Skip to main content

குடியுரிமை சட்டத்திருத்தம்! புதுக்கல்லூரி மாணவர்கள் போராட்டம்!

Published on 13/12/2019 | Edited on 13/12/2019

சமீபத்தில் நாடாளுமன்றத்தில் குடியுரிமை திருத்தச் சட்டத்தை வெற்றிகரமாக நிறைவேற்றி இருக்கிறது மத்தியில் ஆளும் பாஜக அரசு. இன்று காலை அந்த மசோதாவுக்கு ஒப்புதல் அளித்து, சட்டமாக நடைமுறைக்குக் கொண்டு வந்திருக்கிறார் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்.

 

newcollege students protest against cab

 

 

இந்த சட்டத்திருத்தம் இஸ்லாமியர்கள் மற்றும் இலங்கைத் தமிழர்களுக்கு எதிரானது எனக்கூறி எதிர்கட்சிகள் கடும் எதிர்ப்பை வெளிப்படுத்தி வருகின்றன. வடகிழக்கு மாநிலங்களில் குறிப்பாக அஸ்ஸாம், திரிபுராவில் பொதுமக்கள் வீதியில் இறங்கி போராடுகிறார்கள். துணை ராணுவத்தினர் குவிக்கப்பட்டு, பதற்றமான சூழல் அங்கே நிலவிவருகிறது. தமிழகத்திலும் எதிர்கட்சியான தி.மு.க. போராட்டத்தை அறிவித்துள்ளது.

இந்நிலையில், இஸ்லாமியர்கள், இலங்கைத் தமிழர்களுக்கு எதிரான இந்த சட்டத் திருத்தத்தை உடனடியாக ரத்து செய்யக்கோரி சென்னை ராயப்பேட்டையில் உள்ள புதுக்கல்லூரி மாணவர்கள் போராட்டத்தில் குதித்தனர். ஐநூறுக்கும் மேற்பட்ட மாணவர்கள் வகுப்புகளைப் புறக்கணித்து, கல்லூரி வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட, பேராசியர்கள் அவர்களிடம் சமாதானப் பேச்சுவார்த்தை நடத்தினர். 

இந்தியாவின் சட்டவிதிகளைப் பொறுத்தவரையில், வெளிநாட்டில் இருந்து சட்டவிரோதமாக குடியேறியவர்கள் குடியுரிமை பெறுவது சாத்தியமற்றது. அவர்கள் உடனடியாக நாட்டைவிட்டு வெளியேற்றப் படுவார்கள் அல்லது தடுப்புக்காவல் முகாம்களில் அடைத்து வைக்கப்படுவார்கள். தற்போதைய சட்டத்திருத்தத்தின் மூலம், அவர்களுக்கு குடியுரிமை வழங்க வழிவகை ஏற்பட்டுள்ளது.

 

newcollege students protest against cab

 

1955ஆம் ஆண்டு இயற்றப்பட்ட இந்திய குடியுரிமைச் சட்டத்தின்படி, வெளிநாட்டில் இருந்து இந்தியாவில் குடியேறி 12 ஆண்டுகளுக்கும் மேலாக வசிப்பவர்களுக்கு குடியுரிமை வழங்க அனுமதிக்கிறது. தற்போது அதில் மேற்கொள்ளப் பட்டிருக்கும் சட்டத்திருத்தத்தின் மூலம், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்காளதேசம் ஆகிய நாடுகளில் இருந்து இந்தியாவில் குடியேறிய, இந்து, சீக்கியர், பவுத்தர், சமணர், பார்சி இனத்தவர் மற்றும் கிறிஸ்தவர் ஆகிய பிரிவுகளைச் சேர்ந்தவர்களுக்கு உரிய ஆவணங்கள் இல்லை எனினும், ஐந்து ஆண்டுகளுக்கு மேல் வசித்தால் அவர்களுக்கும் குடியுரிமை வழங்கமுடியும். அதுமட்டுமின்றி, கடந்த 2014ஆம் ஆண்டு டிசம்பர் 31-ந்தேதிக்கு முன் குடியேறியவர்களுக்கும் இந்திய குடியுரிமை வழங்கலாம்.

அண்டைநாடுகளில் இருந்து இஸ்லாமிய மதத்தைச் சேர்ந்தவர்களும் கணிசமான அளவில் இந்தியாவில் குடியேறி இருக்கும் நிலையில், அவர்களை சேர்க்காமல் கொண்டுவரப்படும் இந்த சட்டத்திருத்தத்தை எதிர்கட்சிகள் விமர்சித்து வருகின்றன. மதத்தின் பெயரால் யாரொருவரும் பாகுபாட்டுடன் நடத்தப்படக் கூடாது என்று இந்திய அரசியலமைப்புச் சட்டமே வழியுறுத்தும்போது, மதத்தின் அடிப்படையில் குடியுரிமை வழங்கி, மதச்சார்பின்மை எனும் இந்தியாவின் அடித்தளத்தையே சிதைத்து, மத பாகுபாட்டிற்கு சட்ட அங்கீகாரம் தருகிறார்கள் என்றும் எதிர்கட்சியினர் குற்றம்சாட்டுகின்றனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

சிஏஏ போராட்டங்களில் குழந்தைகள்! -ஏழு ஆண்டுகள் தண்டனை விதிக்கக்கூடிய குற்றம் என வாதம்!

