Skip to main content

'தமிழகத்தில் ஜூன் 30- ஆம் தேதி வரை தளர்வுகளுடன் பொது முடக்கம்'- தமிழக அரசு!

Published on 31/05/2020 | Edited on 31/05/2020

 

lockdown extend including relaxation tn government announced

தமிழகத்தில் ஜூன் 30- ஆம் தேதி வரை தளர்வுகளுடன் பொது முடக்கம் நீட்டிக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. 


இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "கரோனா வைரஸ் தொற்றைத் தடுப்பதற்காக மாநில பேரிடர் மேலாண்மைச் சட்டத்தின் கீழும், மத்திய உள்துறை அமைச்சகத்தின் அறிவிக்கையின் அடிப்படையிலும், தற்போதுள்ள ஊரடங்கு உத்தரவு 30.06.2020 நள்ளிரவு 12.00 மணிவரை ஏற்கனவே நடைமுறையில் உள்ள பல்வேறு கட்டுப்பாடுகளுடனும், கீழ்க்கண்ட சில தளர்வுகளுடனும் நீட்டிப்பு செய்யப்படுகிறது. மறு உத்தரவு வரும்வரை தமிழகத்தில் வழிப்பாட்டுத் தலங்களைத் தலங்களை திறக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. நாளை (01/06/2020) முதல் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்கள் தவிர பிற மாவட்டங்களில் 50% பேருந்துகள் இயங்கும். அங்கீகரிக்கப்பட்ட இடங்களில் தனியார் பேருந்துகளும் இயங்க தமிழக அரசு அனுமதி. நீலகிரி, கொடைக்கானல், ஏற்காடு பகுதிகளுக்கு சுற்றுலா பயணிகள் செல்ல தடை நீடிக்கிறது. 

பொது போக்குவரத்து பேருந்துகளில் பயணிக்க இ-பாஸ் தேவையில்லை. நாளை முதல் பொது போக்குவரத்தை நடைமுறைப்படுத்த மாநிலம் 8 மண்டலங்களாக பிரிக்கப்படுகிறது. பேருந்துகளில் 60% இருக்கைகளில் மட்டும் பயணிகள் அமர்ந்து பயணம் செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அரசின் வழிபாட்டு நடைமுறைகளை பின்பற்றி பொதுபோக்குவரத்திற்கான பேருந்துகள் இயக்கப்படும். மண்டலங்களிடையே பயணிக்க இ- பாஸ் தேவையில்லை. வெளி மாநில பயணங்கள், மண்டலங்களிடையே சென்று வர இ- பாஸ் முறை தொடர்ந்து நடைமுறையில் இருக்கும். மாநிலங்களுக்கு இடையே பேருந்து போக்குவரத்துக்கு ஜூன் 30- ஆம் தேதி வரை தடை விதிக்கப்படுகிறது. மத்திய அரசால் அனுமதிக்கப்பட்ட பணிகளைத் தவிர சர்வதேச விமான போக்குவரத்துக்கு தடை நீட்டிக்கப்பட்டுள்ளது. மெட்ரோ ரயில், மின்சார ரயில்களை இயக்குவதற்கான தடைகள் நீடிக்கிறது.

முதல் மண்டலத்தில் மேற்கு மாவட்டங்களான கோவை, திருப்பூர், ஈரோடு, நீலகிரி, சேலம், கரூர், நாமக்கல் ஆகியவை உள்ளன. இரண்டாம் மண்டலத்தில் தருமபுரி,வேலூர், திருப்பத்தூர்,ராணிப்பேட்டை மற்றும் கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்கள் உள்ளன. மூன்றாவது மண்டலத்தில் விழுப்புரம், திருவண்ணாமலை, கடலூர் மற்றும் கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்கள் உள்ளன. நான்காவது மண்டலத்தில் நாகப்பட்டினம், திருவாரூர், திருச்சி, தஞ்சாவூர், திருச்சி, பெரம்பலூர், அரியலூர், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்கள் உள்ளன. ஐந்தாவது மண்டலத்தில் திண்டுக்கல், மதுரை, தேனி, விருதுநகர், சிவகங்கை மற்றும் ராமநாதபுரம்  மாவட்டங்கள் உள்ளன. ஆறாவது மண்டலத்தில் தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி, விருதுநகர் உள்ளிட்ட மாவட்டங்கள் உள்ளன. ஏழாவது மண்டலத்தில் காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களும், எட்டாவது மண்டலத்தில் காவல் எல்லைக்குட்ப்பட்ட பகுதிகளும் உள்ளன. 

