Skip to main content

ரூ.1 கோடி கொடு... கத்தி, நாட்டுவெடிகுண்டுடன் மிரட்டல்! -மிரண்டு நடுங்கிப்போன காங்கிரஸ் பிரமுகர்!

Published on 10/12/2020 | Edited on 10/12/2020
ddd

 

"பத்தாயிரம் ரூபாய் பத்தாது.. 1 கோடி ரூபாய் கொடு"...என காங்கிரஸ் கட்சியின் பிரமுகரை கத்தி, நாட்டுவெடிகுண்டு காட்டி மிரட்டிய நபர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

 

சிவகங்கை மாவட்டம் சங்கராபுரம் பஞ்சாயத்துத் தலைவராக இரண்டுமுறை பதவி வகித்தவர் காங்கிரஸ் கட்சியினை சேர்ந்த மாங்குடி. காரைக்குடி கற்பக விநாயகர் நகரில் வசித்து வரும் இவருடைய வீட்டிற்கு இன்று காலை 7 மணியளவில் வந்த ஒருவர், "தான் தமிழ்த்தேச மக்கள் கட்சியின் தலைமை செயற்குழு உறுப்பினர். தன்னுடைய பெயர் தமிழ்க்குமரன்" என மாங்குடியிடம் அறிமுகப்படுத்திக் கொண்ட நிலையில் டீ கொடுத்து அமர வைக்கப்பட்டிருக்கிறார். இதே வேளையில், தான் கொண்டு வந்திருந்த துணிப்பையினை திறந்து அதிலிருந்து ஒரு நாட்டுவெடிகுண்டு, ஒரு எலெக்ட்ரானிக் கருவி மற்றும் இரண்டு கத்திகளை அங்கிருந்த டேபிளில் பரப்பி வைத்து விட்டு பேச ஆரம்பித்திருக்கின்றார் அந்த நபர்.

 

"முன்ன இயக்கமாக இருந்துச்சு.! இப்பக் கட்சியாக பயணிக்கிறதால் நிர்வாக செலவுகள் அதிகமாயிடுச்சு. அதனால் என்ன செய்றீங்கன்னா..! ஒரு ஒரு ரூபாயை எங்க கட்சிக்கு நிதியாகக் கொடுத்திருங்க.! இல்லைன்னா.." என சர்வசாதரணமாகக் கூறிக் கொண்டே வெடிகுண்டுவை உருட்டுவதும், கத்தியை இடமாற்றி வைப்பதுமாக இருந்த நிலையில், " ஐயா.! என்னிடம் அந்தளவிற்கு பணம் இல்லை. நீங்க வேற ஆளைப் பாருங்க.! வேண்டுமென்றால் ரூ.10 ஆயிரம் நிதி தருகிறேன். அதுவும் இப்ப இல்லை.. பத்து நாள் கழிச்சு வாங்கிக்கொள்ளுங்களேன்." என மாங்குடி பேச, மீண்டும் வெடிகுண்டுவைக் காண்பித்துக் கொண்டே, "பத்தாயிரம் வாங்க நாங்க என்ன பிச்சைக்காரர்களா.?! ரூ1 கோடி இப்ப வேண்டும். இல்லைன்னா வேற மாதிரி ஆயிடும்" என அதட்டி உருட்டிய நிலையில் வீட்டின் உட்பக்கம் வந்த மாங்குடியோ காவல்துறைக்கு தகவல் தெரிவித்துள்ளார். வழக்கம் போல் சினிமா கிளைமாக்ஸிற்கு வரும் போலீஸ் போல் தாமதமாகவே வந்து சம்பந்தப்பட்ட நபரை கைது செய்தது விசாரணைக்காக அழைத்து சென்றது ஆய்வாளர் சுந்தரமகாலிங்கம் தலைமையிலான காரைக்குடி வடக்கு காவல்துறை.

 

என்பதாம் வருடங்களில் சிறந்த மக்கள் புரட்சியாளர்களாக பேசப்பட்ட தமிழரசனின் அரசியலை உள்வாங்கியே உருவாக்கப்பட்டது தமிழ்த்தேச மக்கள் கட்சி.  தமிழரசன் துவக்கிய “தமிழ்நாடு விடுதலைப்படை” என்ற அமைப்பு தடை செய்யப்பட்ட நிலையில் 25.05.2014ல் சென்னையில் தொடங்கப்பட்டது இந்தக் கட்சி. சிவகங்கை மாவட்டத்தில் தமிழரசனின் கொள்கையை ஏற்றுக்கொண்டவர்களால் சிவகங்கை மற்றும் செம்பனூர் பகுதிகளில் குண்டுவெடிப்பு நிகழ்த்தப்பெற்றது குறிப்பிடத்தக்க ஒன்று.

 

ஜன நெருக்கடி மிகுந்த நகரப்பகுதியில் வெடிகுண்டு கத்தியுடன் பணம் கேட்டு மிரட்டப்பட்ட சம்பவத்தால் மிகுந்த பரப்பரப்ப்பினை உருவாக்கியுள்ளது இந்த சம்பவம்.

 

சார்ந்த செய்திகள்

Next Story

பாஜக தேர்தல் அறிக்கை; ப.சிதம்பரம் சரமாரி கேள்வி!

Published on 15/04/2024 | Edited on 15/04/2024
 BJP Election Manifesto; P. Chidambaram barrage of questions

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடுமுழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கும் வாக்குப்பதிவு ஜூன் 1 ஆம் தேதி வரை நாடுமுழுவதும் 7 கட்டங்களாக நடைபெறவுள்ளது. பின்பு பதிவான வாக்குகள் ஜூன் 4 எண்ணப்பட்டு அன்றைய தினமே முடிவுகள் வெளியிடப்படவுள்ளது. ஆட்சியைத் தக்க வைக்கும் வகையில் பாஜகவும், இழந்த ஆட்சியை எப்படியாவது பிடிக்க வேண்டும் என்று காங்கிரஸ் கட்சியும் தீவிரமாக செயல்பட்டு வருகிறது.

அந்த வகையில் காங்கிரஸ் கட்சி தனது வேட்பாளர்களை அறிவித்து, தேர்தல் வாக்குறுதிகளை வெளியிட்டு பிரச்சாரம் செய்து வருகிறது. இத்தகைய சூழலில் பாஜகவின் தேர்தல் அறிக்கையை பிரதமர் மோடி நேற்று (14.04.2024) வெளியிட்டார். பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையிலான குழு உருவாக்கிய இந்த தேர்தல் அறிக்கை டெல்லியில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் வெளியிட்டப்பட்டது. இந்நிலையில் சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் முன்னாள் மத்திய அமைச்சரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான ப.சிதம்பரம் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்.

அப்போது அவர் பாஜக தேர்தல் அறிக்கை குறித்துப் பேசுகையில், “எல்லா ஊர்களுக்கும் குழாய் மூலம் தண்ணீரே சென்று சேராத நிலையில், குழாய் மூலம் எரிவாயு எப்படிக் கொண்டு செல்ல முடியும். அனைத்து வீடுகளுக்கும் குழாய் மூலம் எரிவாயு விநியோகம் செய்வதாக பாஜக அளித்துள்ள வாக்குறுதி மிகப்பெரிய வேடிக்கையான செயல் ஆகும். பாஜக அரசு கடந்த 10 ஆண்டுகளில் 4 கோடி வீடுகளை கட்டிக்கொடுத்துவிட்டதாக தேர்தல் அறிக்கையில் கூறியிருப்பது பொய்க் கணக்கு ஆகும். அதாவது 4 கோடி வீடுகளை கட்டி இருந்தால் 52 ஆயிரம் வீடுகளை ஒவ்வொரு மாவட்டத்திலும் கட்டி இருக்க வேண்டும். சிவகங்கை மாவட்டத்தில் பாஜக அரசு கட்டிக்கொடுத்த 52 ஆயிரம் வீடுகளைக் காட்ட முடியுமா?. 

 BJP Election Manifesto; P. Chidambaram barrage of questions

நாடாளுமன்றத்தில் 33 சதவித மகளிர் இட ஒதுக்கீட்டு சட்டத்தை பாஜக அரசு நிறைவேற்றி இருந்தாலும் அந்த சட்டம் இப்போதைக்கு அமலுக்கு வராது. பெண்களுக்கான 33 சதவித இட ஒதுக்கீட்டை வேண்டுமென்றே பாஜக ஒத்திப் போட்டுள்ளது. அனைத்து ஊர்களுக்கும் புல்லட் ரயில் இயக்கப்படும் என்ற பாஜக வாக்குறுதி வேடிக்கையானது. ஒரு புல்லட் ரயிலுக்கு ரூ. 1.1 லட்சம் கோடி செலவு செய்யத் தயாராக உள்ள பாஜக அரசு, போதிய ரயில் விபத்து தடுப்புக் கருவிகளைப் பொருத்தாதது ஏன்?.

வேளாண் விளைபொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலை என்பது ஏற்கெனவே உள்ள ஒன்றுதான். பழைய பல்லவிகளைப் பாடுவது புதிய சிந்தனை அல்ல. பாஜக தேர்தல் அறிக்கையில் புதிய அறிவிப்புகள் இல்லை. நாட்டில் 5% பேர் ஏழ்மை நிலையில் இருக்கிறார்கள் என்பதை ஏற்க முடியாது. பாஜக தேர்தல் அறிக்கையில் மக்களை ஏமாற்றும் தேர்தல் வாக்குறுதிகள் இடம்பெற்றுள்ளன” எனத் தெரிவித்தார். 

Next Story

காரைக்குடியில் அமித்ஷாவின் ரோடு ஷோ திடீர் ரத்து!

Published on 11/04/2024 | Edited on 11/04/2024
Amit Shah's road show suddenly canceled in Karaikudi

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அதன்படி திமுக, அதிமுக, நாம் தமிழர், பாஜக ஆகிய கட்சிகள் தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றன.

அந்த வகையில் தேர்தல் பிரச்சாரத்திற்காக இரண்டு நாள் பயணமாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நாளை (12.04.2024) தமிழகம் வருகிறார். இந்த பயணத்தின் போது பாஜக வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்கிறார். அமித்ஷாவின் பயணத்திட்டத்தின் படி நாளை சிவகங்கை மற்றும் மதுரையில் வாகனப் பேரணி மூலம் வாக்கு சேகரிக்கிறார் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. அதனைத் தொடர்ந்து நாளை மறுநாள் (13.04.2024) கன்னியாகுமரியில் பரப்புரையில் ஈடுபடுகிறார். இதனையடுத்து அன்று மாலை நாகப்பட்டினத்தில் நடைபெறும் பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் பங்கேற்கிறார். மேலும் தென்காசியில் நடைபெறும் வாகனப் பேரணியில் கலந்துகொள்கிறார். அதே சமயம் நாளை மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் அமித்ஷா சாமி தரிசனம் செய்கிறார்.

இதன்படி சிவகங்கை பாஜக வேட்பாளர் தேவநாதனை ஆதரித்து காரைக்குடியில் அமித்ஷா நாளை ரோடு ஷோ நிகழ்ச்சி நடத்த உள்ளார் என பயணத்திட்டம் வகுக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், மத்திய அமைச்சர் அமித்ஷாவின் ரோடு ஷோ நிகழ்ச்சி திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளது. முன்னதாக தேவநாதன் ரூ. 525 கோடி மோசடி செய்துள்ளதாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் போலீசில் புகார் தெரிவிக்கப்பட்டதும், சென்னையில் பிரதமர் மோடி நேற்று முன்தினம் நடத்திய ரோடு ஷோவுக்கு போதிய வரவேற்பு இல்லை என்ற விமர்சனமும் மக்கள் மத்தியில் எழுந்தது கவனிக்கத்தக்கது.