்வதேச உச்சி மாநாட்டில், கருத்தரங்கம், கண்காட்சிகள் எனப் பல நிகழ்வுகளில் தொல்.திருமாவளவன் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்.

 

அவர் சர்வதேச கருத்தரங்கில் உரையாற்றிடும் போது, ஹலால் என்பதை அறம் என்ற பொருளில் "அழுக்காறு அவா வெகுளி இன்னாச்சொல் நான்கும் இழுக்கா இயன்றது அறம் என்ற திருக்குறளை மேற்கோள் காட்டி உரையாற்றினார். "ஹலால் என்பது இஸ்லாமியர்கள் பின்பற்றும் உணவு முறை என்றோ அல்லது விலங்குகளை அறுப்பது என்றோ சுருக்கிப் பார்த்திடக் கூடாது. இறைச்சிக்கான "ஹலால்" என்பது உலக வணிக சந்தையில் உயர்தரமான தயாரிப்புகளையும், தரமான சேவைகளையும் உள்ளடக்கிய முறைப்படுத்தப்பட்ட சர்வதேச வணிக கொள்கையாகும். ஹலால் வணிகம் கவனிக்கத்தக்க வகையில் உலகளாவிய சந்தையில் வளர்ந்து வருகிறது. உலகளாவிய ஹலால் சந்தையின் மதிப்பு 6.8 டிரில்லியன் அமெரிக்க டாலர்கள் என மதிப்பிடப்படுகிறது.

 

சர்வதேச அளவில் நுகர்வு கலாச்சார விழிப்புணர்வு மக்களிடையே அதிகரித்து வருகிறது. அதைச் சார்ந்த நுகர்வு தேவைகளும் அதிகரித்து வருகிறது. சந்தையின் நுகர்வு தேவைகளைப் பூர்த்தி செய்யும் விதமாக ஹலால் வணிகம் வளர்ந்து வருகிறது. ஹலால் வணிகத்தில் பல்வேறு துறைகளில் ஏற்பட்டுள்ள பல முக்கியமான சாதனைகளையும் நிகழ்வுகளையும் கவனிக்கும் போது இதற்கு முன் எப்போதும் இல்லாத அளவிற்கு உலகளாவிய அளவில் ஹலால் வணிகத்திற்கு மிகப் பெரும் அங்கீகாரம் கிடைத்துள்ளது. ஹலால் என்ற நெறிப்படுத்தப்பட்ட வாழ்வியல் முறை, மக்களுக்கும், சுற்றுப்புறச்சூழலுக்கும் சமூகத்திற்கும் பல்வேறு தொழில் துறைகளுக்கும் மிகச் சிறந்த செழிப்பான வளர்ச்சியைத் தருகிறது

 

ஹலால் துறையின் தொடர் வளர்ச்சிகள், கலாச்சார மரபு மீறாத அதன் உயர்ந்த தரம், மனித சமூகத்தின் மேன்மைக்கான அதன் உலகளாவிய பண்பு, அனைத்து மக்களையும் உள்வாங்கிக் கொள்ளும் அதன் தனித்தன்மையால் ஹலால் அனைவராலும் ஏற்றுக் கொள்ளக்கூடிய வணிக முறையாக உள்ளது. ஆகவே வரும் காலங்களில் அழகுசாதனத் துறை முதல், நிதி மேலாண்மைத் துறை வரை எல்லா துறைகளிலும் ஹலால் மிகச் சிறந்த வளர்ச்சியை எட்டும் என உறுதியாக நம்புகிறேன். ஹலால் சந்தையில் பிரமிக்க வைக்கும் வாய்ப்புகள் ஏராளமாக இருக்கிறது. அதே நேரத்தில், காலத்தின் மாற்றத்திற்கு ஏற்ப சர்வதேச அணுகுமுறைகளிலும், நவீன தொழில் நுட்பத்திலும் நாம் போட்டிப் போட்டுக் கொண்டு மாற்றங்களை ஏற்படுத்த வேண்டும்.

