Skip to main content

’’சித்தராமையாவிடம் பேசி பிரச்னையை தீர்க்க ஸ்டாலின் முயலலாம்’’- விஜயகாந்த் பேச்சு

Published on 06/04/2018 | Edited on 06/04/2018

 

dmdk


      காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க நடவடிக்கை எடுக்காத மத்திய மாநில அரசுகளை கண்டித்து திருவாரூரில்   தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் தலைமையில்   கண்டன ஆர்ப்பாட்ட பொதுக்கூட்டம் நடந்தது.

 

     போராட்டத்தில்  விஜயகாந்தின்  மனைவி பிரேமலதா மற்றும் மைத்துனரும், துணை பொதுச்செயலாளருமான சுதீஷ் ஆகியோர் கலந்துகொண்டனர்.


 
போராட்டத்தில் பேசிய  பிரேமலதா ,’’ தமிழக மக்கள் அனைவருக்கும் சோறு போடும் விவசாயிகளே முதலாளிகள். எத்தனை கோடிகள் பணம் இருந்தாலும், தட்டில் சோறு இருந்தால் தான் உண்ணமுடியும். தேமுதிக ஆட்சிக்கு வந்தால் விவசாய மக்களுக்கும், கிராமப்புற மக்களுக்கும் முக்கியத்துவம் அளிக்கப்படும்.

 

dmdk1

 

நமது நாடு எவ்வளவு முன்னேறியது என்பதை, நமது நாட்டு விவசாயிகளின் முன்னேற்றத்தின் மூலமே அறியலாம். எனவே விவசாயிகளின் பாதுகாவலான, உற்ற நண்பனாக தேமுதிக விளங்கும். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க உச்சநீதிமன்றம் கொடுத்த கெடுவை மத்திய அரசு  புறக்கணித்துவிட்டது. கர்நாடக தேர்தலை முன்னிட்டு காலம் தாழ்த்தும் மத்திய அரசின் செயலை தேமுதிக கண்டிக்கிறது. ஸ்கீம் என்ற வார்த்தையால் விவசாயிகளின் வாழ்க்கையை ஸ்கிப் செய்து விட்டது மத்திய அரசு.

 

       750 கிமீ தூரத்திற்கு மேல் காவிரி செல்கிறது. அந்த நதியை நம்பியே விவசாயம், குடிநீர், பல்வேறு தொழில்கள்  உள்ளது. சம்பா, குறுவை, தாளடி என பயிரிடப்பட்ட டெல்டா பகுதி தற்போது வறண்ட பாலைவனமாக மாறுவதற்கு திமுகவும், அதிமுகவுமே தான்  காரணம். 

 

      1 கோடி இளைஞர்கள் வேலை வாய்ப்பின்றி உள்ளனர்.  விவசாயத்தையும், நெசவு தொழிலையும் சீர்படுத்தினால் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும். அதேபோல் விவசாயிகள் பயனடையும் வகையில் 100 நாள் வேலையை மாற்றி அமைக்க வேண்டும். யானை கட்டி போரடித்த டெல்டா பகுதி, யானைக்கு சோறிட முடியாமல் தவிக்கிறது. நதிகள் இணைப்பு மூலம் தமிழகத்தை வளப்படுத்தலாம். ரூ.10 ஆயிரம் கோடி இருந்தால் நதிகள் இணைப்பு சாத்தியம். வளமான தமிழகம் அமைய காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் ‘’  என்றார். 

 

ஆர்ப்பாட்ட கூட்டத்தில் விஜயகாந்த் பேசுகையில், ‘’ விவசாயிகள் நன்றாக இருந்தால்தான் நாடு நன்றாக இருக்கும். எல்லா கட்சிகளும் ஏமாற்றுகின்றன என்பதனை மக்கள் உணர வேண்டும். காவிரி பிரச்னையில் திமுக போராட்டம் நடத்துகிறது. அவர்கள் கூட்டணியில் அங்கம் வகிக்கும் காங்கிரஸ் ஆட்சிதானே கர்நாடகாவில் நடக்கிறது. கர்நாடகா முதல்வர் சித்தராமையாவிடம் பேசி பிரச்னையை தீர்க்க முயலலாமே.  காவிரி விவகாரத்தில் அனைவரும் கபடநாடகம் ஆடுகின்றனர். விவசாயிகள் பிரச்னை தீர காவிரி மேலாண்மை வாரியம் அமைத்தே தீர வேண்டும்’’  என்றார் கரகரத்தக்குரலில்.
 

