Skip to main content

கொங்கு மண்டல தோல்வி! திமுக செய்ய வேண்டியது என்ன? 

Published on 04/05/2021 | Edited on 04/05/2021

 

ddd

 

தமிழகத்தில் ஆட்சி மாற்றம் நிகழ்ந்துள்ளது. 10 ஆண்டுகளுக்குப் பிறகு ஆட்சியைக் கைப்பற்றி தமிழக முதல்வராகிறார் மு.க.ஸ்டாலின். இந்த பரபரப்பான சூழலில், கொங்கு மண்டலத்தில் திமுகவுக்கு ஏற்பட்டுள்ள தோல்வி குறித்து மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்கிற கருத்து தமிழக அரசியல் விமர்சகர்களிடமும் தேர்தல் வியூக வல்லுநர்களிடமும் எதிரொலிக்கச் செய்கிறது. 

 

இதுகுறித்து நம்மிடம் பேசிய திமுக ஆதரவு அரசியல் விமர்சகர்கள், "திமுக கூட்டணி 200 இடங்களைக் கடந்து வெற்றிபெறும் என திமுகவும் அதன் கூட்டணிக் கட்சிகளும் எதிர்பார்த்திருந்தன. அதே எதிர்பார்ப்பு தேர்தல் வியூக வல்லுநர்களிடமும் இருந்தது. ஆனால், அந்த எதிர்பார்ப்பு நிறைவேறவில்லை. காரணம், கொங்கு மண்டலத்தில் திமுகவுக்கு ஏற்பட்டுள்ள கடுமையான தோல்விதான். இந்த சரிவுக்கு காரணம் என்ன? 

 

எம்.ஜி.ஆர். மற்றும் ஜெயலலிதா ஆகிய இருவரும் கொங்கு மண்டலத்தை அதிமுகவின் கோட்டையாக வைத்திருந்தனர். ஆட்சியிலும் கட்சியிலும் கொங்கு வேளாளர் சமூகத்தினருக்கு அதிகமான முக்கியத்துவம் தந்திருந்ததால் கொங்கு மண்டலம் அதிமுகவின் ஆதரவு மண்டலமாகவே இருந்து வந்தது. இதில், ஜெயலலிதா தனது ஆட்சியில் கொங்கு வேளாள சமூகத்தினரை வலிமையான துறைகளுக்கு அமைச்சர்களாக்கினார். அந்த வலிமையான துறைகள் மூலம் அந்த அமைச்சர்களால் கொங்கு மண்டலத்தில் அதிமுகவை வலிமையாக்க முடிந்தது. கொங்கு மண்டலத்தில் தொடர்ச்சியாக பலமுறை ஜெயித்து கொங்கு வேளாளர் சமூகத்தில் செல்வாக்குப் பெற்றவர்களையே அமைச்சர்களாக்கியதால் அச்சமூகத்தின் ஆதரவு அதிமுகவுக்கு கிடைத்து வந்தது. அதனை திமுகவால் உடைக்க முடியவில்லை. 

 

இந்த நிலையில்தான், ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு கொங்கு மண்டலத்தை திமுகவின் கோட்டையாக மாற்ற முயற்சி எடுத்தது திமுக தலைமை. கடைசி நேரத்தில் எடுக்கப்பட்ட அந்த முயற்சிகள் பலனளிக்கவில்லை. அதனால்தான், தேர்தல் முடிவுகள் திமுகவுக்கு கொங்கு மண்டலத்தில் கைகொடுக்கவில்லை. அந்த வகையில், சில திட்டமிடல்களில் திமுக மறுபரிசீலனை செய்ய வேண்டியது அவசியமாகிறது. 

 

அதாவது, தற்போது 10 ஆண்டுகளுக்குப் பிறகு ஆட்சியைக் கைப்பற்றியுள்ள திமுகவிடம் ஆட்சி அதிகாரம் 5 ஆண்டுகள் இருக்கப்போகிறது. இந்த 5 ஆண்டுகளில் கொங்கு மண்டலத்தை வலிமையாக்கும் திட்டமிடல் திமுகவுக்கு அவசியம். குறிப்பாக, கொங்கு வேளாளர் சமூகத்தைச் சேர்ந்த திமுக எம்.எல்.ஏ.க்களில், அச்சமூகத்தில் செல்வாக்கு பெற்றவர்களைக் கண்டறிந்து அவர்களை முக்கியத் துறைகளுக்கு அமைச்சர்களாக்க வேன்டும். இதுபோன்ற சில எம்.எல்.ஏ.க்களை அமைச்சர்களாக்கி அவர்களுக்கு முக்கிய இலாகா ஒதுக்கப்படும்போதுதான் கொங்கு வேளாளர் சமூகம் திமுகவை திரும்பிப் பார்க்கும். 

 

அதிமுகவில் எடப்பாடி பழனிசாமி, வேலுமணி, தங்கமணி போன்றவர்களை முக்கிய இலாகாக்களுக்கு அமைச்சர்களாக்கி ஜெயலலிதா அழகு பார்த்ததால்தான் கொங்கு வேளாளர் சமூகமும் அதிமுகவை தொடர்ந்து ஆதரித்தது. அது, இந்த தேர்தலிலும் நிரூபிக்கப்பட்டுள்ளது. அதேபோன்ற அணுகுமுறையை திமுக கையிலெடுத்தால்  மட்டுமே அடுத்த 5 ஆண்டுகளில் கொங்கு மண்டலத்தை திமுகவின் கோட்டையாக மாற்ற முடியும். அதனால்தான், கொங்கு மண்டல அரசியலில் வழக்கமான பாணியையே திமுக கடைபிடிக்காமல்  சில விசயங்களில் மறுபரிசீலனை செய்ய வேண்டும்" என்று சுட்டிக்காட்டுகிறார்கள்!

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

முதல்வர் ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்ற திண்டுக்கல் தொகுதி வேட்பாளர்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Chief Minister Stalin congratulates Dindigul candidate Sachithanantham

திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதியில் சிபிஎம். கட்சி சார்பாக போட்டியிட்ட வேட்பாளர் சச்சிதானந்தத்தை திமுக மாநில துணைப் பொதுச்செயலாளரும், ஊரக வளர்ச்சித்துறை அமைச்சருமான ஐ.பெரியசாமி, உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி ஆகிய இருவருடன் மாவட்டச் செயலாளரும், பழனி சட்டமன்ற உறுப்பினருமான ஐ.பி செந்தில் குமார் ஆகியோரும் சென்னைக்கு நேரில் அழைத்து சென்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் வாழ்த்து பெற வைத்தனர்.

அப்போது தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தமிழகத்திலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறப் போகிறீர்கள் என்ற செய்தி கேட்டு மகிழ்ச்சி அடைந்தேன் எனக் கூறியதோடு எவ்வளவு வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவீர்கள் எனக் கேட்டபோது சிபிஎம் வேட்பாளர் சச்சிதானந்தம் சுமார் 3 லட்சம் வாக்குகள் வித்தியசாத்தில் வெற்றி பெறுவேன் எனக்கூறினார். அப்போது உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி, இல்லை 4 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் சிபிஎம் வேட்பாளர் வெற்றி பெறுவார் எனக் கூறினார்.   

அப்போது தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் ஐ.பெரியசாமியை பார்த்து நீங்கள் 5 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார் என கூறுகிறீர்களா? எனக் கேட்டவுடன் அனைவரும் மகிழ்ச்சி அடைந்தனர். அப்போது பேசிய ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர், உங்களின் வழிகாட்டுதலின் படி திண்டுக்கல் தொகுதியில் தேர்தல் பிரச்சாரம் செய்தோம். தமிழக அரசின் நலத்திட்டங்களை பாராட்டி திண்டுக்கல் தொகுதியில் உள்ள வாக்காளர்கள் திமுக தலைமையிலான கூட்டணிக்கு அமோகமான வாக்குகளை அளித்துள்ளனர் என்றார். இந்த சந்திப்பின் போது  அமைச்சர் துரைமுருகன், அமைச்சர்  ஐ.பெரியசாமி,  அமைச்சர் சக்கரபாணி,  எம்.எல்.ஏ., ஐ.பி.செ ந்தில்குமார், ஆத்தூர் தொகுதி தேர்தல் பொறுப்பாளர் கள்ளிப்பட்டி மணி, சிபிஎம்.வேட்பாளர் சச்சிதானந்தம் ஆகியோர் உடன் இருந்தனர்.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தது குறித்து திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதி சச்சிதானந்தம் கூறுகையில், “திமுக சார்பாக போட்டியிட்ட வேட்பாளர்களின் வெற்றிகளை தெரிந்து கொள்ள எவ்வளவு ஆர்வம் காட்டினாரோ அந்த அளவிற்கு கூட்டணி கட்சி சார்பாக (சிபிஎம்) போட்டியிட்ட எனது வெற்றி குறித்தும் தமிழக முதல்வர் ஆர்வமுடன் கேட்டதும், தொடர்ந்து மக்கள் பணியை சிறப்பாக செய்யுங்கள் என வாழ்த்தியதும் எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நேரத்தில் எனது வெற்றிக்கு அயராது உழைத்த அமைச்சர் ஐ.பெரியசாமிக்கும், அமைச்சர் சக்கரபாணிக்கும், திண்டுக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் ஐ.பி. செந்தில்குமாருக்கும் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகளுக்கும் என்றும் நான் உறுதுணையாக இருப்பேன்” என்று கூறினார்

Next Story

'இபிஎஸ்சிற்கு பயந்துதான் சில முன்னாள் எம்.எல்.ஏக்கள் அப்படி செய்தார்கள்'-டி.டி.வி.தினகரன் ஓபன் டாக்

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
NN

தமிழகத்தில் முதல் கட்ட மக்களவைத் தேர்தல் நடந்து முடிந்திருக்கும் நிலையில் வாக்கு எண்ணிக்கை ஜூன் நான்காம் தேதி நடைபெற இருக்கிறது. மற்ற மாநிலங்களில் தேர்தல் பரப்புரைகளில் அரசியல் கட்சிகள் தீவிரமாக இறங்கி வருகின்றன.

இந்தநிலையில் பாஜக கூட்டணியில் அங்கம் வகிக்கும் அமமுகவின் பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் தேனியில் போட்டியிட்ட நிலையில், அங்கு நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசுகையில், ''1999 இல் நான் முதன்முதலாக தேர்தலில் நின்றேன். அப்போதெல்லாம் ஓட்டுக்கு பணம் கொடுக்கும் கலாச்சாரம் இல்லை. 2001 சட்டமன்றத் தேர்தலிலும் கிடையாது. உள்ளாட்சித் தேர்தலிலும் கிடையாது. பாராளுமன்றத் தேர்தலிலும் இல்லை. 2006 சட்டமன்றத் தேர்தலிலும் நான் இங்கு நின்றேன் அப்போதும் தேர்தலில் யாரும் ஓட்டுக்கு பணம் கொடுக்கும் கலாச்சாரம் கிடையாது. 2011 க்கு பிறகு ஓட்டுக்கு பணம் கொடுக்கும் கலாச்சாரம் தமிழக முழுவதும் பரவி விட்டது.

ஆர்.கே.நகரில் போட்டியிட்ட போது கூட நான் ஓட்டுக்கெல்லாம் பணம் கொடுக்கவில்லை. என்னைச் சேர்ந்த சில முன்னாள் எம்எல்ஏக்கள் எடப்பாடி பழனிசாமி ஓட்டுக்கு 6 ஆயிரம், 10 ஆயிரம் கொடுத்ததால் அதற்குப் பயந்து போய் பார்த்த இடத்தில் ஒரு பத்திருவது வீடுகளுக்கு டோக்கன் ஏதோ கொடுத்ததாக தகவல் வந்தது. ஆனால் அதை நான் நிறுத்தி விட்டேன். ஆனால் எல்லாரும் டோக்கன் கொடுத்தார் டோக்கன் கொடுத்தார் என்று சொல்கிறார்கள். இங்கே இந்தத் தேர்தலில் யார் டோக்கன் கொடுத்தார்கள் என்று உங்களுக்குத் தெரியும். நான் தேனியில் நிற்பதால் மட்டும் சொல்லவில்லை தேனி மக்களுக்கு என்னை நன்றாகத் தெரியும். ஏற்கெனவே நான் எம்பியாக இருந்த பொழுது மக்கள் கேட்டதெல்லாம் செய்திருக்கிறேன். ஊர் பொதுக் காரியத்திற்கு அரசாங்கத்தின் மூலம் எல்லாம் செய்ய முடியாது. நான் அவர்களுக்கு தனிப்பட்ட முறையில் என்னால் முடிந்த அளவுக்கு செய்துள்ளேன். அதேபோல் தனி நபர்களுக்கு உதவி செய்திருக்கிறேன். கட்சி ஜாதி வித்தியாசம் இல்லாமல் உதவி செய்திருக்கிறேன்''என்றார்.