மே 7ஆம் தேதி முதல் டாஸ்மாக் கடைகள் திறக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்திருந்தது. அதன்படி இன்று காலை டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டன. காலை 10 மணிக்கு விற்பனை தொடங்கியது. நீண்ட வரிசையில் காத்திருந்து குடிமகன்கள் மதுவை வாங்கிச் சென்றனர். ஒருவருக்கு குறிப்பிட்ட அளவு மதுபாட்டில்கள் வழங்கப்படும் என்று கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
இந்த நிலையில் விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் அடுத்த கரடிப்பாக்கத்தில் டாஸ்மாக் கடையை மூடக்கோரி பெண்கள் திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர். நாளுக்கு நாள் கரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் டாஸ்மாக் கடையைத் திறப்பது சரியல்ல, உடனே மூட வேண்டும் என்று கூறினர். இதையடுத்து போராட்டம் நடத்தியவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர்.