Skip to main content

கையெழுத்திட ஆளுநர் ஆர்.என்.ரவி மறுப்பு; அமைச்சர் பொன்முடி கண்டனம்

Published on 20/10/2023 | Edited on 20/10/2023

 

Governor RN Ravi refused to sign; Minister Ponmudi condemned

 

தகைசால் தமிழர் சங்கரய்யாவுக்கு மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தின் மூலம் கெளரவ டாக்டர் பட்டம் வழங்க ஆவண செய்யப்படும் என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த ஜூலை 15 ஆம் தேதி அறிவித்திருந்தார். இந்த சூழலில் சங்கரய்யாவுக்கு கெளரவ டாக்டர் பட்டம் அளிக்கும் கோப்பில் ஆளுநர் ஆர்.என். ரவி கையெழுத்திட மறுத்ததாக சிபிஐஎம் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் குற்றச்சாட்டி இருந்தார். மேலும் ஆளுநருக்கு பல்வேறு தரப்பினரும் தங்களது கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர்.

 

இந்நிலையில் இது குறித்து உயர்கல்வித் துறை அமைச்சர் க.பொன்முடி தனது கண்டன அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது, “1922 ஜூலை 15ல் பிறந்த மிகச் சிறந்த சுதந்திரப் போராட்டத் தியாகியும், இந்திய சுதந்திரப் போராட்டத்தில் கிட்டத்தட்ட 8 ஆண்டுகளை சிறையில் கழித்தவரும், நூறு வயதைக் கடந்தவரும், ஏழை எளிய மக்களுக்காக தம் வாழ்நாளை அர்ப்பணித்தவரும், தமிழினத்தின் வளர்ச்சிக்காக உழைத்தவரும், மாணவத் தலைவரும், சிறந்த சட்டமன்ற உறுப்பினருமான திரு. என். சங்கரய்யா அவர்கள், நம் தமிழ் சமூகத்திற்கு ஆற்றியுள்ள ஒப்புயர்வற்ற சேவையை அங்கீகரிக்கும் விதமாக 18.08.2023 அன்று நடைபெற்ற மதுரை காமராசர் பல்கலைக்கழக ஆட்சிக் குழு கூட்டத்தில் அவருக்கு கௌரவ முனைவர் பட்டம் வழங்கப்படும் எனத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, பின்னர் 20.09.2023 அன்று நடைபெற்ற மதுரை காமராசர் பல்கலைக்கழக ஆட்சிப் பேரவைக் கூட்டத்தில் வரவிருக்கும் பட்டமளிப்பு விழாவில் என்.சங்கரய்யா அவர்களுக்கு கௌரவ முனைவர் பட்டம் வழங்கப்படும் எனவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

 

அதே சமயம் கெளரவ முனைவர் பட்டம் வழங்கும் அதிகாரம் மதுரை காமராசர் பல்கலைக்கழகச் சட்டத்தின்படி ஆட்சிப் பேரவைக்கு வழங்கப்பட்டுள்ளது. அத்துடன் கௌரவ முனைவர் பட்டம் அல்லது சான்றிதழில் பல்கலைக்கழக வேந்தர் கையொப்பமிட வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே ஆட்சிக்குழு மற்றும் ஆட்சிப் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் அடிப்படையில் என். சங்கரய்யா அவர்களுக்கு கௌரவ முனைவர் பட்டம் வழங்க அனுமதி கோரும் கோப்பு பல்கலைக்கழகத்தால் தமிழக ஆளுநரும், மதுரை காமராசர் பல்கலைக்கழக வேந்தருமான ஆர்.என்.ரவியிடம் சமர்ப்பிக்கப்பட்ட போது, அவர் அதில் கையெழுத்திட மறுத்துள்ளார்.

 

Governor RN Ravi refused to sign; Minister Ponmudi condemned

 

இந்நிலையில் நவம்பர் 2 ஆம் தேதி (02.11.2023) அன்று மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் நடைபெற உள்ள பட்டமளிப்பு விழாவில், மதுரை காமராசர் பல்கலைக்கழக ஆட்சிக்குழு மற்றும் ஆட்சிப் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின்படி என்.சங்கரய்யா அவர்களுக்கு கௌரவ முனைவர் பட்டம் வழங்குமாறு தமிழக ஆளுநரும், மதுரை காமராசர் பல்கலைக்கழக வேந்தருமான ஆர்.என்.ரவியிடம் கேட்டுக் கொள்ளப்படுகிறது” என தெரிவித்துள்ளார். 

 

 

சார்ந்த செய்திகள்