Skip to main content

மூத்த அமைச்சர்களைக் காப்பாற்ற காவல் அதிகாரியை பலி கொடுப்பதா? ராமதாஸ் கண்டனம்

Published on 01/08/2018 | Edited on 01/08/2018
Ramadoss condemned


மூத்த அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனின் மருமகனும், இந்து சமய அறநிலையத்துறையின் ஓய்வு பெற்ற இணை ஆணையருமான ராஜா உள்ளிட்ட பல அதிகாரிகள் தமிழகத்தில் நடந்த சிலைக் கடத்தல்கள், தங்கச் சிலைகளை செய்வதில் நடந்த மோசடிகள் தொடர்பான வழக்குகளில் ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த நிலையில் பொன்.மாணிக்கவேல் தலைமையிலான விசாரணைக்குழு மீது தங்களுக்கு நம்பிக்கை இல்லை என்று தமிழக அரசு கூறுவது ஒருபுறம் கண்டிக்கத்தக்கதாகவும், இன்னொருபுறம்  வியப்பளிப்பதாகவும் உள்ளது என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.
 

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 
 

தமிழ்நாட்டில் கோவில் சிலைகள் கடத்தல் வழக்குகள் தொடர்பாக காவல்துறைத் தலைவர் பொன். மாணிக்கவேல் குழு நடத்தி வரும் விசாரணை திருப்தியளிக்கவில்லை என்றும், இவ்வழக்குகளை சி.பி.ஐயிடம் ஒப்படைக்க கொள்கை முடிவு எடுக்கப்பட்டிருப்பதாகவும் சென்னை உயர்நீதிமன்றத்தில் அரசு தெரிவித்துள்ளது. இம்முடிவு சிலைக்கடத்தல் குற்றவாளிகளை காப்பாற்றுவதற்கான சதியாகும்.
 

 

 

காவல்துறை தலைவர் பொன்.மாணிக்கவேல் தலைமையிலான விசாரணைக்குழு மீது தங்களுக்கு நம்பிக்கை இல்லை என்று தமிழக அரசு கூறுவது ஒருபுறம் கண்டிக்கத்தக்கதாகவும், இன்னொருபுறம்  வியப்பளிப்பதாகவும் உள்ளது. எந்த ஒரு அரசும் அதன் மூத்த காவல் அதிகாரி மீது நம்பிக்கையில்லை என்று கூறாது. அதுமட்டுமின்றி, பொன்.மாணிக்கவேல் அப்பழுக்கற்ற பின்னணி கொண்ட அதிகாரி. கடந்த காலங்களில் அவர் பணியாற்றிய அனைத்து பிரிவுகளிலும் அவரது திறமை மீதோ, நேர்மை மீதோ எவரும் எந்த ஐயமும் எழுப்பியதில்லை. அப்படிப்பட்ட அதிகாரி மீது நம்பிக்கையில்லை என்று அரசு கூறுவதைப் பார்த்தால் ‘‘தான் திருடி, பிறரை நம்பாள்’’ என்ற பழமொழி தான் நினைவுக்கு வருகிறது. இதற்கெல்லாம் மேலாக, இந்த வழக்கை தாம் விசாரிக்க வேண்டும் என்று மாணிக்கவேல் கேட்டு வாங்கவில்லை. மாறாக, சென்னை உயர்நீதிமன்றம் தான் இவ்வழக்கின் விசாரணை அதிகாரியாக நியமித்தது. அப்படிப்பட்டவரின் நேர்மையை சந்தேகிப்பது உயர்நீதிமன்றத்தை சந்தேகிப்பதற்கு சமமானதாகும்.
 

தமிழ்நாட்டில் பல்வேறு வழக்குகளில் சி.பி.ஐ. விசாரணை வேண்டும் என்ற கோரிக்கை எழுப்பப்பட்டு வருகிறது. உதாரணமாக பல லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான கிரானைட் கொள்ளை மற்றும் ஊழல் குறித்து விசாரித்த மூத்த இ.ஆ.ப. அதிகாரி சகாயம் தலைமையிலான குழு, இதுகுறித்து சி.பி.ஐ. விசாரணைக்கு ஆணையிட வேண்டும் என்று பரிந்துரைத்திருந்தார். இதுதொடர்பான தமிழக அரசின் நிலைப்பாடு பற்றி உயர்நீதிமன்றம் வினா எழுப்பி 3 ஆண்டுகள் நிறைவடையவுள்ள நிலையில், அதற்கு தமிழக அரசு ஒப்புதல் அளிக்கவில்லை. தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு, துணை முதலமைச்சர் பன்னீர் செல்வம் மீதான சொத்துக்குவிப்பு வழக்கு, தாது மணல் கொள்ளை வழக்கு என ஏராளமான வழக்குகளில் சி.பி.ஐ. விசாரணை வேண்டும் என்ற கோரிக்கையை கடுமையாக எதிர்த்து வரும் தமிழக அரசு, இவ்வழக்கில் யாரும் கேட்காமலேயே சி.பி.ஐ. விசாரணைக்கு முன்வந்திருப்பதை எட்டாவது அதிசயமாகவே பார்க்க வேண்டியிருக்கிறது. ஆனால், இதிலும் சில அரசியல் கணக்குகள் உள்ளன என்பதே உண்மை.
 

 

 

தமிழகத்தில் நடந்த சிலைக் கடத்தல்கள், தங்கச் சிலைகளை செய்வதில் நடந்த மோசடிகள் ஆகியவை தொடர்பான வழக்குகளில் மூத்த அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனின் மருமகனும், இந்து சமய அறநிலையத்துறையின் ஓய்வு பெற்ற இணை ஆணையருமான ராஜா உள்ளிட்ட பல அதிகாரிகள்  ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ளனர். முன்னாள் ஆணையர் தனபால் முன்பிணை பெற்று காவல்துறை விசாரணைக்கு ஆஜராகி வருகிறார். அறநிலையத்துறையிம் கூடுதல் ஆணையர் கவிதா நேற்று கைது கைது செய்யப்பட்டுள்ளார். அடுத்தக்கட்டமாக இந்த வழக்குகளில் சம்பந்தப்பட்ட தமிழக அமைச்சர்கள் சிலர் மீதும், திமுகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் ஒருவர் மீதும் நடவடிக்கை எடுக்க மாணிக்கவேல் குழு ஆயத்தமாகி வந்ததாகவும் அதிகாரிகள் வட்டாரங்களில் கூறப்படுகிறது. இவ்விஷயத்தில் அவசரம் காட்ட வேண்டாம் என பொன்.மாணிக்கவேலுவை முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி நேரில் அழைத்து  கேட்டுக் கொண்டதாகவும், அதற்கு மாணிக்கவேலு ஒப்புக்கொள்ளாததால் தான் அவரது தலைமையிலான விசாரணைக் குழு கலைக்கப்படுவதாகவும் காவல்துறை உயரதிகாரிகள் வட்டாரங்களில் பேசப்படுகிறது.
 

இவ்வழக்கை சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றினால், அவர்கள் இதுவரை நடந்த விசாரணை குறித்த விவரங்களை முழுமையாக அறிந்து கொண்டு, அமைச்சர்களை நெருங்க மேலும் பல மாதங்கள் ஆகும். அதற்குள்ளாக அமைச்சர்களைக் காப்பாற்ற வேறு வழிகளை கண்டுபிடித்து விடலாம்; ஆனால், பொன். மாணிக்கவேல் தலைமையிலான குழு நீடித்தால், சட்டப்பூர்வ அனுமதிப் பெற்று எந்த நேரமும் அமைச்சர்கள் கைது செய்யப்படலாம் என்பதால் தான் விசாரணைக்குழுவை கலைக்க பினாமி அரசு துடிக்கிறது.
 

 

 

உண்மையில் சிலைக் கடத்தல் குறித்த வழக்குகளின் விசாரணையை பொன்.மாணிக்கவேல் குழு ஏற்ற பிறகு தான் பல வழக்குகளில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. தஞ்சாவூர் ராஜராஜன் கோயிலில் இருந்து கொள்ளையடிக்கப்பட்டு குஜராத் அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டிருந்த ராஜராஜன், உலகமாதேவி சிலைகளை மீட்க கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் பயனளிக்காத நிலையில், அச்சிலைகளை பொன்.மாணிக்கவேல் தலைமையிலான குழு அண்மையில் மீட்டு வந்து தஞ்சை பெரியகோயில் நிர்வாகத்திடம் ஒப்படைத்தது. இத்தகைய சூழலில் இவ்வழக்கு சி.பி.ஐ.க்கு மாற்றப்பட்டால் அடுத்த சில மாதங்களுக்கு முடங்கிவிடும். இதைப்பயன்படுத்தி இதில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் தப்பிவிடும் ஆபத்து உள்ளது. எனவே, இவ்வழக்கை சிபிஐக்கு மாற்றும் திட்டத்தை அரசு கைவிட வேண்டும். உயர்நீதிமன்றமும் இதை அனுமதிக்கக்கூடாது. மாறாக பொன்.மாணிக்கவேல் குழு விசாரணை தொடருவதை அரசும், நீதிமன்றமும் உறுதி செய்ய வேண்டும். இவ்வாறு கூறியுள்ளார். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'வகுப்புக்கு ஓர் ஆசிரியரை உறுதி செய்ய வேண்டும்'-ராமதாஸ் கோரிக்கை

