Skip to main content

 சொந்த மாநிலமான குஜராத்தை விட்டு, தமிழ்நாட்டில்  ஏன் நியூட்ரினோ மையம் அமைக்கிறார் மோடி?-  தி.வேல்முருகன் கொந்தளிப்பு 

Published on 15/03/2018 | Edited on 16/03/2018
well

 

தன் சொந்த குஜராத்தை விட்டு, தமிழ்நாட்டில்  ஏன் நியூட்ரினோ மையம் அமைக்கிறார் மோடி?  அமெரிக்காவுக்கு சேவகம் செய்வதன் மூலம், தமிழ் மண்ணையும் மக்களையும் அழிக்கும் தன் குறிக்கோளை நிறைவேற்றிக்கொள்ளவா? என தமிழக வாழ்வுரிமைக்கட்சி தலைவர் தி.வேல்முருகன் கொந்தளித்தார்.  

 

தமிழக வாழ்வுரிமைக்கட்சி தலைவர் தி.வேல்முருகன் கடலூரில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

’’சூரியனிலிருந்து காஸ்மிக் கதிர்கள், புற ஊதாக் கதிர்கள், எக்ஸ் கதிர்கள் என பல்வேறு கதிர்கள் வெளியாகின்றன. அதில் நியூட்ரினோவும் ஒன்று.  அணுவைப் பிளந்தால் எலெக்ட்ரான், நியூட்ரான், புரோட்டானுடன் நியூட்ரினோவும் உள்ளது என்றும் கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது.

 

நியூட்ரினோ சூரியன், சந்திரன், பூமி என எல்லாப் பொருட்களிலுமே ஊடுருவும். இதனைப் பிடித்து ஆய்வு செய்தால் சூரியன், சந்திரன், பூமியின் தோற்றப்பாடென்ன அதன் வயது, அதனைப் படைத்தது எது அல்லது யார் என்பதற்கும் விடை தெரியும் என்கிறார்கள் அறிவியலாளர்கள்.  ஆனால் நியூட்ரினோ காஸ்மிக் கதிர்களுடன் சேர்ந்தே காணப்படுவதால் அதை ஆராய்வது கடினம்; ஆகவே மலையைக் குடைந்து பூமிக்கு அடியில் சென்று காஸ்மிக் கதிர்களை தடுத்து நிறுத்தி நியூட்ரினோக்களை மட்டும் ஆய்வு செய்ய வேண்டும்.  இதற்கு நீளம், அகலம், உயரம் ஆகிய பொருத்தப்பாடுடைய மலை என்று தேனி மாவட்டம் பொட்டிபுரம் அம்மரப்பர் மலையை தேர்வு செய்திருக்கிறார்களாம்.

 

மலையின் உச்சியிலிருந்து 1,500 அடி ஆழத்தில் 132 மீட்டர் நீளத்திலும்,  26 மீட்டர் அகலத்திலும்,  20 மீட்டர் உயரத்திலும் இரண்டு குகை அமைக்கப்பட வேண்டும்.  18 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட 3 ராட்சச டேங்கர்கள் கட்டியாச்சு. தற்போது அவற்றில் 54 லட்சம் லிட்டர் தண்ணீரும் தேக்கியாச்சு. அடுத்ததா க 100 அடி சாலை போடுகிறார்கள்.  இவ்வளவு வேகமாக வேலை நடக்கிறதென்றால், இப்போதைய ஈபிஎஸ்-ஓபிஎஸ் அரசு இருக்கும்போதே செய்தால்தான் ஆச்சு. ஏனென்றால் எட்டுத் திக்கும் மக்கள் எதிர்ப்பு.

 

நியூட்ரினோ திட்டம் அஸ்ஸாமில்தான் தொடங்க இருந்தது. அங்கு எதிர்ப்பு ஏற்பட, கர்நாடகாவின் கோலாருக்கு மாற்றப்பட்டது. அங்கும் மிகப் பெரிய போராட்டமே வெடித்தது. அதன் பிறகு தமிழகம் வந்திருக்கிறது.

