Skip to main content

பெரியார் பல்கலையில் ஒரே நாளில் 57 ஊழியர்களுக்கு 'மெமோ!'; தொழிலாளர் வயிற்றில் அடிக்கும் பதிவாளர்!!

Published on 09/11/2019 | Edited on 15/11/2019

தேசிய ஒற்றுமை நாள் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சியை புறக்கணித்ததாக பெரியார் பல்கலைக்கழகம், ஒரே நாளில் 57 தற்காலிக ஊழியர்களிடம் விளக்கம் கேட்டு குற்றச்சாட்டு குறிப்பாணை (மெமோ) அளித்துள்ளது, பல்கலை வட்டாரத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 

periyar univ

 

 

சேலம் பெரியார் பல்கலையில், இளநிலை உதவியாளர், எழுத்தர், உதவி பதிவாளர் என பல்வேறு நிலைகளில் 329 ஆசிரியர் அல்லாத ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். இவர்களில் ஒரு பகுதியினர் தொகுப்பூதியம் அடிப்படையிலும், மற்றொரு பகுதியினர் தினக்கூலி அடிப்படையிலும் பணியாற்றி வருகின்றனர்.  

பல்கலையில் மூன்று ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றி வரும் தினக்கூலி பணியாளர்களை தொகுப்பூதியத்திற்கு மாற்ற வேண்டும்; தொகுப்பூதியத்தை மாத அடிப்படையில் கணக்கிட்டு வழங்க வேண்டும்; ஒரே இடத்தில் மூன்று ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றி வரும் ஊழியர்களை இடமாறுதல் செய்ய வேண்டும் உள்ளிட்ட பதினைந்து அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி செப். 23ம் தேதி ஆசிரியர் அல்லாத பணியாளர்கள் கருப்பு பட்டை அணிந்து பணியில் ஈடுபட்டனர்.

இதற்கும் பல்கலை நிர்வாகம் மசியாததால், அடுத்தக்கட்டமாக அக். 8ம் தேதி, சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே அவர்கள் ஒருநாள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில், பல்கலை விதிகளுக்கு முரணாக நடந்து கொண்டதாகக்கூறி, தொழிற்சங்க நிர்வாகிகள் சக்திவேல், கனிவண்ணன், கிருஷ்ணவேணி, செந்தில்குமார் ஆகிய நான்கு பேரை, பல்கலை துணைவேந்தர் குழந்தைவேல் பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார். 

மேலும், மறுநாள் அவர்கள் எங்கே பணிக்கு வந்து விடுவார்களோ எனக்கருதிய பல்கலை நிர்வாகம், வருகையைப் பதிவு செய்யக்கூடிய பயோமெட்ரிக் உபகரணத்தில் இருந்தும் அவர்களின் பெயர்களை நீக்கியதோடு, பல்கலைக்குள் நுழையக்கூடாது என்றும் தடை விதித்தது.

துணைவேந்தரின் நடவடிக்கையைக் கண்டித்தும், கோரிக்கைகளை வலியுறுத்தியும் அக். 30ம் தேதி காலை முதல் இரவு வரை பல்கலை வளாகத்தில் பெரியார் சிலை அருகே தரையில் அமர்ந்து ஆசிரியர் அல்லாத பணியாளர்கள் 200 பேர் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். நவ. 1ம் தேதி வரை தொடர்ச்சியாக இந்த போராட்டம் நடந்தது. 
 

prakash memo

 

 

இந்நிலையில், தொழிலாளர் நலத்துறை உதவி ஆணையர் சங்கீதா முன்னிலையில் பல்கலை தரப்பும், தொழிற்சங்க நிர்வாகிகள் தரப்பும் கலந்து கொண்ட முத்தரப்பு பேச்சுவார்த்தை நடந்தது. தொழிலாளர் நலத்துறையின் அறிவுறுத்தலின்பேரில் ஆசிரியரல்லாத பணியாளர்கள் நவ. 1ம் தேதி மாலையுடன் மூன்று நாள் காத்திருப்புப் போராட்டத்தைக் கைவிடுவதாக அறிவித்தனர். 