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
 'One teacher should be confirmed for the class' - Ramadoss' demand

'தமிழ்நாட்டில் தொடக்கக் கல்வித் துறையின் கீழ் செயல்பட்டு வரும் அரசு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் தேவைக்கும் கூடுதலாக 2236 இடைநிலை ஆசிரியர்கள் இருப்பதாக தொடக்கக் கல்வி  இயக்குனர் கூறியிருப்பது நகைப்பை ஏற்படுத்துவதாக பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'தமிழ்நாட்டில் தொடக்கக் கல்வித் துறையின் கீழ் செயல்பட்டு வரும் அரசு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் தேவைக்கும் கூடுதலாக 2236 இடைநிலை ஆசிரியர்கள் இருப்பதாக தொடக்கக் கல்வி  இயக்குனர் கூறியிருப்பது நகைப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழ்நாட்டில் மிக அதிக எண்ணிக்கையில் ஓராசிரியர் பள்ளிகள் இருக்கும் நிலையில், அதை சரி செய்யாமல் ஆசிரியர்கள் மாணவர்கள் விகிதத்தை செயற்கையாக குறைத்துக் காட்டி, இருக்கும் ஆசிரியர்களையும் வேறு பள்ளிகளுக்கு மாற்றுவது  ஏற்கனவே நலிவடைந்த நிலையில் உள்ள அரசு பள்ளிகளுக்கு மூடுவிழா நடத்துவதற்கே வழி வகுக்கும்.

தமிழ்நாட்டில் உள்ள அரசு பள்ளிகளில் ஆசிரியர், மாணவர் விகிதம் தொடக்கப்பள்ளிகளில் 1:19 என்ற அளவிலும், நடுநிலைப் பள்ளிகளில் 1:21, உயர்நிலைப் பள்ளிகளில் 1:22, மேல்நிலைப் பள்ளிகளில் 1:30 என்ற அளவிலும் இருப்பதாக தமிழக அரசு தெரிவித்திருக்கிறது. இந்த புள்ளிவிவரங்களைப் பார்த்தால் தமிழக அரசு பள்ளிகளில் ஆசிரியர், மாணவர் விகிதம் ஐரோப்பிய நாடுகளுக்கு இணையாக இருப்பதாகத் தோன்றும். ஆனால், இவை அனைத்தும் மிகைப்படுத்தப்பட்ட, திரிக்கப்பட்ட, உண்மைக்கு மாறான புள்ளிவிவரங்கள் ஆகும். அரசு பள்ளிகளின் வளர்ச்சிக்கு இது எந்த வகையிலும் உதவாது.

தொடக்கப்பள்ளிகளில் 19 மாணவர்களுக்கு ஓர் ஆசிரியர் இருந்தால் அது அரசு -பள்ளி மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கு பெருமளவில் பங்களிக்கும். ஆனால், உண்மை நிலை அதுவல்ல. ஆசிரியர்கள், மாணவர்கள் விகிதம் வகுப்பறை அளவில் கணக்கிடப்பட வேண்டும். அதாவது, ஆசிரியர், மாணவர்  விகிதம் 1:20 என்றால், ஒரு வகுப்பில் 20 மாணவர்கள் வரை இருந்தால் ஓர் ஆசிரியர் நியமிக்கப்பட வேண்டும். அதற்கும் கூடுதலாக இருந்தால் அந்த வகுப்பு இரண்டாக பிரித்து இரு ஆசிரியர்கள் நியமிக்கப்பட வேண்டும். ஆனால், தமிழ்நாட்டில் ஒட்டுமொத்த மாநில அளவில் தான் இந்த விகிதம்  கணக்கிடப்படுகிறது. தொடக்கப்பள்ளிகளின் ஆசிரியர், மாணவர் விகிதம் 1:19 என்றால், தமிழ்நாட்டில்  தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் 10,000 பேர் இருந்தால், 1.90 லட்சம் மாணவர்கள் படிக்கிறார்கள். இது சரியல்ல. இத்தகைய ஆசிரியர், மாணவர்கள் விகிதத்தில் தரமான கல்வியை வழங்குவது சாத்தியமல்ல.

