ADVERTISEMENT

ஸ்டெர்லைட்டை நிரந்தரமாக மூடக்கோரி வழக்கு: அவசர வழக்காக விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு!

12:23 PM May 28, 2018 | Anonymous (not verified)

ADVERTISEMENT

ADVERTISEMENT


ஸ்டெர்லைட் ஆலையை நிரந்திரமாக மூட உத்தரவிடக்கோரி தொடர்ந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுத்துள்ளது.

தூத்துக்குடியில் இயங்கி வரும் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக தொடர் போராட்டங்கள் நடைபெற்று வந்த நிலையில், ஆலை இயங்குவதற்கு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் வழங்கியிருந்த அனுமதி கடந்த மார்ச் 31-ம் தேதியுடன் முடிவடைந்தது. அதன்பின்னர் அனுமதி புதுப்பிக்கப்படவில்லை. ஆலையின் பல்வேறு குறைபாடுகளை சுட்டிக்காட்டி, மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் அனுமதி வழங்க மறுத்தது.

இதனிடையே ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வலியுறுத்தி கடந்த 22ஆம் தேதி போராட்டம் நடைப்பெற்றது. அப்போது ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டத்தில், போராட்டக்காரர்களுக்கு காவல்துறையினருடன் மோதல் ஏற்பட்டதன் காரணமாக கல் வீச்சு, கண்ணீர் புகை, தடியடி, துப்பாக்கிச் சூடு உள்ளிட்டவை நடத்தப்பட்டன. அதில் போராட்டக்காரர்கள் 13 பேர் உயிரிழந்தனர். மேலும் பலர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்நிலையில் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்திரமாக மூட உத்தரவிடக்கோரி சிவக்குமார் என்பவர் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். அவர் தனது மனுவில், ஸ்டெர்லைட் ஆலையால் ஏற்பட்ட பாதிப்புகளை சுட்டிக் காட்டி பிரச்சினையின் தீவிரம் கருதி, இந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார். ஆனால், அவசர வழக்காக விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுத்துள்ளது. கோடை விடுமுறைக்கு பிறகு இவ்வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT