தமிழக அரசு அப்பாவி மக்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தி 3 பேரைப் படுகொலைச் செய்துள்ளது என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
தூத்துக்குடியில் அமைந்துள்ள ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி அந்தப் பகுதி மக்கள் அமைதியான முறையில் போராடி வருகின்றனர். அந்தப் போராட்டத்தின் நூறாவது நாளான இன்று முற்றுகைப்போராட்டம் நடத்துவதாக அறிவித்திருந்தனர். மக்களின் போராட்டத்திற்கு அனுமதி அளிக்காமல் 144 தடை உத்தரவு பிறப்பித்த தமிழக அரசு அப்பாவி மக்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தி 3 பேரைப் படுகொலைச் செய்துள்ளது. இன்னும் சிலர் உயிருக்குப் போராடிக் கொண்டுள்ளனர். தமிழக அரசின் இந்த அடக்குமுறை நடவடிக்கைக்கு விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் சார்பில் கண்டனத்தைத் தெரிவித்துக்கொள்கிறோம்.
ஸ்டெர்லைட் ஆலையை மூடவேண்டும் என்று பொதுமக்களும் சுற்றுச்சூழல் அமைப்பினரும் போராடிக்கொண்டிருந்த நிலையில் அதன் விரிவாக்கத்திற்கு தமிழக அரசு அனுமதியளித்தது. சிப்காட் தொழிற்போட்டை அமைக்கப்போவதாக பொய் சொல்லி இந்த அனுமதி பெறப்பட்டுள்ளது. இது தமிழக அரசு ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகத்திற்கு உடந்தையாக இருப்பதை எடுத்துக்காட்டுகிறது. மத்தியில் ஆளும் பாஜக ஆட்சிக்கு நெருக்கமான ‘வேதாந்தா’ நிறுவனத்தால் நடத்தப்படும் ஸ்டெர்லைட் ஆலையால் அந்தப் பகுதியின் பொதுமக்கள் பல்வேறு விதமான நோய்களுக்கு ஆளாகியுள்ளனர் என்பது நிருபணமாகியுள்ளது. தமிழ் மக்களின் உயிரைத் துச்சமாக நினைத்து ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகத்திற்கு தமிழக அரசு உதவத் துடிப்பது ஏன் என்கிற கேள்வி எழுந்துள்ளது. இதற்கு முதலமைச்சர் விளக்கமளிக்கவேண்டும்.
ஸ்டெர்லைட் போராட்டத்தில் படுகொலை செய்யப்பட்டவர்களின் குடும்பத்தினருக்கு தலா ஒரு கோடி ரூபாய் இழப்பீடு வழங்கவேண்டும், போலீசார் மீது கொலை வழக்கு பதிவுசெய்யவேண்டும் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடுவதாகத் தமிழக அரசு அறிவிக்கவேண்டும் என வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
அப்பாவி மக்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தி படுகொலை செய்துள்ளது தமிழக அரசு: திருமா கண்டனம்!
சார்ந்த செய்திகள்
Next Story
சமூக விரோதிகளை எதிர்த்து கேள்விகேட்காத திமுகவும்தான் 13 பேர் கொலைக்கு காரணம்!! -பொன்.ராதாகிருஷ்ணன்
ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் 13 பேர் சுடப்பட்டதற்கு சமூக விரோதிகளை கேள்விகேட்காத திமுகவே காரணம் என மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் குற்றம்சாட்டியுள்ளார்.
இன்று கன்னியாகுமரி நாகர்கோவிலில் செய்தியாளர்களை சந்தித்த மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறுகையில்,
தூத்துக்குடியில் ஏற்பட்ட துப்பாக்கி சூட்டு சம்பவத்திற்கு மக்கள் அதிகாரம் அமைப்பே காரணம். அமைதியாக நடந்த போராட்டத்தில் ஒரு பகுதி மக்களை திசை திருப்பி கொலைக்களமாக மாற்றிய அந்த அமைப்பின் மீது நடவடிக்கை எடுக்கா விட்டால் வருங்காலத்தில் இன்னும் நிறைய தூத்துக்குடி சம்பவங்களை போன்ற பல தூத்துக்குடி சம்பவங்கள் உருவாக இதுவே காரணமாக இருந்துவிடும்.
மக்கள் அதிகாரம் அமைப்பு மட்டுமல்ல மக்கள் போராட்டத்தை திசை திருப்பிய அனைத்து அமைப்புகள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும். அந்த அமைப்புகள் மட்டுமல்ல, அந்த சமூக விரோதிகளை எதிர்த்து கேள்விகேட்காத திமுகவும்தான் தூத்துக்குடியில் நடந்த துப்பாக்கி சூட்டில் நடந்த 13 பேர் கொலைக்கு காரணம் எனக்கூறினார்.
Next Story
நடிகரான என்னை பார்த்தால், தூத்துக்குடி மக்கள் மகிழ்ச்சி அடைவார்கள்: ரஜினிகாந்த்
நடிகரான என்னை பார்த்தால், தூத்துக்குடி மக்களும் மகிழ்ச்சி அடைவார்கள் என்று நம்புகிறேன் என நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வலியுறுத்தி கடந்த 22ஆம் தேதி போராட்டம் நடைப்பெற்றது. அப்போது ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டத்தில், போராட்டக்காரர்களுக்கு காவல்துறையினருடன் மோதல் ஏற்பட்டதன் காரணமாக கல் வீச்சு, கண்ணீர் புகை, தடியடி, துப்பாக்கிச் சூடு உள்ளிட்டவை நடத்தப்பட்டன. அதில் போராட்டக்காரர்கள் 13 பேர் உயிரிழந்தனர். மேலும் பலர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்நிலையில், துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் காயமடைந்தவர்களை நேரில் சந்தித்து துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் நலம் விசாரித்தார். இதேபோல், நேற்று ஆளுநர் பன்வாரிலால் புரோகித் துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறினார். தொடர்ந்து பல அரசியல் தலைவர்ளும், சமூக ஆர்வலர்களும் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து வருகின்றனர்.
அந்தவகையில் நடிகர் ரஜினிகாந்த் துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்தவர்களை சந்தித்து ஆறுதல் கூற இன்று தூத்துக்குடி செல்கிறார். இதுகுறித்து சென்னை போயஸ் கார்டன் இல்லத்தில் இன்று காலை செய்தியாளர்களை சந்தித்த அவர்,
தூத்துக்குடியில் காயமடைந்தவர்களை சந்திக்க செல்கிறேன். பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் சொன்னால்தான் எனக்கு மகிழ்ச்சி. நடிகரான என்னை பார்த்தால், தூத்துக்குடி மக்களும் மகிழ்ச்சி அடைவார்கள் என்று நம்புகிறேன். சட்டப்பேரவை கூட்டத்தொடரை திமுக புறக்கணித்தது குறித்து தான் கருத்து கூற விரும்பவில்லை.
தூத்துக்குடி சம்பவத்திற்கு திமுகதான் காரணம் என முதலமைச்சர் குற்றச்சாட்டு குறித்த பதில் அளித்த ரஜினி, திமுகவை அதிமுகவும், அதிமுகவை திமுகவும் விமர்சிப்பது தான் அரசியல், பழைய நிகழ்வுகளை பேசி பயனில்லை.
காலா படத்திற்கு கர்நாடகாவில் தடை விதித்திருப்பது குறித்து கேட்ட போது, கர்நாடக திரைப்பட வர்த்தக சபையுடன், தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை பேச்சு நடத்தி சுமூக தீர்வு காணும் என்றார்.