Skip to main content

பட்டாசுகளை அனுமதியுங்கள்... ராஜஸ்தான் முதலமைச்சருக்கு கே.எஸ். அழகிரி கடிதம்... 

Published on 03/11/2020 | Edited on 03/11/2020
ddd

 

சிவகாசி பட்டாசுகளுக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கக்கோரி ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கெலாட்க்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ். அழகிரி கடிதம் எழுதியுள்ளார்.

 

அந்தக் கடிதத்தில், தமிழ்நாட்டில் விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் சுற்றுச்சூழலுக்கு ஏற்ற வகையில் பட்டாசு உற்பத்தியில் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழிற்சாலைகள் ஈடுபட்டு வருவதையும், அதில் இந்தியாவின் பல பகுதிகளிலிருந்தும், உள்ளூரிலிருந்தும் 60 லட்சம் பேர் பணியாற்றிக் கொண்டிருப்பதையும் தங்களுக்குத் தெரிவிக்க விரும்புகின்றேன். இந்தியாவிலேயே முன்னணி பட்டாசு உற்பத்தியாளர்கள் மற்றும் வினியோகஸ்தர்களைக் கொண்ட சிவகாசி நகரத்திலிருந்து, சுற்றுச்சூழலில் அதிக தரத்தை எதிர்பார்க்கும் மேற்கு ஐரோப்பிய நாடுகளுக்கும், அமெரிக்காவுக்கும் பட்டாசுகள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன.

 

ddd

 

பசுமைப் பட்டாசுகள் தயாரிப்பது தொடர்பாக உச்ச நீதிமன்ற உத்தரவுக்கு இணங்க, ஏற்கனவே பயன்படுத்தி வந்த சல்பருக்குப் பதில் புதிய ரசாயனமான பேரியம் நைட்ரேட்டைப் பயன்படுத்தி புது வகையான ஒளி உமிழும் பட்டாசுகள் தயாரிப்பில் இந்த தொழிற்சாலைகள் ஈடுபட்டு வருகின்றன. சல்பர் ரசாயனப் பொருளை அகற்றியதால், சல்பர் டையாக்ஸைடு வெளியேறி பெரிய அளவிலான சுற்றுச்சூழல் மாசு ஏற்படுவது தவிர்க்கப்பட்டுள்ளது. மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் அங்கீகரித்த சிஎஸ்ஐஆர்-என்இஇஆர்ஐ போன்ற தேசிய அளவிலான நிறுவனங்களின் விஞ்ஞானப் பூர்வமான மாற்றத்தின் அடிப்படையில் புதிய பட்டாசுகள் தயாரிக்கப்பட்டுள்ளன. வெளியேறும் வாயுக்களின் அளவும் வரையறுக்கப்பட்ட அளவுக்குள் பயன்படுத்தப்படுகிறது.

 

சிவகாசிப் பட்டாசுத் தொழிற்சாலைகள் உள்ளூர் ஏழை மற்றும் நடுத்தரக் குடும்பத்தினருக்கு  மட்டும் வேலை வழங்கவில்லை. இந்தியா முழுவதுக்கும் சிறு வர்த்தகர்கள், சரக்கு போக்குவரத்து மேற்கொள்பவர்கள் மற்றும் மொத்த விற்பனையாளர்களை உள்ளடக்கிய பெரிய அளவிலான விநியோக சங்கிலியைக் கொண்டுள்ளது. பட்டாசு விற்பனையைத் தடை செய்தால், இவர்களது வாழ்க்கை நிலை பெரிதும் பாதிக்கப்படும். நமது கொண்டாட்டங்களை வண்ணமயமாக்க ஆண்டு முழுவதும் உழைக்கும் பட்டாசுத் தொழிலாளர்களின் வாழ்க்கை நிலையும் மோசமான சூழலுக்குத் தள்ளப்படும்.

 

இவற்றை எல்லாம் கருத்தில் கொண்டு, அனைத்து பட்டாசுகள் விற்பனைக்கும் விதிக்கப்பட்ட ஒட்டுமொத்த தடைக்கு விலக்கு அளிக்குமாறு தங்களைக் கேட்டுக் கொள்கிறேன். மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் வழிகாட்டுதல்களுக்கு உட்பட்டு சிவகாசியில் தயாரிக்கப்படும் பசுமைப் பட்டாசுகளுக்கு அனுமதி அளிக்க வேண்டும்.

 

பாரம்பரிய தீபாவளிப் பண்டிகையில் சிவகாசி பட்டாசுகள் நம்மிடையே உற்சாகத்தை அளிக்கின்றன. கரோனாவால் ஆட்பட்டுள்ள இருண்ட சூழலிலிருந்து சற்று விடுபடப் பட்டாசுகள் காரணமாக இருக்கின்றன. பசுமை பட்டாசுகளால் உடல்நலத்துக்கு எந்த பாதிப்பும் இல்லை என்பதையும், சுற்றுச்சூழலுக்கு எவ்வித அச்சுறுத்தலும் இல்லை என்பதையும் நான் உங்களுக்கு அறுதியிட்டுக் கூறுகின்றேன்.

 

உங்களுக்கும், ராஜஸ்தான் மக்களுக்கும் மகிழ்ச்சியான, பாதுகாப்பான மற்றும் வண்ணமயமான தீபாவளி நல்வாழ்த்துகள். இவ்வாறு கூறியுள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“இந்தியா கூட்டணியிடம் பா.ஜ.க தோல்வி பெறும்” - பா.ஜ.க அமைச்சரின் வைரல் பேச்சு

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
BJP minister's viral speech BJP will lose to India alliance in rajasthan

7 கட்டங்களாக நாடு முழுவதும் மக்களவைத் தேர்தல் நடைபெறுகிறது. கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி முதற்கட்ட வாக்குப்பதிவு 102 தொகுதிகளில் முடிந்துள்ளது. 2வது கட்ட வாக்குப்பதிவு, ராஜஸ்தான் உள்ளிட்ட 88 தொகுதிகளில் வரும் ஏப்ரல் 26ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான தேர்தல் பிரச்சாரம் சூடுபிடித்துள்ளது.

முன்னதாக, ராஜஸ்தானில் மொத்தமுள்ள 25 மக்களவைத் தொகுதிகளில் 12 தொகுதிகளுக்கு முதற்கட்ட வாக்குப்பதிவு கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெற்றது. அடுத்து உள்ள 13 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு இரண்டாம் கட்டமாக ஏப்ரல் 26 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான இறுதிக்கட்ட தேர்தல் பிரச்சாரம் நேற்று மாலை (24-04-24) முடிவடைந்தது.

இந்த நிலையில், இந்தியா கூட்டணியிடம் பா.ஜ.க தோல்வியடையும் என்று பா.ஜ.க அமைச்சர் ஒருவர் பேசியது தொடர்பான வீடியோ ஒன்று சமூகவலைத்தளங்களில் வெளியாகி பா.ஜ.க தரப்பில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

BJP minister's viral speech BJP will lose to India alliance in rajasthan

ராஜஸ்தான் மாநிலத்தில் முதல்வர் பஜன் லால் ஷர்மா தலைமையில் பா.ஜ.க ஆட்சி நடைபெற்று வருகிறது. முதல்வர் பஜன் லால் ஷர்மா அமைச்சரவையில் மருத்துவத் துறை அமைச்சராக கஜேந்திர சிங் பொறுப்பு வகித்து வருகிறார். இந்நிலையில், பா.ஜ.க அமைச்சர் கஜேந்திர சிங் தனது ஆதரவாளர்களுடன் பேசியது தொடர்பாக வைரலான வீடியோவில், “முதற்கட்ட தேர்தலில் நாம் மோசமாக செயல்பட்டுள்ளோம். நாகௌர் மக்களவைத் தொகுதியில் இந்தியா கூட்டணியிடம் பா.ஜ.க தோல்வியைத் தழுவும். நமது வாக்காளர்கள் வெளியே வரவில்லை. மற்ற இடங்களையும் இழக்கலாம்” என்று கூறியதாக சொல்லப்படுகிறது. இது பா.ஜ.க தரப்பில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

