தூக்கிலிடுவதே சரியான முறை! - மரண தண்டனை குறித்து மத்திய அரசு

மரண தண்டனையில் மற்ற முறைகளை விட தூக்கிலிடுவதே சரியானது என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

hanging

உச்சநீதிமன்ற வழக்கறிஞர் ரிஷி மல்கோத்ரா மரண தண்டனையில் தூக்கிலிடுவதற்கு பதிலாக மாற்று வழிகளைக் கொண்டுவரக் கோரி உச்சநீதிமன்றத்தில் மனு அளித்திருந்தார். பொதுநல வழக்காக எடுத்துக்கொள்ளப்பட்ட இந்த மனுவில், அரசியலமைப்புச் சட்டம் பிரிவு 21ன் படி ஒருவரின் மரணம் கண்ணியமானதாக இருக்கவேண்டும் என்பது சுட்டிக்காட்டப்பட்டிருந்தது.

இந்த வழக்கினை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள், இதுதொடர்பாக மத்திய அரசு விளக்கமளிக்குமாறு தெரிவித்திருந்தார். இந்நிலையில், மரண தண்டனைக்கு தூக்கு தண்டனை முறையே மிகவும் சரியானது என மத்திய அரசு தரப்பில் விளக்கமளிக்கப்பட்டது. மத்திய அரசு அளித்திருந்த பதில் மனுவில், தூக்குத்தண்டைக்கு பதிலாக விஷ ஊசி மூலமாகவோ, துப்பாக்கியால் சுடுவது மூலமாகவோ மரண தண்டனை வழங்கலாம் என்ற பரிந்துரைகள் இருந்தன. ஆனால், அவற்றை விட தூக்கிலிடுவதே விரைவானது மற்றும் சுலபமானது. மேற்சொன்ன இரண்டு பரிந்துரைகளை விட இது வலி குறைவானது என பதிலளிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஏப்ரல் 21ஆம் தேதி 12 வயதுக்குட்பட்ட சிறுமிகளை பாலியல் வன்புணர்வு செய்பவர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்படும் என்ற சட்டத்திருத்தத்துக்கு மத்திய அரசு மற்றும் குடியரசுத்தலைவர் ஒப்புதல் அளித்தது குறிப்பிடத்தக்கது.

death sentence supremecourt
இதையும் படியுங்கள்
Subscribe