Skip to main content

குவைத் முகாமில் தமிழர்கள் மீது தடியடி: மன உளைச்சலால் இளைஞர் தூக்கிட்டுத் தற்கொலை: விரைந்து மீட்க ராமதாஸ் வலியுறுத்தல்!

Published on 26/05/2020 | Edited on 27/05/2020

 

ramadoss


குவைத் நாட்டின் மாங்காஃப் (Mangarf) என்ற இடத்தில் உள்ள ஆண்களுக்கான முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளவர்களில் பலருக்கு நேற்றிரவு உணவு வழங்கப்படவில்லை என்றும் தங்களுக்கு உணவு வழங்க வேண்டும் என்று குரல் எழுப்பியதால், தமிழர்கள் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்டோர் மீது காவல்துறையினர் தடியடி நடத்தியதாகவும், தனிமைப்படுத்தப்பட்டு, முட்டிப் போட வைத்து, அவமானப்படுத்தப்பட்டதாகவும் அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன. தாயகம் திரும்ப முடியாமல் 50 நாட்களுக்கும் மேலாகத் தவிப்பதால் ஏற்பட்ட மன உளைச்சல் காரணமாகத் தமிழகத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். உடனடியாக குவைத் நாட்டில் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் தாயகம் திரும்ப மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
 


இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், குவைத் பொதுமன்னிப்பு முகாமில் உணவு வழங்கப்படாததற்கு எதிர்ப்பு தெரிவித்த தமிழர்கள் உள்ளிட்ட இந்தியர்கள் மீது அந்நாட்டு காவல்துறையினர் தடியடி நடத்தியுள்ளனர். மற்றொருபுறம் நோய்ப்பரவல் அதிகரித்து வரும் நிலையில், குவைத்தில் சிக்கியுள்ள தமிழர்களைத் தாயகம் அழைத்து வர இந்திய வெளியுறவுத்துறை இன்று வரை எந்த நடவடிக்கையும் எடுக்காதது மிகவும் ஏமாற்றம் அளிக்கிறது.
 

குவைத் நாட்டில் கரோனா வைரஸ் வேகமாகப் பரவி வரும் நிலையில், அங்கு உரிய ஆவணங்கள் இல்லாமல் தங்கியிருந்த 12 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இந்தியர்களுக்கு பொதுமன்னிப்பு வழங்கப்பட்டு, தாயகத்திற்கு அனுப்பத் தயாராக முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். குவைத் நாட்டின் மாங்காஃப் (Mangarf) என்ற இடத்தில் உள்ள ஆண்களுக்கான முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளவர்களில் பலருக்கு நேற்றிரவு உணவு வழங்கப்படவில்லை. இதை அதிகாரிகளின் கவனத்திற்குக் கொண்டு சென்ற சிலர், தங்களுக்கு உணவு வழங்க வேண்டும் என்று குரல் எழுப்பியதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து தமிழர்கள் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்டோர் மீது காவல்துறையினர் தடியடி நடத்தியதாகவும், இதில் ஆந்திரத்தைச் சேர்ந்த ஒருவருக்கு மண்டை உடைந்து காயம் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது. மேலும் உணவு கிடைக்கவில்லை என்று புகார் கூறியவர்கள் அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டு, முட்டிப் போட வைத்து, அவமானப்படுத்தப்பட்டதாகவும் அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.
 

மற்றொருபுறம், அரிதியா என்ற இடத்தில் உள்ள மகளிருக்கான முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள தமிழகத்தைச் சேர்ந்த பெண் தொழிலாளர்கள் தங்களை உடனடியாகச் சொந்த ஊர்களுக்கு அனுப்ப வேண்டும் என்றும், அதற்கான உத்தரவாதம் கிடைக்கும் வரை உணவு அருந்த மாட்டோம் என்றும் கூறி கடந்த 3 நாட்களாக உண்ணாநிலை மேற்கொண்டுள்ளனர். அம்முகாமில் இருந்த ஒரு பெண்ணுக்குச் சில நாட்களுக்கு முன் உடல் நலம் பாதிக்கப்பட்ட நிலையில், மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட அவர் உயிரிழந்துவிட்டார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் தங்க வைக்கப்பட்டுள்ள பொது மன்னிப்பு முகாம்களில் பெரும் அச்சமும், பதற்றமும் நிலவி வருகிறது.
 


குவைத்தில் பொது மன்னிப்பு வழங்கப்பட்ட இந்தியத் தொழிலாளர்களில் 7,340 பேர் முகாம்களிலும், சுமார் 5,000 பேர் முகாம்களுக்கு வெளியிலும் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இவர்களில் பலர் ஏப்ரல் மாதத் தொடக்கத்திலிருந்து 50 நாட்களுக்கும் மேலாக முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். மே மாதம் 7-ஆம் தேதி முதல் வெளிநாடுகளில் தவிக்கும் இந்தியர்களை மீட்பதற்கான விமான சேவைகள் இயக்கப்படும் நிலையில், குவைத்தில் உள்ள இந்தியர்களில் சுமார் 4,000 பேர் இதுவரை தாயகத்திற்கு அழைத்து வரப்பட்டுள்ளனர். அவர்களில் கடந்த 10-ஆம் தேதி குவைத்திலிருந்து சென்னைக்கு இயக்கப் பட்ட விமானத்தில் தமிழகத்தைச் சேர்ந்த 186 பேர் தாயகம் திரும்பியுள்ளனர். அதன்பின் கடந்த 16 நாட்களாகத் தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒருவர் கூட, சொந்த ஊர்களுக்கு அழைத்து வரப்படவில்லை.
 

குவைத் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள கேரளத் தொழிலாளர்களும், ஆந்திரத்தைச் சேர்ந்த தொழிலாளர்களும் அதிக எண்ணிக்கையில் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள நிலையில், தங்களை அழைத்துச் செல்ல விமானம் இயக்கப்படாததால் தமிழர்கள் கடுமையான மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர். மே 16-ஆம் தேதி முதல் 22-ஆம் தேதி வரையிலான இரண்டாம் கட்ட வந்தே பாரத்  இயக்கத்தின்படி, குவைத் உள்ளிட்ட எந்த நாட்டிலிருந்தும் தமிழ்நாட்டிற்கு விமானங்கள் இயக்கப்படவில்லை. மே 23-ஆம் தேதிக்கு பிறகாவது குவைத்திலிருந்து தமிழகத்திற்கு விமானங்கள் இயக்கப்படும்; அவற்றில் தாயகம் திரும்பலாம் என்றும் தமிழர்கள் எதிர்பார்த்திருந்தனர். ஆனால், ஜூன் மாத இறுதி வரை விமானங்கள் இயக்கப்படாது என அறிவிக்கப்பட்டிருப்பது குவைத்தில் தவிக்கும் தமிழ்நாட்டைச் சேர்ந்த தொழிலாளர்களிடையே நிலவும் ஏமாற்றத்தையும், மன உளைச்சலையும் அதிகப்படுத்தியிருக்கிறது.
 

தாயகம் திரும்ப முடியாமல் 50 நாட்களுக்கும் மேலாகத் தவிப்பதால் ஏற்பட்ட மன உளைச்சல் காரணமாகத் தமிழகத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். உடனடியாக தமிழர்களை மீட்க விமானங்கள் இயக்கப்படாவிட்டால், மன உளைச்சல் காரணமாக இதுபோன்ற நிகழ்வுகள் தொடரக்கூடும். மற்றொருபுறம் குவைத் நாட்டில் இன்று வரை 21,967 பேர் கரோனா வைரஸ் நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒவ்வொரு நாளும் சராசரியாக ஆயிரம் பேர் வரை கரோனாவால் பாதிக்கப் படுகின்றனர். அவ்வாறு பாதிக்கப்படுவோரில் பெரும்பான்மையினர் இந்தியாவைச் சேர்ந்தவர்களாவர். பொதுமன்னிப்பு முகாம்களில் கழிப்பறை உள்ளிட்ட வசதிகள் போதிய அளவில் இல்லாததால் அங்கு எளிதாக கரோனா வைரஸ் பரவக் கூடும் என்ற அச்சமும் தமிழகத்தினரிடையே நிலவி வருகிறது.
 

http://onelink.to/nknapp

 

குவைத்தில் பொதுமன்னிப்பு முகாம்களில் சுமார் 450 பேர், வெளியில் 250 பேர் என தமிழகத்தைச் சேர்ந்த சுமார் 700 பேர் மட்டுமே உள்ளனர். அதிகபட்சமாக இரு விமானங்கள் மூலம் அவர்களைத் தமிழகத்திற்கு அழைத்து வந்து விட முடியும். எனவே, இனியும் தாமதிக்காமல், சிறப்பு விமானங்களை இயக்கி குவைத்தில் தவிக்கும் தமிழ்நாட்டைச் சேர்ந்த தொழிலாளர்களை அழைத்து வர மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்; இதற்காக மத்திய அரசுக்குத் தமிழக அரசு அழுத்தம் தர வேண்டும். இவ்வாறு கூறியுள்ளார். 
 

 

 


 

சார்ந்த செய்திகள்

Next Story

ஓடும் பேருந்தில் இருக்கையுடன் தூக்கி வீசப்பட்ட நடத்துநர்; அன்புமனி கண்டனம்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Anbumani condemns conductor being thrown with his seat in   moving govt bus

ஓடும் பேருந்தில், நடத்துநர் இருக்கையுடன் தூக்கி வீசப்பட்டதற்கு பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “திருச்சி திருவரங்கத்தில் இருந்து கே.கே.நகருக்கு சென்று கொண்டிருந்த அரசு நகரப் பேருந்து, வளைவு ஒன்றில் திரும்பும் போது, நடத்துநர் அமர்ந்திருந்த இருக்கை கழன்று வெளியில் விழுந்துள்ளது. இருக்கையுடன் நடத்துநரும் வெளியில் தூக்கி வீசப் பட்டுள்ளார். நல்வாய்ப்பாக பேருந்துக்கு பின்னால் வேறு வாகனங்கள் வரவில்லை என்பதால், நடத்துனர்  லேசான காயங்களுடன் உயிர்த் தப்பியுள்ளார். காயமடைந்த ஓட்டுநர் விரைவில் நலம் பெற எனது விருப்பங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

சென்னை அமைந்தகரை பகுதியில் கடந்த பிப்ரவரி  6-ஆம்  தேதி  மாநகரப் பேருந்தின் தளம் உடைந்து  ஏற்பட்ட ஓட்டை வழியாக பெண் பயணி ஒருவர் சாலையில் விழுந்து காயமடைந்தார்.  அதனால் ஏற்பட்ட அதிர்ச்சி விலகும் முன்பாகவே  திருச்சியில்  பேருந்தின் இருக்கை கழன்று  நடத்துநர்  தூக்கி வீசப்பட்டுள்ளார்.  பேருந்தின் டயர் தனியாக கழன்று ஓடுவது, பேருந்தின் மேற்கூறை  தனியாக கழன்று காற்றில் பறப்பது போன்ற நிகழ்வுகளும் நடந்து கொண்டுதான் இருக்கின்றன. தினமும் 2 கோடி மக்கள் பயணிக்கும் அரசுப் போக்குவரத்துக் கழக பேருந்துகளை  திமுக அரசு எவ்வளவு மோசமாக பராமரிக்கிறது என்பதற்கு இதை விட மோசமான எடுத்துக் காட்டு இருக்க முடியாது.

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகங்களில் உள்ள 20,926 பேருந்துகளில் 1500 பேருந்துகள் 15 ஆண்டுகளுக்கும் மேலாக இயக்கப்பட்டு வருகின்றன என்பதை  தமிழக போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கரே  ஒப்புக் கொண்டிருக்கிறார்.  15 ஆண்டுகளைக் கடந்த பேருந்துகளை இயக்குவதே சட்ட விரோதம் ஆகும். இதைத் தவிர 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட  பேருந்துகள்  12 ஆண்டுகளுக்கும் மேலாக இயக்கப்பட்டு வருகின்றன.  திமுக  ஆட்சிக்கு வந்த பிறகு விரல் விட்டு எண்ணக் கூடிய அளவில் தான் புதிய பேருந்துகள் வாங்கப்பட்டுள்ளன.

புதிய பேருந்துகள் வாங்கப்படாததால், காலாவதியான பேருந்துகள் அதிக எண்ணிக்கையில் இயக்கப்படுவதும்,   அவற்றை பராமரிப்பதற்கும், உதிரி பாகங்கள் வாங்குவதற்கும் கூட போதிய நிதி ஒதுக்கப்படாததுதான்  இத்தகைய அவல நிலை  ஏற்படுவதற்கு காரணம் ஆகும்.  இத்தகைய அவல நிலைக்கு திமுக தலைமையிலான திராவிட மாடல் அரசுதான் பொறுப்பேற்க வேண்டும்.

அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுக்கான மகிழுந்துகள் அவர்கள் விரும்பும் நேரத்தில் மாற்றப்படுகிறது. முதலமைச்சரின் வாகன அணிவகுப்பில் வரும் மகிழுந்துகள்  கருப்பு வண்ணத்தில் இருக்க வேண்டும் என்பதற்காக, ஏற்கெனவே வாங்கப்பட்டு சில மாதங்கள் மட்டுமே ஆன மகிழுந்துகள்  ஓரங்கட்டப்பட்டு, கோடிக்கணக்கில் செலவு செய்து 6 புதிய மகிழுந்துகள்  வாங்கப்படுகின்றன. ஆனால், பொதுமக்கள் பணம் கொடுத்து பயணம் செய்யும்  பேருந்துகள் மட்டும்  15 ஆண்டுகளைக் கடந்து இயக்கப்படுகின்றன. இது என்ன கொடுமை?

தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் உள்ள 6 ஆண்டுகளைக் கடந்த பேருந்துகள் அனைத்தும் உடனடியாக மாற்றப்பட்டு அவற்றிற்கு மாற்றாக புதிய பேருந்துகள் வாங்கி இயக்கப்பட வேண்டும்.  பழைய பேருந்துகளைப் பராமரிக்கவும்,  உதிரி பாகங்கள் வாங்கவும் அரசு போக்குவரத்துக் கழகங்களுக்கு அரசு  போதிய நிதி ஒதுக்கீடு  செய்ய வேண்டும்” என வலியுறுத்தியுள்ளார்.

Next Story

“டிஎன்பிஎஸ்சி குரூப் 2 நேர்முகத் தேர்வு ரத்து வரவேற்கத்தக்கது” - ராமதாஸ்

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
“Cancellation of TNPSC Group 2 Interview is welcome says Ramadoss

டிஎன்பிஎஸ்சி குரூப் 2 நேர்முகத் தேர்வு ரத்து வரவேற்கத்தக்கது என்றும் நிலையான தேர்வு அட்டவணை, கூடுதல் சீர்திருத்தம் தேவை என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாட்டில் குரூப் 2 பணிகளுக்கு இனி நேர்முகத்தேர்வுகள் நடத்தப்படாது என்பது உள்ளிட்ட பல்வேறு சீர்திருத்தங்களை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவித்திருக்கிறது. தேர்வர்கள் நலன் கருதியும், தேர்வுகளை விரைவுபடுத்தவும் அறிவிக்கப்பட்டுள்ள இச்சீர்திருத்தங்கள் வரவேற்கத்தக்கவை.

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தை காலத்திற்கும், தேவைக்கும் ஏற்ற வகையில் மாற்ற வேண்டும்; அதற்காக பல்வேறு சீர்திருத்தங்கள் செய்யப்பட வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சி பல ஆண்டுகளாக வலியுறுத்தி வருகிறது. பா.ம.க. வலியுறுத்திய சில சீர்திருத்தங்களை தேர்வாணையம்   செயல்படுத்தியுள்ள போதிலும், தேர்வாணையத்தை நவீனப்படுத்துவதற்கு இவை மட்டும் போதுமானதல்ல.

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் அனைத்து பணிகளுக்கும் நேர்முகத் தேர்வு கூடாது என்பது தான் பா.ம.க.வின் நிலைப்பாடு. இதை கடந்த ஐந்தாண்டுகளாக பா.ம.க.வின் நிழல் நிதிநிலை அறிக்கை மூலம் வலியுறுத்தி வருகிறோம். ஆள்தேர்வில் நடைபெறும் முறைகேடுகளுக்கு முதன்மைக் காரணம் நேர்முகத் தேர்வுகள் தான். அவை அகற்றப்பட்டால் தான் நேர்மையான முறையில் பணியாளர்களைத் தேர்ந்தெடுக்க முடியும். அப்போது தான் ஏழை, நடுத்தர மக்களுக்கும் வேலை கிடைக்கும்.

மத்திய அரசுப் பணிகளை பொறுத்தவரை குரூப் ஏ, குரூப் பி அரசிதழ் பதிவு பணிகள் தவிர மற்ற அனைத்து பணிகளுக்கும் நேர்காணல் முறை ரத்து செய்யப்பட்டு விட்டது. ஆந்திர மாநிலம் அதை விட அடுத்தக்கட்டத்திற்கு சென்று மாவட்ட துணை ஆட்சியர், காவல்துறை துணை கண்காணிப்பாளர் உள்ளிட்ட முதல் தொகுதி பணிகளுக்குக் கூட நேர்காணலை ரத்து செய்து விட்டது. ஆந்திராவைப் பொறுத்தவரை அரசு பணிகளுக்கு நேர்காணல் முற்றிலுமாக ஒழிக்கப்பட்டு விட்டது. ஆந்திரத்தைப் போலவே தமிழ்நாட்டிலும் முதல் தொகுதி பணிகளுக்கும் நேர்முகத் தேர்வை நிரந்தரமாக நீக்க வேண்டும்.

