Skip to main content

ஊரடங்கிற்கு பிறகு மதுக்கடைகள் திறக்கப்படும் -  முதலமைச்சர் அறிவிப்பு

Published on 10/05/2020 | Edited on 10/05/2020
puducherry chief minister v narayanasamy - Cabinet meeting -



ஊரடங்கு முடிவுக்குப் பிறகு மதுக்கடைகள் திறக்கப்படும் என புதுச்சேரி முதல் அமைச்சர் நாராயணசாமி அறிவித்துள்ளார்.

 
புதுச்சேரி சட்டப்பேரவை வளாகத்தில் முதலமைச்சர் நாராயணசாமி தலைமையில் நேற்று அமைச்சரவை ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் அமைச்சர்கள் நமச்சிவாயம், மல்லாடி கிருஷ்ணாராவ்,  கந்தசாமி, ஷாஜகான்,  கமலக்கண்ணன் மற்றும் தலைமைச் செயலாளர் அஸ்வனிகுமார் மற்றும்  அரசு செயலாளர்கள் கலந்து கொண்டனர்.  
 

இந்த அமைச்சரவை ஆலோசனை கூட்டத்தில் மதுக்கடைகளை திறப்பது, அத்தியாவசிய பொருள்கள் விற்பனை செய்யும் நேரத்தை மாற்றியமைப்பது உள்ளிட்டவைகள் குறித்து விவாதிக்கப்பட்டன. மேலும் தமிழகத்தில் மதுக்கடைகள் மூடப்பட்டுள்ள நிலையில் புதுச்சேரியில் மதுக் கடைகளை திறந்தால் அருகேயுள்ள தமிழக மாவட்டங்களான கடலூர்,  விழுப்புரம் பகுதிகளிலிருந்து புதுச்சேரிக்கு மது அருந்த அதிகம் பேர் வருவர். அதன் மூலம் கரோனா தொற்று பரவ அதிக வாய்ப்புள்ளது. எனவே ஊரடங்கு  முடிந்தவுடன் 17-ஆம் தேதிக்கு பிறகு மதுக்கடைகளை திறப்பது கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. 

 

 

பின்னர் செய்தியாளர்களுக்கு முதலமைச்சர் நாராயணசாமி நேர்காணல் அளித்தார். அப்போது அவர், "மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் கரோனாவுக்கு மத்தியில் வாழ பழகிக்கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளதை பார்த்தால் கரோனா தொற்று விரைவில் நீங்காது என தெரிகிறது. எனவே நாம் கரோணாவுடன் போராட அனைத்து நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.  மருத்துவ நிபுணர்களின் அறிவுறுத்தலின்படி வெளியில் செல்லும் போது முக கவசம் அணிந்து செல்ல வேண்டும். தனிமனித இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும்.  பொது இடங்களில் தேவையில்லாமல் கூடுவதை தவிர்க்க வேண்டும்.  உணவு பழக்கத்தை மாற்றிக்கொள்ள வேண்டும்.  இவற்றை தொடர்ந்து பின்பற்றினாலே கரோனா தொற்றிலிருருந்து நம்மை பாதுகாத்துக் கொள்ள முடியும்.  
 

ஊரடங்கினால் அனைத்து மாநிலங்களிலும் பொருளாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. மாநில அரசுகளுக்கு வருவாய் இல்லை. அரசு ஊழியர்களுக்கு ஊதியம் வழங்க முடியவில்லை.  மக்கள் நலத் திட்டங்களை நிறைவேற்ற முடியாத சூழ்நிலை உள்ளது. 
 

இந்த இக்கட்டான நேரத்தில் மாநில அரசுகளுக்கு மத்திய அரசு நிதி வழங்கி பொருளாதாரம் மேம்பட உதவி புரியவேண்டும்.  புதுச்சேரியின் வருவாய் குறைந்துவிட்டது. இதை மத்திய அரசுதான் ஈடு செய்ய வேண்டும்.  மத்திய அரசு பிறப்பித்த முழு ஊரடங்கால் கடைகள்,  தொழிற்சாலைகள் மூடப்பட்டு உள்ளது. எனவே புதுச்சேரிக்கு உதவ வேண்டிய கடமையும் பொறுப்பும் மத்திய அரசுக்கு உண்டு.
 

