Skip to main content

சுலபமாக தப்பலாம் என்ற எண்ணமே இதுபோன்ற தவறுகளுக்கு காரணம்... ராஜேஸ்வரி பிரியா கடும் கண்டனம்

Published on 03/12/2020 | Edited on 03/12/2020
Rajeshwari Priya

 

 

சென்னை வண்ணாரப்பேட்டையில் 15 வயது சிறுமி பாலியல் கொடுமைக்கு ஆளான சம்பவத்தில் ஈடுபட்ட அனைவருக்கும் கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும் என்று அனைத்து மக்கள் அரசியல் கட்சியின் நிறுவனத் தலைவர் மூ.ராஜேஸ்வரி பிரியா வலியுறுத்தியுள்ளார்.

 

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ''சென்னையில் 15 வயது சிறுமி 400-க்கும் மேற்பட்டவர்களால் சீரழிக்கப்பட்ட சம்பவம் மிகுந்த அதிர்ச்சியையும் ஆத்திரத்தையும் ஏற்படுத்துகிறது.

 

இதுபோன்ற பல சம்பவங்கள் தொடர்ச்சியாக இந்தியா முழுவதும் நடந்து கொண்டே உள்ளது. குறிப்பாக கடந்த ஐந்து ஆண்டுகளில் 250% குற்றங்கள் அதிகமானது குறிப்பிடத்தக்கது. பெண்கள் பாதுகாப்பில் மிகவும் பின்தங்கிய நிலையில் நமது நாடு உள்ளது.

 

கரோனா காலகட்டத்தில் 13 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாலியல் குற்றங்கள் பதிவாகியுள்ளன என்று தேசிய பெண்கள் மற்றும் குழந்தைகள் அமைச்சகம் தகவல் வெளியிட்டுள்ளது.

 

தற்போது சென்னை வண்ணாரப்பேட்டையில் நடைபெற்ற 15 வயது சிறுமி பாலியல் கொடுமைக்கு ஆளான சம்பவத்தில் எண்ணூர் காவல் நிலைய ஆய்வாளர் புகழேந்தி பாஜகவை சேர்ந்த ராஜேந்திரன் மற்றும் ஓய்வு பெற்ற டிஎஸ்பி காவல் ஆய்வாளர்கள் மற்றும் மருத்துவர்கள் பலரும் இந்தக் குற்றத்தில்  ஈடுபட்டுள்ளார்கள் என்று விசாரணையில் தெரியவந்துள்ளது. 

 

சமூகத்தில் மதிக்கத்தக்க பொறுப்பில் உள்ளவர்கள் இதுபோன்ற குற்றத்தில் ஈடுபட்டிருப்பது மிகுந்த வேதனையை அளிக்கிறது. இவர்களுக்கு பணமும் அதிகாரமும் நம்மிடம் உள்ளது என்ற தலை கணத்தில் எதை வேண்டுமானாலும் செய்யலாம், சுலபமாக தப்பித்துக் கொள்ளலாம் என்ற எண்ணமே இதுபோன்ற தவறுகளை செய்ய வைத்துள்ளது. 

 

இதற்கெல்லாம் முக்கிய காரணம் தண்டனைகள் சரியான நேரத்தில் கடுமையான தண்டனைகளாக அளிக்கப்படாததுதான். 

 

பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத நாடு எப்படி வளர்ச்சிப் பாதையில் செல்லும்? இதுபோன்ற பாலியல் கொடுமைகள் அதிகமாகிக் கொண்டே சென்றால் பெண்களின் முன்னேற்றம் என்பது மிகப்பெரிய கேள்விக்குறியாக மாறிவிடும். 

 

பெண்களையும் பெண் குழந்தைகளையும் பாதுகாக்க வேண்டிய அமைச்சகங்கள் என்ன வேலை செய்கிறார்கள் குற்றங்களின் எண்ணிக்கையை கணக்கிடுவது மட்டும்தான் அவர்களது வேலையா? 

 

குற்றங்களை குறைப்பதற்கான வழிகளையும், வழிமுறைகளையும் துரிதமாக செயல்படுத்த வேண்டும். ஆயிரக்கணக்கான வழக்குகள் நிலுவையில் உள்ளது குறித்து அறிக்கை வெளியிட வேண்டும். வழக்குகளை துரிதப்படுத்தி தண்டனைகள் சரியாக கிடைக்க பட்டதா என்று ஆராய வேண்டியது அமைச்சகத்தின் முக்கிய வேலை அல்லவா? 

 

இவ்வளவு அலட்சியமாக பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்துக் கொண்டே சென்றால் நாளை பெண் சமூகம் மிகவும் ஒடுக்கப்பட்ட பின்தங்கிய சமூகமாக மாறக்கூடிய அபாயமான சூழ்நிலையை எட்டிவிடும்.