மீண்டும் நவ. 7ம் தேதி நடந்த பேச்சுவார்த்தையின்போது, ஏற்கனவே பணியிடை நீக்கம் செய்யப்பட்ட நால்வர் மீதான நடவடிக்கையை கைவிட முடியாது என்றும், இதற்கென அமைக்கப்பட்டுள்ள குழுதான் முடிவு செய்யும் என்றும் பல்கலை தரப்பினர் கூறினர். தொழிலாளர் நலத்துறை அறிவுறுத்தியும்கூட பல்கலை நிர்வாகம் தொழிலாளர் விரோதப் போக்குடன் தன்னிச்சையாக முடிவெடுத்தது தொழிற்சங்க நிர்வாகிகளிடையே மேலும் மனக்கசப்பை உண்டாக்கியது.

இது இப்படி இருக்க, பல்கலை நிர்வாகமோ வெள்ளிக்கிழமை (நவ. 8) காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர் அல்லாத பணியாளர்கள் 57 பேருக்கு ஒரே நாளில் குற்றச்சாட்டு குறிப்பாணைகளை அனுப்பி இருக்கிறது. பிரகாஷ் என்பவருக்கு பதிவாளர் (பொறுப்பு) தங்கவேல் அனுப்பியுள்ள குறிப்பாணையில் கூறியிருப்பதாவது:

''தமிழக அரசு ஆணைக்கிணங்க கடந்த 31.10.2019ம் தேதி காலை 10 மணிக்கு, பல்கலை வளாகத்தில் தேசிய ஒற்றுமை நாள் உறுதிமொழி ஏற்பு நிகழ்விற்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. துணைவேந்தர் தலைமையில் இந்நிகழ்ச்சி நடந்தது. அன்றைய தினம் பணிக்கு வந்திருந்த ஆசிரியர்கள், மாணவர்கள், அலுவலர்களில் ஒரு பகுதியினர் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.

இந்நிகழ்ச்சியில் நீங்கள் (பிரகாஷ்&தினக்கூலி பணியாளர்) கலந்து கொள்ளாமல் சற்று தொலைவில் மற்ற சிலருடன் சேர்ந்து கூட்டமாக அமர்ந்து கொண்டு இருந்தது, அந்த உறுதிமொழி ஏற்பு நிகழ்விற்கு அவமரியாதை செய்ததாக பல்கலை நிர்வாகம் கருதுகிறது. மேற்சொன்ன ஒழுங்கீனமான நடவடிக்கைக்கு தங்கள் மீது ஏன் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கக்கூடாது?,'' என்று அந்த குற்றச்சாட்டு குறிப்பாணையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதற்கான விளக்கத்தை நவ. 13ம் தேதிக்குள் அளிக்க வேண்டும் என்றும் பதிவாளர் தெரிவித்துள்ளார்.

முதல்கட்டமாக 57 பேருக்கு குறிப்பாணை வழங்கப்பட்டுள்ள நிலையில், காத்திருப்புப் போராட்டத்தில் கலந்து கொண்ட 200 பேருக்கும் இதுபோன்ற குறிப்பாணை வழங்கப்படும் எனத் தெரிகிறது.

இதுகுறித்து பெரியார் பல்கலை தொழிலாளர் சங்கத்தின் பொதுச்செயலாளர் சக்திவேலிடம் கேட்டபோது, ''தேசிய ஒற்றுமைநாள் உறுதிமொழி உள்பட சம்பிரதாயமாக நடக்கும் இதுபோன்ற உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சிகளில் ஆசிரியர் அல்லாத பணியாளர்களை கலந்து கொள்ளச்சொல்லி பொதுவாக கட்டாயப்படுத்துவதில்லை. இதுதான் காலங்காலமாக நடந்து வருகிறது. மேலும், காத்திருப்புப் போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் அன்றைய தினம், பணிக்குச் செல்லாமல் ஆப்சென்ட் ஆகியிருந்தனர். 