மத்திய அரசிடம் நிதி உள்ளது பாரபட்சம் பார்க்காமல் மாநிலங்களுக்கு உதவ வேண்டும். நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்த மத்திய அரசு நிபுணர் குழு ஒன்றை அமைத்து குறுகிய காலத்தில் எந்தெந்த திட்டங்களை மாநில அரசுகள் நிறைவேற்றினால் பொருளாதாரத்தை மேம்படுத்த முடியும் அதற்கு மாநில அரசுகளுக்கு மத்திய அரசு எவ்வாறு நிதி ஆதாரத்தை வழங்கும் என்று அந்த குழு பரிந்துரை செய்ய வேண்டும். 
 

'மத்திய அரசு உடனடியாக புதுச்சேரிக்கு வழங்க வேண்டிய நிதியை வழங்க வேண்டும். மத்திய நிதி குழுவில் புதுச்சேரியை சேர்க்க வேண்டும். கடன் வாங்கும் சக்தியை உயர்த்த வேண்டும்' என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளேன். இதற்கு பிரதமர் செவி சாய்ப்பார் என்று நம்புகிறேன்". இவ்வாறு அவர் கூறினார். 


 

சார்ந்த செய்திகள்

Next Story

புதுச்சேரி சிறுமி கொலை; விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Puducherry girl incident File charge sheet soon

புதுச்சேரியில் உள்ள சோலை நகரில் கடந்த மார்ச் மாதம் 2 ஆம் தேதி, 5 ஆம் வகுப்பு பயின்று வந்த மாணவி ஆர்த்தி (வயது 9) என்பவர் திடீரென காணாமல் போன நிலையில் ஆர்த்தி அம்பேத்கர் நகர்ப் பகுதியில் உள்ள வாய்க்காலில் கை மற்றும் கால்கள் கட்டப்பட்டு போர்வையால் உடல் சுற்றப்பட்டு இறந்த நிலையில் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது.

விசாரணையில் அந்தப் பகுதியைச் சேர்ந்த கருணாஸ் என்ற 19 வயது இளைஞர் கருணாஸ் மற்றும் இதற்கு உடந்தையாக விவேகானந்தன் (59) என்ற இரண்டு பேரும் சிறுமியை கடத்திச் சென்று விவேகானந்தன் வீட்டில் வைத்து பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். அப்போது சிறுமி மயங்கி விழுந்துள்ளார். இதனால் அவரைக் கொலை செய்து மூட்டையில் கட்டிச் சாக்கடையில் வீசி இருப்பது அவர்களது வாக்குமூலத்தில் தெரியவந்தது.

இதனைத் தொடர்ந்து சிறுமி கொலை தொடர்பாகப் பாலியல் வன்கொடுமை, எஸ்.சி., எஸ்.டி. வன்கொடுமை தடுப்புச் சட்டம், கொலை வழக்கு மற்றும் போக்சோ உள்ளிட்ட 6 பிரிவுகளின் கீழ் புதுச்சேரி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். அதாவது இந்த சம்பவத்தில் கைதான குற்றவாளிகள் கருணாஸ் மற்றும் விவேகானந்தன் ஆகியோர் மீது போக்சோ மற்றும் வன்கொடுமை தடுப்புச் சட்டங்களில் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

மேலும் வழக்கில் விரிவான விசாரணை நடத்த ஐ.பி.எஸ். அதிகாரி கலைவாணன் தலைமையில் சிறப்பு குழு ஒன்றும் அமைத்து உத்தரவிடப்பட்டிருந்தது. இந்நிலையில் சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்தும் உடற்கூறாய்வு அறிக்கையில் உறுதியாகியுள்ளது. எனவே இந்த வழக்கு தொடர்பாக போக்சோ நீதிமன்றத்தில் விரைவில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்படும் என காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Next Story

