/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/rain-light-house.jpg)
வடகிழக்கு பருவமழை காரணமாகத் தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே அறிவித்திருந்தது. அதன்படி வடகிழக்கு பருவமழை கடந்த அக்டோபர் மாதம் 21 ஆம் தேதி (21.10.2023) தொடங்கியதிலிருந்து தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது.
அதே சமயம் வங்கக் கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறியுள்ளது. இதற்கு மிக்ஜாம் எனப் பெயரிடப்பட்டுள்ளது. புயல் காரணமாக சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் புயலின் எதிரொலியாக சென்னை மெரினா கடற்கரை நுழைவு வாயிலுக்கான பாதைகள் மூடப்பட்டு போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. கடற்கரைக்கு வரும் பொதுமக்கள், சுற்றுலா பயணிகளிடம் ஒலிபெருக்கி மூலம்போலீசார் எச்சரிக்கை விடுத்து வருகின்றனர்.புயல் காரணமாகமெரினா கடற்கரைக்கு பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் யாரும் வர வேண்டாம் என சென்னை காவல்துறை சார்பில் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. மேலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக மெரினா கடற்கரைக்குச் செல்ல பொதுமக்களுக்குத்தடை விதிக்கப்பட்டுள்ளது.
அதேபோன்று சென்னை பெசன்ட் நகர் கடற்கரைக்குச் செல்லும் சாலைகளில் தடுப்புகள் அமைக்கப்பட்டு, பெசன்ட் நகர் கடற்கரைக்கு வரும் பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகளுக்குத்தடை விதிக்கப்பட்டுள்ளது. இதுமட்டுமின்றி புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நீலாங்கரை காவல் நிலையத்திற்கு உட்பட்ட அக்கரை கடற்கரை, புளூ கடற்கரை, நீலாங்கரை கடற்கரை, பாலவாக்கம் கடற்கரை, கொட்டிவாக்கம் கடற்கரை ஆகிய கடற்கரைகளுக்கு பொதுமக்கள், சுற்றுலா பயணிகள் செல்லத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)