அப்படி இருக்கும்போது அந்த உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சியில் எப்படி பங்கேற்க முடியும்? ஆசிரியர் அல்லாத பணியாளர்களை ஒடுக்க வேண்டும் என்ற உள்நோக்கத்துடன் எங்கள் மீது இத்தகைய ஒழுங்கு நடவடிக்கைகளை எடுத்து பல்கலை நிர்வாகம் எடுத்து வருகிறது. எங்கள் கோரிக்கைகளை ஏற்று, ஒழுங்கு நடவடி க்கையை பல்கலை நிர்வாகம் கைவிட வேண்டும்,'' என்றார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

முதல் தலைமுறையினர் வாக்கு யாருக்கு? சுவாரஸ்யமான தகவல்கள்

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Interesting facts about who the first generation voted for

நாடாளுமன்றத் தேர்தலில் முதல்முறையாக வாக்களித்த இளைஞர்கள் மாநிலக் கட்சிகளுக்கே முக்கியத்துவம் அளித்து வாக்களித்திருப்பதும், சமூக  நலத்திட்டங்கள், ஊழல் ஆகிய அம்சங்களை கருத்தில் கொண்டு  வாக்களித்திருப்பதும் தெரிய வந்துள்ளது.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 நாடாளுமன்றத் தொகுதிகளுக்கும் ஏப். 19ஆம் தேதி தேர்தல் நடந்தது. தமிழகத்தில் திமுக, அதிமுக, பாஜக, நாதக என நான்கு முனை போட்டி நிலவியது. தமிழகத்தில் மொத்தம் 6.23 கோடி வாக்காளர்கள் உள்ளனர். இவர்களில் முதல் தலைமுறை வாக்காளர்கள் 10.92 லட்சம் பேர். முதல் முறையாக வாக்களிக்கும் இளைஞர்களின் ஆதரவு யாருக்கு? என்பதில் அரசியல் கட்சிகளிடையே பெரும் எதிர்பார்ப்பு நிலவியது.

இந்நிலையில், சேலம் நாடாளுமன்றத் தொகுதியில் முதன் முதலாக வாக்களித்துவிட்டு வந்த இளைஞர்கள், இளம்பெண்களிடம் பேசினோம். அவர்கள் ஊழல் மற்றும் சமூக நலத்திட்டங்களின் அடிப்படையில் வாக்களித்து இருப்பதும், பெரும்பாலானோர் மாநிலக் கட்சிகளுக்கே முக்கியத்துவம் அளித்திருப்பதும் தெரிய வந்தது.

இதில் இன்னொரு சுவாரஸ்ய தகவலும் கிடைத்தது. முதல் முறை வாக்களித்தவர்களில் இளம்பெண்கள் மாநில அரசின் செயல்திட்டங்களின் அடிப்படையிலும், இளைஞர்கள் சீமானின் நாம் தமிழர் கட்சிக்கு ஆதரவு அளித்திருப்பதும் தெரிய வந்துள்ளது. அதாவது ஒரே வயதாக இருந்தாலும் இளம்பெண்கள், இளைஞர்களின் சிந்தனை வேறு வேறாக இருக்கிறது. என்றாலும், அவர்கள் எந்தக் கட்சிக்கு வாக்களித்தோம் என்பதை வெளிப்படையாக கூற மறுத்துவிட்டனர். எனினும், நம்முடைய கேள்விகளுக்கு அவர்கள் அளித்த பதில்கள் மூலம், யாருக்கு வாக்களித்தார்கள் என்பதை கிட்டத்தட்ட யூகிக்க முடிந்தது.

முதல்முறையாக வாக்களித்த அனுபவம் எப்படி இருந்தது?, யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்பதில் பெற்றோரின் தலையீடு இருந்ததா?, உங்கள் வாக்கு தேசிய கட்சிக்கா? அல்லது மாநில கட்சிக்கா?, எதன் அடிப்படையில் வாக்களித்தீர்கள்?, உங்களைக் கவர்ந்த தமிழக அரசின் திட்டங்கள் என்னென்ன? ஆகிய கேள்விகளை முன்வைத்தோம். சேலம் வடக்கு சட்டமன்றத் தொகுதியில் முதல் தலைமுறை வாக்காளர்கள் சிலரைச் சந்தித்தோம். அவர்கள் கூறியதாவது..

 Interesting facts about who the first generation voted for

அக்ஷய பிரியா(பி.எஸ்சி., மாணவி): முதல்முறையாக வாக்குச்சாவடிக்கு வந்து  வாக்களித்ததே ஜாலியான அனுபவமாக இருந்தது. யார் அதிகாரத்திற்கு வந்தால் பெண்களுக்கு பாதுகாப்பு கிடைக்குமோ அதை மனதில் வைத்தும், புதியவர்கள் அதிகாரத்திற்கு வர வேண்டும் என்பதை கருத்தில்கொண்டும் வாக்களித்தேன்.

