Skip to main content

பொள்ளாச்சி வழக்கில் நக்கீரன் ஆசிரியருக்கு மீண்டும் மீண்டும் சம்மன்: இது சி.பி.ஐ. ரவுண்டு!

Published on 07/05/2019 | Edited on 07/05/2019

 

பொள்ளாச்சி பாலியல் வன்கொடூரக் குற்றவாளிகளைவிட, அதனை அம்பலப்படுத்திய நக்கீரனை விசாரிப்பதிலேயே சி.பி.சி.ஐ.டியைத் தொடர்ந்து சி.பி.ஐ.யும் வேகம் காட்டுகிறது. இது தொடர்பாக, நக்கீரன் ஆசிரியர் கோபாலுக்கு சி.பி.ஐ. சம்மன் அனுப்பியுள்ளது.
 

பொள்ளாச்சி பாலியல் வன்முறை சம்பவங்கள் தமிழகத்தையே அதிரவைத்த நிலையில், அதுதொடர்பாக நக்கீரன் தொடர்ந்து பல புதிய ஆதாரங்களை வெளியிட்டது. அவை தமிழ்நாட்டு மக்களின் மனசாட்சியை உலுக்கின. உண்மைகளை அம்பலப்படுத்தின. எனினும், குற்றத்தில் தொடர்புடைய ஆளுந் தரப்பினரைக் காப்பாற்றும் முயற்சிகளையே மேலிடம் மேற்கொண்டது. இந்நிலையில், பொள்ளாச்சி காவல்நிலையத்தில் பதிவுசெய்யப்பட்ட இரண்டு வழக்குகளையும் சி.பி.ஐ.க்கு மாற்றுவதாக தமிழக அரசு ஆணை பிறப்பித்தது. இந்த ஆணைக்குப் பிறகும், அந்த வழக்குகளை சி.பி.சி.ஐ.டியே விசாரித்த நிலையில், கோவை சி.பி.சி.ஐ.டி. அலுவலகத்தில் ஆஜராகி, ஆவணங்களைச் சமர்ப்பிக்குமாறு ஆசிரியர் நக்கீரன் கோபாலுக்கு சம்மன் அனுப்பி வந்தனர்.

 

nakkheeran gopal

                           சி.பி.சி.ஐ.டி அலுவலகத்தில் நக்கீரன் ஆசிரியர் ஆஜரானபோது...


இதனையடுத்து, ஆசிரியர் நக்கீரன்கோபால் தொடர்ந்த வழக்கில் உயர்நீதிமன்றம், 'சென்னையில் இருக்கும் பத்திரிகை ஆசிரியரை கோவைக்கு அழைப்பதன் காரணம் என்ன? உண்மையிலேயே விசாரணை ஆவணங்கள் தேவைப்படும் பட்சத்தில் சென்னையிலேயே விசாரித்திருக்கலாமே?' என்று கூறி சென்னையில் 2019 ஏப்ரல்-1 ஆம் தேதி அவரை விசாரிக்கலாம் என்று உத்தரவிட்டிருந்தது.

 

 ஏப்ரல் 1-ஆம் தேதி சென்னை எழும்பூரிலுள்ள சி.பி.சி.ஐ.டி அலுவலகத்தில் ஆஜரானார் நக்கீரன் கோபால். எஸ்.பி. நிஷா பார்த்திபன் தலைமையிலான சி.பி.சி.ஐ.டி. போலீஸார், கிட்டத்தட்ட, 4 மணி நேரத்துக்கும் மேலாக விசாரணை செய்து நெருக்கடியளித்தனர். நக்கீரனில் வெளியிடப்பட்ட செய்திகளில் உள்ள ஆதாரங்களின் அடிப்படையில் தங்களின் விசாரணையைத் தொடர வேண்டிய போலீசார், நக்கீரனுக்கு செய்தி தந்தவர்களை அடையாளம் காட்டும்படி அச்சுறுத்தல் விசாரணை நடத்தினர். அனைத்துமே ஆளுந்தரப்பைக் காப்பாற்றும் வகையிலும், இனி பொள்ளாச்சி பற்றிய செய்திகளை வெளியிடக்கூடாது என்கிற மறைமுக மிரட்டல்களாகவுமே இருந்தன.
 

இந்நிலையில், இந்த வழக்கை தற்சமயம் கையிலெடுத்திருக்கும் சி.பி.ஐ., மே 8-ஆம் தேதி பெசன்ட் நகரிலுள்ள ராஜாஜி பவனில் அமைந்திருக்கும் சி.பி.ஐ. அலுவலகத்தில் ஆஜராகுமாறும் பொள்ளாச்சி வழக்கோடு தொடர்புடைய அனைத்து ஆதாரங்களையும் கொண்டுவருமாறும் நக்கீரன் ஆசிரியருக்கு சம்மன் அனுப்பியுள்ளது.
 

nakkheeran editor



 

எத்தனை முறை விசாரணைக்கு அழைத்தாலும், பத்திரிகை ஆசிரியருக்குரிய பொறுப்புடன் அதனை எதிர்கொள்வதற்கு நக்கீரன் ஆசிரியர் தயாராகவே இருக்கிறார். எனினும், குற்றத்தின் பின்னணியில் உள்ள அதிகாரவர்க்கத்தினர் மீது எந்த நடவடிக்கையும் இல்லாத நிலையில், செய்தியை வெளியிட்டதே குற்றம் என்பது போன்ற விசாரணை கெடுபிடிகள், பத்திரிகை சுதந்திரத்திற்கும் அரசியல் சாசனம் வழங்கியுள்ள கருத்து சுதந்திரத்திற்கும் விடப்படும் சவாலாகும்.
 

ஊடகங்களுக்கு எதிரான எத்தனையோ சட்ட நெருக்கடிகளை எதிர்கொண்டு, அவற்றை நீதியின் துணையுடன் வெற்றிகண்டு ஊடக சாத்தியங்களுக்கு புதிய வாசல்களைத் திறந்துவைத்த நக்கீரன் இந்த விசாரணையையும் வெற்றிகரமாக எதிர்கொள்ளும்.

 

 

 


 

சார்ந்த செய்திகள்

Next Story

வேங்கைவயல் விவகாரம்; நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

Published on 25/03/2024 | Edited on 25/03/2024
The vengaivayal Affair Court action order

புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் ஒன்றியம் வேங்கைவயல் கிராமத்தில் உள்ள குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி தண்ணீரில் மனிதக் கழிவு கலந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. குடிநீரில் மனிதக் கழிவு கலந்த சமூக விரோதிகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பல்வேறு அரசியல் கட்சிகள், அமைப்புகள், மனித உரிமை ஆணையம் எனப் பல தரப்பிலிருந்து அழுத்தம் கொடுக்கப்பட்டது. இதனையடுத்து சம்பவம் நடைபெற்ற 20 நாளில் இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி. போலீசாருக்கு மாற்றப்பட்டு சி.பி.சி.ஐ.டி. அதிகாரிகள் விசாரணை செய்து வருகின்றனர்.

அதன்படி கடந்த ஆண்டு ஜனவரி 14 ஆம் தேதி முதல் சி.பி.சி.ஐ.டி. அதிகாரிகள் இந்த வழக்கை விசாரணை செய்து வருகின்றனர். மேலும் இந்த விவகாரம் தொடர்பாக குற்றவாளிகளைக் கண்டறிய உண்மை கண்டறியும் சோதனையும், வேங்கைவயல், இறையூர் உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த 5 சிறுவர்கள் உட்பட 31 பேரிடமும் டி.என்.ஏ. பரிசோதனைகளையும் சி.பி.சி.ஐ.டி. போலீசார் மேற்கொண்டனர். ஒரு காவலர் உட்பட 2 பேரிடம் குரல் மாதிரி பரிசோதனையும் மேற்கொள்ளப்பட்டது.

இந்நிலையில் வேங்கைவயல் விவகாரத்தில் மேலும் 3 பேருக்கு குரல் மாதிரி பரிசோதனை மேற்கொள்ள புதுகோட்டை வன்கொடுமை தடுப்பு நீதிமன்றத்தில் சிபிசிஐடி சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. இதனை ஏற்றுக்கொண்ட புதுக்கோட்டை வன்கொடுமை தடுப்பு நீதிமன்றம் 3 பேருக்கு குரல் மாதிரி பரிசோதனை மேற்கொள்ள அனுமதி வழங்கியுள்ளது. 

Next Story

“அண்ட புளுகு, ஆகாச புளுகு என்பதைப்போல் இது மோடியின் புளுகு” - முதல்வர் மு.க.ஸ்டாலின் விமர்சனம்

Published on 13/03/2024 | Edited on 13/03/2024
Chief Minister M.K.Stal's criticized prime minister modi

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (13-03-24) காலை சென்னையில் இருந்து விமானம் மூலம் கோவை புறப்பட்டு சென்றார். அதன் பிறகு, பொள்ளாச்சி பகுதிக்கு சென்ற அவர், கோவை, நீலகிரி, திருப்பூர், ஈரோடு மாவட்டங்களைச் சேர்ந்த 57,325 பேருக்கு ரூ.1,273 கோடி செலவில் அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். மேலும், கோவை, ஈரோடு, திருப்பூர், நீலகிரி மாவட்டங்களில் ரூ.560 கோடி மதிப்பில் நிறைவுற்றுள்ள திட்டப்பணிகளை திறந்து வைத்தார். அதே போல், ரூ.490 கோடி மதிப்பிலான புதிய திட்டப்பணிகளுக்கும் அடிக்கல் நாட்டினார். 

