Skip to main content

"ஊழலே வாழ்க்கை என்று செயல்படலாமா?" விஜயபாஸ்கருக்கு துரைமுருகன் கேள்வி!

Published on 28/04/2020 | Edited on 28/04/2020

 

minister vijayabaskar - admk - durai murugan - dmk



"அரசியல் பேசக்கூடாது என்பவர்கள், பேரிடர் காலத்திலும் ஊழலே வாழ்க்கை என்று செயல்படலாமா?" என அமைச்சர் விஜயபாஸ்கருக்கு தமிழகச் சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர் துரைமுருகன் கேள்வி எழுப்பியுள்ளார்.
 

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஊரே சிரிப்பாகச் சிரிக்கும் நேரத்தில், ஒன்றுமே நடக்கவில்லை என்பதுபோல நடந்துகொள்வதற்கு, அ.தி.மு.க. ஆட்சியாளர்களைப் போல, பதவிக்காகச் சுயமரியாதை உள்ளிட்ட அனைத்தையும் அடமானம் வைத்தவர்களால்தான் முடியும்.
 

கரோனா நோய்த் தொற்றுப் பரிசோதனைக்கான "ரேபிட் டெஸ்ட்" கருவிகளை உற்பத்தி செய்த சீனாவில், அதன் விலை ரூ.225 என்றும், சரக்குக் கட்டணம் ரூ.20 என்றும், மொத்தம் ரூ.245 என்றும் டெல்லி உயர்நீதிமன்றத்தில் தெரிவித்திருப்பது, மத்திய அரசா, தி.மு.க.வா?
 

"இறக்குமதி செய்யப்பட்ட விலையிலிருந்து 145% அதிக விலை வைத்து வாங்கப்படும் இந்த கிட், இனி இந்தியா முழுவதும் ஜி.எஸ்.டி. உள்பட 400 ரூபாய்க்கு மிகாமல் வழங்கப்படவேண்டும்" என உத்தரவிட்டிருக்கிறது டெல்லி உயர்நீதிமன்றம். இதைத்தான், கழகத் தலைவர் - தமிழக மக்களின் பேராதரவைப் பெற்ற எதிர்க்கட்சித் தலைவர் சுட்டிக்காட்டி அறிக்கை வெளியிட்டார். ஆனால் அது, அ.தி.மு.க. அரசுக்கோ, திருடப் போன நேரத்தில் தேள் கொட்டியதுபோல இருக்கிறது. அதனால், கழகத் தலைவருக்குப் பதில் சொல்வதாக நினைத்து, ஐ.எம்.சி.ஆர். விலையில்தான் வாங்கினோம், ஆந்திராவைவிட- கேரளாவைவிடத் தமிழ்நாட்டில் விலை குறைவு. வாங்கிய கருவிகளைத் திருப்பி அனுப்பிவிடுவோம், கொள்முதல் ஆர்டர் ரத்து செய்யப்படும் என்கிறார், மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர்.
 

மக்கள் நல்வாழ்வுத்துறை சம்பந்தமான அறிவிப்புகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிடுவதும், முதலமைச்சரைக் கேள்வி கேட்டால், மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மறுப்புத் தெரிவிப்பதுமாக, அங்கே ஒரு கண்ணாமூச்சி ஆட்டம் நடந்து கொண்டிருக்கிறது!
 

கழகத் தலைவர் கேட்பவை, எளிமையான கேள்விகள் "கரோனா நோய்த் தொற்று பரவத் தொடங்கிய காலத்திலிருந்து அ.தி.மு.க. அரசிடம் வெளிப்படைத்தன்மை இருந்ததா?  உரிய ஆலோசனைகளைக் கேட்டு நடந்தீர்களா?" என்ற கேள்விகளுக்கு இதுவரை பதிலே இல்லை. "இரவு 8 மணிக்கு கிட் வரும்" என்று முதலமைச்சர் ஊடகங்களிடம் நேரடியாக அறிவித்தாரே, எத்தனை 8 மணி கடந்து கிட் வந்தது என்பதை மறைக்காமல் சொல்ல முடியுமா? ஆர்டர் செய்தது எவ்வளவு, கிடைத்தது எவ்வளவு என்பதையும், காலதாமதமானதற்குக் காரணம் என்ன என்பதையும் வெளிப்படையாகச் சொல்லியிருக்கிறீர்களா?
 

ரேபிட் டெஸ்ட் கருவிகள் விலை விவகாரத்தில் கேரளாவைக் கூட்டாளியாக்கப் பார்க்கும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர், அதே கேரளாவில், ஆளுங்கட்சியின் செயல்பாடுகளை எதிர்க்கட்சிகள் ஆக்கப்பூர்வமாக விமர்சிப்பதையும், அதனை ஏற்று- எதிர்க்கட்சிகளைக் கலந்தாலோசித்து கேரள முதல்வர் செயல்படும் பக்குவத்தையும் எடப்பாடி பழனிசாமி கடைப்பிடிக்கிறாரா?
 

இந்தியாவில் வேறெந்த மாநிலத்தைக் காட்டிலும் கரோனாவிலிருந்து மீண்டவர்கள் தமிழகத்தில் அதிகம் எனப் பெருமைப்பட்டுக் கொள்ளும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் "குட்கா" புகழ் விஜயபாஸ்கர், கேரளாவும் ஒடிசாவும் இன்னும் சில மாநிலங்களும், கரோனா தொற்று பரவலின் எண்ணிக்கையைக் குறைத்த அளவுக்கு, மூன்று நாளில் கரோனா ஒழிந்துவிடும் என ஆரூடம் சொன்ன எடப்பாடி பழனிசாமி அரசு குறைத்திருக்கிறதா என்பதை அமைச்சர் விளக்குவாரா?
 

கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களை மீட்பதற்காக அர்ப்பணிப்புடன் பாடுபடும் டாக்டர்கள், செவிலியர்கள் உள்ளிட்ட மருத்துவப் பணியாளர்களுக்கு இதுநாள்வரை பாதுகாப்பு உடைகள் முறையாக வழங்கப்பட்டிருக்கின்றதா? மருத்துவர்களுக்குப் போதிய பாதுகாப்பு உடைகள் இல்லாத நிலையில், பத்திரப்பதிவு அலுவலகங்களைத் திறந்துவைத்து, அதில் பணியாற்றுவோருக்கு முழுமையான கவச உடைகள் வழங்கியிருப்பதற்கான அவசர அவசியத் தேவை என்ன?
 

ஊரடங்கு காலத்தில் உடனடியாக மனைகளை– கட்டடங்களை விற்கவும் வாங்கவும் ஆலாய்ப் பறப்பது யார்?
 

முதலமைச்சரின் கீழ் உள்ள பொதுப்பணித்துறையில், புதிய டெண்டர்களுக்கு நிதிச்சுமையைக் காரணம் காட்டி தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், துணை முதலமைச்சரின் கீழ் உள்ள குடிசைமாற்று வாரியத்தில் 700 கோடி ரூபாய்க்குப் புதிய கட்டடங்கள் கட்ட டெண்டர் கோரப்பட்டிருப்பது எதற்காக? யாருக்காக?
 

டெல்டா மாவட்டங்களில் ஹைட்ரோகார்பன் திட்டங்களுக்காக ஏற்கனவே மத்திய அரசு அளித்துள்ள அனுமதி ரத்து செய்யப்படாத நிலையில், அதனைப் பாதுகாப்பு மண்டலமாக அறிவித்து பட்டம் சூட்டிக்கொண்ட எடப்பாடி பழனிசாமி, அந்தப் பாதுகாப்பு மண்டலத்திலிருந்து மணல் அள்ளுவதைத் தடுக்காமல் வேடிக்கை பார்ப்பது ஏன்?
 

விவசாயிகள் விளைவித்த பயிர்களைக் கொள்முதல் செய்ய வக்கின்றி, அவை மழையில் நனைந்து, வெயிலில் காய்ந்து வீணாகும் சூழலில், யார் வீட்டுக்கோ வலியச் சென்று பால்பாக்கெட் வழங்கிய காமெடிக் கூத்துகள்தான் நிர்வாக லட்சணமா?
 

 

கமிஷன் - கலெக்‌ஷன் - கரப்ஷன் என்பதன்றி வேறென்ன செய்திருக்கிறது இந்த அரசு?
 

 

மத்திய அரசிடமிருந்து தமிழகம் உரிமையுடன் பெற வேண்டிய நிதி குறித்து வாய் திறக்காமல் - வலியுறுத்த  முடியாமல், பேரிடர் காலத்திலும் பதவி மோகத்தில் விளம்பரம் தேடி அரசியல் செய்யும் அ.தி.மு.க. ஆட்சியாளர்கள், தி.மு.கழகத்தின் தலைவரை நோக்கி, மலிவான அரசியல் என்று பேசுவது, மல்லாந்து படுத்து எச்சில் துப்பிய கதையாகவே ஆகும்.
 

"மக்களின் உயிரோடு விளையாடாமல், அவர்களின் நலன் பேணுங்கள்" என்பது மலிவான அரசியல் அல்ல; ஜனநாயக உரிமை.
 

ஒட்டுமொத்த உரிமைகளையும் அடகு வைத்து, சிக்கிய வழக்குகளில் தண்டனை பெறாமல் தப்பிப்பதற்காக, மேலும் மேலும் தவறுகளைச் செய்பவர்கள், நோய்த்தொற்று குறித்து சட்டமன்றத்திலும் மக்கள் மன்றத்திலும் விழிப்புணர்வை உண்டாக்கிய எங்கள் தலைவர் செய்வது அரசியல் என்கிறார்கள். ஆமாம்... அவர் மக்களுக்கான அரசியலைச் செய்கிறார்.
 

 

http://onelink.to/nknapp

 

மக்கள் நலன் காக்க தி.மு.க. என்ற பேரியக்கத்தை இந்தப் பேரிடர் காலத்தில் களமிறக்கியிருக்கிறார். மக்கள் போற்றும் அந்த மகத்தான செயல் உங்கள் பார்வையில் அரசியலாகத் தெரிகிறது!
 

 

நாளும் பொழுதும் ஊழல் செய்யும் உங்களைவிட, மக்கள் நலனுக்கான உரிமைப் போர் அரசியல் செய்யும் எங்கள் கழகத் தலைவரின் பணி மகத்தானது! இவ்வாறு கூறியுள்ளார். 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பா.ம.க பரப்புரையில் திடீர் எண்ட்ரி கொடுத்த அமைச்சர் துரைமுருகன்; அடுத்தடுத்து நடந்த சுவாரஸ்ய சம்பவம்!

Published on 15/04/2024 | Edited on 15/04/2024
Minister Durai Murugan who made a sudden entry in the BMC lobbying

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. ஏழு கட்டங்களாக நாடு முழுவதும் நடைபெறும் இந்த மக்களவைத் தேர்தல் ஜூன் 1ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை மக்களவைத் தேர்தல் நடைபெற இன்னும் நான்கு நாட்கள் மட்டுமே இருக்கும் நிலையில், தி.மு.க, அதிமுக, காங்கிரஸ், பா.ஜ.க உள்ளிட்ட அரசியல் கட்சிகள் தங்கள் தேர்தல் பிரச்சாரங்களைத் தீவிரபடுத்தி வருகின்றன. 

அதில், பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில், பா.ம.க, த.மா.க, அ.ம.மு.க உள்ளிட்ட கட்சிகள் இடம்பெற்று தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர். அதே போல், திமுக தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸ், வி.சி.க, கம்யூனிஸ்ட், இந்தியன் முஸ்லீம் லீக் உள்ளிட்ட கட்சிகள் இடம்பெற்று, தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றன. இதனால், அரசியல் களம் மிகவும் சூடுபிடித்துள்ளது. இதற்கிடையே, பிரச்சாரக் களத்தில் நடைபெற்ற நிகழ்வுகள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. 

இந்த நிலையில், பா.ஜ.க தலைமையிலான பா.ம.க கட்சிக்கு, வேலூர் மாவட்டம் காட்பாடி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட வள்ளிமலை பகுதியில் அரக்கோணம் நாடாளுமன்றத் தொகுதியை ஒதிக்கியுள்ளது. இந்த மக்களவைத் தொகுதியில், பா.ம.க வேட்பாளராக பாலு களமிறங்கி தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில், பா.ம.க வேட்பாளர் பாலு பிரச்சாரம் செய்த போது, தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் அவ்வழியே வந்த போது அங்கு சுவாரஸ்ய சம்பவம் அரங்கேறியது. இது தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

பா.ம.க வேட்பாளர் பாலு, அரக்கோணம் நாடாளுமன்றத் தொகுதியில் இன்று (15-04-24) தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். அப்போது, தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், அதே தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் ஜெகத்ரட்சனை ஆதரித்து பரப்புரை செய்து முடித்துவிட்டு, பா.ம.க வேட்பாளர் பரப்புரை செய்த அந்த வழியாக வந்தார். அப்போது, அமைச்சர் துரைமுருகனை பார்த்த பா.ம.க வேட்பாளர் பாலு, “எனக்கு முருகன் அருள் கிடைத்திருக்கிறது. அண்ணன் துரைமுருகனின் அன்பான ஆசிர்வாதமும், அருளும் என்னை வெற்றிபெற வைக்க வேண்டும். என்று கூறிவர், உங்கள் வாழ்த்தை நான் அடிபணிந்து ஏற்றுக்கொள்கிறேன் எனக் கூறினார். 

