Skip to main content

“மத்தியஸ்த்தை இந்தியா ஒருபோதும் ஏற்றுக்கொள்ளாது”  - டிரம்ப்பிடம் சொன்ன பிரதமர் மோடி!

Published on 18/06/2025 | Edited on 18/06/2025

 

PM Modi tell India will never accept mediation to Trump

கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி ஜம்மு காஷ்மீரில் உள்ள பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய கொடூரத் தாக்குதலில் 26 சுற்றுலாப் பயணிகள் கொல்லப்பட்டனர். இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக கடந்த மே 7ஆம் தேதி பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்களை குறிவைத்து, ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்ற பெயரில் தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில், 100க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து, பாகிஸ்தான் ராணுவம் எல்லை மீறி இந்தியாவின் முக்கிய நகரங்களை குறிவைத்து தாக்குதல் நடத்த முயன்றது. இதில், பாகிஸ்தான் ராணுவத்தினருக்கும் இந்திய ராணுவத்தினருக்கும் இடையே தாக்குதல் சம்பவங்கள் அரங்கேறின. இரு நாடுகளுக்கும் இடையே போர் நிலவும் அபாயம் இருந்த நிலையில், அமெரிக்கா இந்த விவகாரத்தில் தலையிட்டது. அதன்படி, இரு நாடுகளும் தாக்குதலை நிறுத்த ஒப்புக்கொண்டது. தற்போது, அமைதி நிலவி வருகிறது. 

இதற்கிடையில் இந்த தாக்குதலை நிறுத்தியது அமெரிக்கா தான் என்றும், வர்த்தகத்தை முன்னிறுத்தி தான் இந்தியா - பாகிஸ்தானுடனான தாக்குதலை நிறுத்தினேன் என்றும் அமெரிக்கா அதிபர் டொனால்ட் டிரம்ப் செல்லும் இடங்களில் எல்லாம் தொடர்ந்து பேசி வருகிறார். இந்த விவகாரம் ஒட்டுமொத்த நாட்டில் சலசலப்பை ஏற்படுத்தியது. அமெரிக்கா அதிபர் விட்ட எச்சரிக்கைக்கு கட்டுப்பட்டு பாகிஸ்தானுடனான தாக்குதல் நிறுத்தத்துக்கு இந்தியா ஒப்புக்கொண்டதா? என்ற கேள்வி விவாதப் பொருளாக மாறியது. டிரம்ப்பின் கூற்றை இந்தியா மறுத்தபோதிலும், அமெரிக்க அதிபர் டிரம்ப் தொடர்ந்து பேசி வருகிறார். 

PM Modi tell India will never accept mediation to Trump

இந்த நிலையில், பிரதமர் மோடியுடன் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தொலைப்பேசி மூலம் ஆலோசனை நடத்தியுள்ளார். பாகிஸ்தான் ராணுவ தளபதி அசிம் முனீரை இன்று (18-06-25) அமெரிக்க அதிபர் டிரம்ப் சந்திக்க உள்ள நிலையில், பிரதமர் மோடியுடன் டிரம்ப் ஆலோசனை நடத்தியுள்ளார். அதில் ஆபரேஷன் சிந்தூர் தொடர்பாக பிரதமர் மோடி விவரித்ததாக வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி தகவல் தெரிவித்துள்ளார். 

அதிபர் டிரம்ப் - பிரதமர் மோடி இடையே நடைபெற்ற தொலைப்பேசி உரையாடலில், பாகிஸ்தானின் வேண்டுகோளின் பேரில் தாக்குதல் நிறுத்தம் மேற்கொள்ளப்பட்டதாகவும், இந்தியா - பாகிஸ்தான் உடனான பேச்சுவார்த்தையில் எந்த இடத்திலும் வர்த்தகம் தொடர்பாக பேசபடவில்லை என்றும் டிரம்ப்பிடமே பிரதமர் மோடி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். மேலும் அவர், மத்தியஸ்த்தை இந்தியா இதுவரை ஏற்றதும் இல்லை, இனியும் ஏற்கப்போவதில்லை என்று டிரம்ப்பிடம் கூறியுள்ளார். கனடாவில் நடைபெறும் ஜி-7 உச்சிமாநாட்டில் பிரதமர் மோடியும், அமெரிக்க அதிபர் டிரம்ப்பும் சந்தித்து பேசுவதாக இருந்தது. ஆனால், இஸ்ரேல் - ஈரான் இடையேயான போரின் காரணமாக டிரம்ப் கனடாவில் இருந்து முன்கூட்டியே அமெரிக்காவுக்குச் சென்றுவிட்டார். இதனை தொடர்ந்து, பிரதமர் மோடியுடன் அமெரிக்க அதிபர் டிரம்ப் நேற்று மாலை சுமார் 35 நிமிடங்கள் தொலைப்பேசி மூலமாக பேசியுள்ளார். 

சார்ந்த செய்திகள்