 

 


காய்கறி, மளிகை உள்ளிட்ட அத்தியாவசிய கடைகள் காலை 06.00 மணிமுதல் இரவு 08.00 மணிவரை இயங்கலாம். வாடகை டாக்சிகள் மூன்று பயணிகளுடன் இயங்க அனுமதி. ஆட்டோக்களில் ஓட்டுநர் இல்லாமல் இரு பயணிகள் வரை பயணம் செய்ய அனுமதி. வணிக வளாகங்கள், தங்கும் விடுதிகள் ஆகியவற்றை திறக்க தடை தொடர்கிறது. ஜூன் 30- ஆம் தேதி வரை பள்ளி, கல்லூரிகள், பயிற்சி, ஆராய்ச்சி நிறுவனங்களை திறக்கத் தடை தொடர்கிறது. கல்வி நிறுவனங்கள் இணைய வழிக்கல்வி கற்றலை தொடரலாம்; அதனை ஊக்கப்படுத்தலாம். 

திரையங்குகள், உடற்பயிற்சி கூடங்கள், கேளிக்கை கூடங்கள், பார் கூட்ட அரங்குகளை திறக்க தடை தொடரும். திருமண நிகழ்ச்சிகள் மற்றும் இறுதி ஊர்வலங்களுக்கு ஏற்கனவே உள்ள கட்டுப்பாடுகள் தொடரும். திருமண நிகழ்ச்சிகளில் 50 பேருக்கு மேல் பங்கேற்கக் கூடாது; இறுதி நிகழ்ச்சிகளில் 20 பேர் பங்கேற்கலாம். தகவல் தொழில்நுட்பம் சார்ந்த நிறுவனங்கள் 20% பணியாளர்கள் அதிகபட்சம் 40 பேருடன் இயங்கலாம். 50% ஊழியர்களுடன் அனைத்து தனியார் நிறுவனங்கள் செயல்பட அனுமதிக்கப்படுகிறது. இயன்றவரை பணியாளர்கள் வீட்டிலிருந்தே பணிபுரிவதை தனியார் நிறுவனங்கள் ஊக்குவிக்க வேண்டும். கட்டுப்பாட்டு பகுதிகள் தவிர்த்த பிற பகுதிகளில் தொழில் நிறுவனங்கள் 100% ஊழியர்களுடன் இயங்கலாம். கட்டுப்பாட்டு பகுதிகள் தவிர்த்த பிற பகுதிகளில் ஐடி நிறுவனங்கள் 100% ஊழியர்களுடன் இயங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. 

ஏசி வசதியைப் பயன்படுத்தாமல் வணிக வளாகங்கள், நகைக்கடைகள், ஷோரூம்கள், பெரிய கடைகளைத் திறக்கலாம். வணிக வளாகங்கள் தவிர்த்து அனைத்து ஷோரூம்கள், பெரிய கடைகள் 50% ஊழியர்களுடன் செயல்படலாம். ஒரே நேரத்தில் அதிகபட்சம் 5 வாடிக்கையாளர்கள் மட்டும் கடைக்குள் வருவதை உறுதிப்படுத்த வேண்டும். ஜூன் 8- ஆம் தேதி முதல் உணவகங்களில் அமர்ந்து உணவு உண்ண தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. உணவகங்களில் உள்ள மொத்த இருக்கைகளில் 50% இருக்கைகளில் மட்டும் வாடிக்கையாளர்கள் அமரலாம். உணவகங்களில் குளிர்சாதன இயந்திரங்கள் இருந்தால் அவை இயக்கப்படக் கூடாது. தேநீர் கடைகளில் 50% அளவு மட்டும் வாடிக்கையாளர் அமர்ந்து உணவு உண்ண அனுமதி அளிக்கப்படுகிறது. சென்னையில் கட்டுப்பாட்டுப் பகுதிகள் தவிர பிற இடங்களில் சலூன்கள், அழகு நிலையங்கள் செயல்பட அனுமதி அளிக்கப்படுகிறது.