Published on 17/03/2020 | Edited on 17/03/2020

போராட்டங்களில் குழந்தைகளை ஈடுபடுத்துவது 7 ஆண்டுகள் தண்டனை விதிக்கக்கூடிய அளவிலான குற்றம் என சி.ஏ.ஏ. போராட்டங்களை எதிர்த்த வழக்கில் வாதிடப்பட்டுள்ளது.

 

Children in CAA struggle!- highcourt

 

குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்தும், ஆதரித்தும் நடைபெறும் போராட்டங்களால் மாணவ மாணவிகள், பொதுமக்கள் மற்றும் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுவதாகவும், காவல்துறை அனுமதியில்லாமல் போராடுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும் கண்ணன், கோபிநாத், ஸ்ரீதரன், தமிழழகன் ஆகியோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்குகள் நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், கிருஷ்ணன் ராமசாமி ஆகியோர் அடங்கிய அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது, மனுதாரர் கண்ணன் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் எஸ்.பிரபாகரன், காவல்துறை அனுமதி இல்லாமல் தமிழகம் முழுவதும் 58 இடங்களில் போராட்டங்கள் நடைபெற்று வருவதாகவும், அடிப்படை உரிமைகள் மறுக்கப்பட்டதாகக் கூறி போராட்டத்தில் ஈடுபட்டவர்கள்,  பொது மக்களின் அடிப்படை உரிமைகளைப் பறிக்கும் வகையில் போராடி வருவதாகவும் குற்றம்சாட்டினார்.  மேலும் நாடாளுமன்ற இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்ட சட்டத்தை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்வதுதான் சரியாக இருக்குமே தவிர, இதுபோன்ற போராட்டம் நடத்துவதை சட்டவிரோதமாகத்தான் கருத வேண்டும் என்று வழக்கறிஞர் பிரபாகரன் வலியுறுத்தினர். தொடர்ந்து, குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிரான போராட்டங்களில் குழந்தைகளை ஈடுபடுத்துவது குழந்தைகள் பாதுகாப்பு சட்டம் பிரிவு 83 உட்பிரிவு 2-ன் படி தண்டனைக்குரிய குற்றமாகும் என்றும், அதன்படி 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கவும், 5 லட்ச ரூபாய் வரை அபராதம் விதிக்கவும் வழிவகை செய்யப்பட்டுள்ளதாகவும், ஆனால் அந்தப் பிரிவின் கீழ் காவல்துறை எந்த வழக்கும் பதிவு செய்யவில்லை என்றும் தெரிவித்தார்.

இதையடுத்து,  பிற மனுதாரர் தரப்பில் வாதங்கள் முன்வைக்கப்பட்ட நிலையில், போராட்டங்கள் தொடர்பான தற்போதைய நிலை குறித்து அறிக்கை தாக்கல் செய்ய அரசுத் தரப்பில் அவகாசம் கேட்கப்பட்டது. அந்த அறிக்கையை நாளை தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிபதிகள் வழக்கு விசாரணையை மார்ச் 20-ஆம் தேதிக்கு   ஒத்திவைத்தனர்.

 

 

Next Story

காட்டுமன்னார்கோவிலில் வங்கிகளில் பணம் எடுக்கும் போராட்டம் 

Published on 17/03/2020 | Edited on 17/03/2020

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோயில் அடுத்த லால்பேட்டையில் தொடர்ந்து நடந்துவரும் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு போராட்டத்தின் 26-வது நாளில் வங்கிகளில் பணம் எடுக்கும் போராட்டம் நடைபெற்றது.

 

kattumannar kovil incident

 

இந்தநிலையில் அனைத்து ஜமாஅத் இஸ்லாமிய பொதுமக்களும் லால்பேட்டையில் உள்ள இந்தியன் வங்கி முன்பு திரண்டனர். இதனால் அங்கு பரபரப்பு காணப்பட்டது. வங்கி திறந்ததும் உள்ளே சென்று எங்கள் அனைவருக்கும் நாங்கள் வைத்துள்ள வங்கி கணக்கில் இருந்து அனைத்து பணத்தை எடுத்துக் கொள்கிறோம் என்று வங்கி மேலாளரிடம் கூறினார்கள். வங்கி மேலாளர் அவ்வளவு பணம் வங்கியில் இருப்பு இல்லை கொஞ்சம் கொஞ்சமாக எடுத்துக் கொள்ளுங்கள் என்று கூறினார்.

இதனால் ஒருவருக்கு ஒருவர் வாக்குவாதம் ஏற்பட்டு, பதட்டமான சூழ்நிலை ஏற்பட்டது. சம்பவத்தை அறிந்த காட்டுமன்னார்கோவில் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து இருதரப்பினரையும் சமாதானம் செய்தனர். அப்போது வங்கியில் கணக்கு வைத்துள்ளவர்கள் எங்களுடைய பணம் முழுமையாக கிடைக்க வேண்டும். மத்திய மோடி அரசு குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெற நடவடிக்கை எடுக்கும் வரை எங்களது போராட்டம் பல கட்டமாக தொடரும் என்று கூறினார்கள். 

 

kattumannar kovil incident


இதனைத் தொடர்ந்து வங்கியில் இருப்பு இருக்கும் வரை ஒருவருக்கு ரூபாய் 49 ஆயிரத்து 900 என்ற அடிப்படையில் வழங்கப்பட்டது. இதனை அனைவருக்கும் கொடுக்க முடியாததால் வங்கியில் பணம் இருப்பு இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து தினமும் வங்கி கணக்கிலிருந்து பணம் எடுக்கும் போராட்டம் நடைபெறும் என அறிவித்துள்ளனர்.