Skip to main content

"பாஜக வெற்றி பெற்றால்..!"  ஐ-பேக் பிரசாந்த் கிஷோர் சவால்! 

Published on 04/03/2021 | Edited on 04/03/2021
ddd

 

இந்திய அளவில் அரசியல் கட்சிகளுக்கு ஆலோசகராக இருந்து, அவர்களின் கட்சியைத் தேர்தலில் வெற்றிபெற வைக்கும் வியூக வகுப்பாளராக அறியப்பட்டவர் பிரசாந்த் கிஷோர். இதற்காக, ஐ-பேக் என்கிற நிறுவனத்தை நடத்தி வருகிறார். 

 

தமிழகத்தில் திமுகவை வெற்றிபெற வைப்பதற்காக பிரசாந்த் கிஷோரின் ஐ-பேக் நிறுவனத்திடம், ஒரு வருடத்திற்கு முன்பு ஒப்பந்தம் போட்டுக்கொண்டது திமுக தலைமை! சுமார் 350 கோடி ரூபாய் திட்ட மதிப்பில் போடப்பட்ட ஒப்பந்தம் அது என்பது எல்லோரும் அறிந்த சங்கதிதான்.   

 

திமுகவுடன் போடப்பட்ட ஒப்பந்தத்தை அடுத்து, மேற்கு வங்கத்தின் முதல்வர் மம்தா பானர்ஜியுடனும் ஒப்பந்தம் போட்டுக்கொண்டார் பிரசாந்த் கிஷோர். “மம்தாவின் கட்சியான திரிணாமுல் காங்கிரஸை மீண்டும் ஆட்சி அரியணையில் அமர்த்துவேன்; பாஜகவை வீழ்த்துவதே என் வேலை” என்கிற சபதத்துடன் அந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார் பிரசாந்த். கடந்த 1 வருடமாக திரிணாமுல் காங்கிரசுக்கான வியூகத்தை வகுத்து தேர்தல் பணிகளில் கவனம் செலுத்தி வருகிறார். 

 

இவரது வியூகத்தை உடைத்து, மேற்கு வங்கத்தில் ஆட்சியைக் கைப்பற்ற அனைத்து வியூகங்களையும் செய்து வருகிறது பாஜக தலைமை! பாஜகவின் வெற்றிக்காக மத்திய அமைச்சர் அமித்ஷாவின் நேரடி கட்டுப்பாட்டில், மேற்கு வங்க தேர்தல் பணிகளை ஒப்படைத்திருக்கிறார் பிரதமர் மோடி. இதனால் மேற்கு வங்கத்தில் ஒவ்வொரு நாளும் பதற்றம் அதிகரித்தபடியே இருக்கிறது. 

 

இந்த நிலையில், தனியார் தொலைக்காட்சி ஒன்றிற்குப் பேட்டியளித்துள்ள பிரசாந்த் கிஷோர், “மேற்கு வங்கத் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி 100 இடங்களுக்கு மேல் வெற்றி பெற்றால், என் தொழிலையே விட்டுவிடுகிறேன். ஐ-பேக் நிறுவனத்திலிருந்தும் வெளியேறி விடுகிறேன்” என சவால் விட்டுப் பேசியுள்ள அவர், “திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் பிற கட்சிகளிலிருந்து ஆட்களை இழுத்து, அவர்களைப் பாஜகவில் சேர்த்துக்கொள்வதும், அவர்களுக்கு ஆசை வார்த்தைகளைச் சொல்லி வலை விரிப்பதும்தான் பாஜக தலைவர்களின் தேர்தல் யுக்தியாக இருக்கிறது. பணத்திற்காகவும் பதவிக்காகவும்தான் சொந்தக் கட்சியிலிருந்து பலர் வெளியேறுகிறார்கள். இதனால் திரிணாமுல் காங்கிரசுக்கு எந்தப் பாதிப்பும் இல்லை. 

 

மேற்கு வங்கத்தில் பாஜக ஆட்சியைப் பிடிப்பது எல்லாம் நடக்காத காரியம். முதலில் அவர்கள் 100 இடங்களில் வெற்றி பெறுவார்களா என பார்ப்போம். அப்படி நடந்தால் என் தொழிலை நான் விட்டுவிடுகிறேன்” என்று சத்தியம் அடிக்காத குறையாக சவால் விடுத்துள்ளார் ஐ-பேக் பிரசாந்த் கிஷோர். இவருடைய பேட்டி, பாஜகவில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது என்கின்றன வடக்கே இருந்து கிடைக்கும் தகவல்கள்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

நிதிஷ்குமாரின் முடிவு; பிரசாந்த் கிஷோரின் கணிப்பு - பரபரப்பான தேர்தல் களம்

Published on 30/01/2024 | Edited on 30/01/2024
 Prashant Kishor Prediction on Nitish Kumar Politics

பீகார் மாநிலத்தில் கடந்த 2020 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் பாஜகவுடன் ஐக்கிய ஜனதா தளம் கட்சி கூட்டணி அமைத்து நிதிஷ் குமார் தலைமையில் ஆட்சி அமைந்தது. ஆனால் அதன்பிறகு ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பாஜகவுடன் கூட்டணியை முறித்த நிதிஷ்குமார், ஐக்கிய ஜனதா தளம், ராஷ்ட்ரீய ஜனதா தளம், காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் உள்ளடங்கிய மகா கூட்டணியை அமைத்து மீண்டும் நிதிஷ்குமார் முதல்வராகப் பதவி வகித்து வந்தார். துணை முதல்வராக தேஜஸ்வி யாதவ் பதவி வகித்து வந்தார்.

