ADVERTISEMENT

செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து உபரி நீர் திறப்பு குறைப்பு

07:52 AM Dec 01, 2023 | prabukumar@nak…

ADVERTISEMENT

ADVERTISEMENT

வடகிழக்கு பருவமழை காரணமாக சென்னைக்கு குடிநீர் ஆதாரமாக விளங்கும் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்ப்பிடிப்பு பகுதியில் தொடர்ந்து கனமழை பெய்து வந்ததால் ஏரிக்கு நீர்வரத்து அதிகரித்தது. அந்த வகையில் செம்பரம்பாக்கம் ஏரிக்கு 1431 கன அடி நீர் வந்து கொண்டிருப்பதால் 24 அடி உயரம் கொண்ட செம்பரம்பாக்கம் ஏரியில் 21.65 அடி உயரத்திற்கு நீர் நிரம்பியுள்ளது.

அதே சமயம் செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து வினாடிக்கு 25 கன அடி உபரிநீர் திறக்கப்பட்டு வந்த நிலையில், ஏரியின் பாதுகாப்பு கருதி கடந்த 28 ஆம் தேதி (28.11.2023) காலை 10 மணி முதல் 200 கன அடியாக உபரிநீர் திறக்கப்பட்டது. இதனையடுத்து நேற்று முன்தினம் (29.11.2023) காலை 9 மணி முதல் ஏரியிலிருந்து திறக்கப்படும் உபரிநீர் மேலும் அதிகரிக்கப்பட்டு வினாடிக்கு 1,000 கன அடி நீர் எனவும், அதன் பிறகு 2500 கன அடி நீர் எனவும் திறக்கப்பட்டு வந்தது.

இதனையடுத்து நேற்று (30.11.2023) காலை 8 மணி முதல் வினாடிக்கு 6 ஆயிரம் கன அடி நீர் திறக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து 4000 கன அடியாக குறைக்கப்பட்டு உபரி நீர் வெளியேற்றப்பட்டு வந்தது. இந்நிலையில், செம்பரம்பாக்கம் ஏரியில் வினாடிக்கு 4000 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வந்த நிலையில், ஏரிக்கு வரும் நீர் வரத்து தற்போது குறைந்ததால் வெளியேற்றப்படும் உபரி நீர் வினாடிக்கு 400 கன அடியாக குறைக்கப்பட்டு நீர் திறக்கப்பட்டு வருகிறது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT