மகாராஷ்டிரா மாநிலத்தில் கடந்த ஒருவாரமாக நடைபெற்று வரும் விவசாயிகளின் மாபெரும் பேரணியைத் தொடர்ந்து, பேச்சுவார்த்தை நடத்த மகாராஷ்டிர மாநில அரசு முன்வந்துள்ளது.
மகாராஷ்டிரா மாநிலம் நாசிக் மாவட்டத்தில் இருந்து கடந்த செவ்வாய்க்கிழமை அகில இந்திய கிசான் மகாசபை என்ற இடதுசாரி விவசாய அமைப்பின் சார்பில் நூறு விவசாயிகள், அம்மாநில சட்டமன்றத்தை நோக்கி பேரணி மேற்கொண்டனர். இந்தப் பேரணி தொடங்கி ஒருவாரம் ஆகியுள்ள நிலையில், ஒவ்வொரு நாளும் விவசாயிகளின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே சென்றது. தற்போதைய நிலவரப்படி இந்தப் பேரணியில் முப்பதாயிரத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்துகொண்டுள்ளனர்.
இவர்கள் தற்போது ஆசாத் மைதானத்தில் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கிட்டத்தட்ட ஒருவார காலமாக சுமார் 200 கிமீ தூரத்தை விவசாயக்கடன் தள்ளுபடி, குறைந்தபட்ச ஆதார விலை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து நடந்தே கடந்துள்ளனர் பல்லாயிரக்கணக்கான விவசாயிகள். இந்தப் பேரணியால் நெருக்கடியைச் சந்தித்துள்ள மகாராஷ்டிர அரசு, விவசாயிகளின் கோரிக்கைகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்த ஆறு பேர் கொண்ட குழுவை நியமித்துள்ளது.
இன்று மதியம் 1 மணி முதல்விவசாயிகள் சார்பில் 12 பேர், அரசு தரப்பின் ஆறு பேர் கொண்ட குழுவைச் சந்தித்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர். முன்னதாக, அம்மாநில முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் ‘இந்தப் பேரணியில் 95% பேர் விவசாயிகளே இல்லை. பலர் பழங்குடியின மக்கள்’ எனக்கூறியிருந்தது விவசாயிகள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.
தற்போது பேச்சுவார்த்தையை எட்டியிருக்கும் விவசாயிகளின் கோரிக்கை, வெற்றியை நிச்சயம் அடைந்திடும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.