2 ஏ தொகுதியில் இதுவரை இருந்து வந்த நகராட்சி ஆணையர், தலைமைச் செயலக உதவி பிரிவு அதிகாரி ஆகியவை தொகுதி 2 க்கு மாற்றப்பட்டு விட்டன. இவை தவிர 2 ஏ தொகுதியில் உள்ள அனைத்து பணிகளும் சாதாரணமானவை தான். அப்பணிகளுக்காக முதல்நிலைத் தேர்வு, முதன்மைத் தேர்வு என இரு தேர்வுகளை நடத்த வேண்டிய தேவையில்லை. எனவே, 2 ஏ தொகுதி பணிகளுக்கு  இனி ஒரே தேர்வை நடத்துவதற்கு தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் முன்வர வேண்டும்.

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் எதிர்கொள்ளும் மிகக் கடுமையான விமர்சனம் தேர்வு முடிவுகளை குறித்த காலத்தில் வெளியிடுவதில்லை என்பது தான். தொகுதி 1, தொகுதி 2 பணிகளுக்கான தேர்வு நடைமுறைகளை பல நேரங்களில் 30 மாதங்கள் வரை ஆகின்றன. இதனால் தேர்வர்கள் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர். இந்த நிலையை மாற்றி குறித்த நேரத்தில் முடிவுகளை வெளியிட வேண்டும்.

மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் சார்பில் ஒவ்வொரு ஆண்டும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடிமைப்பணி அதிகாரிகளை தேர்தெடுப்பதற்கான போட்டித் தேர்வுகள் நடத்தப்படுகின்றன. லட்சக்கணக்கான மாணவர்கள் பங்கேற்கும் அத்தேர்வுகளின் முடிவுகள் அறிவிக்கை வெளியான நாளில் இருந்து ஓராண்டுக்குள் வெளியிடப்படுகின்றன. அடுத்தத் தேர்வுக்கு தேர்வர்கள் தயாராவதற்காக இத்தகைய ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குடிமைப்பணி தேர்வுக்கான முடிவுகள் ஒரு முறை கூட தாமதமாக வெளியிடப்பட்டதில்லை. மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையத்தைப் பின்பற்றி ஒவ்வொரு தொகுதி பணிக்கும் எந்த மாதத்தில் அறிவிக்கை வெளியிடப்படும்? எந்த மாதத்தில் தேர்வு நடைபெறும்? எந்த மாதத்தில் முடிவுகள் வெளியாகும்? என்ற விவரங்கள் அடங்கிய நிலையான தேர்வு அட்டவணையை  தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையமும்  வெளியிட வேண்டும்.

முதல் தொகுதி பணிகளுக்கான அறிவிக்கை பிப்ரவரி மாதம் வெளியிடப்பட்டு, ஏப்ரல் மாதத்தில் முதல்நிலைத் தேர்வு, ஜூலை மாதத்தில் முதன்மைத் தேர்வு நடத்தப்பட்டு, திசம்பர் மாதத்தில் இறுதி முடிவுகள் வெளியிடப்பட வேண்டும். இரண்டாம் தொகுதி பணிகளுக்கான அறிவிக்கை மார்ச் மாதம் வெளியிடப்பட்டு, மே மாதத்தில் முதல்நிலைத் தேர்வு, ஆகஸ்ட் மாதத்தில் முதன்மைத் தேர்வு நடத்தப்பட வேண்டும். ஒவ்வொரு ஆண்டும்  இரண்டு முறை தொகுதி 4 பணிகளுக்கான அறிவிக்கைகள் வெளியிடப்பட்டு, மார்ச், செப்டம்பர் மாதங்களில் தேர்வுகளை நடத்தி முறையே மே, நவம்பர் மாதங்களில் முடிவுகளை வெளியிட வேண்டும்.

பொறியியல் பணிகள், வேளாண் பணிகள், புள்ளியியல் பணிகள் உள்ளிட்ட முதல் 4 தொகுதிகளுக்குள் வராத பணிகளுக்கான அறிவிக்கைகள் ஆகஸ்ட் மாதத்தில் வெளியிடப்பட்டு, அடுத்த 5 மாதங்களில் தேர்வுகள் நடத்தி, முடிவுகளை வெளியிட வேண்டும். இதற்கேற்ற வகையில் தேர்வு நடைமுறையில் சீர்திருத்தங்களைச் செய்ய தமிழ்நாடு அரசுப் பணியாளர்  தேர்வாணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.