ADVERTISEMENT

அமலாக்கத்துறைக்கு எதிராக தமிழக அரசு வழக்கு; உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு

01:12 PM Nov 28, 2023 | prabukumar@nak…

ADVERTISEMENT

ADVERTISEMENT

தமிழகத்தில் உள்ள மணல் குவாரிகளில் அரசு நிர்ணயித்த அளவை விட கூடுதலாக மணல் அள்ளி விற்பனை செய்வதாகவும், மணல் ஒப்பந்த குவாரிகள் மூலம் வரும் வருமானத்தை சட்ட விரோதமாக பணப்பரிமாற்றம் செய்வதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடர்பாக திருச்சி, தஞ்சாவூர், கரூர், அரியலூர் மற்றும் வேலூர் ஆகிய 5 மாவட்ட ஆட்சியர்கள் உள்ளிட்ட 10 அதிகாரிகளுக்கு மணல் குவாரிகளுக்கு வழங்கப்பட்ட உரிமங்கள் தொடர்பான ஆவணங்களுடன் அமலாக்கத்துறை சார்பில் சம்மன் அனுப்பப்பட்டிருந்தது. இதனை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு சார்பில் வழக்கு தொடரப்பட்டது. அந்த மனுவில், “குவாரிகளில் மணல் எடுக்கும் விவகாரம் சட்டவிரோத பணப்பரிமாற்றத்தில் வராது. தனது அதிகார வரம்பை மீறி அமலாக்கத்துறை செயல்படுகிறது. மாநில அரசின் அனுமதி இல்லாமல் அமலாக்கத்துறை மேற்கொள்ளும் விசாரணைக்கு தடை விதிக்க வேண்டும்” எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதனையடுத்து அமலாக்கத்துறைக்கு எதிராகத் தமிழக அரசு சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் எஸ்.எஸ்.சுந்தர், சுந்தர் மோகன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நேற்று (27.11.2023) விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு சார்பில் மூத்த வழக்கறிஞர் துஷ்யந்த் தவே ஆஜரானர். அவர் வாதிடுகையில், “மாநில அரசின் வழக்குகளில் மத்திய அரசு தலையிடுவது கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிரானது. அமலாக்கத்துறை அனுப்பிய சம்மன்களை எதிர்த்து வழக்குகளை தாக்கல் செய்ய அதிகாரம் உள்ளது. மணல் குவாரி விவகாரத்தில் அமலாக்கத்துறை விசாரணை நடத்த அதிகாரம் இல்லை. அமலாக்கத்துறையின் நடவடிக்கை இந்திய ஜனநாயகத்தின் அடிப்படையான கூட்டாட்சி மீதான தாக்குதலாகும். சட்ட விரோத மணல் குவாரிகள் நடத்துவது தொடர்பாகவும், கனிம வள வழக்குகளை மாநில அரசு விசாரணை நடத்தலாம் என்பது மாநில அரசின் தனிப்பட்ட அதிகாரம் ஆகும்.

அமலாக்கத்துறையின் நடவடிக்கை உள்நோக்கம் கொண்டது. குறிப்பாக குஜராத், உத்தரப்பிரதேசம், மத்தியப்பிரதேசம் உள்ளிட்ட பாஜக ஆளும் மாநிலங்களில் எந்த நடவடிக்கையும் இல்லை. பல வழக்குகள் நிலுவையில் உள்ளன. மாவட்ட ஆட்சியாளர்களுக்கு சம்மன் அனுப்புவதன் மூலம் அதிகாரிகளுக்கு அமலாக்கத்துறை சங்கடத்தை ஏற்படுத்துகிறது. யாருக்கு வேண்டுமானாலும் சம்மன் அனுப்பும் அதிகாரம் அமலாக்கத்துறைக்கு இல்லை. சம்மன் அனுப்ப முடியாது. மாறாக உதவி செய்ய வருமாறு கோரிக்கை அல்லது அழைப்பை அதிகாரிகளுக்கு அமலாக்கத்துறை விடுக்கலாம். மாவட்ட ஆட்சியர்களிடம் விசாரணை நடத்தும் அதிகாரம் அமலாக்கத்துறைக்கு கிடையாது. இந்த வழக்கின் மூலம் மத்திய அரசின் அதிகார எல்லை தொடர்பான தீவிரமான கேள்வி எழுகிறது” வாதத்தை முன் வைத்திருந்தார்.

அமலாக்கத்துறை சார்பில் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஏ.ஆர்.எல். சுந்தரேசன் ஆஜராகி வாதிட்டார். அப்போது அவர், “ஆரம்ப கட்டத்திலேயே மாவட்ட ஆட்சியாளர்களின் மனுவை எதிர்த்தோம். 4 ஆயிரத்து 500 கோடி ரூபாய் அளவுக்கு முறைகேடு நடந்துள்ளது. எனவே அதனை விசாரிக்க அதிகாரம் உள்ளது” என தெரிவித்தார். அப்போது குறிக்கிட்ட நீதிபதிகள், “குற்றத்தை கண்டுபிடித்துவிட்டீர்களா. மாவட்ட ஆட்சியர்களுக்கு சம்மன் அனுப்ப வேண்டிய அவசியம் என்ன” என்று கேள்வி எழுப்பினர். அதற்கு, “மோசடி மற்றும் ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் தான் அமலாக்கத்துறை விசாரணை நடத்துகிறது” எனத் தெரிவித்திருந்தார். இதனையடுத்து இந்த வழக்கில் உயர்நீதிமன்றம் இன்றைய தினம் (28.11.2023) உத்தரவு பிறப்பிக்கப்பட உள்ளது என தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் 5 மாவட்ட ஆட்சியர்களுக்கு அமலாக்கத்துறை அனுப்பிய சம்மன்களுக்கு உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது. மேலும் இது குறித்து 3 வாரத்திற்குள் மாவட்ட ஆட்சியர்கள் பதிலளிக்க வேண்டும் என உத்தரவிட்டதுடன் வழக்கு விசாரணையை 3 வாரத்திற்கு ஒத்தி வைத்து நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். சமீபத்தில் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் செயல்பட்டு வரும் மணல் குவாரிகளில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தி இருந்தது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT