திமுக தலைவர் கலைஞரை காவேரி மருத்துவமனையில் நேரில் சந்தித்தேன் என குடியரசுத் தலைவர் ராம்நாம் கோவிந்த் தெரிவித்துள்ளார்.
திமுக தலைவர் கலைஞர் உடல்நலம் குறித்து விசாரிக்க குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் இன்று பிற்பகல் தனி விமானம் மூலம் சென்னை வந்தடைந்தார்.
சென்னை வந்த அவரை விமானநிலையத்தில் ஆளுநர் பன்வாரிலால் புரோகித், முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர் ஜெயக்குமார், சபாநாயகர் தனபால், தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் உள்ளிட்டோர் வரவேற்றனர்.
திமுக தலைவர் கலைஞர் உடல்நலக்குறைவு காரணமாக சென்னை ஆழ்வார்பேட்டை காவேரி மருத்துவமனையில் தீவிரி சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். தொடக்கத்தில் உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்ட நிலையில், மருத்துவர்களின் தொடர் சிகிச்சைக்கு பிறகு கலைஞரின் உடல்நிலை நன்றாக தேறி வருகிறது என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர்.
இந்நிலையில், திமுக தலைவர் கலைஞரின் உடல் நலம் குறித்து விசாரிக்க குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் இன்று பிற்பகல் 2.20 அளவில் சென்னை வந்தடைந்தார். பின்னர் விமானநிலையத்தில் இருந்து காவேரி மருத்துவமனைக்கு 20 நிமிடத்தில் வந்த அவர், தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வரும் கலைஞரை நேரில் சந்தித்துள்ளார். பின்னர், திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின், திமுக எம்.பி., கனிமொழி உள்ளிட்டோரிடம் கலைஞரின் உடல்நலம் குறித்து விசாரித்தார்.
இந்த சந்திப்பு குறித்து குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தனது அதிகாரப்பூர்வ டிவிட்டர் பக்கத்தில் கூறியாவது,
கலைஞர் அவர்களைச் சென்னையில் சந்தித்தேன். அவர்களின் குடும்பத்தார் மற்றும் மருத்துவரிடம் அவருடைய உடல்நலம் குறித்து கேட்டறிந்தேன். தமிழ்நாடு முன்னாள் முதல்வரும் முதுபெரும் தலைவருமான கலைஞர் விரைவில் குணமடைய வாழ்த்துகிறேன் என அவர் தன் பதிவில் கூறிப்பிட்டுள்ளார்.