அதன் பிறகு பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், “கோவை மாவட்டத்துக்கு 13 புதிய அறிவிப்புகளை இப்போது வெளியிடுகிறேன். அதில், தென்னை வேர்வாடல் நோய் பாதிப்பை நீக்க ரூ.14 கோடி நிதி வழங்கப்படும். தென்னை விவசாயிகள் நலன் கருதி கூட்டுறவு விற்பனை சங்கங்கள் மூலம் தேங்காய் நேரடியாக கொள்முதல் செய்யப்படும். மதுக்கரை ஊராட்சி ஒன்றியத்தில் தரைமட்ட குடிநீர் தொட்டி கட்டித் தரப்படும். காரமடை, ஆனைமலை, சூலூர் ஊராட்சி ஒன்றியத்தில் ரூ.4 கோடியில் சாலை அமைத்து தரப்படும். பெரியநாயக்கன்பாளையம் உட்பட 4 ஊராட்சி ஒன்றியத்தில் பாலங்கள் கட்டித் தரப்படும். 

ரூ.2.8 கோடி செலவில் 3 லட்சம் தென்னங்கன்றுகள் விவசாயிகளுக்கு இலவசமாக வழங்கப்படும். அதே போல், ஈரோடு மாவட்டத்துக்கு 9 புதிய அறிவிப்புகளை வெளியிடுகிறேன். ஈரோட்டில் ரூ.15 கோடி செலவில் வ.உ.சி பூங்கா தரம் உயர்த்தப்படும். 8 சமூக நலக்கூடங்கள் அமைக்கப்படும். மஞ்சள் மதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள் இருப்பு வைத்து வியாபாரம் செய்ய குளிர்பதன சேமிப்பு கிடங்கு அமைக்கப்படும். ஈரோட்டில் ரூ.10 கோடி மதிப்பீட்டில் அருங்காட்சியகம் அமைக்கப்படும். கொடுமணல் அகழாய்வில் கண்டெடுக்கப்பட்ட பொருட்கள் அருங்காட்சியத்தில் வைக்கப்படும். 

வாக்களித்த மக்களுக்கு அதிமுக ஆட்சி ஏதாவது நன்மை செய்ததா?. அதிமுக ஆட்சியில் அதிகாரமிக்க பதவியில் இருந்த அமைச்சர்கள், மேற்கு மண்டலத்துக்கு செய்தது என்ன?. மேற்கு மண்டலம் எங்கள் கோட்டை என்று கூறும் அதிமுக மக்களுக்கு என்ன செய்தது?. பெற்றோரை பதைபதைக்க வைத்த பொள்ளாச்சி கொடுமைதான் அதிமுக ஆட்சியில் நடந்தது. அதிமுக ஆட்சியில் பொள்ளாச்சியில் பெண்களுக்கு நடந்த கொடூரங்களை மறக்க முடியுமா?. கஞ்சா, குட்கா, மாமூல் பட்டியலில் அமைச்சரும், டி.ஜி.பியும் இருந்தது யார் ஆட்சியில்?. தமிழ்நாட்டை பதற வைத்த பொள்ளாச்சி வழக்கில் நடவடிக்கை எடுக்காமல் அலட்சியம் காட்டியது அதிமுக. கோடநாடு பங்களாவில் கொலை, தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் நடந்தது அனைத்தும் அதிமுக ஆட்சியில் தான். 

அதிமுக, பா.ஜ.க கள்ளக்கூட்டணிக்கு எதிராக ஜனநாயகத்தை பாதுகாக்க திமுக கூட்டணி உள்ளது. நாட்டுமக்களுக்கு எதையுமே செய்யாத பிரதமர், மோடியின் உத்தரவாதம் என பக்கம் பக்கமாக விளம்பரம் செய்கிறார். தமிழ்நாட்டுக்கு என்ன செய்தீர்கள் என்று பட்டியல் போட்டு பிரதமரிடம் மக்கள் கேட்க வேண்டும். பிரதமர் தமிழ்நாட்டுக்கு வரும்போதல்லாம், மத்திய அரசு கொண்டுவரும் திட்டத்தை திமுக எதிர்க்கிறது என்று கூறுகிறார். எந்த திட்டத்துக்கு நான் தடையாக இருந்தேன் என்று பிரதமர் சொல்ல முடியுமா? ஒன்றிய அரசு கொண்டு வந்த திட்டங்களை திமுக அரசு தடுப்பதாக பிரதமர் மோடி கூறியது அப்பட்டமான பொய். அண்ட புளுகு ஆகாச புளுகு என்பதைபோல் இது மோடியின் புளுகு. மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையை கட்ட நாங்கள் தடுத்தோமா? அல்லது ஓ.பி.எஸ், இ.பி.எஸ் தடுத்தார்களா? பா.ஜ.க.வின் பொய்யும் கட்டுக்கதைகளும் மக்களிடம் எடுபடாது” என்று கூறினார்.