Skip to main content

துரோகிகள் வெளியேறுவதால்...! குஷ்புவுக்கு தமிழக மகிளா காங். தலைவர் பதிலடி!

Published on 15/10/2020 | Edited on 15/10/2020

 

Sudha State President at TamilNadu Mahila Congress

 

துரோகிகள் வெளியேறுவதால் காங்கிரஸ் இயக்கம் நிச்சயம் வலிமை பெறும். குஷ்பு அவர்களே விமர்சனங்களை நிறுத்திக் கொள்ளுங்கள். விமர்சனங்கள் தொடர்ந்தால் உரிய பதிலடி கிடைக்கும் என்பதை எச்சரிக்கையாகக் கூற விரும்புகிறேன் எனத் தமிழ்நாடு மகிளா காங்கிரஸ் தலைவர் வழக்கறிஞர் ஆர். சுதா கூறியுள்ளார்.

 

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ''கட்சி மாறிய சந்தர்ப்பவாதத்தை நியாயப்படுத்த காங்கிரஸ் பேரியக்கம் மீது சேற்றை வாரி இறைக்க தொடங்கியிருக்கிறார் குஷ்பு. காங்கிரஸ் கட்சியின் உண்மை தொண்டர்களின் கேள்விகளுக்கு உங்களால் பதிலளிக்க முடியுமா?

 

காங்கிரசில் இணைந்தபோது என்னென்ன மரியாதை எல்லாம் தரப்பட்டது நினைவிருக்கிறதா? அகில இந்திய காங்கிரஸ் தலைவர் அன்னை சோனியா காந்தி, தலைவர் ராகுல்காந்தி முன்னிலையில் இணைந்தீர்கள். ஆனால், இன்று உங்கள் நிலைமை என்ன? இரண்டு நாட்களுக்கு முன்பு அத்தனை ஆரவாரத்தோடு பா.ஜ.க.வில் இணைய டெல்லி சென்ற உங்களை யார் வரவேற்றார்கள்? பத்தோடு பதினொன்றாக உங்களை இணைத்த கட்சிக்காகவா தொண்டர்களின் இயக்கமான காங்கிரசை பழிக்கிறீர்கள்?

 

தேசிய செய்தித் தொடர்பாளர் என்ற உயரிய பொறுப்பை காங்கிரஸ் உங்களுக்கு அளித்ததே? இப்போது குஷ்புவுக்கெல்லாம் பதவி கொடுக்க முடியாது என பா.ஜ.க.வினர் தொலைக்காட்சி விவாதங்களில் பேசுவது கேட்கிறதா குஷ்பு?

 

சிந்திக்க தெரியாத கட்சி என்று கூறியிருக்கிறீர்களே? ஆறு ஆண்டுகளாக உங்கள் மூளை எங்கிருந்தது என்று நான் கேட்டால் என்ன பதில் சொல்வீர்கள் ?


உழைப்பவர்களுக்கு பலன் கிடைப்பதில்லை என்கிறீர்களே? அடிமட்ட தொண்டர்களாக இருந்து இன்று காங்கிரஸ் சார்பாக சட்டமன்ற நாடாளுமன்றங்களை அலங்கரிக்கும் சகோதரிகள் ஜோதிமணி, விஜயதரணி, ரம்யா, ஹரிதாசை எல்லாம் உங்களுக்குத் தெரியாதா ?

 

பின் தங்கிய கிராமத்தில் மிகப் பிற்படுத்தப்பட்ட சமூகத்தில் பிறந்த நான் இளைஞர் காங்கிரஸ், மகளிர் காங்கிரஸ் எனப் படிப்படியாக உயர்ந்து இன்று மகளிரணி தலைவியாகி இருக்கிறேன். எல்லா காலகட்டத்திலும் எங்களைப் போன்றவர்களின் உழைப்பிற்கு காங்கிரஸ் கட்சி அங்கீகாரம் வழங்கியிருக்கிறதே தவிர ஒதுக்கியதில்லை, ஒடுக்கியதில்லை. ஆறு ஆண்டுகளில் காங்கிரஸ் உங்களுக்கு அளித்த அதீத வாய்ப்புகளுக்கான நன்றி கொஞ்சமாவது இருக்கிறதா ?


மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பெண் ஊராட்சி தலைவர்களிடம் கேளுங்கள். ராஜீவ் காந்தி கொண்டு வந்த சட்டத் திருத்தத்தால் பதவி கிடைத்ததை சொல்வார்கள். 100 நாள் வேலைவாய்ப்புத் திட்டத்தில் பயன்பெறும் பெண்களிடம் கேட்டால் காங்கிரஸ் கட்சியினால் பொருளாதாரம் சுதந்திரம் பெற்றதை சொல்வார்கள்.

 

kushboo

 

பெண்களுக்கான வாய்ப்பு குறித்து பேசுகிறீர்களே, பெண்களுக்கான 33 சதவிகித இட ஒதுக்கீட்டில் நீங்கள் இப்போது சேர்ந்திருக்கும் பா.ஜ.க. கட்சியின் நிலைப்பாடு என்ன?

 

Ad

 

பிரதமர் மோடிமீது கொண்ட நம்பிக்கையால் பா.ஜ.க.வில் சேர்ந்ததாக சொல்கிறீர்களே, அசுர பலத்துடன் ஆட்சியிலிருக்கும் பிரதமர் மோடி மகளிருக்கான 33 சதவிகித இட ஒதுக்கீட்டை சட்டமாக்க முன்வருவாரா? உங்களால் அதனை வலியுறுத்த முடியுமா ?


ஹத்ராஸ் விவகாரத்தில் மோடியைக் கடுமையாக விமர்சித்து விட்டு மனசாட்சிக்கு விரோதமாகவே பேசினேன் என்கிறீர்களே, உண்மையிலேயே உங்களுக்கு மனசாட்சி என்ற ஒன்று இருந்தால் அதனிடம் கேளுங்கள். உண்மை நிலையை அது உங்களுக்குச் சொல்லும்.

 

அழுத்தத்திற்கு உட்பட்டோ அல்லது எந்தப் பலனை எதிர்பார்த்தோ பா.ஜ.க.வில் நீங்கள் இணைந்திருக்கிறீர்கள், அது உங்கள் விருப்பம். அதற்காக தொண்டர்களால் கட்டி எழுப்பப்பட்ட காங்கிரசை களங்கப்படுத்த முயலவேண்டாம். மேகங்களால் வானை கறைப்படுத்த முடியாது. சில மேகங்கள் விலகும்போது வானம் இன்னும் அழகாகவே காட்சி தரும். துரோகிகள் வெளியேறுவதால் காங்கிரஸ் இயக்கம் நிச்சயம் வலிமை பெறும். குஷ்பு அவர்களே, ஆறு ஆண்டுகாலம் காங்கிரஸ் கட்சியில் இருந்தை மனசாட்சியோடு நினைவு கூர்ந்து விமர்சனங்களை நிறுத்திக் கொள்ளுங்கள். விமர்சனங்கள் தொடர்ந்தால் உரிய பதிலடி கிடைக்கும் என்பதை எச்சரிக்கையாகக் கூற விரும்புகிறேன். இவ்வாறு கூறியுள்ளார்.

 

 


 

சார்ந்த செய்திகள்

Next Story

பிரான்ஸ் வீரர்களுக்கு தற்காப்புக்கலைகளை கற்றுக்கொடுக்கும் தமிழக வீரர்கள்

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Tamil Nadu players teaching martial arts to French players

மாமல்லபுரத்தை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் சர்வதேச மஞ்சூரியா குங்ஃபூ தற்காப்புக் கலையின் சார்பில் இந்தோ பிரான்ஸ் தற்காப்புக் கலை சிறப்பு பயிற்சி முகாம் பிரான்ஸில் நடைபெற்று வருகிறது.

பிரான்ஸ் நாட்டின் ஃபெவ்ரி நகரில் மாஸ்டர் ஷி ஷிஃபூ மேத்யூ  தலைமையில் ஏப்ரல் 22 துவங்கி 28 வரை 7 நாட்கள் நடைபெற்று வரும் இந்தச் சிறப்பு பயிற்சி முகாமில் கல்பாக்கம் அணுபுரத்தைச் சேர்ந்த மாஸ்டர் சந்தோஷ், திண்டுக்கல் மாவட்டம் பழனி நாகூரைச் சேர்ந்த யோகா மாஸ்டர் பிரகாஷ் ஆகிய இருவரும், பிரான்ஸ் நாட்டு வீரர்களுக்கு  குங்ஃபூ தற்காப்புக் கலை, தெக்கன் களரி சிலம்பக்கலை, பதஞ்சலி ஹத யோகா, ஆகியவற்றை கற்பித்து வருகின்றார்கள். நேற்று யோகா குறித்து விளக்கம் அளித்து அதை செய்தும் காண்பித்துள்ளார்கள்.