இந்த நிலையில்தான் கடந்த 28 ஆம் தேதி நிதிஷ் குமார் தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்து, மகா கூட்டணியில் இருந்து விலகுவதாக அறிவித்தார். பின்னர் அன்று மாலையே பாஜகவுடன் கூட்டணி அமைத்து மீண்டும் பீகார் மாநிலத்தின் முதல்வராக பதவியேற்றுக் கொண்டார். அவருடன் சேர்த்து பாஜகவை சேர்ந்த சாம்ராட் சௌதிரி, விஜய் சின்ஹா இருவரும் துணை முதல்வராக பதவியேற்றுக் கொண்டார்கள். 

இதனிடையே பாஜகவை வீழ்த்துவதற்காக நாட்டில் உள்ள எதிர்க்கட்சிகளை ஒன்றிணைத்து இந்தியா என்ற கூட்டணியை உருவாக்கினார் நிதிஷ்குமார். இந்தியா கூட்டணி தொடர்ந்து ஆலோசனைக் கூட்டம் நடத்தி தொகுதிப் பங்கீடு உள்ளிட்டவைகளை பற்றி ஆலோசித்து வரும் நிலையில், நிதிஷ்குமார் தற்போது அதில் இருந்து பாஜக தலைமையில் என்.டி.ஏ கூட்டணியில் இணைந்திருப்பது தேர்தல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

இந்த நிலையில் நிதிஷ்குமாரின் முடிவு குறித்து தேர்தல் வீயூக நிபுணர் பிரசாந்த் கிஷோர், “2025 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள சட்டப்பேரவை தேர்தல் வரைகூட இந்த புதிய கூட்டணி நீடிக்காது. இதனை நான் உங்களுக்கு எழுதி தருகிறேன். நாடாளுமன்றத் தேர்தல் முடிந்த 6 மாதங்களில் இந்தக் கூட்டணியில் மீண்டும் மாற்றம் நடக்கும். இதனைக் குறித்து வைத்துக்கொள்ளுங்கள். என்னுடைய கணிப்புப்படி சட்டமன்ற தேர்தலில் நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளத்தால் 20 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெறமுடியாது. அப்படி வெற்றிபெற்றுவிட்டால், நான் இதிலிருந்து ஓய்வு பெறுகிறேன்” எனத் தெரிவித்துள்ளார். 

Next Story

இந்தியா கூட்டணியில் நிதிஷ்க்கு என்ன இடம்? - பிரசாந்த் கிஷோர் கேள்வி 

Published on 29/08/2023 | Edited on 29/08/2023

 

Prashanth Kishore Questioned Which place has  Nitish's place in India alliance?

 

அடுத்தாண்டு நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் ஆளும் பாஜகவை வீழ்த்த இந்திய அளவில் காங்கிரஸ், திமுக, ஆம் ஆத்மி, ஜனதா தளம் உள்ளிட்ட 26 எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து செயல்பட்டு வருகின்றனர். ‘இந்தியா’ (INDIA) எனப் பெயரிடப்பட்டுள்ள எதிர்க்கட்சிகளின் கூட்டணி பாட்னா, பெங்களூரூ என மாநிலத்தின் அடுத்தடுத்த இடங்களில் பொதுக்கூட்டங்களை நடத்தித் தங்களது ஆதரவைப் பெருக்கி வருகிறது. ஆனால் ‘இந்தியா’ கூட்டணியைப் பிரதமர் மோடியும், பாஜகவும் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். 

 

இந்த நிலையில், பீகார் ஊடகங்கள் மட்டுமே பீகார் முதல்வரான நிதிஷ்குமாரைப் பற்றி பேசி வருகின்றன என்று அரசியல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர் தெரிவித்துள்ளார். இது குறித்து பேசிய அவர், “பீகார் மாநிலத்தின் முதல்வரான நிதிஷ்குமாரின் சொந்த மாநிலமே மிகவும் கவலைக்கிடமாக இருக்கிறது. எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்த இந்தியா கூட்டணியின் மிகப்பெரிய கட்சிகள் வரிசையில் முதலில் காங்கிரஸ் கட்சி இருக்கிறது. அதற்கு அடுத்ததாக திரிணாமுல் காங்கிரஸ் கட்சி அதனை தொடர்ந்து திமுக இருக்கிறது. அவர்கள் எல்லாம், அவர்கள் ஆளும் மாநிலங்களில் 20 முதல் 25 நாடாளுமன்ற உறுப்பினர்களை வைத்துள்ளார்கள். அவர்கள் தங்கள் மாநிலத்தை வெற்றி பெற செய்யலாம்.

 

Prashanth Kishore Questioned Which place has  Nitish's place in India alliance?

 

ஆனால், நிதிஷ்குமாரின் சொந்த மாநிலமான பீகாரில், அவர் கால் ஊன்றுவதற்கு எந்தவித உத்தரவாதமும் இல்லை. அவருக்கு கட்சியோ அல்லது இமேஜோ இல்லை. பீகார் மாநிலத்தில் உள்ள ஊடகங்கள் மட்டும் தான் அவரைப் பற்றி பேசி வருகின்றன. அவர் மற்ற மாநிலத்துக்கு சென்றால் அவரைப் பற்றி யாரும் பேசப் போவதில்லை” என்று கூறினார்.