kks

Advertisment

திமுக தலைவர் கலைஞரை நலம் விசாரிக்க சென்னை கோபாலபுரம் இல்லத்துக்கு துணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் ஜெயக்குமார், தங்கமணி, வேலுமணி உள்ளிட்டவர்கள் வருகை தந்ததனர்.

உடல்நலக்குறைவு, வயது முதிர்வு காரணமாக திமுக தலைவர் கலைஞர் கடந்த ஒன்றரை வருடத்திற்கு மேலாக சென்னை கோபாலபுரம் இல்லத்தில் ஓய்வு எடுத்து வருகிறார். கலைஞரின் மூச்சுக்குழாயில் அவருக்கு பிரச்சனை இருப்பதன் காரணமாக அவருக்கு ட்ரக்கியாஸ்டமி குழாய் பொருத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், கடந்த 18ம் தேதி அவருக்கு குழாய் மாற்றும் பொருட்டு, காவேரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று மாலையில் வீடு திரும்பினார். இதைத்தொடர்ந்து, கடந்த இரண்டு நாட்களாக கலைஞரின் உடல்நிலை மேலும் மோசமடைந்ததாகவும் அவர் வழக்கத்தைவிட அதிகமான சோர்வடைந்ததாகவும் தகவல்கள் பரவின. இதனை உறுதி செய்யும் வகையில், இன்று கலைஞரின் உடல்நிலை குறித்து காவேரி மருத்துவமனை ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது.

Advertisment

அதில், திமுக தலைவர் கலைஞரின் உடல்நலத்தில் வயதின் காரணமாக நலிவு ஏற்பட்டுள்ளது. தற்போது சிறுநீரக பாதையில் ஏற்பட்டுள்ள தொற்றின் காரணமாக காய்ச்சல் வந்துள்ளது. அதற்குத் தேவையான மருந்துகள் செலுத்தப்படுகின்றன. அவரை 24மணி நேரமும் மருத்துவர்கள், செவிலியர்கள் அடங்கிய குழு கவனித்துக்கொள்கிறது. வீட்டிலையே மருத்துவமனை வசதிகள் அனைத்தும் செய்யப்பட்டிருக்கிறது.

மேலும், கலைஞர் உடல்நிலையை கவனத்தில் கொண்டு, அவரை யாரும் நேரில் பார்க்க வர வேண்டாம் என்று மருத்துவர்கள் கேட்டுக்கொண்டதாக காவேரி மருத்துவமனை சார்பில் விடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், கலைஞரின் உடல்நிலை நலிவு ஏற்பட்டுள்ளதாக காவிரி மருத்துவமனை வெளியிட்ட அறிக்கையை தொடர்ந்து, கலைஞரின் உடல்நிலையை விசாரிக்க துணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் ஜெயக்குமார், தங்கமணி, வேலுமணி உள்ளிட்டவர்கள் வருகை தந்ததனர்.

Advertisment

உடல்நிலையை கவனத்தில் கொண்டு, கலைஞரை யாரும் நேரில் பார்க்க வர வேண்டாம் என்று மருத்துவர்கள் கேட்டுக்கொண்டும், அரசியல் நாகரிகம் கருதி இவர்கள் வருகை தந்துள்ளனர். அதிமுகவை சேர்ந்தவர்கள் திமுக தலைவரை அவரது இல்லத்துக்கு வந்து சந்திப்பது இதுவே முதல்முறையாகும்.