Skip to main content

பணம் கொடுத்தால் உடனே போஸ்டிங்! எஸ்.பி.யிடம் சிக்கிய போலி ஆபிஸர்ஸ்!

Published on 01/06/2020 | Edited on 01/06/2020


அரசு வேலைக்குப் பணம் கொடுத்து ஏமாந்ததாக அவ்வப்போது செய்திகள் வரும். இருந்தும் பொதுமக்களிடையே விழிப்புணர்வு இல்லை. இன்னமும் குறுக்கு வழியில் வேலை வாங்கிட வேண்டும் நினைப்பவர்கள் இருக்கிறார்கள் என்பது இந்தச் செய்தியின் மூலம் தெரியவந்திருக்கிறது.
 


ராமநாதபுரத்தைச் சேர்ந்த டெய்சி, தனது உறவினருக்கு அரசுப் பணிக்காக ஜார்ஜ் பிலிப் என்பவரை அணுகி உள்ளார். டி.என்.பி.எஸ்.சி.யில் தனது நண்பர் வேலை பார்ப்பதாக அளந்துவிட்ட ஜார்ஜ் பிலிப், ஒரு வேலைக்கு ரூ. 5 லட்சம் என 3 பேருக்காக மொத்தம் ரூ.15 லட்சம் வாங்கியிருக்கிறார். ஆனால், சொன்னபடி வேலையும் வாங்கித் தரவில்லை, பணத்தையும் திரும்ப தரவில்லை. டெய்சி தொடர்பு கொண்டு பேசும்போது, “நான் வாங்கிய பணத்தைச் சென்னையைச் சேர்ந்த நாவப்பன் என்பவரிடம் கொடுத்துவிட்டேன். இனி என்னை தொடர்பு கொண்டால் நடப்பதே வேறு” என்று மிரட்டலாகவும் பேசி இருக்கிறார்.

தாம் ஏமாற்றப்பட்டோம் என்பதை லேட்டாக உணர்ந்த டெய்சி, இதுகுறித்து ராமநாதபுரம் எஸ்.பி. வருண்குமாரிடம் புகார் அளித்தார். இதையடுத்து, அவரது உத்தரவின்பேரில் தனிப்படை போலீஸார் விசாரணை நடத்தி ஜார்ஜ் பிலிப்பையும், நாவப்பனையும் கைது செய்திருக்கின்றனர். இருவரும் தங்களை அதிகாரிகள் என்று கூறி பலரிடம் பணம் வசூலித்து மோசடி செய்திருக்கின்றனர். அவர்களிடம் இருந்து அரசு முத்திரையிட்ட போலியான சிபாரிசு கடிதங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.
 


இந்த நாவப்பன் ஏற்கனவே இதேபோன்று மோசடி புகாரில் சிக்கி சிறைக்குச் சென்றவன். வெளியே வந்த பிறகும் ஆட்டத்தை அறங்கேற்றி இருக்கிறான். ஏமாறுகிறவன் இருக்கிற வரை ஏமாற்றுபவன் இருக்கத்தான் செய்வான்!
 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

''குசும்ப பாருங்க... வாட்ஸ் அப்பில் இப்படியெல்லாம் பரப்புகிறார்கள்''-ஓபிஎஸ் ஆதங்கம்

Published on 12/04/2024 | Edited on 12/04/2024
They are spreading all this on WhatsApp" - OPS

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அதே சமயம் தமிழக அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரங்களை தொடங்கியுள்ளன.

இந்நிலையில் பரப்புரையில் ஈடுபட்ட ஓ.பன்னீர்செல்வம் தன்னுடைய சின்னத்தை திராட்சை கொத்து என பலர் வாட்ஸ் அப்பில் தவறாக பரப்புவதாக குற்றச்சாட்டையும், ஆதங்கத்தையும் வெளிப்படுத்தியுள்ளார்.

ராமநாதபுரத்தில் திறந்தவெளி வேனில் பிரச்சாரம் மேற்கொண்ட ஓ.பன்னீர்செல்வம் பேசுகையில், ''நான் சுயேட்சை வேட்பாளராக போட்டியிடுகிறேன். சுயேட்சை வேட்பாளராக போட்டியிடுபவர்கள் மூன்று சின்னங்களைக் குறிப்பிட வேண்டும். நான் மூன்று சின்னங்களைக் குறிப்பிட்டு கொடுத்திருந்தேன். இப்பொழுது நிறைய பன்னீர்செல்வங்கள் வந்து விட்டார்கள். என்னுடன் சேர்த்து ஆறு பன்னீர்செல்வம். மற்ற ஐந்து பேரும் நான் என்னென்ன சின்னம் எழுதிக் கொடுத்தேனோ அதே சின்னத்தை எழுதி கொடுத்திருக்கிறார்கள். ஒரு குழப்ப சூழ்நிலையை உருவாக்க வேண்டும் என்று அப்படி செய்துள்ளார்கள். இப்பொழுது என்ன செய்திருக்கிறார்கள் என்றால், குசும்பு பாருங்க, ஓபிஎஸ் சின்னம் வாளி என வாட்ஸ் அப்பில் போட்டுக் கொண்டிருக்கிறார்கள். ஓபிஎஸ் சின்னம் திராட்சை கொத்து என வாட்ஸ் அப்பில் பரப்புகிறார்கள்.

நான் எழுதிக் கொடுத்த மூன்று சின்னங்களையும் ஓபிஎஸ் சின்னம் ஓபிஎஸ் சின்னம் என்று செல்லில் இன்று பறக்கவிட்டு வருகிறார்கள். இது எவ்வளவு கீழ்த்தரமான அரசியல். ஒரு சின்னத்தை இரண்டு வேட்பாளர்கள் கேட்டால் குலுக்கள் முறையில் கொடுப்பார்கள். சின்னம் ஒதுக்குவது குறித்து நேரம் காலம் ஒதுக்கப்பட்டது. உங்களுடைய வாழ்த்துக்களால், ஆசிர்வாதத்தால் நீங்கள் தந்த வரத்தினால் முக்கனிகளில் ஒன்றான பலாப்பழம் சின்னம் கிடைத்துள்ளது. அது உங்களால் தான் கிடைத்தது. உங்கள் ஆசியால் எனக்கு இந்தச் சின்னம் கிடைத்தது''என்றார்.

Next Story

தனுஷ்கோடிக்கு செல்ல சுற்றுலாப் பயணிகளுக்குத் தடை!

Published on 01/04/2024 | Edited on 01/04/2024
Ban for tourists to go to Dhanushkodi

தனுஷ்கோடிக்கு செல்ல சுற்றுலாப் பயணிகளுக்குத் தடை விதித்து ராமநாதபுரம் மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள தனுஷ்கோடி தமிழகத்தின் முக்கியத்துவம் வாய்ந்த சுற்றுலாத் தலமாக விளங்கி வருகிறது. இந்நிலையில் தனுஷ்கோடி பகுதியில் நேற்று (31.03.2024) மாலை 6 மணியளவில் தனுஷ்கோடி 3வது சட்டம் முதல் அரிச்சல்முனை வரை உள்ள தெற்கு மன்னார் வளைகுடா பகுதியில் 6 மீட்டர் முதல் 10 மீட்டர் வரை கடல் சீற்றத்துடன் காணப்பட்டது. அதன் தொடர்ச்சியாக ராட்சத அலைகளும் எழுந்துள்ளன.

இதன் காரணமாக தேவலயாம், சாலையோரங்களில் உள்ள கடைகளிலும் கடல் நீர் உட்புகுந்தன. கடல் ஓரங்களில் வைக்கப்பட்டிருந்த லட்சக்கணக்கான மதிப்பிலான மீன் பிடி வலைகள் மணலில் புதைந்து சேதமடைந்துள்ளன. எனவே முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக தனுஷ்கோடிக்கு செல்ல சுற்றுலாப் பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. தனுஷ்கோடியில் தற்போது சூறைக்காற்றுடன் 5 அடி உயரம் வரை கடல் அலைகள் எழுவதால் மறு உத்தரவு வரும் வரை சுற்றுலாப் பயணிகள் தனுஷ்கோடி கடலுக்குச் செல்ல தடை விதித்து ராமநாதபுரம் மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.