 

"ஹவால்" இஸ்லாமியர்களுக்கு மட்டுமான வணிக சந்தை என்ற தோற்றம் உள்ளது, அதன் தோற்றத்தை மாற்றி, ஹலால் உற்பத்தியையும் அதைப் பற்றிய விழிப்புணர்வையும், அதன் சேவைகளையும், அதன் வணிக அடையாளத்தையும் முஸ்லிம் அல்லாத அனைத்து தரப்பு மக்களிடத்திலும் எடுத்துச் செல்ல வேண்டிய பொறுப்பு ஹலால் தொழில் துறையினருக்கு இருக்கிறது. இன்று முஸ்லிம் அல்லாதவர்கள் பலர் ஹலால் தயாரிப்புகளை தங்கள் வணிகம் மற்றும் தனிப்பட்ட தேவைகளுக்காகத் தேர்ந்தெடுக்கின்றனர். அதே வேளையில், சில நாடுகளில் ஹலால் ஃபோபியா என்று அதற்கு எதிரான அரசியல் செய்யும் நிலையும் சமீபகாலத்தில் அதிகரித்து வருவதை நாம் கணக்கில் கொள்ள வேண்டும். இனி ஹலாலை ஒரு பாரம்பரிய, தத்துவ மற்றும் பழமை மாறாத சித்தாந்தமாகப் பார்க்கக் கூடாது. 

 

ஹலால் என்பது சமரசம் செய்ய முடியாத இஸ்லாமியக் கொள்கைகளின் தொகுப்பாக இருந்தாலும், அதன் தயாரிப்புகளில் புதுமையின் கூறுகளும்,தனித்துவமான படைப்பாற்றல் திறனையும் ஹலால் தொழில்துறையினர் உள்வாங்கிக் கொண்டு மேம்படுத்திடப் பாடுபட வேண்டும். நவீனவாதிகளின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் விதமாகத் தயாரிப்புகளையும், சேவைகளையும் தனித்துவமாக வடிவமைக்கப்பட வேண்டும்..

 

SUNWHD & WHD ன் மிகச் சிறந்த நிபுணத்துவம் மற்றும் ஒன்றிணைந்த கூட்டுறவு முயற்சியினால் இந்தியாவிற்கும் டாடர்ஸ்தான் நாட்டிற்கும் இடையே பலவித தொழில் வாய்ப்புகளை ஏற்படுத்தும் வணிக தளங்களை உருவாக்கிட முடியும் என்று நம்புகிறேன். புதிய வணிகத் தளங்களின் மூலமாக இரு நாடுகளும் பலனடையும் வகையில் மிகச் சிறந்த ஏற்றுமதி, இறக்குமதி வணிக சந்தைகள் உருவாகும்" என்றார்.

 


 

சார்ந்த செய்திகள்

Next Story

“இந்தியாவின் மீட்பை தமிழகத்தில் இருந்து எழுதத் தொடங்கிய நாள்” - தொல்.திருமாவளவன்!

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
today India redemption started writing from Tamil Nadu says Thirumavalavan

சிதம்பரம் நடாளுமன்ற தொகுதியில் இந்தியா கூட்டணியில் திமுக தலைமையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் போட்டியிடுகிறார். இவர் தொகுதிக்குட்பட்ட அவரது சொந்த ஊரான அங்கனூர்  ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் தனது தாயாருடன் வாக்களித்தார்.

இதனைதொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் வாக்குச்சாவடி மையத்திற்கு வெளியே வந்து பேசுகையில், இந்த தேர்தல் இரண்டு கட்சிகளுக்கு எதிரான தேர்தல் அல்ல. சங்‌பரிவார் மற்றும் இந்திய மக்களுக்கு இடையேயான தர்ம யுத்தம்.  நாட்டு மக்கள் வெற்றிபெற வேண்டுமென்பதற்காக இந்தியா கூட்டணி மக்கள் பக்கம் நிற்கிறது.‌ இந்திய அரசமைப்புச் சட்டத்தை பாதுகாக்க இந்தியா கூட்டணிக்கு ஆதரவளிக்க வேண்டும்.‌ நாடு முழுவதும் இந்தியா கூட்டணிக்கு நல்ல வரவேற்பு இருக்கிறது.‌தமிழ்நாட்டில் 40க்கும் 40 இடங்களிலும் வெற்றி பெறும்.

கூட்டணி பலம், திமுக அரசின் மூன்றாண்டுகள் நலத்திட்டங்கள், இந்தியா கூட்டணியின் நோக்கங்களால் எங்கள் அணி மாபெரும் வெற்றி பெறும். இந்த தேசத்தின் மீட்பை தமிழகத்தில் இருந்து எழுதத் தொடங்குகிறோம் என்பதை அறிவிக்கும் நாள் இன்று. தமிழ்நாட்டுப் பெண்கள் திமுக அரசின் மீது நன்மதிப்பை கொண்டுள்ளனர். டெல்லியில் பாஜக வென்றால் மாநில அரசுகளை கலைக்கும் நிலை வரலாம், அப்படி நடந்தால் மகளிர் உரிமைத் தொகைக்கு ஆபத்து வரலாம்.‌ தேர்தல் ஆணையம் நேர்மையாக செயல்பட வேண்டும். ஆந்திரா, தெலுங்கானா கர்நாடகா மற்றும் கேரளாவில் பிரச்சாரத்தில் ஈடுபடுவேன். சிதம்பரம் தொகுதியில் பானை சின்னம் அமோக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறும்” என்றார்.

