Skip to main content

நியூட்ரினோ விஞ்ஞானிகளுக்கு பொட்டிப்புரம் கிராம மக்கள் எழுதிய உருக்கமான மடல்!

Published on 05/05/2018 | Edited on 05/05/2018
pottippuram

 

நியூட்ரினோ ஆய்வுத் திட்டத்தை நிறைவேற்றத் துடிக்கும் விஞ்ஞானிகளுக்கு பொட்டிபுரம் பஞ்சாயத்து கிராம மக்கள் மனம் திறந்து எழுதிய மடல்:


அய்யா வணக்கம்.,
    
பொட்டிபுரம் பஞ்சாயத்தில் வாழும் நாங்கள், இந்த நாட்டின் மிகச் சாதாரண குடிமக்கள். நீங்கள் கூறும் நியூட்ரினோ பற்றியும் அதன் முக்கியத்துவம் பற்றியும் புரிந்துகொள்ளும் அளவுக்கு நாங்கள் அறிவியல் படிக்கவில்லை. எங்களின் அன்றாட வாழ்க்கையில் அதற்கான கால அவகாசமும் கிடைப்பதில்லை! ஆனால் நீங்கள் ஆராய்ச்சி செய்வதற்காக தேர்ந்தெடுத்திருக்கும் இடம், நேரடியாக எங்கள் வாழ்க்கையோடு சம்பந்தப்பட்டிருக்கிறது. எனவே அது பற்றி மரியாதைக்குரிய விஞ்ஞானிகளாகிய உங்களிடம் சில கேள்விகளைக் கேட்க விரும்புகிறோம்.

 

   உங்கள் ஆய்வுத் திட்டத்தின் விண்ணப்பத்தை, தமிழக சுற்றுச்சூழல் மதிப்பீட்டுக் குழு நிபுணர்கள் ஏன் நிராகரித்தார்கள் என்று தெரியுமா? நீங்கள் ஆய்வகம் அமைக்கவிருக்கும் அம்பரப்பர் மலையைப் பற்றியும், அதன் சுற்றுப்புறங்கள் பற்றியும் அந்த நிபுணர்கள் கூறியதை ஒருவேளை நீங்கள் மறந்திருக்கலாம்! எனவே அந்த விவரங்களை மீண்டும் உங்கள் கவனத்திற்கு கொண்டுவர விரும்புகிறோம்.

 

i) “மிகக் கடினமான பாறையில் சுரங்கம் தோண்டுவதற்கு, உயர்திறனுடைய வெடி மருந்துகளை அதிகளவில் பயன்படுத்த வேண்டும். மேலும் அதிலிருந்து சுமார் 6 லட்சம் கன மீட்டர் அளவுக்கு பாறைக் கழிவுகளை வெளியேற்ற வேண்டும்!” 

 

ii) “சுரங்கம் அமையும் மலை தரைமட்டத்திலிருந்து 1,485 மீட்டர் உயரமுடையது. இவ்வளவு ஆழத்தில் சுரங்கம் தோண்டும்போது பாறையின் கீழ் நோக்கிய அழுத்தம், ஒரு சதுர மீட்டருக்கு 270 கிலோவுக்கும் அதிகமாக இருக்கும்! இதனால் சுரங்கத்தின் உள்பகுதியில் பாறைவெடிப்பு மற்றும் உள்புற சுற்றுச்சுவரில் விரிசல் ஏற்படுதல் போன்ற பாதிப்புகளை உருவாக்கும். இந்த ஆபத்தைத்  தவிர்ப்பதற்கான புவியியல் தொழில்நுட்ப அறிக்கை எதுவும் உங்கள் விண்ணப்பத்தில் இல்லை.”

 

iii) “ஆய்வகம் அமைய உள்ள இடம், சர்வதேச அளவில் ‘பாதுகாக்கப்பட்ட பல்லுயிர் பெருக்க மண்டலமாக’ அறிவிக்கப்பட்டுள்ள மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் வருகிறது. மேலும் இம்மலைப் பகுதி அரிய வகை தாவரங்கள், பறவைகள், பாலூட்டிகள் மற்றும் வணிக முக்கியத்துவமுடைய மூலிகைகள் ஆகியவற்றின் புகலிடமாக விளங்குகிறது!” 

 

iv) “ஆய்வகத்திற்கு தேர்வு செய்யப்பட்டுள்ள இடம், அருகிலுள்ள வைகை அணையின் நீர்ர்பிடிப்புப் பகுதிகளில் ஒன்றாக உள்ளது. ஐந்து மாவட்ட மக்கள் குடிநீருக்காகவும், விவசாயப் பயன்பாட்டிற்காகவும் வைகை அணையின் நீரை நம்பி வாழ்கின்றனர்!”