தமிழக அரசு வகுத்துள்ள ஆசிரியர், மாணவர் விகிதத்தின்படி, ஒரு தொடக்கப் பள்ளியில் ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை ஒவ்வொரு வகுப்பிலும் தலா 7 மாணவர்கள் இருப்பதாக வைத்துக் கொண்டால், அந்தப் பள்ளிக்கு இரு ஆசிரியர்கள் மட்டுமே வழங்கப்படுவார்கள். மூன்றாவது  ஆசிரியரோ, நான்காவது ஆசிரியரோ இருந்தால் அவர்கள் உபரியாக கருதி வேறு பள்ளிகளுக்கு மாற்றப்படுவர்.

ஒரு வகுப்பில் ஒரு மாணவர் இருந்தாலும், அவருக்கு கற்பிக்க ஓர் ஆசிரியர் இருக்க வேண்டும் என்பது தான் இயற்கை விதியாகும். ஆனால், ஐந்து வகுப்புகளில் 19 மாணவர்கள் இருந்தால் ஒரே ஒரு ஆசிரியரும், 38 அல்லது அதற்கும் குறைவான மாணவர்கள் இருந்தால் இரு ஆசிரியரும் மட்டுமே நியமிக்கப்படுவார்கள் என்பது என்ன நியாயம்? 5 வகுப்புகளை ஓர் ஆசிரியரோ அல்லது இரு ஆசிரியர்களோ கவனித்துக் கொள்ள வேண்டும் என்றால் அவர்களால் மாணவர்களுக்கு எவ்வாறு கற்பிக்க முடியும்?

தமிழக அரசின் தொடக்கக் கல்வித்துறை கடந்த இரு ஆண்டுகளுக்கு முன் வெளியிட்ட புள்ளி விவரங்களின்படி  தமிழ்நாட்டில் தொடக்கக் கல்வித்துறையின் கீழ் செயல்பட்டு வரும் 22,831 தொடக்கப் பள்ளிகள், 6587 நடுநிலைப் பள்ளிகள் என மொத்தம் 29,418 பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களின் எண்ணிக்கை 69,640 மட்டும் தான். இந்த பள்ளிகளில் வகுப்புக்கு ஒரே ஒரு பிரிவு என்று வைத்துக் கொண்டால் கூட  மொத்தம் 1,66,851 வகுப்புகள் இருக்கக்கூடும். அதன்படி பார்த்தால் 97,211 வகுப்புகளுக்கு ஆசிரியர்கள் இல்லை. இதுவும் கூட இரு ஆண்டுகளுக்கு முந்தைய நிலவரம் தான். இப்போது ஆசிரியர் இல்லாத வகுப்புகளின் எண்ணிக்கை ஒரு லட்சத்திற்கும் கூடுதலாக இருக்கும். உண்மை நிலை இவ்வாறு இருக்க 2236 ஆசிரியர்கள் உபரியாக இருப்பதாக கூறுவது கேலிக்கூத்து.

தமிழ்நாட்டில் அரசுப் பள்ளிகளை மேம்படுத்த தமிழக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அரசு பள்ளிகளுக்கு புதிய வகுப்பறைகளை கட்டுவதற்காக ரூ.7000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு இரு ஆண்டுகள் ஆகியும் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையில் புதிய வகுப்பறைகள் கட்டப்படவில்லை.

அரசு பள்ளிகளை மேம்படுத்த வேண்டும் என்ற எண்ணம் உண்மையாகவே தமிழக அரசுக்கு இருக்குமானால், அரசு பள்ளிகளில் கட்டமைப்பு வசதிகளை உடனடியாக வலுப்படுத்த வேண்டும். ஆசிரியர்கள் உபரியாக இருப்பதாக பொய்க்கணக்கு காட்டுவதை விடுத்து வகுப்புக்கு குறைந்தது ஓர் ஆசிரியரை நியமிக்க தமிழக அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்' என தெரிவித்துள்ளார்.