 Interesting facts about who the first generation voted for

பூர்ணிமா(பி.இ., மாணவி): ஒரு குடிமகளாக வாக்களிப்பது நமது கடமை. யாருக்கு ஓட்டுப் போடணும் என்று அப்பா, அம்மா உட்பட யாருடைய தலையீடும் இல்லாமல் நானாக சிந்தித்து வாக்களித்தேன். யார் வந்தால் நல்லது செய்வாங்களோ அவர்களுக்கு வாக்களித்தேன். நான் தேசியக் கட்சிகளுக்கு வாக்களிக்கவில்லை. மாநிலக் கட்சிக்குதான் வாக்களித்தேன். இப்போதுள்ள அரசு செயல்படுத்தி வரும் நலத்திட்டங்களில் உள்ள நல்லது, கெட்டது பற்றி எனக்கு எதுவும் தெரியாது.

 Interesting facts about who the first generation voted for

அகல்யா(பி.காம்., சி.ஏ., மாணவி): முதல் முறையாக வாக்களிக்கப் போகிறோம் என்பதே சந்தோஷமாகத்தான் இருந்தது. எங்களுக்குனு ஒரு அடையாள அட்டை கிடைத்திருக்கிறது. தமிழகத்தில் இப்போதுள்ள அரசும் நல்லாதான் செயல்படுகிறது. இன்னும் சிறப்பாக இருந்தால் நன்றாக இருக்கும்.

சவுந்தர்யா(எம்.ஏ., மாணவி, அகல்யாவின் சகோதரி): இந்த நாட்டுக்கு ஒரு நல்ல தலைவரை தேர்ந்தெடுக்கப் போகிறோம் என்ற பொறுப்பை எங்களிடம் கொடுத்திருக்கிறார்களே என்று பெருமையாக இருக்கிறது. நானும், என் சகோதரி அகல்யாவும் ஒரு தேசியக் கட்சிக்குதான் ஓட்டுபோட்டோம். நாடு நல்ல நிலையில் செல்ல வேண்டும் என்பதாலும், வலிமையான பிரதமர் வேண்டும் என்பதாலும் வாக்களித்தோம். இப்போதுள்ள மத்திய அரசும், தமிழகத்தில், திமுக அரசும் நன்றாகத்தான் செயல்படுகிறது.

 Interesting facts about who the first generation voted for

நிவேதா(பி.ஏ., மாணவி): முதன் முதலாக வாக்குச்சாவடிக்கு வந்து வாக்களித்தது புது அனுபவமாக இருந்தது. நல்லவங்களுக்கு ஓட்டு போட்டிருக்கேன். பாரம்பரியான தேசியக்கட்சி ஆட்சிக்கு வரவேண்டும் என்று சிந்தித்து வாக்களித்தேன். அரசு கலைக் கல்லூரியில் படிக்கிறேன். தமிழக அரசின் மகளிருக்கான இலவச பேருந்து திட்டமும், புதுமைப்பெண் திட்டமும் பிடித்திருக்கிறது.

 Interesting facts about who the first generation voted for

வெற்றிவேல் (பி.இ., மாணவர்): 140 கோடி மக்களுக்கான அரசை தேர்ந்தெடுக்கப் போகிறோம் என்ற பொறுப்பை உணர்ந்து எல்லோருமே வாக்களிப்பது அவசியம். வாக்குப்பதிவு குறைவதை தடுக்க, இரண்டு கட்டங்களாக தேர்தல் நடத்தலாம். வெளியூர்களில் வேலைக்குச் சென்றவர்களால் சொந்தஊருக்குச் சென்று வாக்களிக்க முடியாததும் வாக்குப்பதிவு குறைய முக்கிய காரணம். தமிழ்நாட்டில் படித்தவர்கள் அதிகமாக இருந்தும், போதிய வேலைவாய்ப்பு இல்லாததால் வெளிமாநிலங்களுக்கு வேலை தேடிச்செல்வது அதிகரித்துள்ளது. அதனால் நம் மாநிலத்திலேயே புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்க வேண்டும். அதற்கு புதிய சிந்தனையுடன் புதியவர்கள் ஆட்சிக்கு வரவேண்டும். நம்மை நாம்தான் ஆள வேண்டும் என்பதை மனதில் வைத்து வாக்களித்தேன். தமிழ்நாட்டில் இதற்கு முன்பும் கஞ்சா போன்ற போதைப் பொருட்கள் புழக்கத்தில் இருந்தாலும், இப்போது அதிகமாக புழக்கத்தில் இருக்கிறது. எங்கள்  கல்லூரியில் ஜூனியர் மாணவர்கள்கூட கஞ்சா பயன்படுத்துவதை நேரடியாக பார்த்திருக்கிறேன். இதுவரை ஆட்சியில் இருந்த கட்சிகளுக்கு வாக்களிக்காமல், புதியவர்கள் அதிகாரத்திற்கு வர வேண்டும் என்ற எண்ணத்தில் வாக்களித்திருக்கிறேன். இங்கு எல்லோருக்கும் எல்லாமும் போய்ச் சேருவதில்லை. சாமானியர்களால் எந்தத் தேவையையும் பூர்த்தி செய்து கொள்ள முடியாத நிலை உள்ளது.

