Karur incident - Supreme Court verdict date released Photograph: (tvk)
கரூர் வேலுச்சாமிபுரத்தில் தவெக தலைவர் விஜய்யின் பிரச்சாரத்தின் போது கூட்ட நெரிசல் ஏற்பட்டு 41 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் சோகத்தையும், அதிர்வலையையும் ஏற்படுத்தியது.
கரூர் கூட்ட நெரிசல் தொடர்பான சிறப்பு புலானாய்வு குழு (SIT) விசாரணைக்கு எதிரான மனுக்கள், சிபிஐ விசாரணை கோரிய மனுக்கள் மீதான விசாரணை உள்ளிட்ட 5 வழக்குகளில் விசாரணையானது உச்சநீதிமன்றத்தில் நீதிபதிகள் ஜே.கே. மகேஸ்வரி மற்றும் என்.வி. அஞ்சாரியா ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று (10.10.2024) நடைபெற்றது.
இதில் தமிழக அரசு சார்பில் அபிஷேக் மனு சிங்வி, முகுல் ரோத்தகி, வில்சன், ரவீந்தரன் என 4 வழக்கறிஞர்கள் ஆஜராகினர். அதே சமயம் விஜய் சார்பாக தாமா சேஷாத்ரி, கோபால் சங்கர் நாராயணன் ஆகியோர் ஆஜராகினர். அதன்படி த.வெ.க. தரப்பில் வாதிடுகையில், “கரூர் சம்பவத்தில் விசாரணை நடத்தப்படுவதை நாங்கள் எதிர்க்கவில்லை. உச்ச நீதிமன்றமே சிறப்புப் புலனாய்வுக் குழு (SIT) அமைத்து விசாரணை நடக்கட்டும். அதனை முன்னாள் நீதிபதி மேற்பார்வையிடட்டும் தமிழ்நாடு காவல்துறையின் சிறப்பு விசாரணைக்குழுவை நாங்கள் ஏற்கவில்லை. கரூர் கூட்ட நெரிசல் வழக்கில் எதிர் மனுதாரராக இல்லாத விஜய்யை உயர்நீதிமன்ற விசாரணை நீதிபதி விமர்சித்துள்ளார். விஜய் குறித்து பல்வேறு கருத்துகளை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
எங்கள் தரப்பின் விளக்கமே கேட்காமல் உயர்நீதிமன்றம் கருத்துகளை முன்வைத்துள்ளது. சம்பவம் நடந்ததும் கரூரில் இருந்து விஜய் மறைந்துவிட்டதாக நீதிமன்றத்தில் கூறப்பட்டுள்ளது. ஆனால் போலீசாரின் கட்டாயத்திலேயே விஜய் வெளியேறினார். அதாவது காவல்துறையின் பாதுகாப்புடன் தான் விஜய் கரூரில் இருந்து வெளியேறினார். பரப்புரை பேருந்தின் அருகே நிறைய வாகனங்கள் வந்தபோது, ஒரு வாகனத்தில் மோதியுள்ளது” எனத் தெரிவிக்கப்பட்டது.
அப்போது நீதிபதிகள்,“வழிகாட்டு நெறிமுறைகளை விசாரிக்கும் வழக்கு என்றால் இதனை உயர்நீதிமன்ற கிளையே விசாரித்திருக்கலாமே?. இந்த வழக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளையின் விசாரணையின் வரம்பிற்கு உட்பட்டது. சென்னை உயர் நீதிமன்றம் ஏன் விசாரணைக்கு எடுத்தது என விளக்கம் கொடுங்கள்” எனத் தெரிவித்தனர்.
தொடர்ந்து வாதத்தை வைத்த தவெக தரப்பு வழக்கறிஞர்கள் 'ஒரே நாள் இரவில் 30 பேர் உடலுக்கு நான்கு மணி நேரத்தில் உடற்கூறாய்வு செய்வதற்கான பணிகளை தொடங்கி விட்டார்கள். அதிகாலை நான்கு மணிக்கு எல்லாம் உடல்கள் எரிக்கப்பட்டுள்ளன. 30 உடல்களுக்கு உடற்கூறு செய்ய திடீரென மருத்துவர்கள் எங்கிருந்து வந்தார்கள் என்ற கேள்வியை தவெக தரப்பு வைத்தது. அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள் 'இந்த கேள்வி அனாவசியமானது. மாவட்ட நிர்வாகத்தின் அனுமதி பெற்றால் தேவைப்படக்கூடிய அசாதாரண செயலின் போது உடற்கூறாய்வுகளை இரவு நேரத்தில் செய்து கொள்ளலாம் என்ற சட்டங்கள் இருக்கிறது. அதனால் அது தேவையற்ற சந்தேகம்' என உச்சநீதிமன்ற நீதிபதிகளே தவெகே தரப்பின் சந்தேகத்திற்கு விளக்கம் அளித்தனர். அதேபோல் போலீசார் ஒருவருக்கு கூட காயம் ஏற்படவில்லை என்ற தவெக தரப்பு வாதத்தை கேட்டு நீதிபதிகள் சிரித்தனர்.
அதேபோல் தமிழக அரசு தரப்பில் வைக்கப்பட்ட வாதத்தில் 'பிரச்சாரக் கூட்டத்திற்கு பத்தாயிரம் பேர் தான் வருவார்கள் என தவெக தரப்பு கூறியது. மாவட்ட ஆட்சியர் அனுமதியுடன் விரைவில் உடற்கூறாய்வு நடைபெற்றது. விஜய் வருவதற்கு முன்னரே கூட்டத்தில் காத்திருந்த பலர் உணவு, தண்ணீர் என்று மயங்கி விட்டனர்' என தெரிவித்தது. காலை முதல் காரசார விவாதம் நிகழ்ந்த நிலையில் உணவு இடைவேளைக்கு பிறகும் விசாரணை நடைபெற்றது.
அனைத்து வாதங்களையும் கேட்டுக் கொண்ட நீதிபதிகள் விரிவான பிராமணப்பத்திரம் தாக்கல் செய்த பிறகு அதனை ஆய்வு செய்த பின்னர் உத்தரவு பிறப்பிக்கப்படும் என தெரிவித்து தேதி குறிப்பிடாமல் வழக்கை ஒத்தி வைத்திருந்தனர்.
இந்நிலையில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கும் இந்த வழக்கில் வரும் திங்கட்கிழமை (13/10/2025) உச்ச நீதிமன்றம் தீர்ப்பளிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. சிறப்பு புலனாய்வுக் குழு விசாரணையே தொடர உச்சநீதிமன்றம் உத்தரவிடுமா அல்லது சிபிஐக்கு இந்த வழக்கு மாற்றப்படுமா?, சென்னை உயர் நீதிமன்றம் விஜய் மீது வைத்த விமர்சனம் குறித்து உச்சநீதிமன்றம் என்ன தெரிவிக்க உள்ளது என பல எதிர்பார்ப்புகள் எழுந்துள்ளது.