Skip to main content

வருமானவரித் துறைக்கு எதிரான வழக்கு! கார்த்தி சிதம்பரத்துக்கு அதிர்ச்சி கொடுத்த சென்னை உயர்நீதிமன்றம்!

Published on 12/05/2020 | Edited on 12/05/2020

 

Karti Chidambaram


காங்கிரசின் மூத்த தலைவர் ப.சிதம்பரத்தின் மகனும் சிவகங்கை தொகுதி எம்.பி.யுமான கார்த்தி சிதம்பரம், அவரது வருமானத்தை மறைத்ததாக  வருமான வரித்துறை தொடர்ந்த வழக்கை ரத்து செய்யக்கோரி கார்த்தி சிதம்பரமும் அவரது மனைவி ஸ்ரீநிதியும் தாக்கல் செய்திருந்த மனுக்களைத் தள்ளுபடி செய்து தீர்ப்பளித்துள்ளது சென்னை உயர் நீதிமன்றம். 
 

சென்னை முட்டுக்காட்டிலுள்ள தங்களுக்குச் சொந்தமான சொத்துகளைக் கடந்த 2015 ஆம் ஆண்டு 'அக்னி எஸ்டேட்ஸ் பவுண்டேஷன்' என்ற நிறுவனத்துக்கு கார்த்தியும் அவரது குடும்பத்தினரும் விற்பனை செய்தனர். 
 

இதன்  மூலம் பெற்ற 7 கோடியே 73 லட்சம் ரூபாயை வருமான வரிக் கணக்கில் காட்டாமல் மறைத்ததாகக் குற்றம்சாட்டப்பட்டு கார்த்தி சிதம்பரம், ஸ்ரீநிதி மீது வருமான வரித்துறை 2018- இல் வழக்குத் தொடர்ந்தது.  
 

சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் அந்த வழக்கு நடைபெற்று வந்த நிலையில், 2019- இல் நடந்த நாடாளுமன்ற தேர்தலில் சிவகங்கையிலிருந்து எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்டார். இதனால், அவர் மீதான வழக்கு, எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டு விசாரணை நடந்து வந்தது. 


இந்த வழக்கிலிருந்து தங்களை விடுவிக்கக் கோரியும், சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றிய உத்தரவை ரத்து செய்யக்கோரியும் சென்னை உயர் நீதிமன்றத்தில் கார்த்தியிம் அவரது மனைவியும் வழக்குத் தொடர்ந்தனர். 
 

இந்த வழக்கினை விசாரித்த உயர் நீதிமன்ற நீதிபதி எம்.சுந்தர். விசாரணையின் போது, ''மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் நடைபெறும் ஒரு வழக்கை மாற்றும் போது கடைப்பிடிக்க வேண்டிய சட்ட நடைமுறைகள் பின்பற்றப்படவில்லை. குறிப்பாக, மாஜிஸ்திரேட் வழக்கை மற்றொரு மாஜிஸ்திரேட் நீதிமன்றத்திற்குத்தான்   மாற்ற வேண்டும். அதற்குமாறாக, செசன்ஸ் நீதிமன்றத்திற்கு மாற்றியது சட்ட விதிகளுக்கு எதிரானது. குற்றச்சாட்டு கூறப்பட்ட ஆண்டுகளில், வருமான வரி மதிப்பீடு மற்றும் மறு மதிப்பீடுகள் அனைத்தும் முடிக்கப்பட்ட நிலையில், இந்த வழக்கை வருமானவரித்துறை பதிவு செய்ததே தவறானது'' என்று கார்த்தி தரப்பில் வாதிடப்பட்டது.

இதனை எதிர்த்து வாதிட்ட வருமான வரித்துறை வழக்கறிஞர்கள், " இவர்களின் வருமானவரி  கணக்குகளின் மதிப்பீடு முடிந்தாலும், அதை மறுமதிப்பீடு செய்யத் வருமானவரித் துறைக்கு அதிகாரம் உள்ளது. வழக்கு மாற்றப்பட்டதில் சட்டவிதிகள் மீறப்படவில்லை. அதனால் சிறப்பு நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு பதிவு செய்ய அனுமதிக்க வேண்டும். இவர்களது மனுக்களையும் தள்ளுபடி செய்ய வேண்டும் " என வாதிட்டனர். 
 

இதனையடுத்து வழக்கின் தீர்ப்பைத் தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்திருந்தார் நீதிபதி சுந்தர். 

இந்த நிலையில், வருமானவரித் துறைக்கு எதிராக கார்த்தியும் அவரது மனைவியும் தொடர்ந்திருந்த அந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கிய நீதிபதி சுந்தர், வருமான வரித்துறை வாதங்களை ஏற்று கார்த்தி சிதம்பரம் தரப்பின் இரு மனுக்களையும் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். இந்தத் தீர்ப்பு ப.சிதம்பரம் தரப்பில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


 

சார்ந்த செய்திகள்

Next Story

“ஓ.பி.எஸ். இரட்டை இலையைப் பயன்படுத்தத் தடை தொடரும்” - உயர்நீதிமன்றம்

Published on 25/03/2024 | Edited on 25/03/2024
ban on using OPS aiadmk symbol will continue says Madras High Court

அ.தி.மு.க.வில் ஒற்றைத் தலைமை பிரச்சனை பூதாகரமாகி ஓ.பி.எஸ். மற்றும் இ.பி.எஸ். ஆகிய இருவரும் நீதிமன்றத்திலும் தேர்தல் ஆணையத்திலும் முறையிட்ட நிலையில், எடப்பாடி பழனிசாமியை அ.தி.மு.க.வின் பொதுச் செயலாளராகத் தேர்தல் ஆணையம் கடந்த ஆண்டு ஏப்ரல் 20 ஆம் தேதி (20.04.2023) அங்கீகரித்தது. இதன் மூலம் இரட்டை இலை சின்னம் எடப்பாடி பழனிசாமி வசம் என்பது உறுதியானது. அதே சமயம் அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் தொடர்ந்து அ.தி.மு.க.வின் கொடிகள், பெயர், லெட்டர் பேடு, சின்னங்களைப் பயன்படுத்தி வந்தார். இதனால் அ.தி.மு.க. தொண்டர்கள் மத்தியில் குழப்பம் ஏற்படுகிறது. எனவே அ.தி.மு.க.வின் கொடிகள், பெயர், லெட்டர் பேடு, சின்னங்களை ஓ. பன்னீர்செல்வம் பயன்படுத்த தடை விதிக்கக் கோரி எடப்பாடி பழனிசாமி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி சதீஷ்குமார், ‘எத்தனை முறைதான் ஒரே ஒரு விவகாரத்திற்காக நீதிமன்றத்தின் கதவை தட்டுகிறீர்கள்’ என ஓ.பி.எஸ். தரப்புக்கு கண்டனம் தெரிவித்ததோடு, அ.தி.மு.க.வின் கொடி, சின்னம், லெட்டர் பேட் ஆகியவற்றை ஓ.பி.எஸ். பயன்படுத்த இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டிருந்தார். இதனைத் தொடர்ந்து சென்னை உயர்நீதிமன்றத்தின் தனி நீதிபதி அளித்த இந்த இடைக்காலத் தடையை எதிர்த்து ஓ. பன்னீர்செல்வம் தரப்பு மேல்முறையீடு செய்தது.

இந்த மேல்முறையீட்டு வழக்கு பல கட்ட விசாரணைக்குப் பிறகு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி சதீஷ்குமார் கடந்த 18 ஆம் தேதி, “அ.தி.மு.க. இரட்டை இலை சின்னம், கொடி ஆகியவற்றை ஓ. பன்னீர்செல்வம் பயன்படுத்த நிரந்தர தடை விதிக்கப்படுகிறது” என அதிரடி தீர்ப்பை வழங்கி இருந்தார். இதனை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. மேலும் அந்த மனுவில், ஒருங்கிணைப்பாளர், துணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் காலாவதியானதா இல்லையா என்ற வழக்கு நிலுவையில் உள்ளதால்,  அந்த வழக்கின் தீர்ப்பு வரும் வரை தனக்கு கட்சியின் இரட்டை இலை, சின்னத்தையும் கொடியையும் பயன்படுத்த அனுமதியளிக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.

இந்த நிலையில் இந்த வழக்கு விசாரணையின் போது, “அதிமுகவின் பெயர், கொடி, சின்னம், லெட்டர் பேட் ஆகியவற்றை பயன்படுத்த ஓ.பி.எஸ்க்கு தடை விதிக்கப்பட்டது தொடர்பாக இடைக்கால உத்தரவு எதுவும் பிறப்பிக்க முடியாது; ஓ.பி.எஸ். இரட்டை இலை, கட்சியின் பெயர் ஆகியவற்றை பயன்படுத்த விதிக்கப்பட்டிருந்த தடை தொடரும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் இந்த மேல்மூறையீடு தொடர்பாக எடப்பாடி பழனிசாமி பதிலளிக்க உத்தரவிட்டதோடு, இது தொடர்பாக ஓ.பி.எஸ் தேர்தல் ஆணையத்தை அணுகத் தடையில்லை என்றும் கூறியுள்ளது. இந்த வழக்கின் இறுதி விசாரணை ஜூன் 10 ஆம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

Next Story

இரட்டை இலை சின்னம் வழக்கு; சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

Published on 18/03/2024 | Edited on 18/03/2024
Madras High Court action decision on double leaf symbol case

அ.தி.மு.க.வில் ஒற்றைத் தலைமை பிரச்சனை பூதாகரமாகி ஓ.பி.எஸ். மற்றும் இ.பி.எஸ். ஆகிய இருவரும் நீதிமன்றத்திலும் தேர்தல் ஆணையத்திலும் முறையிட்ட நிலையில், எடப்பாடி பழனிசாமியை அ.தி.மு.க.வின் பொதுச்செயலாளராகத் தேர்தல் ஆணையம் கடந்த ஆண்டு ஏப்ரல் 20 ஆம் தேதி (20.04.2023) அங்கீகரித்தது. இதன் மூலம் இரட்டை இலை சின்னம் எடப்பாடி பழனிசாமி வசம் என்பது உறுதியானது. 

