![Former Special DGP Rajesh Das ordered to appear in court](http://image.nakkheeran.in/cdn/farfuture/KbF2OgyP9WVNhaz-kMl3AryXTeHc5uwBTGINK7vcCX0/1700639719/sites/default/files/inline-images/rajesh-dass-file-former-spl-dgp.jpg)
தமிழக சிறப்பு டி.ஜி.பி பொறுப்பில் இருந்த ராஜேஷ் தாஸ், கடந்த அதிமுக ஆட்சியின்போது முதலமைச்சராக இருந்த எடப்பாடி பழனிசாமியின் சுற்றுப் பயணத்தின் போது பெண் எஸ்.பியை தமது காரில் அழைத்துச் செல்லும்போது பாலியல் தொல்லை கொடுத்ததாகக் கூறி சம்பந்தப்பட்ட அப்பெண் எஸ்.பி அப்போதைய தலைமைச் செயலாளரிடம் புகார் அளித்திருந்தார். இந்த சம்பவம் தமிழக போலீசார் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. மேலும் சென்னை உயர்நீதிமன்றம் இந்த வழக்கை தாமாகவே முன்வந்து விசாரணைக்கு எடுத்துக் கொண்டது.
இதையடுத்து இந்த வழக்கை சிபிசிஐடிக்கு தமிழக அரசு மாற்றம் செய்தது. பின்னர் சிறப்பு டி.ஜி.பி. ராஜேஷ் தாஸ் அவருக்கு உடந்தையாக இருந்ததாக செங்கல்பட்டு முன்னாள் எஸ்.பி. கண்ணன் ஆகியோர் மீது நான்கு பிரிவுகளின் கீழ் சிபிசிஐடி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதனடிப்படையில் இருவரும் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேலாக விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதிமன்ற நீதிபதி புஷ்ப ராணி முன்னிலையில் நடந்து வரும் இந்த வழக்கில் கடந்த 16/06/2023 அன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. அந்தத் தீர்ப்பில், பெண் ஐ.பி.எஸ். அதிகாரிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் முன்னாள் சிறப்பு டி.ஜி.பி. ராஜேஷ் தாஸ் குற்றவாளி என அறிவிக்கப்பட்டதோடு மேலும், அவருக்கு மூன்று ஆண்டுகள் சிறைத் தண்டனை மற்றும் ரூ. 10,000 அபராதம் விதித்து நீதிபதி புஷ்ப ராணி உத்தரவிட்டார்.
இந்த தீர்ப்பை எதிர்த்து ராஜேஷ் தாஸ் தொடர்ந்த மேல்முறையீடு வழக்கில், இந்த வழக்கை விசாரித்த நீதிபதி நிர்மல்குமார், ராஜேஷ் தாஸ் விசாரணைக்காக ஆஜராக வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. மேல்முறையீடு செய்த ராஜேஷ் தாஸ் வாதத்தை தொடங்காமல் தொடர்ந்து வாய்தா கேட்டு வந்த நிலையில், தொடர்ந்து வாய்தா கேட்டால் விசாரணையின்றி தீர்ப்பு வழங்கப் போவதாக நீதிபதி அறிவித்தார். நவம்பர் 21 ஆம் தேதி ஆஜராகி வாதத்தை தொடங்க ராஜேஷ் தாஸ் தரப்புக்கு உத்தரவிட்டு இருந்தார். இந்நிலையில் இந்த வழக்கு மீண்டும் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஸ் தாஸை டிசம்பர் 18 ஆம் தேதி நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவிட்டார். மேல் முறையீட்டு மனு மீது இரண்டு நாட்களில் வாதத்தை முடிக்க விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டார்.