Holiday announcement for Perambalur district schools

வடகிழக்கு பருவமழை காரணமாகத் தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே அறிவித்திருந்தது. அதன்படி வடகிழக்கு பருவமழை கடந்த அக்டோபர் மாதம் 21 ஆம் தேதி (21.10.2023) தொடங்கியதிலிருந்து தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது.

அந்தவகையில் சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டிருந்த அறிவிப்பில், ‘கடலூர், அரியலூர், பெரம்பலூர், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, திருச்சி, இராமநாதபுரம், சிவகங்கை, கன்னியாகுமரி, திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி ஆகிய 12 மாவட்டங்களில் இன்று (09.01.2024) காலை 10 மணிக்குள் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது’ எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் தொடர் மழை காரணமாக பள்ளி மாணவர்களின் நலன் கருதி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று (09.01.2024) ஒரு நாள் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் கற்பகம் உத்தரவிட்டுள்ளார். முன்னதாக கனமழை காரணமாக காரைக்காலில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.