Skip to main content

’’மாணவிகள் தற்கொலையில் அரசியல் ஆதாயம் தேடுகிறார்கள்’’ - நீதிபதி கிருபாகரன் காட்டம்

Published on 12/06/2018 | Edited on 12/06/2018

 

kirupakaran


நீட் தேர்வில் தோல்வி அடைந்த மாணவிகள் அனிதா, பிரதீபா, சுபஸ்ரீ தற்கொலை செய்துகொண்டது குறித்து நீதிபதி கிருபாகரன், கடும் கண்டனங்களை தெரிவித்தார்.    அவர், ’’மாணவர்கள் தற்கொலை சம்பவங்களுக்கு அரசை மட்டும் குறை சொல்லக்கூடாது.   சமூகத்தில் இருக்கும் அனைவருமே பொறுப்பேற்க வேண்டும். மாணவர்களின் தற்கொலை சம்பவங்களை பயன்படுத்தி அரசியல் ஆதாயம் தேடுகிறார்கள்.  முன்கூட்டியே அறிவுரை வழங்காமல் இறந்த பிறகு கண்ணீர் வடிப்பது தேவையற்றது’’ என்று கருத்து தெரிவித்தார்.   வழக்கறிஞர் சூரியபிரகாசம் தொடந்த வழக்கில் அவர் இவ்வாறு கூறினார்.

 

அவர் மேலும்,  மாணவர்கள் தற்கொலைகளை தடுக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்னென்ன?  என்று அரசுக்கு கேள்வி எழுப்பினார்.    மாணவிகளின் தற்கொலைகள் குறித்து இரண்டு வாரத்திற்குள் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டார்.  மாணவர்களுக்கு கவுன்சிலிங் வழங்குவது குறித்தும் அரசு பதிலளிக்க உத்தரவிட்டார்.   தலைமை ஆசிரியர்களை கொண்டு கவுன்சிலிங் அளிப்பது குறித்து பதிலளிக்கவும் உத்தரவிட்டார்.  மேலும், வழக்கு விசாரணையை வரும் 27ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

 


 நீட் தேர்வு தோல்வியால் கடந்த ஆண்டு அரியலூரை சேர்ந்த அனிதா தற்கொலை செய்து கொண்டார். அந்த சமயத்தில் மருத்துவப் படிப்பில் இடம் கோருவது தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் கிருத்திகா என்பவர்  வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கை விசாரித்த நீதிபதி என்.கிருபாகரன், ’’நீட் தேர்வு தோல்வியால் ஏற்படும் மரணங்களை தடுக்க தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். தேர்வுக்கு முன்பாக உரிய கவுன்சிலிங் மற்றும் பயிற்சிகள் அளிக்க வேண்டும். தேர்வு பயத்தை போக்கி சிபிஎஸ்இ தேர்வு வாரியம் உள்ளிட்ட அமைப்புகள் நடத்தும் தேர்வுகளை எதிர்கொள்ளும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்று உத்தரவிட்டார். 

 

இந்நிலையில் இந்த ஆண்டு பிளஸ் 2 தேர்வில் சிறப்பான மதிப்பெண்களை எடுத்த விழுப்புரத்தை சேர்ந்த பிரதீபாவும், திருச்சியை சேர்ந்த சுபஸ்ரீயும் நீட் தேர்வில் தோல்வி அடைந்ததால் தற்கொலை செய்து கொண்டனர்.  இந்நிலையில், வழக்கறிஞர் சூரியப்பிரகாசம்,   நீதிபதிகள் கிருபாகரன், கிருஷ்ணன் ராமசாமி ஆகியோர் அடங்கிய டிவிஷன் பெஞ்சில்  ஆஜராகி, மாணவர்களுக்கு கவுன்சிலிங்க் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல உத்தரவுகளை இந்த நீதிமன்றம் கடந்த ஆண்டு தமிழக அரசுக்கு பிறப்பித்தது. ஆனால், தமிழக அரசு இந்த உத்தரவை அமல்படுத்தவில்லை. இதனால், இந்த ஆண்டும் உயிரிழப்புகள் தொடர்கின்றன. எனவே, தமிழக அரசின் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க  வேண்டுமென்று கோரிக்கை வைத்தார். இதனையேற்ற நீதிபதி கிருபாகரன், மனுவாக தாக்கல் செய்யுங்கள் வரும் செவ்வாய் கிழமை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்று உத்தரவிட்டார்.  அதன்படி இன்று மாணவர்களின் தற்கொலைகளை தடுக்க அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என மனுவாக தாக்கல் செய்தார்.  இந்த மனு மீதான விசாரணையில், நீதிபதி கிருபாகரன் மேற்கண்டவாறு கண்டனங்களையும், உத்தரவுகளையும் பிறப்பித்தார். 