சார்ந்த செய்திகள்

Next Story

“சர்.பிட்டி தியாகராயர் காலை உணவுத் திட்டத்தின் முன்னோடி” - தமிழக முதல்வர் புகழாரம்

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
Chief Minister of Tamil Nadu felicitated for Pioneer of Sir Pitti Thiagarayar Breakfast Scheme

திராவிடக் கட்சியின் தாய் அமைப்பான நீதிக்கட்சியின் தலைவராக பொறுப்பு வகித்து வந்தவர் சர்.பிட்டி தியாகராயர். இந்திய சுதந்திரத்துக்கு பிறகு, முன்னாள் முதல்வர் காமராஜர் மதிய உணவுத் திட்டத்தை தொடங்குவதற்கு முன்பே, அந்த திட்டத்தை சென்னை மாநகராட்சி பள்ளிகளில், சர்.பிட்டி தியாகராயர் தொடங்கி வைத்து முன்மாதிரியாக திகழ்ந்துள்ளார். இவரது நினைவாக தான் சென்னை தியாகராயர் நகர் (தி.நகர்) பகுதிக்கு இவரது பெயர் வைக்கப்பட்டுள்ளது. இன்று (27-04-24) சர்.பிட்டி தியாகராயரின் 173ஆவது பிறந்தநாள் கொண்டாடப்பட்டு வருகிறது. 

சர்.பிட்டி தியாகராயரின் பிறந்தநாளை முன்னிட்டு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், அவருக்கு புகழாரம் சூட்டியுள்ளார். இது குறித்து அவர் தனது எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது, ‘பார்ப்பனரல்லதார் கொள்கைப் பிரகடனம் வெளியிட்டு திராவிட இனத்தின் உரிமைக்குரலை ஓங்கி ஒலித்த தீரர்! அப்பழுக்கற்ற அரசியல் வாழ்வினால் சென்னையின் கல்வி, மருத்துவ வளர்ச்சிக்குத் தூணாக விளங்கிய மக்கள் தொண்டர்!

காலை உணவுத் திட்டத்தின் முன்னோடி!. தேடி வந்த பதவியை மறுத்த மாண்பாளர், நம் வெள்ளுடை வேந்தர் தியாகராயரின் பிறந்தநாளில் அவரது வாழ்வையும் பணியையும் போற்றி வணங்குகிறேன்’ எனக் குறிப்பிட்டுள்ளார். 

Next Story

விஜயகாந்துக்கு பத்மபூஷன் விருது வழங்குவதில் தாமதம்

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
padma bhushan award will be presented to Vijayakanth in the next phase of the ceremony.

மத்திய அரசால், இந்திய குடிமகனுக்கான உயரிய விருதுகளாக பத்ம விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது. பத்ம ஸ்ரீ, பத்ம பூஷன், பத்ம விபூஷன் என மூன்று அடுக்குகளாக இந்த விருதுகள் இருக்கிறது. இந்த விருதுகளுக்காக மருத்துவம், இலக்கியம், கல்வி, விளையாட்டு, சமூக பணி, என பல்வேறு தளங்களில் சிறப்பாக பணியாற்றியவர்களை பரிந்துரை செய்யப்பட்டு பின்னர், விருது வழங்கும் குழுவால் தேர்வு செய்யப்படுகிறார்கள். 

அந்த வகையில் 2024 ஆம் ஆண்டுக்கான பத்ம விருதுகளை மத்திய அரசு கடந்த ஜனவரியில் அறிவித்தது. இதில் மறைந்த நடிகரும், தேமுதிக கட்சி தலைவருமான விஜயகாந்துக்கு பத்மபூஷன் விருது அறிவிக்கப்பட்டது. கலைத்துறையில் சிறந்த சேவையாற்றியதற்காக அவருக்கு பத்ம பூஷன் விருது அறிவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

padma bhushan award will be presented to Vijayakanth in the next phase of the ceremony.

பத்ம விருதுகள் வழங்கும் விழா, டெல்லியில் உள்ள குடியரசுத் தலைவர் மாளிகையில் பல கட்டங்களாக நடைபெற்று வருகிறது. அந்த வகையில் நேற்று (22.04.2024) நடைபெற்ற விழாவில் 3 பத்ம விபூஷன், 8 பத்ம பூஷன் மற்றும் 55 பத்மஸ்ரீ விருதுகளும் வழங்கப்பட்டன. அனைவருக்கும் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு விருதுகளை வழங்கினார். இதில் பிரபல பாடகி உஷா உதூப் மற்றும் நடிகர் மிதுன் சக்ரவர்த்தி ஆகியோருக்கு பத்ம பூஷன் விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது. மேலும் முன்னாள் குடியரசு துணை தலைவர் வெங்கையா நாயுடுவுக்கும் பத்ம விபூஷன் விருது வழங்கப்பட்டது.

நேற்றைய விழாவில் மறைந்த நடிகர் விஜயகாந்துக்கு பத்மபூஷன் விருது வழங்கப்படுவதாக முன்பு அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், அவருக்கு விருது வழங்கப்படவில்லை. அதனால் அடுத்தடுத்த கட்ட விழாக்களில் விஜயகாந்துக்கு விருது வழங்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.