Skip to main content

மக்களுக்கு இரண்டாம் ஆண்டு பரிசு! - கேரள அரசு அறிவித்த சலுகை

Published on 30/05/2018 | Edited on 31/05/2018

பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் ரூ.1 ஐக் குறைக்க முடிவு செய்துள்ளதாக கேரள அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. 

 

Pinarayi

 

 

 

நாட்டின் அத்தியாவசிய பிரச்சனையாக பெட்ரோல், டீசல் விலை உயர்வு மாறியிருக்கிறது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை ஏற்ற, இறக்கங்களைப் பொருத்து எண்ணெய் நிறுவனங்களே எரிவாயு விலையை நிர்ணயிக்கலாம் என இந்திய அரசு அறிவித்ததில் இருந்து, தொடர்ந்து ஒவ்வொரு நாளும் பெட்ரோல், டீசல் விலை உச்சத்தை எட்டியிருக்கிறது. 

 

அதேபோல், கர்நாடக சட்டமன்றத் தேர்தலின் போது மாற்றமில்லாத நிலையில் இருந்த பெட்ரோல், டீசல் விலை, தேர்தல் நிறைவடைந்து தொடர்ந்து 17ஆவது நாளாக ஏறுமுகத்தைச் சந்தித்திருக்கிறது. இது ஒருபுறமிருக்க, கேரளாவில் பினராயி விஜயன் தலைமையிலான இடதுசாரி அரசு ஆட்சிமைத்து இரண்டு ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், கேரள மக்களுக்கு புதிய பரிசு ஒன்றைத் தருவதாக கேரள அரசு அறிவித்துள்ளது. அதன்படி, பெட்ரோல், டீசல் விலையில் ரூ.1 குறையும். இது வரும் ஜூன் 1ஆம் தேதி முதல் அம்மாநிலம் முழுவதும் நடைமுறைக்கு வரும்.

 

இதுகுறித்து, கேரள மாநில நிதியமைச்சர் தாமஸ் ஐசக் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘கேரள மக்களுக்கு இடதுசாரி அரசின் இரண்டாம் ஆண்டு பரிசு: கேரளாவில் பெட்ரோலுக்கு 1.69 சதவீதமும், டீசலுக்கு 1.75 சதவீதமும் விற்பனை வரியைக் குறைத்து, அதன்மூலம் அவற்றின் மொத்த விலையில் ரூ.1 குறைக்க திட்டமிட்டுள்ளோம். இதன்மூலம் ஆண்டொன்றுக்கு ரூ.500 கோடி வரை மாநில அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படும். இனி பிரதமர் மோடி வரிமாற்றத்தை திரும்பப்பெறுவாரா?’ என பதிவிட்டுள்ளார்.

 

 

சமீபத்தில் ஸ்டேட் பேங்க் வெளியிட்ட அறிக்கையில், மாநில அரசுகள் பெட்ரோல், டீசல் மீதான வருவாயை இழப்பதன் மூலம் அவற்றின் விலையைக் குறைக்கமுடியும் என குறிப்பிட்டிருந்தது.

 

சார்ந்த செய்திகள்

Next Story

“ராகுல், நேரு குடும்பத்தில் பிறந்தவர் தானா?” - கேரள எம்.எல்.ஏ பரபரப்பு பேச்சு

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Kerala MLA sensational speech on Rahul was born in the Nehru family?

நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்.19 ஆம் தேதி தொடங்கி, வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெறவுள்ளது. அதில் பதிவாகும் வாக்கு எண்ணிக்கையானது ஜூன் 4ஆம் தேதி நடைபெற்று அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கின்றன. இதனிடையே, முதற்கட்டமாக தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த ஏப்.19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது.

அதே வேளையில், மொத்தம் 20 மக்களவைத் தொகுதிகள் கொண்ட கேரளா மாநிலத்தில், இரண்டாம் கட்டமாக வருகிற ஏப்ரல் 26ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறவிருக்கிறது. இங்கு நடைபெறும் தேர்தலை எதிர்கொள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, காங்கிரஸ், பா.ஜ.க ஆகிய கட்சிகள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. இதற்கான தேர்தல் பிரச்சாரம் இன்று (23-04-24) மாலையுடன் நிறைவு பெற்றது.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும், காங்கிரஸ் கட்சியும் தேசிய அளவில் இந்தியா கூட்டணியில் ஒருசேர இருந்தாலும், கேரளாவைப் பொறுத்தவரை இந்த இரு கட்சிகளும் தனித்தே போட்டியிடுகின்றன. அதே வேளையில், இந்த இரு கட்சி தலைவர்களும் மாறி மாறி விமர்சனம் செய்து வருகின்றனர். இது இந்தியா கூட்டணியில் குழப்பம் ஏற்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