சார்ந்த செய்திகள்

Next Story

அங்கித் திவாரி வழக்கு; நீதிபதி கோபம்! 

Published on 12/03/2024 | Edited on 12/03/2024
Ankit Tiwari case; The judge is angry

திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் துணை சூப்பிரண்டாக இருக்கக்கூடிய டாக்டர் சுரேஷ்பாபுவின் சொத்துக்குவிப்பு வழக்கை விசாரிக்காமல் இருக்க ரூ. 20 லட்சம் லஞ்சம் பெற முயன்றபோது, கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 1 ஆம் தேதி லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரால் மதுரை மண்டல அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரி கைது செய்யப்பட்டார். அதன்பின் திண்டுக்கல் மாவட்ட சிறையில் அடைக்கப்பட்டு மதுரை மத்திய சிறைக்கு மாற்றினார்கள். இதனையடுத்து அங்கித் திவாரி இரண்டாவது முறையாக தனக்கு ஜாமீன் வேண்டும் என சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனுத் தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், “தனது கைது என்பது விதிமுறைகளுக்கு எதிரானது. கைது செய்யப்பட்டு 90 நாட்களுக்கு மேலாக சிறையில் இருக்கிறேன். எனவே சட்டப்படி ஜாமீன் வழங்க வேண்டும்” எனத் தெரிவித்திருந்தார். இந்த மனு கடந்த பிப்ரவரி 23 ஆம் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது அங்கித் திவாரி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், “இந்த வழக்கில் உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. மனுதாரர் கிட்டத்தட்ட 80 நாட்களுக்கு மேலாக சிறையில் இருக்கிறார். உடனடியாக அவருக்கு ஜாமீன் வழங்க வேண்டும்” என வாதிட்டது.