 

v)  அம்பரப்பர் மலையில் நீங்கள் உருவாக்க இருக்கும் நியூட்ரினோ ஆய்வக வேலைகளால் ஏற்படப்போகும் சுற்றுச்சூழல் பாதிப்புகளையும் ஆபத்துகளையும் மேற்கண்ட நிபுணர்கள் குழு அறிக்கை தெளிவாக சுட்டிக்காட்டுகிறது. தவிர, நீங்களே நியமித்த தகுதியற்ற நிறுவனமான சலீம் அலி ஃபவுண்டேஷன் தனது அறிக்கையில், “வெடிமருந்துகளால் பாறைகளை உடைக்கும்போது  ஏற்படும் அதிர்வுகளால், அருகிலுள்ள சுற்றுப்புறப் பகுதிகளிலும், அதன் புவியியல் அமைப்பிலும் கடும் பாதிப்புகளை ஏற்படுத்தும். அதுபற்றி நாங்கள் ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளவில்லை.” என்று கூறுகிறது!

 

மதிப்பிற்குரிய விஞ்ஞானிகளே...,

சுற்றுச்சூழல் ஆய்வு செய்யவேண்டிய அவசியத்திற்கு, இதைவிட வேறு என்ன காரணங்களை எதிர்பார்க்கிறீர்கள்?
 
ஒன்று, தகுதியற்ற நிறுவனத்தை வைத்து ஆய்வுசெய்கிறீர்கள் அல்லது சுற்றுச்சூழல் ஆய்வே செய்யாமல் ஓடி ஒழிகிறீர்களே. ஏன்?
  
எங்களுக்குத் தீமை விளைவிக்கும் ஏதோ ஒன்றை மூடி மறைக்கப் பார்க்கிறீர்கள் என்று நாங்கள் சந்தேகப்படுகிறோம்! 

கண்ணுக்குத் தெரியாத நியூட்ரினோவுக்காக இவ்வளவு சிரமப்படும் நீங்கள், கண்முன்னே உள்ள எங்கள் பிரச்சனைகளை திரும்பிக்கூட பார்க்க மறுப்பது ஏன்? 

 

let

 

அய்யா...இன்னமும் சில கேள்விகள் இருக்கின்றன, 

2)  உங்கள் திட்டத்திற்காக, 66 ஏக்கர் புறம்போக்கு நிலத்தை கையகப்படுத்தி உள்ளீர்களே... அது எங்கள் ஆடு, மாடுகளின் மேய்ச்சல் நிலம். எங்களுக்கு நினைவு தெரிந்த காலம்தொட்டு நாங்கள் அதனைப் பயன்படுத்தி வருகிறோம். வன நிலத்தை நம்பி வாழும் மக்கள் என்ற முறையில் இந்த மேய்ச்சல் நிலத்தின் மீதான சகல உரிமையும் எங்களுக்கு உண்டு. எங்கள் பொட்டிபுரம் கிராம சபையின் முறையான அனுமதி பெறாமலே எங்களின் மேய்ச்சல் நிலத்தை, நியூட்ரினோ திட்டத்திற்கு ஒப்படைத்திருப்பது உங்களுக்கு தெரியுமா? 

 

3)  உங்கள் ஆராய்ச்சிக்காக தினமும் 3.40 லட்சம் லிட்டர் தண்ணீரை எங்கள் முல்லைப் பெரியாற்றில் இருந்து எடுக்க உள்ளீர்கள். அந்த பெரியாற்று நீர், ஐந்து மாவட்டத்தின் லட்சக்கணக்கான மக்கள் தடியடி, துப்பாக்கி சூடு, சிறை, வழக்கு என்று போராடிப் பெற்ற உரிமை என்பது உங்களுக்குத் தெரியுமா?

 

4)  உங்கள் ஆய்வகத் திட்டத்தைச் சுற்றியுள்ள கிராம மக்கள், குடிநீர் வசதி கேட்டு மாநில அரசிடம் நீண்டகாலமாக கையேந்தி வருகிறோம் என்பது உங்களுக்கு தெரியுமா விஞ்ஞானிகளே? “மிகவும் மேடான பகுதியாக இருகிறது” என்பதை காரணம்காட்டி எங்கள் கோரிக்கையை இன்றுவரை மறுத்து வருகிறார்கள் அதிகாரிகள். ஆனால் எங்களைவிட உயரமான மேட்டுப்பகுதியில் இருக்கும் உங்கள் திட்டத்திற்கு உடனடியாக தண்ணீர் வசதியை செய்து கொடுத்துள்ளது அரசு! அடிப்படையான குடிநீர் வசதி பெறும் உரிமையைக் கூட, உங்கள் அறிவியலுக்காக நாங்கள் விட்டுக்கொடுக்க வேண்டும் என்று கூறுகிறீர்களா? 