 

இந்த 15 வயது சிறுமி பாலியல் வழக்கில் எந்தவித பாரபட்சமும் இல்லாமல் எல்லோருடைய பெயரும் குற்றப் பத்திரிகையில் இடம் பெற வேண்டும் அனைவருக்கும் கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும் அரசு பணியில் உள்ளவர்களை நிரந்தர பணி நீக்கம் செய்ய வேண்டும். ஓய்வு பெற்ற அரசு ஊழியராக இருந்தால் ஓய்வூதியத்தை நிறுத்திவிட வேண்டும். போக்சோ சட்டத்தின் கீழ் கடுமையான தண்டனை வழங்கபட வேண்டும் என கூறியுள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

சென்னையில் ஒரு வருடத்திற்கு போக்குவரத்து மாற்றம்!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Traffic change in Chennai for a year

சென்னை தெற்கு உஸ்மான் சாலை முதல் வடக்கு உஸ்மான் சாலை வரை மேம்பாலம் கட்டுமானப் பணி துவங்க உள்ளதால் நாளை (27.04.2024) முதல் அடுத்த ஆண்டு ஏப்ரல் 26 ஆம் தேதி (26.04.2025) வரை போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இது குறித்து சென்னை பெருநகர போக்குவரத்து காவல் துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில், “மேட்லி சந்திப்பு தெற்கு உஸ்மான் சாலை முதல் வடக்கு உஸ்மான் சாலை வரை மேம்பாலம் கட்டுமானப் பணி துவங்க உள்ளதால் 27.04.2024 முதல் 26.04.2025 வரை ஒரு வருடத்திற்கு போக்குவரத்து மாற்றுப்பாதைகளில் செயல்படுத்தப்படுகிறது. அதன்படி வடக்கு உஸ்மான் சாலையில் இருந்து தி.நகர் பேருந்து நிலையம் நோக்கி வரும் வாகனங்கள் பனகல் பார்க் அருகில் உள்ள உஸ்மான் சாலை மேம்பாலத்தில் செல்லத் தடை செய்யப்பட்டுள்ளது. அதற்கு பதிலாக வாகனங்கள் மேம்பாலத்தின் அனுகு (சர்வீஸ் ரோடு) சாலை வழியாக சென்று பிரகாசம் சாலை, பாஷ்யம் சாலை, தியாகராயர் சாலை, பர்கிட் சாலை வழியாக தி.நகர் பேருந்து நிலையத்தை அடையலாம். 

Traffic change in Chennai for a year

பர்கிட் சாலை, மூப்பாரப்பன் தெரு சந்திப்பில் இருந்து மேட்லி நோக்கி செல்வதற்கு பேருந்துகள் மட்டும் அனுமதிக்கப்படும். மற்ற வாகனங்கள் மூப்பாரப்பன் தெரு, மூசா தெரு, தெற்கு தண்டபானி தெரு, மன்னார் தெரு வழியாக உஸ்மான் சாலை மூலம் தி.நகர் பேருந்து நிலையத்தை அடையலாம். தி. நகர் பேருந்து நிலையத்திலிருந்து சைதாப்பேட்டை அண்ணா சாலையை அடைய தெற்கு உஸ்மான் சாலை சென்று கண்ணம்மாபேட்டை சந்திப்பை அடைந்து தென்மேற்கு போக் சாலையில் சென்று சிஐடி நகர் நான்காவது பிரதான சாலை, சிஐடி நகர் மூன்றாவது பிரதான சாலை சென்று அண்ணா சாலையை அடையலாம். 

Traffic change in Chennai for a year

சிஐடி நகர் 1ஆவது பிரதான சாலையிலிருந்து வடக்கு உஸ்மான் சாலைக்குச் செல்லும் வாகனங்கள் கண்ணம்மாபேட்டை சந்திப்பில் தென்மேற்கு போக் சாலை வழியாகச் சென்று வெங்கட் நாராயணா சாலையில் சென்று நாகேஸ்வரன் ராவ் சாலை வழியாக வடக்கு உஸ்மான் சாலையை அடையலாம். தி.நகர் பேருந்து நிலையத்திலிருந்து வடக்கு உஸ்மான் சாலையை அடைய மேட்லி ரவுண்டானாவில் இருந்து பர்கிட் ரோடு சென்று வெங்கட் நாராயண சாலை வழியாக நாகேஸ்வர ராவ் சாலையில் இடதுபுறம் திரும்பி வடக்கு உஸ்மான் சாலையை அடையலாம். எனவே வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் ஒத்துழைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Next Story

சென்னை விமான நிலையத்தில் கிடந்த தங்கம்; சுங்கத்துறையினர் விசாரணை!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Gold found at Chennai airport; Customs investigation

சென்னை விமான நிலைய குப்பைத் தொட்டியில் கிடந்த தங்கத்தை சுங்கத்துறையினர் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சென்னை சர்வதேச விமான நிலைய குப்பைத் தொட்டியில் கேட்பாராற்று கிடந்த ரூ.85 லட்சம் மதிப்பிலான தங்கத்தை சுங்கத்துறையினர் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். குப்பைத் தொட்டியில் கிடந்த 1.2 கிலோ தங்க நகைகளைக் கைப்பற்றிய சுங்கத் துறையினர், சிசிடிவியை பார்க்காதபடி நகையை குப்பைத் தொட்டியில் போட்டுச் செல்லும் நபர் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

குப்பைத் தொட்டியில் கிடந்த மர்ம பார்சலில், வெடிகுண்டு இருக்குமோ என்ற சந்தேகத்தில் சோதனை நடத்திய போது, தங்கக் கட்டிகள் கண்டுபிடிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. சென்னை விமான நிலையத்தில் ரூ.85 லட்சம் மதிப்பிலான 1.25 கிலோ தங்கக் கட்டிகள் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் சென்னையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.