 Interesting facts about who the first generation voted for

பிரதீப்குமார் (பி.இ., மாணவர்): வாக்களிப்பது நமது கடமை என்பதால், முதல் தலைமுறை வாக்காளர்கள் கண்டிப்பாக வாக்களிக்க வேண்டும். யாருக்கு ஓட்டுப்போட வேண்டும் என்பதில் யாரும் தலையிடக்கூடாது என்று என் பெற்றோரிடம் ஏற்கெனவே கூறிவிட்டேன். பிறரை குற்றம் சொல்வதை விட, நான் அதிகாரத்திற்கு வந்தால் என்ன செய்யப்போகிறேன் என்று சொல்வதை வைத்து வாக்களித்தேன். இதுவரை மாறி மாறி ஆட்சியில் இருந்தவர்கள் எந்த வகையிலாவது மக்களை ஏமாற்றிக் கொண்டுதான் இருந்துள்ளனர். எனக்கு தேசியக் கட்சிகள் மீது பெரிதாக ஆர்வம் இல்லாததால், மாநிலக் கட்சிக்குதான் வாக்களித்தேன். மாணவர்களுக்கு தரமான கல்வி கிடைக்க வேண்டும் என்பதை யார் தொடர்ந்து முன்வைத்து வருகிறார்களோ அவர்களுக்கு வாக்களித்தேன். ஏற்கனவே ஆட்சியில் இருந்தவர்கள் மீண்டும் அதிகாரத்திற்கு வருவதை விரும்பவில்லை. அதனால் புதியவருக்குதான் வாக்களித்தேன்.

 Interesting facts about who the first generation voted for

பவித்ரா (பிகாம்., மாணவி): முதல்முறையாக ஓட்டு போட்டபோது நான் கொஞ்சம் பெரிய பொண்ணாகிட்டேன் என்றும், பொறுப்புமிக்க குடிமகள் ஆகிட்டேன் என்ற உணர்வும் ஏற்பட்டது. எனக்கு மட்டுமின்றி, எல்லோருக்கும் நல்லது நடக்க வேண்டும் என்று யோசித்து வாக்களித்தேன். என்னைப்போன்ற இளம் தலைமுறையினருக்கு தரமான கல்வி கிடைக்க வேண்டும். ஒரே கல்வித் தகுதி இருந்தும் சிலருக்கு முன்னுரிமை கிடைக்கிறது. சிலர், சில காரணங்களால் ஒதுக்கப்படுகின்றனர். இப்படி எந்த விதமான மத, சாதி வேறுபாடுகளும் இருக்கக்கூடாது என்றுயோசித்து வாக்களித்தேன். சாதி, மத வேறுபாடுகளின்றி எல்லோரையும் சமமாக நடத்த வேண்டும். தமிழக அரசின் பெண்களுக்கு இலவச பேருந்து திட்டம், மாணவ, மாணவிகளுக்கு ஸ்காலர்ஷிப் திட்டங்கள் பிடித்திருக்கிறது. எல்லோருக்கும் இந்த அரசு உணவு கொடுப்பது பிடித்திருக்கிறது. நான் ஒருமாநிலக் கட்சிக்குதான் வாக்களித்தேன்.

