Skip to main content

பெண் ஆசிரியர்கள், மாணவிகளுக்கு பாலியல் தொல்லை... சக ஆசிரியர் மீது பரபரப்புப் புகார்; சி.இ.ஓ. விசாரணை!

Published on 26/06/2020 | Edited on 26/06/2020

 

gggg

 

கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகே உள்ள அந்தேவனப்பள்ளியில் அரசு உயர்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. 

 

இப்பள்ளியில் வினோத்குமார் என்பவர் பட்டதாரி ஆசிரியராக பணியாற்றி வருகிறார். அவர், உடன் பணியாற்றி வரும் பெண் ஆசிரியர்கள் மற்றும் அப்பள்ளி மாணவிகளிடம் பாலியல் ரீதியில் ஆபாசமாக பேசுவதாகவும், சிலரிடம் தவறாக நடக்க முயற்சி செய்ததாகவும் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலருக்கு மொட்டை பெட்டிஷன்கள் சென்றன. 

 

ஆனாலும், இந்தப் புகார் மனுக்கள் மீது அதிகாரிகள் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காமல் இருந்தனர். இதற்கிடையே, வினோத்குமாரால் பாதிக்கப்பட்ட பெண் ஆசிரியர் ஒருவர், கடந்த மார்ச் 24ஆம் தேதி, தேன்கனிக்கோட்டை மாவட்டக் கல்வி அலுவலருக்கு நேரடியாக எழுத்து மூலமாக புகார் அளித்திருந்தார். மார்ச் 24ஆம் தேதி மாலை முதல் கரோனா ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதால், பள்ளிகள் மூடப்பட்டன. அத்துடன் இந்தப் புகாரும் கிடப்பில் போடப்பட்டது.

 

இப்போது பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு உள்ள நிலையில், மதிப்பெண் பட்டியல் தயார் செய்யும் பணிகளுக்காக ஆசிரியர்கள் அனைவரும் பள்ளிப் பணிக்குத் திரும்பினர். ஆசிரியர் வினோத்குமார் மீண்டும் சில பெண் ஆசிரியர்களிடம் பாலியல் ரீதியில் பேசியதாகச் சொல்லப்படுகிறது. 

 

இதுகுறித்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் முருகனிடம் புகார் அளிக்கப்பட்டது. இதையடுத்து, ஆசிரியர் வினோத்குமார் மீது கூறப்பட்ட புகார்கள் குறித்து விசாரித்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு மாவட்டக் கல்வி அலுவலர் ஜோதி சந்திராவுக்கு, முதன்மைக் கல்வி அலுவலர் உத்தரவிட்டார். 

 

இந்நிலையில், இரு நாள்களுக்கு முன்பு பள்ளியில் பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் அங்கமுத்து தலைமையில் கூட்டம் நடந்தது. அக்கூட்டத்தில் பங்கேற்ற அந்தேவனப்பள்ளி ஊராட்சிமன்றத் தலைவர் அரவிந்த், பாலியல் தொல்லை கொடுக்கும் ஆசிரியர் வினோத்குமார் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என பகிரங்கமாகக் கூறினார். அதற்குப் பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் அங்கமுத்து, பள்ளி நிர்வாகத்தில் ஊராட்சிமன்றத் தலைவர் தலையிட உரிமை இல்லை எனக்கூறி அவரை வெளியே செல்லும்படி கூறினார். இதனால் அக்கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டது. 

 

இது ஒருபுறம் இருக்க, கூட்டத்திற்கு வந்திருந்த பெற்றோர்களும், ஆசிரியர் வினோத்குமார் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியதோடு, பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவரையும் பதவியை விட்டு நீக்க வேண்டும் என்றும் கூறி, திடீரென்று பள்ளி முன்பு தரையில் அமர்ந்து போராட்டம் நடத்தினர்.

 

இதுகுறித்து தகவல் அறிந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் முருகன், பெற்றோர் ஆசிரியர் கழகக் கூட்டத்தில் நடந்த விவாதம் குறித்தும், ஆசிரியர் வினோத்குமார் மீதான புகார் குறித்தும் அப்பள்ளியின் தலைமை ஆசிரியர் சுகந்தி மற்றும் எட்டாம் வகுப்பு ஆசிரியர்களிடமும் நேரடியாக விசாரணை நடத்தினார். 