 

2009-ல் திட்டம் அறிவிக்கப்பட்டதுமே மக்கள்  தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டார்கள். அன்றைய ஆட்சியர் முத்துவீரன் அப்பாவி மக்கள் பலரை குண்டர் சட்டத்தில் கைது செய்தார். போராட்டத்தை முளையிலேயே கிள்ளி எறியவும் மக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தவுமே இந்த நடவடிக்கை.

 

கம்பம் பள்ளத்தாக்கில் பொட்டிபுரத்தைச் சுற்றிலும் 55,000 ஏக்கர் நன்செய் நிலம், 18,000 ஏக்கர் தென்னை, வாழை, திராட்சை சாகுபடி புன்செய் நிலம், 10,000 ஏக்கர் பழங்கள், காய்கறிகள் சாகுபடி நிலம் உள்ளன.  இவற்றைச் சுற்றி இரவங்காறு அணை, சண்முகா நதி, சோத்துப்பாறை, வைகை அணை, மஞ்சளாறு, முல்லைப்பெரியாறு உள்ளிட்ட அணைகள் உள்ளன. இவை மிகப்பெரிய பாதிப்பை சந்திக்கும்.  இத்திட்டத்திற்கு  20 லட்சம் டன் கற்கள் உடைக்கப்பட வேண்டும். அந்தக் கற்களை மலையிலிருந்து பெயர்க்க தண்ணீர் தேவை. மின்சாரம் தேவை. 53,000 டன் இரும்பும் 4,000 டன் ஸ்டீலும், 12,000 டன் சிமிண்டும்,  3,500 டன் மணலும் வேண்டும். என்ன செய்வார்கள்?

 

திட்டம் நிறைவேறினால் பொட்டிபுரம்,  புதுக்கோட்டை, ராமகிருஷ்ணம்புரம், தேவாரம், கோம்பை, சின்ன செட்டிபுரம் உள்ளிட்ட பல ஊர்கள் முற்றாக காணாமல் போகக்கூடும்.

உலக நாடுகள் பலவும் இத்திட்டத்தை கைகழுவிவிட்டன. இந்தியா கையிலெடுத்திருக்கிறது என்றால் அது அமெரிக்காவின் அழுத்தத்தால்தான்.  இத்திட்டத்திற்கு 4 ஆயிரம் கோடி ஆகும் என்று கணக்குப் போட்டிருக்கிறார்கள். 4 ஆயிரம் கோடி போட்டு 2 லட்சம் கோடி எடுக்கவும் திட்டம் என்கிறார்கள்.

150 ஆண்டுகளாக தோண்டப்பட்டு இனி நிலக்கரியோ இரும்போ தங்கமோ இல்லை என்று கைவிடப்பட்ட சுரங்கங்களில்தான் ஒன்றிரெண்டு நாடுகள் நியூட்ரினோ ஆய்வு மையத்தை அமைத்திருக்கின்றன.  இங்கும் சுரங்கத்தை அமைத்துவிட்டு நியூட்ரினோ ஆய்வகம் அமைக்க இது தகுதியற்றது என்று சொல்லி அணுக்கழிவுகளைக் கொட்டுவதாகக் கூட இருக்கலாம். அதுவும் சாதாரண ஆபத்தா?   ஆக நியூட்ரினோ திட்டம் ஆபத்தோ ஆபத்து ஆபத்திலும் ஆபத்து!  காரணம் நேர்மை, நாணயம் மருந்துக்கும் கிடைக்காத, வரலாற்றில் இப்படி ஓர் அரசையே காண முடியாத, நம்பகம் என்பதே கிஞ்சிற்றும் இல்லாத அரசாக ஒன்றிய பாஜக மோடி அரசு வந்து வாய்த்திருப்பதுதான்.

 

தன் சொந்த குஜராத்தை விட்டு, தமிழ்நாட்டில் பார்த்து ஏன் நியூட்ரினோ ஆய்வகத்தை மோடி அமைக்க வேண்டும்?  தன் எஜமான் அமெரிக்காதான் நியூட்ரினோ ஆய்வகத்தை அமைக்கச் சொல்லி அவரைக் கட்டாயப்படுத்துகிறது.  மோடியும் இதுதான் வாய்ப்பு என்று தமிழ் மண்ணையும் மக்களையும் அழித்தொழிக்கும் தன் குறிக்கோளை நிறைவேற்றப் பார்க்கிறார்.

 

மோடிக்காக வாயசைப்பதற்கென்றே தமிழக பாஜக தலைவர் என்றிருக்க, நியூட்ரினோ திட்டத்தில் தமிழக அரசின் நிலைதான் என்ன? ஹைட்ரோ கார்பன், நியூட்ரினோ, மீத்தேன் திட்டத்தை உள்ளடக்கிய  NELP திட்டத்திற்கு எதிராக த.வா.க. போராடும்.’’
 

சார்ந்த செய்திகள்

Next Story

“உச்சநீதிமன்றம் எதிர்க்கட்சிகளின் முகத்தில் அறை விட்டுள்ளது” - பிரதமர் மோடி விமர்சனம்

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
PM Modi criticism Supreme Court has slapped the opposition parties in the face

18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 87 மக்களவைத் தொகுதிகளில் இன்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

இதற்கிடையே, பீகாரில் மொத்தமுள்ள 40 தொகுதிகளுக்கு 7 கட்டமாக மக்களவைத் தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்தத் தேர்தலை எதிர்கொள்ள ராஷ்டிரிய ஜனதா தளம் தலைமையிலான காங்கிரஸ், சிபிஐ, சிபிஎம், சிபிஐ (எம்எல்) ஆகிய கட்சிகள் உள்ளன. அதே போல், ஐக்கிய ஜனதா தளம், பா.ஜ.க உள்ளிட்ட கட்சிகள் கூட்டணி அமைத்து தேர்தலை எதிர்கொள்கிறது. இதில், இரண்டாம் கட்டமாக இன்று பீகாரில் மீதமுள்ள 5 தொகுதிகளில் தேர்தல் நடைபெற்று வருகிறது. 

அதே வேளையில், நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலின் போது மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் பதிவாகும் வாக்குகளுடன் வாக்காளர்கள் யாருக்கு வாக்களித்தோம் என்பதைக் காட்டும் ஒப்புகைச் சீட்டையும் (V.V.P.A.T. - Voter verified paper audit trail) 100 சதவீதம் எண்ண வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டிருந்தது. விவிபேட் எந்திரத்தில் பதிவாகும் 100 சதவித ஒப்புகைச்சீட்டுகளையும் எண்ண உத்தரவிடக்கோரிய மனு மீது உச்சநீதிமன்றம் இன்று (26.04.2024) தீர்ப்பு வழங்கியது. அதில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களின் (EVM) வாக்குகளை அவற்றின் வாக்காளர் சரிபார்க்கக்கூடிய ஒப்புகைச் (VVPAT) சீட்டுகள் மூலம் 100 சதவீதம் சரிபார்க்கக் கோரிய அனைத்து மனுக்களையும் தள்ளுபடி செய்து உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவை பிறப்பித்தது.

இந்தப் பரபரப்பான சூழ்நிலையில், பீகார் மாநிலத்தில் பா.ஜ.க சார்பில் நடத்தப்பட்ட தேர்தல் பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர், “காங்கிரஸ், ஆர்ஜேடி மற்றும் இதர இந்தியக் கட்சிகள் ஆட்சியில் இருந்தபோது, ஏழைகள், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் பட்டியலினத்தவர்களின் வாக்குகளை கைப்பற்றுவதன் சாவடி மூலம் பறித்தனர். மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அறிமுகப்படுத்தப்பட்டதால், அவர்கள் பழைய விளையாட்டை விளையாட முடியாது. எனவே, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மீது அவநம்பிக்கையை உருவாக்கும் பாவத்தை அவர்கள் செய்திருக்கிறார்கள்.

ஆனால் இன்று, நாட்டின் உச்ச நீதிமன்றம் சில மணி நேரங்களுக்கு முன்னதாக ஒரு தீர்ப்பை வழங்கியுள்ளது. விவிபாட் இயந்திரங்களின் ஒப்புகை சீட்டுகளை 100 சதவீதம் எண்ணக் கோரும் மனுக்களை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்ததன் மூலம் எதிர்க்கட்சிகளின் முகத்தில் பலமாக அறை விட்டிருக்கிறது. நம் நாட்டின் வளங்களின் மீதான முதல் உரிமை, மத வேறுபாடின்றி, இந்த நாட்டின் ஏழைகளுக்குத்தான் உள்ளது.  இந்திய இந்துக்களை, தங்கள் ஓட்டு வங்கிக்காக, காங்கிரசு பாரபட்சமாக காட்டிய விதம் இன்று அம்பலமாகியுள்ளது. அவர்கள் உங்களின் உடைமைகளை, பெண்களின் மங்களசூத்திரங்களைக்கூட திருட விரும்புகிறார்கள். உங்கள் சொத்தை உங்கள் பிள்ளைகளுக்கு வாரி வழங்குவதை காங்கிரஸ் கட்சியினர் விரும்பவில்லை” என்று பேசினார். 

Next Story

'மோடியா? ராகுலா?'-செல்லூர் ராஜு சொன்ன அசத்தல் பதில்!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
 Modi? Rahul?-Sellur Raju's wacky answer

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெற உள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்தது. இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 87 மக்களவைத் தொகுதிகளில் இன்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்த முன்னாள் அதிமுக அமைச்சர் செல்லூர் ராஜூ செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது 'மத்தியில் மோடி தலைமையிலான ஆட்சி வருமா? அல்லது ராகுல் காந்தி தலைமையிலான ஆட்சி வருமா?' எனக் கேள்வி எழுப்பினர். அதற்குப் பதிலளித்த அவர், ''எங்களைப் பொறுத்தவரை யார் மத்தியில் ஆட்சிக்கு வந்தாலும் சரி, தமிழகத்துக்கு நல்லது செய்யக்கூடிய யார் வந்தாலும் வரவேற்போம். அது ராகுலாக இருந்தாலும் சரி, மோடியாக இருந்தாலும் சரி, எங்கள் தமிழகத்திற்கு பாதகமற்ற முறையில் யார் ஆட்சி செய்தாலும் அதை அதிமுக வரவேற்கும் என எங்கள் பொதுச்செயலாளரே சொல்லிவிட்டார்.

கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் திமுக சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்ட 39 நாடாளுமன்ற உறுப்பினர்கள் மாதிரி எங்களுடைய நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருக்க மாட்டார்கள். இந்தியா மதச்சார்பற்ற நாடு. இங்கு ஒவ்வொரு மதத்தையும் குறி வைத்து மோடி போன்ற பெரிய பதவியில் இருப்பவர்கள் பேசுவது சரியில்லை. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை எல்லாரையும் தூக்கி கொண்டாடுகிறார்கள் மக்கள். மக்களுடைய மனநிலை மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு.

நீங்க பாருங்க எந்தக் கட்சியுமே சொல்லவில்லை நீர் மோர் பந்தல் அமையுங்கள் என எந்த கட்சியின் தலைவராவது அறிவித்துள்ளார்களா? எங்கள் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மட்டுமே தொண்டர்களுக்கு உத்தரவிட்டுள்ளார். உடனடியாக தங்களுடைய தொண்டர்கள் அதை நிறைவேற்றுவார்கள் என்ற அடிப்படையில்தான் அவர் சொல்லியுள்ளார். எல்லா கட்சிகளும் தேர்தலைக் கருத்தில் கொண்டுதான் இயங்குகின்றதே ஒழிய பொதுநோக்கத்துடன் எந்த அரசியல் இயக்கங்களும் இயங்கவில்லை. அதிமுக மட்டும் தான் மக்கள் சேவையே மகேசன் சேவை என்ற அடிப்படையில் செயல்பட்டு வருகிறது'' என்றார்.