 Interesting facts about who the first generation voted for

அக்ஷயா (பி.ஏ., தமிழ்): எனக்கு வாக்காளர் அடையாள அட்டை கிடைத்ததில் இருந்தே முதன் முறையாக வாக்களிக்கப் போவதை எண்ணி ஆர்வமாக இருந்தேன். இந்த நாட்டுக்கு பிரதமரை தேர்ந்தெடுக்க வாக்களிக்கப் போகிறோம் என்ற எதிர்பார்ப்பும் இருந்தது. இதுவரை ஆட்சியில் இருக்கும் கட்சிக்குதான் வாக்களித்தேன். அவர்களை ஆதரிப்பதன் மூலம் மேலும் நல்ல திட்டங்கள் கிடைக்கும் என நம்புகிறேன். பெண்களுக்கு இலவச பஸ், மூவலூர் ராமாமிர்தம் திட்டத்தின் கீழ் மாணவிகளுக்கு மாதம் 1000 ரூபாய் தருவது மேற்படிப்புக்கு உதவியாக இருக்கிறது. தமிழக அரசு, பெண்களுக்கு முன்னுரிமை கொடுத்து செயல்படுகிறது. பெண்களை ஊக்குவிக்கும் விதமாக மகளிர் உரிமைத் தொகை கொடுப்பதைவரவேற்கிறேன். இதை பிச்சை என்று சிலர் விமர்சிப்பதை ஏற்க முடியாது. நாம் யாரை தேர்ந்தெடுத்தோமோ அவர்கள்தான் நமக்கு உரிமைத் தொகையாக தருகிறார்கள். அதை பிச்சை என்றுசொல்ல முடியாது.

 Interesting facts about who the first generation voted for

சுரேகா (பி.இ., மாணவி): முதல் முறையாக தேர்தலில் வாக்களித்தது மகிழ்ச்சியாக இருக்கு. மக்களுக்கு நல்லது செய்யும் கட்சிக்கு ஓட்டுப் போடும்படி அம்மா சொன்னாங்க. அவர் சொன்ன கட்சிக்கே வாக்களித்தேன். மாநிலக் கட்சிக்குதான் வாக்களித்தேன். இலவச பஸ் திட்டமும், மகளிருக்கு உரிமைத்தொகை திட்டமும் பிடிச்சிருக்கு. குறிப்பாக, பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து இந்த அரசு செயல்படுகிறது.

 Interesting facts about who the first generation voted for

பூஜா மற்றும் ராகுல்: ராஜஸ்தான் மாநிலம்தான் எங்களுடைய பூர்வீகம். தமிழ்நாட்டில் செட்டில் ஆகிவிட்டோம். நாங்கள் பிறந்தது, படித்தது எல்லாம் இங்குதான். எங்கள் மாநிலத்தை விட தமிழ்நாட்டு கலாச்சாரமும், உணவும் பிடித்திருக்கிறது. ஆனாலும் நாங்கள் தேசியக்கட்சிக்குதான் வாக்களித்தோம். இவ்வாறு இளம் தலைமுறை வாக்காளர்கள் தங்கள் அனுபவங்களையும், கருத்துகளையும் பகிர்ந்துகொண்டனர்.

Next Story

கல்லூரி மாணவி கொலை சம்பவம்; காங்கிரஸ் கவுன்சிலருக்கு ஆதரவாக பா.ஜ.க போராட்டம்!

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
BJP protest in support of Congress councillor on College student incident in karnataka

கர்நாடகா மாநிலம், தார்வார் மாவட்டம் உப்பள்ளி பகுதியைச் சேர்ந்தவர் நிரஞ்சன் ஹிரேமட். காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த நிரஞ்சன் தார்வார் மாநகராட்சியில் கவுன்சிலராக பொறுப்பு வகித்து வருகிறார். இவரது மகள் நேகா ஹிரேமட் (24). இவர் அப்பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வந்தார். நேகா பயின்று வந்த அதே கல்லூரியில் பெலகாவி பகுதியைச் சேர்ந்த பயாஜ் (24) என்பரும் படித்து வந்தார். இந்த நிலையில் இஸ்லாமிய மதத்தைச் சேர்ந்த பயாஜ், இந்து மதத்தைச் சேர்ந்த நேகாவை ஒருதலையாக காதலித்து வந்துள்ளார். பயாஜ், தனது காதலை நேகாவிடம் கூறிய போது அதை நேகா ஏற்க மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது. இதனால், நேகா மீது பயாஜ் ஆத்திரத்தில் இருந்து வந்துள்ளார்.

