Skip to main content

‘அமலாக்கத்துறை பதிவு செய்த வழக்கு ரத்து’ - உயர்நீதிமன்றம் அதிரடி!

Published on 05/04/2024 | Edited on 05/04/2024
High Court takes action for Cancellation of the case filed by the ed 

சென்னையில் பிரபல தனியார் கட்டுமான நிறுவனமான ஓஷன் லைஃப் ஸ்பேஷஸ் என்ற நிறுவனத்தை எஸ்.பி. பீட்டர் மற்றும் ஸ்ரீராம் ஆகியோர் இணைந்து தொடங்கி நடத்தி வந்தனர். அதன் பின்னர் தொழிலில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்தனர். இத்தகைய சூழலில் நிறுவனத்தில் இருந்து தனக்கு சேர வேண்டிய பங்கை எஸ்.பி. பீட்டர் தர மறுப்பதாக கூறி ஸ்ரீராம் சென்னை காவல் ஆணையரகத்தில் புகார் அளித்திருந்தார். இதன் அடிப்படையில் எஸ்.பி. பீட்டர் மீது மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்திருந்தனர்.

இதற்கிடையே இந்த விவகாரத்தில் சுமார் 50 கோடி ரூபாய் அளவிற்கு சட்டவிரோத பணப்பரிமாற்றம் நடந்துள்ளதா என எஸ்.பி. பீட்டரின் வீடு மற்றும் அலுவலகத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி இருந்தனர். அதனை தொடர்ந்து சுமார் ரூ. 50 கோடி வரை பணப்பரிமாற்றம் நடந்துள்ளதாக கூறி வழக்குப்பதிவு செய்திருந்தனர். மேலும் உரிய ஆவணங்களுடன் ஆஜராகுமாறு எஸ்.பி. பீட்டருக்கு அமலாக்கத்துறை சார்பில் சம்மன் அனுப்பபட்டிருந்தது. இதனை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் எஸ்.பி. பீட்டர் சார்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில், “இருவருக்கும் இடையேயான தொழில் பிரச்சனையில் தலையிட்டு அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்தது தவறு. அமலாக்கத்துறை சோதனையின் போது கைப்பற்றப்பட்ட ஆவணங்களை திருப்பித் தர அமலாக்கத்துறைக்கு உத்தரவிட வேண்டும்” என கோரிக்கை வைத்திருந்தனர்.

High Court takes action for Cancellation of the case filed by the ed 

இந்நிலையில், இந்த வழக்கு நீதிபதிகள் எம்.எஸ். ரமேஷ், சுந்தரமோகன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு இன்று (05.04.2024) விசாரணைக்கு வந்தது. அப்போது கட்டுமான நிறுவனத்தின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் பி. எஸ். ராமன் வாதிடுகையில், “நிறுவனத்திற்கு எதிராக சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் தொடர்ந்த வழக்கை சென்னை உயர் நீதிமன்ற ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது. அதன் அடிப்படையில் அமலாக்கத்துறை பதிவு செய்த வழக்கை அமலாக்கத்துறை விசாரிக்க முடியாது” எனத் தெரிவித்து உச்ச நீதிமன்ற தீர்ப்புகளை மேற்கோள் காட்டினார். இதனையடுத்து அமலாக்கத்துறை சார்பில், “மத்திய குற்றப்பிரிவு வழக்கை ரத்து செய்து பிறப்பித்த உத்தரவை திரும்ப பெறக் கோரி மனுத்தாக்கல் செய்யபட்டுள்ளதாக தெரிவித்தார்.

இதனைப் பதிவு செய்துக்கொண்ட நீதிபதிகள்,“ மத்திய குற்றப்பிரிவு பதிவு செய்த வழக்கு ரத்து செய்யப்பட்டு விட்டதால் அதன் அடிப்படையில் பதியப்பட்ட வழக்கை அமலாக்கத்துறை தொடர்ந்து விசாரிக்க முடியாது. எனவே அமலாக்கத்துறை பதிவு செய்த வழக்கு ரத்து செய்யப்படுகிறது. மேலும் அமலாக்கத்துறையின் சோதனையின் போது கைப்பற்றிய ஆவணங்களை நிறுவனத்திடம் 4 வாரங்களில் ஒப்படைக்க அமலாக்கத்துறைக்கு உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது” எனத் தெரிவித்தனர். 

சார்ந்த செய்திகள்