Next Story

வாக்கு சதவீதத்தில் முரண்; அறிவிப்பை வெளியிட்ட தேர்தல் ஆணையம்

Published on 20/04/2024 | Edited on 20/04/2024
Discrepancy in vote percentage; Finally the Election Commission issued the notification

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக நேற்று (19-04-24) தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

இந்நிலையில், தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்றத் தொகுதிகளுக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்றத் தொகுதிக்கும் நேற்று (19-04-24) ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது.

இதனையடுத்து, தமிழகத்தில் பதிவான வாக்கு சதவீதங்கள் குறித்த தகவல் நேற்று மாலை 7 மணிக்கு வெளியாகியிருந்த நிலையில் அதனைத் தொடர்ந்து இரவு 12 மணிக்கு வேறொரு வாக்கு சதவீத தகவல் வெளியாகி இருந்தது. தற்பொழுது வரை இறுதி வாக்குப்பதிவு சதவீதம் குறித்த தகவல் உறுதியாக தெரிவிக்கப்படவில்லை.

இது தொடர்பாக மதியம் 12 மணிக்கு தலைமை தேர்தல் அதிகாரி செய்தியாளர்களைச் சந்திப்பார் என அறிவிக்கப்பட்டது. ஆனால் திடீரென அந்தச் சந்திப்பு ரத்து செய்யப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து மாலை 3 மணி,  5 மணி எனத் தள்ளிப் போடப்பட்ட செய்தியாளர்கள் சந்திப்பு தற்போது வரை நடக்காததால் பல்வேறு சந்தேகங்கள் எழுந்தது.

வாக்குப் பதிவுகள் முடிந்து 24 மணி நேரம் ஆன பிறகும் ஒட்டு மொத்த தேர்தல் வாக்குப்பதிவு சதவீதம் இன்னும் வெளியாகாதது சந்தேகத்தைக் கிளப்பிய நிலையில், தற்போது தமிழகத்தில் 69.46 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளதாக இந்திய தேர்தல் ஆணையம் அதிகாரபூர்வமாக வெளியிட்டுள்ளது. 

அறிவிப்பின்படி அதிகபட்சமாக தர்மபுரியில் 81.48 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளது. கள்ளக்குறிச்சி 79-25 சதவிகிதம்,  நாமக்கல் 78.16 சதவீதம், சேலம்-78.13 சதவீதம், திருவள்ளூர்-68.31 சதவீதம், வடசென்னை-60.13 சதவீதம், தென் சென்னை- 54.27  சதவீதம், மத்திய சென்னை-53.91 சதவீதம், ஸ்ரீபெரும்புதூர்-60.21 சதவீதம், காஞ்சிபுரம் -71.55 சதவீதம், அரக்கோணம்-74.08 சதவீதம், வேலூர்-73.42 சதவீதம், கிருஷ்ணகிரி-71.31 சதவீதம், திருவண்ணாமலை-73.88 சதவீதம், ஆரணி-75.65 சதவீதம், விழுப்புரம்-76 47 சதவீதம், ஈரோடு-70.54 சதவீதம், திருப்பூர்-70.58 சதவீதம், நீலகிரி-70.93 சதவீதம், கோவை-64.81 சதவீதம், பொள்ளாச்சி-70.70 சதவீதம், திண்டுக்கல்-70.99 சதவீதம், கரூர்- 78.61 சதவீதம், திருச்சி-67.45 சதவீதம், பெரம்பலூர்-77.37 சதவீதம், கடலூர்-72.28 சதவீதம், சிதம்பரம்-75.32 சதவீதம், மயிலாடுதுறை-70.06 சதவீதம், நாகை-71.55 சதவீதம், தஞ்சை-68.18 சதவீதம், மதுரை-61.92 சதவீதம், சிவகங்கை-63.94 சதவீதம், தேனி-69.87 சதவீதம், விருதுநகர்-70.17 சதவீதம், ராமநாதபுரம்-68.18 சதவீதம், தூத்துக்குடி-59.96 சதவீதம், தென்காசி-67.55 சதவீதம், திருநெல்வேலி-64.10 சதவீதம், கன்னியாகுமரி-65.46 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளது என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

 

அதேபோல் எந்தத் தொகுதியிலும் மறு வாக்குப் பதிவு இல்லை எனவும், தனிப்பட்ட தரவுகள் வர இருப்பதால் இது  இறுதியானது இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.