இந்நிலையில், நேற்று முன் தினம் (20-04-24) வழக்கம் போல் நேகா கல்லூரிக்கு வந்துள்ளார். அப்போது அங்கு வந்த பயாஜ், நேகாவிடம் தனது காதலை ஏற்குமாறு தகராறு செய்து வந்துள்ளார். ஆனால், நேகா, அவரது காதலை திட்டவட்டமாக மறுத்துவிட்டதாகக் கூறப்படுகிறது. இதில் ஆத்திரமடைந்த பயாஜ், தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து, நேகாவை சரமாரியாக குத்தினார். இதி்ல் படுகாயமடைந்த நேகா, ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்து சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அதே வேளையில், கல்லூரி வளாகத்திலேயே மாணவியை குத்தி கொலை செய்துவிட்டு தப்பியோடிய பயாஜை, அங்கிருந்த மாணவர்கள் சுற்றி வளைத்து பிடித்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார், பயாஜ்ஜை கைது செய்து சிறையில் அடைத்தனர். காங்கிரஸ் கவுன்சிலரின் மகள், கல்லூரி வளாகத்திலேயே ஒரு தலைக் காதலால் சக மாணவரால் குத்திக்கொலை செய்யப்பட்ட சம்பவம் கர்நாடகாவில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக, நேகாவின் தந்தையும், கவுன்சிலருமான நிரஞ்சன் தெரிவிக்கையில், ‘லவ் ஜிகாத்தால் தான் தனது மகள் கொலை செய்யப்பட்டுள்ளார்’ எனக் குற்றம் சாட்டினார்.

இதற்கிடையில், ஹுப்பள்ளி மாணவி கொலை வழக்கை குற்றப் புலனாய்வுத் துறையிடம் ஒப்படைக்க தனது அரசு முடிவு செய்துள்ளதாகவும், அதை விரைந்து முடிக்க சிறப்பு நீதிமன்றம் அமைக்கப்படும் என்றும் கர்நாடக முதல்வர் சித்தராமையா தெரிவித்திருந்தார். அதே வேளையில், கொலை செய்யப்பட்ட கல்லூரி மாணவியின் தந்தை காங்கிரஸ் கவுன்சிலருக்கு ஆதரவாக இந்த விவகாரத்தை பா.ஜ.க தனது கையில் எடுத்துள்ளது. இந்த சம்பவத்தை ‘லவ் ஜிஹாத்’ எனக் கூறி நீதி வேண்டும் என பா.ஜ.க.வும் இந்துத்துவ அமைப்புகளும் போராடி முழு கடை அடைப்பு நடத்த பந்த்க்கு அழைப்பு விடுத்துள்ளது.

BJP protest in support of Congress councillor on College student incident in karnataka

அந்த வகையில், பா.ஜ.க தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, உயிரிழந்த மாணவியின் பெற்றோரை நேற்று சந்தித்து ஆறுதல் கூறினார். அதை தொடர்ந்து அவர் செய்தியாளர்களைச் சந்தித்து பேசுகையில், “இந்த சம்பவத்தை வன்மையாக கண்டிக்கிறோம். இந்த கொலை தொடர்பான அரசின் அறிக்கைகள் விசாரணையை சீர்குலைக்கும் வகையில் இருக்கின்றன. திருப்தி அரசியலுக்காக தற்போதைய அரசைக் கர்நாடகா மக்கள் மன்னிக்க மாட்டார்கள்” எனத் தெரிவித்தார்.

மேலும், இந்த விவகாரம் குறித்து கர்நாடகா பா.ஜ.க தலைவர் பி.ஒய்.விஜயேந்திரா கூறுகையில், “பா.ஜ.க தொண்டர்கள் தேர்தல் வேலைகளை ஒதுக்கி வைத்துவிட்டு, பந்தில் கலந்து கொள்ளுங்கள். இந்த சம்பவத்தில் அரசாங்கம் அலட்சியமாக நடந்துகொள்கிறது. சிறுபான்மையினரின் ஆதரவே இந்த அரசாங்கத்தின் முன்னுரிமை” என்று கூறி பா.ஜ.கவினர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.