 

இச்சம்பவம் கிருஷ்ணகிரி மாவட்ட பள்ளிக்கல்வித்துறையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

ஆசிரியர் நடத்திய கொடூர சோதனை; அவமானம் தாங்காமல் மாணவி எடுத்த விபரீத முடிவு!

Published on 19/03/2024 | Edited on 19/03/2024
A cruel experiment conducted by the teacher to student in karnataka

கர்நாடகா மாநிலம், பாகல்கோட்டை பகுதியில் அரசு பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் 8ஆம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவர், பள்ளியில் இருந்து கடந்த 16ஆம் தேதி வீடு திரும்பினார். வீடு திரும்பிய அவர், வீட்டில் உள்ளவர்கள் யாரிடமும் பேசாமல் சோகமாக இருந்ததாகக் கூறப்படுகிறது. இதனையடுத்து, வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில், மாணவி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இதனை தொடர்ந்து, வெளியே சென்ற மாணவியின் பெற்றோர், வீட்டுக்கு வந்து பார்த்த போது, தங்களது மகள் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளதை பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பாகல்கோட்டை போலீசார், மாணவியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். 

அவர்கள் நடத்திய அந்த விசாரணையில், மாணவி படித்த பள்ளியில் ஆங்கில ஆசிரியராக ஜெயஸ்ரீ என்பவர் பணியாற்றி வந்துள்ளார். இந்நிலையில், ஜெயஸ்ரீ வைத்திருந்த பையில் இருந்த ரூ.2,000 பணத்தை காணவில்லை எனக் கூறப்படுகிறது. இதில் சந்தேகமடைந்த ஆசிரியர், 8ஆம் வகுப்பு படிக்கும் அந்த மாணவியை அழைத்து கேட்டுள்ளார். ஆனால், அந்த மாணவி, தான் அந்த பணத்தை எடுக்கவில்லை என்று கூறியுள்ளார். மாணவி உறுதியாக கூறியும் சந்தேகம் அடங்காத ஜெயஸ்ரீ, சக மாணவிகள் முன்னிலையில் மாணவியின் ஆடைகளை களைந்து சோதனை செய்துள்ளார்.

இதில், மன உளைச்சல் அடைந்த மாணவி, பள்ளி முடிந்ததும் மாலை வீடு திரும்பியுள்ளார். மேலும், அவர் சோகம் தாங்காமல் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார் என்பது தெரியவந்தது. இதனையடுத்து, ஆங்கில ஆசிரியர் ஜெயஸ்ரீ மீது வழக்குப்பதிவு செய்து, போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம், அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Next Story

ரூ.112 கோடி மதிப்புள்ள போதைப்பொருள்; இறால் பண்ணையை தரைமட்டமாக்கிய அதிகாரிகள்!

Published on 16/03/2024 | Edited on 16/03/2024
Officials razed the shrimp farm where cannabis were stashed near   Mimisal

புதுக்கோட்டை மாவட்டம் மீமிசல் அருகே வெளிவயல் கிராமத்தில் உப்பளம் நடத்த அரசு நிலத்தை குத்தகைக்கு பெற்று அந்த நிலத்தில் பலர் சட்டவிரோதமாக இறால் பண்ணை நடத்தி வருகின்றனர். இதற்காக தவறான முகவரிகள் கொடுத்து மின்சாரம் பெற்று நடத்தி இருக்கின்றனர். இது போல உப்பளம் நடத்த அனுமதி பெற்ற ஒரு இறால் பண்ணையில் தான் கடந்த சில நாட்களுக்கு முன்பு கஸ்டம்ஸ் அதிகாரிகள் திடீர் ஆய்வு செய்து ரூ.112 கோடி மதிப்புள்ள கஞ்சா ஆயில் லேகியம் மற்றும் 874 கிலோ கஞ்சா மூட்டைகளைக் கைப்பற்றி அதே இடத்தில் இருந்த சாராய ஊறலையும் அழித்து, கைப்பற்றப்பட்ட போதைப் பொருள்களை சரக்கு வாகனத்தில் அள்ளிச் சென்றனர்.