 

7



பொது இடங்களில் 5 பேருக்கு மேல் கூடக்கூடாது என்ற நடைமுறை தொடர்ந்து அமலில் இருக்கும். பொது இடங்கள், பணியிடங்கள், பயணத்தின்போது முகக்கவசம் கட்டாயமாக அணிய வேண்டும். தனிமனித இடைவெளியை பொதுமக்கள் கட்டாயமாக கடைப்பிடிக்க வேண்டும். இ- காமர்ஸ் எனும் ஆன்லைன் விநியோக நிறுவனங்களில் அத்தியாவசியமற்ற பொருட்களுக்கும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அத்தியாவசியமற்ற பொருட்கள் உட்பட அனைத்து பொருட்களையும் வழங்க அனுமதிக்க அளிக்கப்பட்டுள்ளது. சென்னை காவல் எல்லை பகுதிகளில் உள்ள தூய்மைப் பணியாளர்களுக்கு ரூபாய் 2,500 மதிப்பூதியம் வழங்கப்படும். சென்னை மாநகராட்சி அரசு முகாமில் தங்கும் ஏழைகள், முதியோர்களுக்கு ரூபாய் 1,000 நிவாரணமாக வழங்கப்படும்."இவ்வாறு தமிழக அரசின் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 


 

சார்ந்த செய்திகள்

Next Story

தமிழக அரசிற்கு நன்றி தெரிவித்த தென்னிந்திய நடிகர் சங்கம்

Published on 21/02/2024 | Edited on 21/02/2024
south indian artistes assoociation thanked tn government for new film city

இந்த ஆண்டுக்கான தமிழக சட்டப் பேரவையின் முதல் கூட்டத்தொடர் கடந்த 12 ஆம் தேதி ஆளுநர் உரையுடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. அதில் கடந்த 19 ஆம் தேதி 2024 - 2025 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை சட்டப் பேரவையில் தமிழக நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்ட நிலையில் சென்னை பூந்தமல்லியில் அதிநவீன திரைப்பட நகரம் அமைப்பதற்காக ரூ. 500 கோடி ஒதுக்கீடு செய்யப்படும் என்றும் தெரிவித்திருந்தார்.  

தமிழக அரசு அறிவிப்பிற்கு தென்னிந்திய நடிகர் சங்கம் நன்றி தெரிவித்து அறிக்கை வெளியிட்டது. அதில், “சட்டப் பேரவையில் தாக்கல் செய்யப்பட்ட நிதிநிலை அறிக்கையில் இடம்பெற்றுள்ள தமிழ்த் திரைத்துறையினரின் நீண்ட நாள் கோரிக்கையான திரைப்பட நகரம் குறித்த அறிவிப்பில், சென்னையை ஒட்டி பூந்தமல்லியில் சுமார் 150 ஏக்கர் பரப்பளவில் ரூ. 500 கோடி மதிப்பீட்டில் வி.எப்.எக்ஸ். அனிமேஷன் மற்றும் எல்.இ.டி கன்வர்ஷன் போன்ற நவீன தொழில்நுட்பங்களுடன் கூடிய படப்பிடிப்பு தளங்கள், புரொடக்சன் பணிகள் பிரிவு, 5 நட்சத்திர ஓட்டல் வசதிகளுடன் கூடிய கட்டமைப்புகள் மற்றும் சென்னை தீவுத்திடலில் இயற்கை வனப்புடன் கூடிய சமூக கட்டமைப்பு வசதிகளுடன் திறந்தவெளி திரையரங்கம் அமைப்பதற்கும் நிதி ஒதுக்கீடு செய்திருப்பது தமிழ்த் திரையுலகைச் சேர்ந்தவர்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது

தமிழ்ப் படங்களின் படப்பிடிப்புகள் குறிப்பாகப் பெரிய படங்களின் படப்பிடிப்புகள் அண்டை மாநிலங்களில் நடப்பதால் இங்குள்ள நடிகர்கள் குறிப்பாகத் திரையுலக தொழிலாளர்களுக்கு வாய்ப்புகள் குறைந்தன. இத்திட்டத்தின் மூலம் தொழிலாளர்கள் நலம் வளம் பெறும். ஒரு காலத்தில் ஆசியாவின் மிகப்பெரும் சினிமா நகரமாக திகழ்ந்து, வரலாறு படைத்திட்ட நகரமிது. காலத்தில் கரைந்து போன அச்சரித்திரத்தை மீட்டெடுக்கும் திட்டமிது. தமிழ்த் திரைப்படங்களை உலக வரைபடத்தில் அழுத்தமாக பதிவதற்கு ஊக்கம் தந்து, படைப்பாளிகளின் கனவுலகத்தை மேலும் விரியச் செய்கின்ற திட்டமிது. தமிழ்த் திரையுலகின் வாழ்வாதாரத்தை மீட்டெடுத்த மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களுக்கு தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பாக மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

Next Story

காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டம்; அமைச்சரின் கோரிக்கையை ஏற்க மறுத்த ‘ஜாக்டோ - ஜியோ’

Published on 13/02/2024 | Edited on 13/02/2024
Indefinite strike; Jacto refused to accept the minister's request - Geo

திட்டமிட்டபடி காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டம் நடத்தப்படும் என  ஜாக்டோ ஜியோ அமைப்பு தெரிவித்துள்ளது.

அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர் சங்கங்கள் போராட்டத்தை அறிவித்திருந்த நிலையில், தமிழக அரசு போராட்டத்தைக் கைவிடுமாறு கோரிக்கை வைத்திருந்தது. பழைய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்துவது மற்றும் மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையான ஊதியம் வழங்குவது உள்ளிட்ட பத்து அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் 26 ஆம் தேதி முதல் 'ஜாக்டோ ஜியோ' ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபடுவதாக அறிவிப்பு வெளியிட்டிருந்தனர். இன்று தலைமைச் செயலகத்தில் அமைச்சர் எ.வ. வேலு, ஜாக்டோ ஜியோ சங்க உறுப்பினர்களுடன் ஆலோசனை நடத்தினார்.

இதனையடுத்து, அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்கள் அறிவித்துள்ள வேலை நிறுத்தப் போராட்டத்தைக் கைவிட வேண்டும் என நிதி மற்றும் மனித வள மேலாண்மைத் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு கோரிக்கை வைத்திருந்தார். அவர் வெளியிட்டிருந்த அறிக்கையில், 'கடந்த இரண்டு ஆண்டுகளில் அரசு ஊழியர்களின் தேவைக்கேற்ப பல்வேறு நலத்திட்டங்கள் அமல்படுத்தப்பட்டுள்ளன. அரசு ஊழியர்களின் கோரிக்கைகள் படிப்படியாக நிதிநிலைக்கு ஏற்ப அரசு பணிவுடன் பரிசீலிக்கும்.

கலைஞர் வழி நடக்கும் அரசு, ஊழியர்களின் நலனை எப்போதுமே கருத்தில் கொண்டு செயல்பட்டு வருகிறது. அரசின் நலத் திட்டங்களை மக்களிடம் கொண்டு சேர்க்கும் அரும்பணியை மேற்கொள்ளும் அரசு ஊழியர்களின் முக்கியத்துவத்தை அரசு உணர்ந்தே இருக்கிறது. எனவே அரசு ஊழியர்கள், ஆசிரியர் சங்கங்கள் அறிவித்துள்ள வேலை நிறுத்தப் போராட்டத்தைக் கைவிட்டு அரசுக்கு முழு ஒத்துழைப்பு தர வேண்டும். அரசுக்குத் தொடர்ந்து ஒத்துழைப்பு நல்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்' எனத் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் ஜாக்டோ ஜியோ தரப்பிலிருந்து, நிதி அமைச்சர் தங்கம் தென்னரசுவின் அறிக்கையை முற்றிலுமாக நிராகரிப்பதாகவும், தங்களின் கோரிக்கையை உடனடியாக முதல்வர் ஸ்டாலின் நிறைவேற்ற வேண்டும் எனவும் நாளை மறுநாள் ஒருநாள் அடையாள வேலை நிறுத்தம் நடத்தப்படும் என்றும் பிப்ரவரி 26ம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டம் தொடங்கும் என்று ‘ஜாக்டோ ஜியோ’ அறிவித்துள்ளது.