மேலும், நான் நிச்சயமாக வெற்றி பெற்று விடுவேன். இந்தத் தொகுதியில் வெற்றி பெற்றதும், உங்களை நேரில் வந்து சந்தித்து என்னுடைய நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்” என்று பேசினார். அதற்கு அமைச்சர் துரைமுருகனும், முகம் சுளிக்காமல் சிரித்துக்கொண்டே சென்றார். இதனால், அப்பகுதியில் கலகலப்பான சூழல் ஏற்பட்டது. 

Next Story

குட்கா வழக்கு; சி.பி.ஐக்கு சென்னை சிறப்பு நீதிமன்றம் கடும் கண்டனம்!

Published on 15/04/2024 | Edited on 15/04/2024
Chennai special court strongly condemns CBI at vijayabaskar case

தமிழகத்தில் குட்கா பொருட்கள் விற்பனை மற்றும் கிடங்குகளில் அவற்றை வைத்திருப்பதற்குத் தடை விதிக்கப்பட்டது. ஆனால் அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்து தடையை மீறி குட்கா பொருட்கள் விற்கப்பட்டதாகவும், வரி ஏய்ப்பு நடைபெற்றதாகவும் வருமான வரித்துறையினர் கடந்த 2016 ஆம் ஆண்டு பல இடங்களில் சோதனை நடத்தினர். இந்தச் சோதனையில், குட்கா கிடங்கு உரிமையாளர் மாதவராவ், சீனிவாசராவ், உமாசங்கர் குப்தா உள்ளிட்ட ஆறு பேருக்கு எதிராக வழக்குப் பதிவு செய்து, கைது செய்யப்பட்டதோடு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கில் முன்னாள் அமைச்சர்கள் சி.விஜயபாஸ்கர், பி.வி.ரமணா, முன்னாள் டி.ஜி.பி,  மற்றும் முன்னாள் காவல்துறை அதிகாரிகள், மத்திய, மாநில அரசு அதிகாரிகள் என 11 பேருக்கு எதிராக கடந்த 2022 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் சென்னை சிபிஐ நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. அந்தக் குற்றப்பத்திரிக்கையில் பல்வேறு தவறுகள் இருப்பதால் அவற்றைத் திருத்தி மீண்டும் தாக்கல் செய்ய சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இதனைத் தொடர்ந்து, முன்னாள் அமைச்சர்கள் மற்றும் உயர் அதிகாரிகளுக்கு எதிரான இந்த வழக்கில் விசாரணை நடத்த கடந்த சில மாதங்களுக்கு முன்பு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்தார். 

இந்த நிலையில், இந்த வழக்கு தொடர்பான விசாரணை சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி மலர் வாலண்டினா முன்பு இன்று (15-04-24) விசாரணைக்கு வந்தது. அப்போது சி.பி.ஐ தரப்பில், வழக்கின் விசாரணைக்காக ஒப்புதல் அனுமதி இன்னும் கிடைக்கவில்லை எனத் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து, நீதிமன்ற நீதிபதி, ‘அதிமுக முன்னாள் அமைச்சர்கள் சி.விஜயபாஸ்கர், பி.வி.ரமணா உள்ளிட்டோர் மீதான குட்கா வழக்கை கடந்த மூன்று ஆண்டுகளாக இழுத்தடிப்பதா? எனக். கூறி கண்டனம் தெரிவித்தார். மேலும், வழக்கின் நிலை என்ன என்பது தொடர்பாக அடுத்த விசாரணையின் போது பதில் அளிக்க வேண்டும் என்று சி.பி.ஐக்கு உத்தரவிட்டு, வழக்கின் விசாரணையை மே மாதம் 2ஆம் தேதி ஒத்தி வைத்தார்.