amma

Advertisment

அனுமதியில்லாமல் வைக்கப்பட்ட பேனர்களை அகற்றாமல் காவல்துறையும், மாநகராட்சியும் என்ன செய்கிறது? என சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி கேள்வி எழுப்பியுள்ளார்.

சட்டவிரோதமாக சாலையை மறைத்து பேனர்கள் வைத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி தலைமை நீதிபதிக்கு புகார் மனு அளித்தார். அந்த புகார் மனுவில், முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்த நாளையொட்டி, சென்னை அவ்வை சண்முகம் சாலை முதல் டி.டி.கே சாலை வரையும், சென்னை பல்கலைக்கழகம் முதல ரிசர்வ் வங்கி வரையும் அனுமதியின்றி சட்டவிரோதமாக வைக்கப்பட்டிருந்த பேனர்களை அகற்றக் கோரி காவல் துறைக்கு அளித்த புகார் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறியுள்ளார். மேலும் அது தொடர்பான பல புகைப்படங்களையும் இணைத்துள்ளார்.

இந்த, மனு அடிப்படையில் உயர்நீதிமன்றம் இன்று தானாக முன் வந்து வழக்கு பதிவு செய்தது. இதையடுத்து, தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி அப்துல் குத்தூஸ் அமர்வு முன்பு வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது, அனுமதியில்லாத பேனர்களை அகற்ற வேண்டும் என பல வழக்குகளில் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டும், ஏன் அவற்றை அதிகாரிகள் முறையாகப் பின்பற்றவில்லை? அனுமதியில்லாமல் வைக்கப்பட்ட பேனர்களை அகற்றாமல் காவல்துறையும், மாநகராட்சியும் என்ன செய்து கொண்டு இருந்தீர்கள் என்று தலைமை நீதிபதி சரமாரியான கேள்விகளை எழுப்பினார்.

Advertisment

mgr

நான் ஒவ்வொரு முறையும் விமான நிலையம் செல்லும் போது, சாலை தடுப்புகளிலும், நடைபாதைகளை மறித்தும் பேனர்கள் வைத்திருப்பதை கண்கூடாக பார்த்துள்ளேன். இதனால் பொதுமக்கள் மாணவர்கள் நடைபாதையை பயன்படுத்த முடியாமல் சிரமப்படுவதை கண்கூடாக பார்த்தேன். இதனால் சாலைகளில் உள்ள வழிப் பலகைகள் கூட தெரியவில்லை என்றும் கூறினார்.

மேலும் அவர் கீரின்வே சாலை முதல் சென்னை உயர்நீதிமன்றம் வரை உள்ள சாலை மட்டும் பேனர் இல்லாமல் இருப்பதாகவும், அதைப் போன்று அனைத்து சாலைகளும் இருக்க வேண்டும் என்று தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து சட்டவிரோதமாக அனுமதியின்றி வைத்த பேனர்களை உடனடியாக அகற்றி, அறிக்கையாக தாக்கல் செய்ய வேண்டும் என்று சென்னை மாநகராட்சிக்கும், காவல் துறைக்கும் உத்தரவிட்டு வழக்கை வரும் மார்ச் 5 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.