Next Story

பட்டியலின மக்கள் பயன்படுத்தும் குடிநீர்த்தொட்டியில் மாட்டுச்சாணம் கலப்பு; ராமதாஸ் கண்டனம்!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Ramdas said mixing of cow dung in the drinking water tank of Sangamviduthi panchayat is reprehensible

சங்கம்விடுதி ஊராட்சி குடிநீர்த் தொட்டியில் மாட்டுச் சாணம் கலப்பு கண்டிக்கத்தக்கது என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஒன்றியம் சங்கம்விடுதி ஊராட்சிக்குட்பட்ட குருவண்டான் தெருவில் பட்டியலின மக்களுக்கு குடிநீர் வழங்குவதற்காக அமைக்கப்பட்டுள்ள மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் மாட்டுச்சாணம் கலக்கப்பட்டிருப்பதாக வெளியாகியுள்ள செய்திகள்  அதிர்ச்சியளிக்கின்றன. பொதுமக்கள் குடிப்பதற்கான குடிநீர்த் தொட்டியில்  மாட்டுச்சாணம் கலக்கப்பட்டது மனிதநேயமற்றது மட்டுமின்றி, மனிதத் தன்மையற்ற செயலாகும்.  இது கடுமையாகக் கண்டிக்கத்தக்கது.

குருவண்டான் தெரு குடிநீர்த் தொட்டியில் சில நாட்களுக்கு முன்பாகவே மாட்டுச்சாணம் கலக்கப்பட்டிருக்கக் கூடும் என்று தெரியவந்துள்ளது. அத்தொட்டியிலிருந்து விநியோகிக்கப்பட்ட குடிநீரை குடித்த குழந்தைகள் உள்ளிட்ட பலருக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டதைத் தொடர்ந்து மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியை ஆய்வு செய்த போது தான் இந்த உண்மை வெளிவந்திருக்கிறது. மக்களுக்கு குடிநீர் வழங்குவதற்கான குடிநீர்த் தொட்டியில் இது போன்ற மிருகத்தனமான செயல்கள் நடப்பதைக் கண்காணிக்க வேண்டியதும், ஒவ்வொரு நாளும் குடிநீர் மக்கள் பயன்படுத்தத் தக்க வகையில் பாதுகாப்பாக இருக்கிறதா?  என்பதை ஆய்வு செய்ய வேண்டியதும் அரசின் பணி. ஆனால், இந்த இரு கடமைகளிலும் திராவிட மாடல் அரசு தோல்வியடைந்து விட்டது.

தமிழ்நாட்டில் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக குடிநீர் தொட்டிகளில் மலம், மாட்டுச்சாணம் போன்றவற்றை கலக்கும் நிகழ்வுகள் அதிகரித்து விட்டன. அதிலும் குறிப்பாக பள்ளிகளிலும், பட்டியலின மக்கள் வாழும் பகுதிகளிலும் இத்தகைய நிகழ்வுகள் தொடர்வது மிகுந்த கவலையும், வேதனையும் அளிக்கிறது. பட்டியலின மக்களுக்கு எதிராக இத்தகைய கொடுமைகள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில் அவற்றைத் தடுக்க தமிழக அரசு தவறி விட்டது.

வேங்கைவயல் குடிநீர்த் தொட்டியில் மலம் கலக்கப்பட்ட கொடூரம் நிகழ்ந்து இன்றுடன் 17 மாதங்களாகி விட்டன. ஆனால்,  அதில் தொடர்புடைய குற்றவாளிகள் மீது இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாதது தான் இத்தகைய கொடுமைகள் மீண்டும், மீண்டும் நிகழ்வதற்கு காரணம் ஆகும். வேங்கைவயல் விவகாரத்தில் தமிழக அரசு இனியும் உறங்கிக் கொண்டிருக்காமல்  குற்றவாளிகளை அடையாளம் கண்டு, கடுமையான தண்டனை பெற்றுத்தர வேண்டும்.

குருவண்டான் தெரு குடிநீர்த் தொட்டியில் சாணம் கலக்கப்பட்ட நிகழ்வும் வேங்கைவயல் நிகழ்வு எந்த அளவுக்கு கொடூரமானதோ, அதே அளவுக்கு கொடூரமானது. அனைவரும் மனிதர்கள் தான். பிடிக்காதவர்களை பழிவாங்குவதற்காக இத்தகைய செயல்களில் ஈடுபட்டவர்கள் மன்னிக்கப்படுவதற்கு தகுதியற்றவர்கள். இந்த நிகழ்வின் பின்னணியில் இருப்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்களை கண்டுபிடித்து சட்டத்தின் முன் நிறுத்தி உரிய தண்டனை பெற்றுத்தர தமிழக அரசும், காவல்துறையும் நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.