இது சம்பந்தமாக 3 பேரைக் கைது செய்து விசாரணை செய்து வரும் நிலையில், இந்த கடத்தலில் மேலும் பல பெரும்புள்ளிகள் சிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. மேலும் கைப்பற்றப்பட்ட கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருள்களை புதன் கிழமை புதுக்கோட்டை நீதிமன்றத்தில் ஒப்படைத்தனர்.

Officials razed the shrimp farm where cannabis were stashed near   Mimisal

இந்த நிலையில் வியாழக்கிழமை(14.3.2024) ஆவுடையார்கோயில் வட்டாட்சியர் மார்டின் லூதர் கிங், மீன்வளத்துறை உதவி இயக்குநர் பஞ்சராஜா, சாதிக் பாட்சா, கனகராஜ் ஆகியோர் சட்டவிரோதமாக செயல்படும் இறால் பண்ணைகளை மூடி, ஆக்கிரமிப்புகளை அகற்றும் நடவடிக்கையில் ஈடுபட்டனர். அப்போது ரூ.112 கோடி மதிப்புள்ள கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருள்களை பதுக்கி வைத்திருந்த இறால் பண்ணை கொட்டகையை பொக்லின் இயந்திரம் மூலம் உடைத்து தரைமட்டமாக்கினர். மேலும் இறால் பண்ணை கரைகள் உடைக்கப்பட்டது.

தொடர்ந்து அப்பகுதியில் சட்டவிரோதமாக செயல்படும் இறால் பண்ணை ஆக்கிரமிப்புகளை அகற்ற முயன்ற போது பண்ணை குட்டைகளில் இறால் குஞ்சுகள் விட்டிருப்பதால் 2 மாதம் அவகாசம் வேண்டும் என்று அதிகாரிகளிடம் பேசி அவகாசம் பெற்றுள்ளனர். பரபரப்பான சூழ்நிலையில் கோட்டைப்பட்டினம் டி.எஸ்.பி கௌதமன் தலைமையிலான ஏராளமான போலீசார் பாதுகாப்பு செய்திருந்தனர்.

Officials razed the shrimp farm where cannabis were stashed near   Mimisal

அப்பகுதி பொது மக்கள் கூறும் போது.. கஞ்சா போன்ற போதைப் பொருட்கள் பதுக்கி வைத்திருந்த இறால் பண்ணைக்குட்டை பற்றி உள்ளூர் அதிகாரிகளுக்கு தெரிந்தே கண்டுகொள்ளாமல் இருந்துள்ளனர். இப்போது அந்தக் கொட்டகை அடையாளமாக இருக்கக்கூடாது என்பதற்காக இடித்து தரைமட்டமாக்கிவிட்டனர். இது போன்ற இடங்களுக்கு ஆலங்குடியில் இருந்து ஒரு பெண் காவல் அதிகாரி அடிக்கடி வந்து செல்வார். அவருக்கு தெரியாமலா இது நடந்திருக்கும் என்று கேள்வி எழுப்புகின்றனர். மேலும் கடந்த சில மாதம் முன்பு கோட்டைப்பட்டினம் அருகே ஒரு பேக்கரி உணவு தயாரிப்பு கூடத்தில் கஞ்சா கைப்பற்றினார்கள் அந்த கூடத்தை உடைத்தார்களா என்ன? என்ற கேள்வியும் எழுகிறது. அதே நேரம் தற்போது கஞ்சா கைப்பற்றிய இறால் பண்ணை குட்டையில் வேறு எங்கும் போதைப் பொருள் புதைத்து வைத்திருப்பார்களோ என்ற சந்தேகத்தில் தான் உடைத்து தரைமட்டமாக்கி பார்த்திருக்கிறார்கள் என்கின்றனர்.

போதைப் பொருட்கள் பதுக்கி வைத்திருந்த இறால் பண்ணை கொட்டகை மற்றும் சட்ட விரோத இறால் பண்ணையை அதிகாரிகள் உடைத்து தரை மட்டமாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.