மற்ற மாநிலங்களில் பெரியார் பிறக்கவில்லை, இங்குதான் அவர் பிறந்தார் அதனால் போராடுகிறோம் என போராட்டத்தில் ஈடுபட்ட திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
ரத யாத்திரைக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக சட்டப்பேரவையில் திமுக சார்பில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தது. திமுக செயல் தலைவரும் சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் இந்தக் கவன ஈர்ப்பு தீர்மானத்தை கொண்டு வந்தார்.
அப்போது பேசிய மு.க.ஸ்டாலின், ரதயாத்திரையால் மதக்கலவரம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. இந்த ரத யாத்திரை ராமன் கோயில் கட்ட என சொல்லப்படுகிறது. ஆனால் அந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் உள்ளது. அயோத்தி வழக்கு உச்சநீதிமன்றத்தில் உள்ள நிலையில் ரத யாத்திரையை அனுமதித்தது ஏன்? மதசார்பற்ற தன்மைக்கும் நாட்டின் பன்மை தன்மைக்கும் பாதிப்பு ஏற்படும் வகையில் தமிழக அரசு ரத யாத்திரைக்கு அனுமதி அளித்துள்ளது. தற்போது நடப்பது அதிமுக ஆட்சியா? பாஜக ஆட்சியா? என கடுமையான பேசினார்.
இதற்கு பதிலளித்து பேசிய முதலமைச்சர் பழனிசாமி, 5 மாநிலங்களில் எந்தப் பிரச்சனையும் இல்லாமல் ரத யாத்திரை சென்றுள்ளது. இந்த யாத்திரையால் எந்தப் பாதிப்பும் இருக்கக்கூடாது என காவல்துறை பாதுகாப்பு வழங்கியுள்ளது. அனைத்து மதத்திற்கும் சம உரிமை உண்டு. தமிழகத்தில் இதனை வைத்து அரசியல் ஆதாயம் தேட முயல்கின்றனர் என்றார்.
ADVERTISEMENT
ஆனால், முதல்வரின் விளக்கத்தை ஏற்க மறுத்து திமுகவினர் பேரவையில் முழக்கமிட்டனர். இதையடுத்து, அவையை நடத்த ஒத்துழைக்காவிட்டால் நடவடிக்கை எடுக்க நேரிடும் என சபாநாயகர் தனபால் எச்சரிக்கை விடுத்தார். அதையும் மீ்றி திமுகவினர் தொடர் அமளியில் ஈடுபட்டதால் சட்டப்பேரவையில் இருந்து திமுகவினர் வெளியேற்றப்பட்டனர்.
வெளியேற்றப்பட்ட திமுகவினர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது மு.க.ஸ்டாலின், பெரியார், அண்ணா பிறந்த மண்ணிலே மத வெறியை தூண்டாதே என கடுமையான முழக்கங்களை எழுப்பினார். இதனையத்து ரத யாத்திரைக்கு எதிராக சாலை மறியலில் ஈடுபட்ட மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட திமுகவினரை போலீசார் கைது செய்து வேனில் ஏற்றினர்.
ADVERTISEMENT
ADVERTISEMENT
Show comments