உறுதியளித்த அமைச்சர்; தமிழக அரசு அதிரடி நடவடிக்கை!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Minister of Assurance; Tamil Nadu government action

புதுச்சேரி மாநிலம், முத்தியால்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் செல்வநாதன். மார்க்கெட் கமிட்டி ஊழியராக பணிபுரிந்து வரும் செல்வநாதனுக்கு ஹேமச்சந்திரன், ஹேமராஜன் என இரண்டு மகன்கள் இருந்தனர். 26 வயதான ஹேமச்சந்திரன், தனியார் நிறுவனத்தில் டிசைனராக பணிபுரிந்து வந்தார். இத்தகைய சூழலில் உடல் பருமனாக இருந்த ஹேமச்சந்திரன், சுமார் 150 கிலோவுக்கு மேல் இருந்துள்ளார். இதனால், மன உளைச்சலில் இருந்த ஹேமச்சந்திரன் உடல் எடையை குறைக்க சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் மருத்துவ ஆலோசனை பெற்று வந்தார். அங்கு அவரது உடல் பருமனை குறைப்பதற்காக, அறுவை சிகிச்சை மூலம் கொழுப்பு நீக்க சிகிச்சை மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டது.

அதன்படி, ஹேமச்சந்திரன் கடந்த 22 ஆம் தேதி (22.04.2024) மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அதன் பின்னர் அங்கு அவருக்கு அறுவை சிகிச்சை தொடங்கிய 15 நிமிடங்களிலேயே, மாரடைப்பு ஏற்பட்டு நேற்று (24.04.2024) ஹேமச்சந்திரன் பரிதாபமாக உயிரிழந்தார். இதனையடுத்து, ஹேமச்சந்திரன் இறப்பில் சந்தேகம் இருப்பதாக கூறி அவரது பெற்றோர்கள் புதுச்சேரி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இந்தப் புகாரின் பேரில், போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். உடல் பருமனைக் குறைக்க சிகிச்சை மேற்கொண்ட 26 வயது இளைஞர் உயிரிழந்த சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியது. 

Minister of Assurance; Tamil Nadu government action
கோப்புப்படம்

இதனையடுத்து உடல் பருமன் சிகிச்சையால் இளைஞர் மரணமடைந்ததை தமிழக மருத்துவம் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் உறுதி செய்தார். மேலும் இளைஞர் உயிரிழந்தது குறித்து குழு அமைத்து விசாரணை செய்யப்படும் என இளைஞரின் பெற்றோரிடம் தொலைபேசியில் பேசிய அமைச்சர் மா. சுப்ரமணியன் நேற்று உறுதியளித்திருந்தார். அதே சமயம் மகனை இழந்த பெற்றோருக்கு தனது ஆறுதலையும் அமைச்சர் மா. சுப்ரமணியன் தெரிவித்திருந்தார். 

Minister of Assurance; Tamil Nadu government action

இந்நிலையில் இது தொடர்பாக விசாரணை நடத்த 2 இணை இயக்குநர்கள் கொண்ட குழுவை அமைத்து தமிழக மருத்துவத்துறை உத்தரவிட்டுள்ளது. இந்த குழு 2 நாட்களில் விசாரணை அறிக்கையை சமர்ப்பிக்கவும் அதிரடியாக உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த விசாரணைக் குழு விரைவில் இளைஞரின் மரணம் குறித்து சம்பந்தப்பட்ட மருத்துவமனையில் விசாரணை நடத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. விசாரணைக்குழு அமைக்கப்படும் என உயிரிழந்த இளைஞரின் பெற்றோருக்கு அமைச்சர் மா. சுப்பிரமணியன் உறுதி அளித்திருந்த நிலையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.