Skip to main content

காங்கிரசுக்கு நஷ்டமும் இல்லை... பாஜகவுக்கு லாபமும் ஏற்படப் போவதில்லை... கே.எஸ்.அழகிரி 

Published on 12/10/2020 | Edited on 12/10/2020
ddd

 

"குஷ்பு காங்கிரஸ் கட்சியை விட்டு விலகுவதனால் காங்கிரஸ் கட்சிக்கு எந்தவிதமான நஷ்டமும் இல்லை. அதேபோல, பா.ஜ.க.வில் சேருவதனால் எந்த லாபமும் அந்தக் கட்சிக்கு ஏற்படப் போவதில்லை" என்று தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி கூறியுள்ளார்.

 

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ''திருமதி. குஷ்பூ சுந்தர் பாரதிய ஜனதா கட்சியில் சேரப் போவதாகக் கடந்த சில நாட்களாக வதந்தி பரவியிருந்தன. இன்று அது உறுதி செய்யப்பட்டு சேரப் போகிறார் என்ற செய்தி வெளிவந்துள்ளது. 2014 மக்களவை தேர்தலுக்குப் பின்பு காங்கிரஸ் கட்சியில் சேர்ந்த திருமதி. குஷ்பூ அவர்களுக்கு தேசிய செய்தித் தொடர்பாளர் என்கிற மிக உயர்ந்த பொறுப்பு  தரப்பட்டு முக்கியத்துவம் வழங்கப்பட்டது. ஆனால், கடந்த சில மாதங்களாக அவரது கட்சி ஈடுபாடு மிக மிகக் குறைவாகவே இருந்தது. இந்நிலையில் அவரை நேரில் சந்தித்துப் பேசினேன். அப்போது, இனி நான் மிகுந்த ஈடுபாட்டோடு கட்சிப் பணியாற்றுவதாக உறுதி கூறினார். 

 

கடந்த செப்டம்பர் 24 ஆம் தேதி வேளாண் சட்டங்களை எதிர்த்து திரு. தினேஷ் குண்டுராவ்  பங்கேற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் திருமதி. குஷ்பூ அவர்களும் கலந்து கொண்டார். அதற்குப் பிறகு பெரம்பூரில் நடைபெற்ற தலித் பெண் பாலியல் வன்கொடுமையைக் கண்டித்து நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பா.ஜ.க.வை கடுமையாக விமர்சனம் செய்தார்.

 

kushboo

 

மேலும் கடந்த ஐந்து நாட்களுக்கு முன்பு தலைநகர் தில்லிக்கு பயணமான போது சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த திருமதி. குஷ்பூ, அகில இந்திய காங்கிரஸ் பொதுச்செயலாளர்  திரு. கே.சி. வேணுகோபால் அவர்களைச் சந்திக்கப் போவதாகக் கூறினார். மேலும், காங்கிரஸ் கட்சியில் தான் மகிழ்ச்சியாக இருப்பதாகவும், பா.ஜ.க.வில் சேரப் போவதாக அந்த கட்சியினர் ரூபாய் 2 வாங்கிக் கொண்டு சமூக ஊடகங்களில் அவதூறுகளைப் பரப்பி வருகின்றனர் என்றும் கடுமையாக விமர்சனம் செய்தார். பா.ஜ.க.வில் சேருவேன் என்ற பேச்சுக்கே இடமில்லை என மறுத்தார். ஐந்து நாட்களுக்கு முன்பு பா.ஜ.க.வை விமர்சனம் செய்த திருமதி. குஷ்பூ, ஆறாவது நாள் பா.ஜ.க.வில் சேருகிற முடிவை ஏன் எடுத்தார் என்பதை அவர்தான் விளக்க வேண்டும்.

 

Ad

 

திருமதி. குஷ்பூ சுந்தர் அவர்கள் பா.ஜ.க.வில் சேருவதற்கு அவரது கணவர் திரு. சுந்தர் சி. நிர்ப்பந்தம் காரணம் என்று கூறப்படுகிறது. காங்கிரஸ் கட்சியில் இருந்த திருமதி. குஷ்பூ மூளை சலவை செய்யப்பட்டு, இன்று அவர் ஏற்றுக் கொண்ட கொள்கைக்கு நேர் எதிரான கொள்கை கொண்ட பா.ஜ.க.வில் இணைய இருக்கிறார். இதன்மூலம் நீண்டகாலமாக அவர் ஏற்றுக் கொண்ட கொள்கையை பா.ஜ.க.விடம் அடகு வைத்திருக்கிறார். 

 

திருமதி. குஷ்பூ காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகியதால் எத்தகைய பாதிப்பும் ஏற்படப் போவதில்லை. இவரைப் பொறுத்தவரை காங்கிரஸ் கட்சியினர் மேடை அமைத்தால் அதில் பேசிவிட்டு விளம்பரம் பெறக் கூடியவர். காங்கிரஸ் கட்சியை வலிமைப்படுத்துகிற பணியில் பெரியளவில் ஈடுபாடு காட்டாதவர். அவர் கட்சியையை விட்டு விலகுவதனால் காங்கிரஸ் கட்சிக்கு எந்தவிதமான நஷ்டமும் இல்லை. அதேபோல, பா.ஜ.க.வில் சேருவதனால் எந்த லாபமும் அந்த கட்சிக்கு ஏற்படப் போவதில்லை. சில நாட்களுக்கு ஊடகங்களுக்கு குஷ்பூவால் தீனி போட முடியும். அதைத் தவிர எந்த வகையிலும், யாருக்கும் எந்தப் பயனும் தரப் போவதில்லை'' என்று கூறியுள்ளார். 


 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'பாஜக ஆட்சிக்கு வந்தால் தேர்தல் பத்திரம் கொண்டு வருவோம்'-நிர்மலா சீதாராமன் 

Published on 20/04/2024 | Edited on 20/04/2024
nn

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக நேற்று (19-04-24) தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிகளுக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் நேற்று (19-04-24) ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது.

தேர்தலுக்கு முன்னதாகவே தேர்தல் பத்திரம் தொடர்பான கருத்துக்கள் மற்றும் நீதிமன்றத்தின் உத்தரவுகள் இத்தேர்தலில் மிகப்பெரும் பேசு பொருளாக இருந்தது. உச்சநீதிமன்றத்தில் இது தொடர்பாக வழக்கு தொடுக்கப்பட்ட  நிலையில் பாஜக அரசு கொண்டு வந்த தேர்தல் பத்திரத் திட்டம் என்பது அரசியலமைப்புக்கு எதிரானது எனக் கருத்து தெரிவித்த உச்ச நீதிமன்றம், நன்கொடை வழங்கியோர், நன்கொடையைப் பெற்ற கட்சிகளின் விவரங்களை ஆணையத்திடம் வழங்க உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில் மீண்டும் தேர்தல் பத்திரங்களைக் கொண்டு வருவோம் என மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். பாஜக ஆட்சிக்கு வந்தால் மீண்டும் தேர்தல் பத்திரங்களைக் கொண்டு வருவது தொடர்பாக ஆலோசிப்போம். அனைவரும் ஏற்கத்தக்க வகையில் தேர்தல் பத்திரம் கொண்டு வருவதற்கான சாத்தியக் கூறுகளை ஆராய்வோம். தேர்தல் பத்திரம் வெளிப்படை தன்மையானது, கருப்பு பணத்தை ஒழிப்பதற்கானது என நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

Next Story

“பா.ஜ.கவை விட ஆபத்தானவர் நிதிஷ்குமார்” - மல்லிகார்ஜுன கார்கே

Published on 20/04/2024 | Edited on 20/04/2024
Mallikarjuna Kharge says Nitish Kumar is more like BJP

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக நேற்று (19-04-24) தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு நேற்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிகளுக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் நேற்று (19-04-24) ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில் பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று முடிந்தது. 

இதற்கிடையே, பீகாரில் மொத்தமுள்ள 40 தொகுதிகளுக்கு 7 கட்டமாக மக்களவைத் தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்தத் தேர்தலை எதிர்கொள்ள ராஷ்டிரிய ஜனதா தளம் தலைமையிலான காங்கிரஸ், சிபிஐ, சிபிஎம், சிபிஐ (எம்எல்) ஆகிய கட்சிகள் உள்ளன. அதே போல், ஐக்கிய ஜனதா தளம், பா.ஜ.க உள்ளிட்ட கட்சிகள் கூட்டணி அமைத்து தேர்தலை எதிர்கொள்கிறது.

இந்த நிலையில், நாட்டில் ஜனநாயகத்தை காப்பாற்ற தற்போது நடைபெற்று வரும் தேர்தல்கள் மிகவும் முக்கியமானவை என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார். மக்களவைத் தேர்தலை முன்னிட்டு, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பீகார் மாநிலத்தில் உள்ள கிஷன்கஞ்ச் மற்றும் கதிஹார் தொகுதிகளில் நேற்று (19-04-24) தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.

அப்போது அவர் பேசியதாவது, “மோடி சமீபகாலமாக அரசியல் சாசனத்தின் மீது மிகுந்த மரியாதையைக் காட்டி வருகிறார். அவர் சொல்வதையே அவர் கடைப்பிடிக்கிறார் என்றால், அரசியல் சாசனத்தை மாற்றுவோம் என பேசி வரும் பாஜக தலைவர்கள் எப்படி தப்பிக்க முடிகிறது? அவர்கள் மீது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை? நாட்டின் சுதந்திரப் போராட்டத்தில் எந்தப் பங்கையும் வகிக்காத ஆர்.எஸ்.எஸ் திட்டத்தை செயல்படுத்த பா.ஜ.க களமிறங்கியது. நாட்டில் ஜனநாயகம் மற்றும் அரசியல் சாசனத்தை காப்பாற்ற தற்போது நடைபெறும் தேர்தல்கள் முக்கியமானவை. நாம் தோல்வியுற்றால், நமது வருங்கால சந்ததியினர் பாதிக்கப்படுவார்கள்.

எங்கள் கூட்டணியில் போட்டியிடும் தேஜஸ்வி யாதவ், நிதிஷ்குமாரின் துரோகத்தை பலமுறை கூறி புலம்பியுள்ளார். நான் அதை ஒரு நல்ல அதிர்ஷ்டம் என்று சொல்கிறேன். பா.ஜ.க மற்றும் ஆர்.எஸ்.எஸ்ஸை விட நிதிஷ் குமார் போன்றவர்கள் ஆபத்தானவர்கள். நிதிஷ் குமாரிடம் கொள்கைகள் இல்லை. அவர் அதிகாரத்திற்காக மட்டுமே கவலைப்படுகிறார்” என்று கூறினார்.