![NIA in 8 districts Action test](http://image.nakkheeran.in/cdn/farfuture/MlRzh669owfsndYJTbdPnBY3zz9eYi-2NYTdvSrY8Dc/1707531026/sites/default/files/inline-images/nia-art-raid_3.jpg)
கோவை மாவட்டம் உக்கடம் கோட்டைமேடு ஈஸ்வரன் கோவில் அருகே கடந்த 2022 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 23 ஆம் தேதி அதிகாலை சாலையில் சென்று கொண்டிருந்த கார் வெடித்த விவகாரம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. கார் வெடித்த இடத்திலிருந்து ஆணிகள், பால்ரஸ் குண்டுகள் உள்ளிட்ட பல வெடி பொருட்கள் கைப்பற்றப்பட்டன. பின்னர் இந்த சம்பவத்தில் உயிரிழந்த நபர் உக்கடம் பகுதியைச் சேர்ந்த ஜமேசா முபீன் என்பதும் அவரது வீட்டில் 75 கிலோ வெடி பொருட்களைப் பதுக்கி வைத்து இருந்ததும் விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து இந்த வழக்கில் தொடர்புடையவர்கள் உபா சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டனர் மேலும் இவ்வழக்கு விசாரணை தேசியப் புலனாய்வு முகமைக்கு மாற்றப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அதே சமயம் இந்த வழக்கில் தொடர்புடைய முகமது தால்கா, முகமது அசாருதீன், முகமது ரியாஸ், பெரோஸ் இஸ்மாயில், முகமது நவாஸ் இஸ்மாயில், அப்சர் கான் மற்றும் இத்ரீஸ் உள்ளிட்ட 15 பேர் இதுவரை கைது செய்யப்பட்டு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த வழக்கு தொடர்பாக சென்னை, கோவை, திருநெல்வேலி, மதுரை உள்ளிட்ட 8 மாவட்டங்களில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். சுமார் 25 இடங்களில் இந்த சோதனை நடந்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
கார் குண்டு வெடிப்பு சம்பந்தமாக மூளைச் சலவை செய்தல், நிதி வசூல் செய்தல், உபகரணங்கள் வாங்கிக் கொடுத்தல் உள்ளிட்ட குற்றச்சாட்டு தொடர்பாக இந்த சோதனை நடந்து வருவதாக கூறப்படுகிறது. அதன்படி கோவையில் உக்கடத்தில் உள்ள அபிபுல் ரகுமான் என்பவர் வீட்டிலும், திருநெல்வேலி ஏர்வாடியில் உள்ள பக்ரூதின் அலி என்பவர் வீட்டிலும் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். திடீரென என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை மேற்கொண்டுள்ளதால் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.