அதே சமயம் அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் தொடர்ந்து அ.தி.மு.க.வின் கொடிகள், பெயர், லெட்டர் பேடு, சின்னங்களைப் பயன்படுத்தி வந்தார். இதனால் அ.தி.மு.க. தொண்டர்கள் மத்தியில் குழப்பம் ஏற்படுகிறது. எனவே அ.தி.மு.க.வின் கொடிகள், பெயர், லெட்டர் பேடு, சின்னங்களை ஓ. பன்னீர்செல்வம் பயன்படுத்த தடை விதிக்கக் கோரி எடப்பாடி பழனிசாமி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி சதீஷ்குமார், ‘எத்தனை முறைதான் ஒரே ஒரு விவகாரத்திற்காக நீதிமன்றத்தின் கதவை தட்டுகிறீர்கள்’ என ஓ.பி.எஸ். தரப்புக்கு கண்டனம் தெரிவித்ததோடு, அ.தி.மு.க.வின் கொடி, சின்னம், லெட்டர் பேட் ஆகியவற்றை ஓ.பி.எஸ். பயன்படுத்த இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டிருந்தார். இதனைத் தொடர்ந்து சென்னை உயர்நீதிமன்றத்தின் தனி நீதிபதி அளித்த இந்த இடைக்காலத் தடையை எதிர்த்து ஓ. பன்னீர்செல்வம் தரப்பு மேல்முறையீடு செய்தது. இந்த மேல்முறையீட்டு வழக்கு நீதிபதிகள் ஆர். மகாதேவன், முகமது ஷஃபிக் அமர்வு முன்பு விசாரணை நடைபெற்று வந்தது. 

அப்போது ஓ. பன்னீர்செல்வம் தரப்பில், “பொதுக்குழு தொடர்பான பிரதான சிவில் வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. எனவே எந்த தடையும் விதிக்கக் கூடாது” என வாதிடப்பட்டது. இதனையடுத்து ஓ.பி.எஸ். தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவைத் தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. அதில், அ.தி.மு.க. கொடி, பெயர், சின்னம், லெட்டர் பேட் உள்ளிட்டவற்றை ஓ. பன்னீர்செல்வம் பயன்படுத்த தடை விதித்தது செல்லும் எனவும், தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை உறுதி செய்து உயர்நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கி இருந்தது. மேலும் சம்பந்தப்பட்ட நீதிபதியை அணுகி நிவாரணம் பெற ஓ. பன்னீர்செல்வத்திற்கு நீதிபதிகள் அறிவுறுத்தி இருந்தனர்.

அதனைத் தொடர்ந்து இந்த வழக்கு நீதிபதி சதீஷ்குமார் முன்பு கடந்த 4 ஆம் தேதி (04.03.2024) மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது எடப்பாடி பழனிசாமி தரப்பில் மூத்த வழக்கறிஞர் விஜய நாராயணன் ஆஜராகி வாதிடுகையில், “அ.தி.மு.க.வில் உறுப்பினராக இல்லாத ஓ.பன்னீர்செல்வம் எக்ஸ் சமூக வலைத்தளத்தில் இன்னமும் தன்னை அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் எனக் குறிப்பிட்டுள்ளார். அ.தி.மு.க.வில் ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் என்ற பதவியே கிடையாது. அ.தி.மு.க.வின் அடிப்படை உறுப்பினராக கூட இல்லாத ஒருவர் இன்னமும் தன்னை ஒருங்கிணைப்பாளராக கூறி வருகிறார். நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் நெருங்கும் நிலையில், கட்சிக்கு சம்பந்தம் இல்லாத ஒருவர் கட்சி நடவடிக்கையில் தலையிடுவது தொண்டர்கள் மத்தியில் தேவையற்ற குழப்பத்தை ஏற்படுத்தும்” எனத் தெரிவித்திருந்தார். இவ்வாறு எடப்பாடி பழனிசாமியின் தரப்பு வாதம் நிறைவடைந்தது.

இந்த நிலையில், இந்த விவகாரம் குறித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று (18-03-24) விசாரணைக்கு வந்தது. அப்போது, உயர்நீதிமன்ற நீதிபதி சதீஷ்குமார், ‘அதிமுக இரட்டை இலை சின்னம், கொடியை பயன்படுத்த ஓ.பன்னீர்செல்வம் பயன்படுத்த நிரந்தர தடை விதித்து அதிரடி தீர்ப்பளித்தார். இரட்டை இலை சின்னம், கொடி, லெட்டர் பேட் ஆகியவற்றை ஓ.பன்னீர்செல்வம் பயன்படுத்த ஏற்கனவே இடைக்கால தடை விதித்திருந்த நிலையில், தற்போது நிரந்தர தடை விதித்திருப்பது ஓ.பி.எஸ் ஆதரவாளர்களிடம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.