அதனைத் தொடர்ந்து அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், “உச்சநீதிமன்றம் இந்த வழக்கிற்கு இடைக்கால தடை மட்டுமே விதித்துள்ளது. வழக்கு விசாரணை உச்சநீதிமன்றத்தில் வரும் மார்ச் 11 ஆம் தேதி மீண்டும் விசாரணைக்கு வர இருக்கிறது. திண்டுக்கல் லஞ்ச ஒழிப்புத்துறை குற்றப்பத்திரிக்கை தயார் செய்து வைத்துள்ளது. எனவே உச்சநீதிமன்ற தீர்ப்பை பொறுத்து குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும். அதுவரை அவருக்கு ஜாமீன் வழங்கக் கூடாது. ஜாமீன் வழங்கினால் சாட்சியங்களை கலைக்க வாய்ப்புள்ளது” என கடுமையாக எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இதனைப் பதிவு செய்துகொண்ட  நீதிபதி, மார்ச் 12 ஆம் தேதிக்கு இந்த வழக்கை ஒத்திவைத்தார். மேலும் உச்சநீதிமன்ற தீர்ப்பை பொறுத்து தீர்ப்பு வழங்கப்படும் என்று தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் இந்த வழக்கு இன்று (12.03.2024) மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் திருவடிக்குமார், “அங்கித் திவாரிக்கு ஜாமீன் வழங்கக் கூடாது. ஏற்கனவே உச்சநீதிமன்றம் இந்த வழக்கில் சட்டத்திற்கு உட்பட்டு பரிசீலனை செய்ய வேண்டும் என கூறியிருக்கிறது. எனவே அங்கித் திவாரிக்கு ஜாமீன் வழங்கினால் இந்த வழக்கு நீர்த்துப்போகும்” என வாதிட்டார். மனுதார் அங்கித் திவாரி சார்பில் ஆஜரான வழக்கறிஞர், “அங்கித் திவாரிக்கு ஜாமீன் வழங்க வேண்டும்” எனத் தெரிவித்து ஜாமீனுக்கான நிபந்தனைகள் குறித்து வாதிட்டார். அப்போது குறுக்கிட்ட நீதிபதி விவேக்குமார், “தாம் இன்னும் ஜாமீன் வழங்கவில்லை. ஆனால் மனுதாரர் தரப்பு ஜாமீனுக்கான நிபந்தனைகள் குறித்து வாதிடுகிறார். இதனால் அங்கித் திவாரியின் வழக்கில் இருந்து விலகுகிறேன். இந்த வழக்கை விசாரிக்க விரும்பவில்லை” எனக் கோபத்துடன் தெரிவித்துள்ளார். 

Next Story

நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் கருத்துக்கு உச்சநீதிமன்றம் கடும் கண்டனம்!

Published on 11/03/2024 | Edited on 11/03/2024
Supreme Court condemns Justice Anand Venkatesh's opinion!
நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ்

குழந்தைகள் தொடர்பான ஆபாசப் படங்களை இணையத்தில் பதிவிறக்கம் செய்து பார்த்ததாக இளைஞர் ஒருவர் மீது காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டிருந்தது. இது தொடர்பான வழக்கு திருவள்ளூர் போக்சோ நீதிமன்றத்தில் விசாரணையில் இருந்தது. இத்தகைய சூழலில் இந்த வழக்கை ரத்து செய்ய வேண்டும் என்று இளைஞர் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருந்தது.

இந்த வழக்கு ஆனந்த் வெங்கடேஷ் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், இளைஞர் மீதான விசாரணையை ரத்து செய்து உத்தரவிட்டிருந்தார். அந்த உத்தரவில், “ஆபாச படங்களை தனிப்பட்ட முறையில் பதிவிறக்கம் செய்து பார்ப்பது குற்றமல்ல” எனக் கூறி இருந்தார். இந்த தீர்ப்பை எதிர்த்து குழந்தைகள் உரிமைக்கான கூட்டணி என்ற அமைப்பு சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டது.

இந்நிலையில் இது தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் தலைமை நீதிபதி சந்திர சூட் அமர்வு முன்பு இன்று (11.03.2024) விசாரணைக்கு வந்தது. அப்போது ஆபாசப் படங்களை தனிப்பட்ட முறையில் பதிவிறக்கம் செய்து பார்ப்பது தவறில்லை எனக் கூறியிருந்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷுக்கு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திர சூட் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும், “ஒரு தனி நீதிபதி எவ்வாறு இத்தகைய கருத்தைக் கூற முடியும்? நீதிபதி ஆனந்த் வெங்கடேசன் கருத்து கொடுமையானது” எனவும் தலைமை நீதிபதி சந்திர சூட் கேள்வி எழுப்பியுள்ளார்.

இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட மனுதாரர் மற்றும் எதிர் மனுதாரர்கள் தரப்புக்கு நோட்டிஸ் வழங்கியதுடன், தமிழக காவல்துறையினர் பதிலளிக்கவும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார். இதனையடுத்து இந்த வழக்கு 4 வாரங்களுக்குப் பிறகு மீண்டும் விசாரிக்கப்படும் எனவும் நீதிபதி தெரிவித்துள்ளார்.