puducherry  Govt decided Cash instead of Pongal package

Advertisment

உலகம் முழுவதும் உள்ள தமிழ் மக்களால் வருடந்தோறும் பொங்கல் திருநாள் சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த கொண்டாட்டத்தில் தமிழக அரசும் பங்கு கொள்ளும் வகையில், ஆண்டுதோறும் பொங்கல் திருநாளின் போது தமிழக அரசு சார்பில் குடும்ப அட்டைதாரர்களுக்குப் பொங்கல் பரிசு தொகுப்பு மற்றும் இலவச வேட்டி, சேலைகள் வழங்குவது வழக்கம்.

அந்த வகையில், இந்த ஆண்டும் (2024) பொங்கல் பரிசாக தமிழக அரசு சார்பில் அரிசி குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கைத்தமிழர் மறுவாழ்வு மையங்களில் வசிக்கக் கூடிய குடும்பங்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக 238 கோடியே 92 லட்ச ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு சார்பில் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி 2 கோடியே 19 லட்சத்து 57 ஆயிரத்து 402 குடும்ப அட்டைதாரர்களுக்குப் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இந்த பொங்கல் பரிசு தொகுப்பில் ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை மற்றும் முழு கரும்பு அடங்கிய பரிசுப் பொருட்கள் இடம் பெற்றுள்ளதாகவும் தகவல் வெளியாகியிருந்தது. நியாயவிலைக் கடைகள் மூலம் அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும் வழங்கிட தமிழ்நாடு அரசு உத்தரவிட்டது.

Advertisment

இந்த நிலையில், தமிழகத்தைப்போலவே புதுச்சேரி மாநிலத்திலும் இந்தாண்டு பொங்கல் பரிசுத் தொகை அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, இந்தாண்டு புதுவை மாநிலத்தில் உள்ள 3 லட்சத்து 53 ஆயிரத்து 249 ரேஷன் கார்டுகளுக்கு, அரிசி, வெல்லம் போன்ற பொங்கல் தொகுப்புக்கு பதிலாக தலா ரூ.500 வழங்கப்படும் என அறிவித்துள்ளது. மேலும், இந்த தொகை, பொங்கலுக்கு முன்பாக அனைவரது வங்கிக் கணக்கிலும் பணத்தை வரவு வைக்க புதுவை அரசு திட்டமிட்டுள்ளது. ஏற்கனவே, சிவப்பு ரேஷன் கார்டுகளுக்கு பொங்கல் இலவச துணிக்கு பதிலாக ரூ.1000 வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.