 

5) நியூட்ரினோ ஆய்வுத் திட்டத்தின் விஞ்ஞானிகளும் உங்கள் ஆதரவாளர்களும் எங்கள் கிராமத்தைப் பற்றி இடத்திற்கு தகுந்தாற்போல பொய்யான தகவல்களைக் கூறி வருவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார்கள். இவர்கள் யாரும் எங்கள் கிராமத்தின் பக்கம் தலைகாட்டியதுகூட கிடையாது! இது எங்கள் மனதை மிகவும் புண்படுத்துவதாக இருக்கிறது. திறந்த மனதுடனும் வெளிப்படையாகவும் இருப்பதுதான் அறிவியல் என்ற உண்மையை  இவர்களுக்கு தயவுசெய்து புரியவையுங்கள்.

 

5) அம்பரப்பர் மலையை நாங்கள் கடவுளாக வணங்கி வருகிறோம்! எங்களின்     வழிபாட்டுச் சின்னங்கள் நீங்கள் சுரங்கம் தோண்டும் மலையின் மீது இன்றும் உள்ளன. எங்களின் வாழ்வாதாரமாக மட்டுமல்ல, பல்வேறு இயற்கைச் சீற்றங்களில் இருந்தும் இம்மலைதான் எங்களை பாதுகாத்து வருவதாக, பல தலைமுறைகளாக நாங்கள் நம்பி வருகிறோம்! எங்கள் கலாச்சார பண்பாட்டு விஷயங்களை எங்களால் விட்டுக்கொடுக்க முடியாது! ‘ராமர் கட்டிய பாலம்’ என்று நம்பப்படும் காரணத்திற்காக சேது சமுத்திரக் கால்வாய் திட்டத்தை மத்திய அரசு நிறுத்தி வைத்துள்ளது. அப்படியானால் எங்கள் அம்பரப்பர் கடவுளுக்காக நியூட்ரினோ திட்டத்தை இங்கிருந்து விலக்கிக் கொள்வதில் என்ன தவறு இருக்கிறது?

 

6)  இறுதியாக ஒரு விஷயம். “நியூட்ரினோ ஆய்வுகள் மூலம் வேறு இடங்களில் உள்ள அணு ஆயுதங்களை அழிக்க முடியும்” என்று டாக்டர் அப்துல்கலாம், திரு. ராஜசேகரன் ஆகிய விஞ்ஞானிகள் எழுதிய செய்திகளை நாங்களும் படித்திருக்கிறோம். நாங்கள் அமைதி-அன்பு-எளிமை ஆகியவற்றை பெருமையாகக் கருதுபவர்கள். வனக்காடுகள், மலைகள், ஆறுகள், குளங்கள் போன்ற இயற்கை வளங்களை நம்பி வாழ்பவர்கள். இதை சீர்குலைக்கும் வகையில், அணு ஆயுதங்கள் புழங்கும் பகுதியாக எங்கள் ஊரை மாற்றுவதற்கு ஒருபோதும் நாங்கள் அனுமதிக்க மாட்டோம்.

 

அய்யா. நாங்கள் வன்முறையற்ற அமைதி வழியைப் பின்பற்றுகிறவர்கள். அடிப்படையில் இந்தியா ஒரு ஜனநாயக நாடு என்பதில் நம்பிக்கை உள்ளவர்கள். விஞ்ஞானிகளாகிய நீங்களும் இதற்கு எதிரானவர்கள் அல்ல என்று நம்புகிறோம்! எங்களுக்கு உடன்பாடு இல்லாத ஒரு திட்டத்தை, எங்கள் வாழ்வாதாரத்தையே கேள்விக் குறியாக்கும் திட்டத்தை, எங்களிடம் ஒரு கருத்துக் கேட்புக் கூட்டம்கூட நடத்தாமல், எங்கள் மீது திணிப்பது அநீதியானது என்று கருதுகிறோம்! விஞ்ஞானிகளாகிய நீங்கள் அறிவியல் என்ற பெயரில், எங்களின் இயற்கை வளங்களை அழிக்க நினைக்கிறீர்கள். நாங்களோ அதைப் புனிதமாகக் கருதி காப்பாற்ற முயற்சிக்கிறோம்! இந்த ஜனநாயக நாட்டில் எங்களை அமைதியாக வாழ அனுமதியுங்கள்!

 

அனைத்து விஞ்ஞானிகளும் நீண்ட ஆயுளும் அர்த்தமுள்ள வாழ்வும் பெற தேனி மாவட்ட மக்களின் சார்பாக வாழ்த்துகிறோம்!  

நன்றி!

நாள்: 05-05-2018                                                        

அன்புடன்,

பொட்டிப்புரம் பஞ்சாயத்துக் கிராம மக்கள்.

சார்ந்த செய்திகள்