அந்த வகையில், கேரளாவில் தேர்தல் பிரச்சாரத்தில் கலந்து கொண்ட காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி பேசும் போது, “பினராயி விஜயனுக்கு எதிராக பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகள் உள்ள போது, மத்திய விசாரணை அமைப்புகள் அவரை ஏன் விட்டு வைத்திருக்கிறது?” என்று கூறி கேரள முதல்வர் பினராயி விஜயனை கடுமையாக சாடினார்.

இந்த நிலையில், பினராயி விஜயன் இருக்கும் இடதுசாரி ஜனநாயக முன்னணி கூட்டணியின் எம்.எல்.ஏ. பி.வி அன்வர், ராகுல் காந்தியைக் கடுமையாக சாடியுள்ளார். அதில் அவர், “காந்தி பெயரை பயன்படுத்த ராகுலுக்கு உரிமை இல்லை. அவர் நான்காம் தர குடிமகன் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார். அவர் நேரு குடும்பத்தில் பிறந்தவரா? எனக்கு சந்தேகம் உள்ளது. அவரது டி.என்.ஏ ஆய்வு செய்யப்பட வேண்டும்” என்று பரபரப்பு கருத்தை கூறியுள்ளார்.

Next Story

‘தி கேரளா ஸ்டோரி’ பட விவகாரம்; முதல்வர் பினராயி விஜயன் கடும் கண்டனம்!

Published on 05/04/2024 | Edited on 05/04/2024
The Kerala Story film issue Chief Minister Pinarayi Vijayan strongly condemned

விபுல் அம்ருத்லால் ஷா தயாரிப்பில் சுதிப்தோ சென் இயக்கத்தில் அதா சர்மா, சித்தி இட்னானி உள்ளிட்ட பலர் நடிப்பில் கடந்த ஆண்டு மே 5 ஆம் தேதி வெளியான இந்தி படம் தி கேரளா ஸ்டோரி. இப்படத்தின் டீசர் வெளியானது முதலே மத வெறுப்பைத் தூண்டும் வகையில் இப்படம் இருப்பதாக சர்ச்சையானது. தமிழகத்தில் இந்த படத்திற்கு தொடர் எதிர்ப்பு அதிகரிக்க, மல்டிப்ளெக்ஸ் திரையரங்கங்கள் தானாக முன்வந்து தி கேரளா ஸ்டோரி படத்தை திரையிடமாட்டோம் என அறிவித்தன.

அதே சமயம் மேற்கு வங்கத்திலும் இப்படத்திற்குத் தடை விதித்து அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி உத்தரவிட்டிருந்தார். இருப்பினும் பல எதிர்ப்புகளுக்கு மத்தியில் போலீஸ் பாதுகாப்புடன் தமிழ்நாடு, கேரளா மற்றும் மேற்கு வங்கத்தில் இப்படம் வெளியானது. கலவையான விமர்சனமே பெற்றாலும் உலகம் முழுவதும் ரூ.300 கோடிக்கு மேல் வசூலித்ததாகக் கூறப்பட்டது. இத்தகைய சூழலில் தூர்தர்ஷனில் இன்று (05.04.2024) இரவு 8 மணிக்கு ‘தி கேரளா ஸ்டோரி’ திரைப்படம் ஒளிபரப்பாகிறது.

இந்நிலையில், தூர்தர்ஷன் தொலைக்காட்சியில் தி கேரளா ஸ்டோரி திரைப்படத்தை ஒளிபரப்புவதற்கு கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து பினராயி விஜயன் தெரிவிக்கையில் “அரசு தொலைக்காட்சிகள் பா.ஜ.க. - ஆர்.எஸ்.எஸ் கூட்டணியின் பிரச்சார இயந்திரமாக  ஒரு போதும் மாறக்கூடாது. வெறுப்பை விதைக்கும் இத்தகைய தீங்கிழைக்கும் முயற்சிகளை கேரளா ஒருபோதும் அனுமதிக்காது” எனத் தெரிவித்துள்ளார். தி கேரளா ஸ்டோரி ஒளிப்பரப்புவதற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்தியா கூட்டணி சார்பில் தேர்தல் ஆணையத்தில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.