Next Story

“உலகளவில் பேசப்படும் திரைப்படமாக அமையும்” - திருமாவளவன் பாராட்டு 

Published on 17/04/2024 | Edited on 17/04/2024
thirumavalavan praised vetrimaaran gopi nainar manushi movie trailer

வெற்றிமாறன் தற்போது விடுதலை இரண்டாம் பாகத்தை இயக்கி வருகிறார். படத்தின் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. இதனிடையே கிராஸ் ரூட் ஃபிலிம்ஸ் என்ற நிறுவனத்தையும் நடத்தி வரும் வெற்றிமாறன், உதயம் என்.எச்.4, பொறியாளன், கொடி, லென்ஸ், அண்ணனுக்கு ஜே உள்ளிட்ட பல்வேறு படங்களைத் தயாரித்துள்ளார். கடைசியாக ஆண்ட்ரியா ஜெர்மியா நடிப்பில் 2022ஆம் ஆண்டு வெளியான 'அனல் மேலே பனித்துளி' படத்தைத் தயாரித்திருந்தார். 

இப்போது சூரி ஹீரோவக நடிக்கும் கருடன் படத்தைத் தயாரித்து வருகிறார். இப்படத்தின் மொத்த படப்பிடிப்பும் முடிந்து போஸ்ட் புரொடெக்‌ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது. இதனிடையே அறம் பட இயக்குநர் கோபி நயினார் இயக்கத்தில் ஆன்ரியா நடிப்பில் மனுசி என்ற தலைப்பில் ஒரு படத்தைத் தயாரித்து வருகிறார். இளையராஜா இப்படத்திற்கு இசையமைக்கும் நிலையில் கடந்த 2022ஆம் ஆண்டு ஆன்ரியாவின் பிறந்தநாளில் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டது. சூர்யா இதனை வெளியிட்டிருந்தார். 

இதையடுத்து இப்படத்தை பற்றி எந்த அப்டேட்டும் வராத நிலையில் நேற்று இப்படத்தின் ட்ரைலர் இன்று மாலை 6 மணிக்கு விஜய் சேதுபதி வெளியிடவுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. அதன்படி தற்போது ட்ரைலரை விஜய் சேதுபதி தனது எக்ஸ் தள பக்கத்தின் வாயிலாக வெளியிட்டுள்ளார். ட்ரைலரை பார்க்கையில், அப்பா பாலாஜி சக்திவேலும், மகள் ஆன்ரியாவும் ஒரு வழக்கு சம்மந்தமாக போலீஸ் விசாரணைக்கு அழைத்து செல்கிறது. அங்கு வைத்து இருவருக்கும் காவல் துறையினருக்கும் நடக்கும் விசாரணையை வைத்து இந்த ட்ரைலர் உருவாகியுள்ளது. மேலும் எந்த வழக்கிற்காக அவர்கள் விசாரணைக்கு அழைக்கப்படுகின்றனர், இறுதியில் என்ன நடந்தது என்பதை அழுத்தமான காட்சிகளுடன் அரசியல் வசனங்களுடன் இப்படம் உருவாகியுள்ளது போல் தெரிகிறது. 

ட்ரைலரில் “போலிஸ் உன்ன தேடி வருதுனா, அது அவுங்களோட பிரச்சனை இல்லை இந்த நாட்டோட பிரச்சனை, சாதி ஜனநாயகமா, சாதிய உருவாக்குனவங்க தான் இந்தியாவை உருவாக்குனாங்க” போன்ற வசனங்கள் ரசிகர்களை கவர்ந்துள்ளது. இதனிடையே வி.சி.க தலைவர் தொல். திருமாவளவன், இப்படத்தின் ட்ரைலரை பார்த்து படக்குழுவை பாரட்டியுள்ளார். அவர் பேசுகையில், “வசனங்கள் மிக ஆழமானதாக இருக்கிறது. இதுவும் உலகளவில் பேசப்படும் திரைப்படமாக அமையும். தயாரிப்பாளரும் இயக்குநரும் முற்போக்கு பார்வையுள்ளவர்களாக இருப்பது, இந்தத் திரைப்படத்தின் வெற்றியாக பார்க்கிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.