Next Story

பிரதமர் மோடிக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Election Commission notice to Prime Minister Modi

ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாரா பரப்புரையில் பேசிய பிரதமர் மோடி, ''நாட்டின் சொத்தில் இஸ்லாமியர்களுக்கே முதல் அதிகாரம் என்று காங்கிரஸ் ஆட்சியில் சொன்னார்கள். இதனால் இந்துக்களின் சொத்துகள் போகிறது. இந்துக்களின் பணத்தை எடுத்து இஸ்லாமியர்களுக்கு கொடுக்க நினைக்கிறது காங்கிரஸ். இதன் பொருள் அவர்கள் இந்தச் செல்வத்தை அதிக குழந்தைகளைப் பெற்றவர்களுக்கும், ஊடுருவல்காரர்களுக்கும் பகிர்ந்தளிப்பார்கள்.

நீங்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணம் ஊடுருவல்காரர்களுக்கு செல்ல வேண்டுமா? இதை நீங்கள் அங்கீகரிக்கிறீர்களா? பெண்கள் வைத்திருக்கும் தங்கத்தைக் கணக்கிட்டு, அந்தச் செல்வத்தை பங்கீடு செய்வோம் என்று காங்கிரஸின் தேர்தல் அறிக்கை கூறுகிறது. மன்மோகன் சிங் தலைமையிலான அரசு, முஸ்லீம்களுக்கு செல்வத்தில் முதல் உரிமை உண்டு என்று கூறியது. இந்த நகர்ப்புற நக்சல் சிந்தனை என் தாய்மார்கள் மற்றும் சகோதரிகளின் மாங்கல்யத்தைக் கூட விட்டுவைக்காது.." எனச் சர்ச்சையாக பேசினார். இஸ்லாமியர்கள் ஊடுருவல்காரர்கள் என நாட்டின் பிரதமர் மோடி பேசிய பேச்சுக்கு நாடு முழுவதும் பலத்த கண்டனம் எழுந்து வருகிறது.

முன்னதாக பிரதமர் மோடியின் இத்தகைய வெறுப்பு பேச்சுக்கு தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் அபிஷேக் மனு சிங்வி, சல்மான் குர்ஷித், குர்தீப் சத்பால் ஆகியோர் தேர்தல் ஆணையத்திற்கு நேரில் சென்று புகார் மனு அளித்திருந்தனர். அந்த மனுவில், ‘சமூகங்களுக்கு இடையே வெறுப்பை பரப்பும் வகையில் பேசிவரும் பிரதமர் மோடி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்நிலையில் தேர்தல் பரப்புரையில் மதத்தை தொடர்புபடுத்தி பேசியதாக பிரதமர் மோடிக்கு மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் பிரிவு 77 கீழ் தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அதாவது பாஜக தலைவர் ஜேபி நட்டாவிற்கு அனுப்பட்டுள்ள இந்த நோட்டீஸில் வரும் 29 ஆம் தேதி காலை 11 மணிக்குள் தேர்தல் ஆணையம் பதிலளிக்க உத்தரவிடப்பட்டுளது. அதே போன்று பாஜக அளித்த புகாரில் காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்திக்கும் தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. மேலும் அரசியல் கட்சிகள் தங்கள் வேட்பாளர்கள், குறிப்பாக நட்சத்திர பேச்சாளர்களின் பேச்சு அதிக பொறுப்புடன் இருக்க வேண்டும். உயர் பதவிகளில் இருப்பவர்களின் பிரச்சார உரைகள் மிகவும் கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.