Skip to main content

கொலை வழக்கிலிருந்து திமுக முன்னாள் எம்.எல்.ஏ விடுதலை

Published on 26/02/2024 | Edited on 26/02/2024
Ex-DMK MLA acquitted in case

கொலை வழக்கிலிருந்து திமுக முன்னாள் எம்எல்ஏ ரங்கநாதன் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

சென்னை கொளத்தூர், காந்திநகர் பகுதியைச் சேர்ந்தவர் மாற்றுத்திறனாளி புவனேஸ்வரன். மெக்கானிக் தொழில் செய்து வந்த புவனேஸ்வரன் கடந்த 2012 ஆம் ஆண்டு ஜூலை மாதம் மர்ம கும்பல் ஒன்றால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டதில் நிலத்தகராறு தொடர்பாக இந்த கொலை சம்பவம் நடந்தது தெரியவந்தது.

இந்த வழக்கில் சையது இப்ராஹிம், செல்வம், முரளி உள்ளிட்டோருக்கு எதிராக விசாரணை நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. அதைத்தொடர்ந்து இந்த வழக்கில் வில்லிவாக்கம் தொகுதி முன்னாள் எம்எல்ஏ ரங்கநாதன் தூண்டுதலின் பேரில் தன்னுடைய மகன் கொலை செய்யப்பட்டதாகவும், தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிக்கையில் அவருடைய பெயர் இல்லை எனவே இதை ரத்துசெய்து, இந்த வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டும் என புவனேஸ்வரனின் தந்தை சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.

இதனை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், குற்றப்பத்திரிக்கையில் முரண்பாடுகள் இருப்பதால் அதனை ரத்து செய்து சிபிஐ விசாரணை நடத்த 2014 ஆம் ஆண்டு உத்தரவிட்டது. அதன் பிறகு முறையாக விசாரணை செய்யப்பட்டு திமுக முன்னாள் எம்எல்ஏ ரங்கநாதன், சையது இப்ராஹிம், செல்வம், சதீஷ், முரளி, குமார், தணிகாசலம் உள்ளிட்ட 12 பேர் மீது சிறப்பு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.

சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள எம்எல்ஏ, எம்பிக்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம் மன்றத்தில் விசாரணை நடைபெற்றது. இந்நிலையில் இந்த வழக்கில் நீதிபதி தீர்ப்பளித்துள்ளார். அதில் முன்னாள் எம்எல்ஏ உட்பட அனைவரும் விடுதலை செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசு தரப்பில் சாட்சிகள் முழுமையாக நிரூபிக்கப்படவில்லை எனக் கூறி நீதிபதி கே.ரவி தன்னுடைய தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார்.

சார்ந்த செய்திகள்

Next Story

மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த தந்தை; நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
Father sentenced to life imprisonment for misbehaving with daughter

திருச்சி மாவட்டம் துறையூர் வட்டம் பகுதியைச் சேர்ந்தவர் 64 வயதான விவசாயி. இவருக்கு 35 வயதில் மாற்றுத்திறனாளி (மன நலம் பாதிக்கப்பட்ட ) ஒரு மகள் இருந்தார். கை, கால்களும் செயல் இழந்த அந்த பெண் தனது தாயாரின் பராமரிப்பில் இருந்து வந்த நிலையில் அவரது தாயார் இறந்து விட்டார்.

இதனையடுத்து தனது தந்தை மற்றும் பாட்டியின் பராமரிப்பில் இருந்து வந்தார். இந்நிலையில் கடந்த 2021 ஆவது ஆண்டில் பெண்ணின் உடல் நிலையில் மாற்றம் ஏற்பட்டதையடுத்து, மருத்துவ பரிசோதனை மேற்கொண்டனர். இதில் மாற்றுத்திறனாளியான அந்த பெண் கர்ப்பமாக இருந்தது தெரியவந்தது. இது குறித்து அவரது உறவினர்கள் முசிறி மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தனர்.

இதைத்தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டதில், தந்தையான விவசாயியே அவரது மகளை 2020 ஆம் ஆண்டு டிசம்பர் 19 ஆம் தேதி பாலியல் தொல்லைக்கு உள்ளாக்கிய விவரம் தெரியவந்தது. இதனையடுத்து அவரை போலீஸார் கைது செய்தனர். அடுத்த சில மாதங்களில், பெண்ணுக்கு குறை பிரசவத்தில் குழந்தை இறந்து பிறந்தது. மேலும் 5 மாதங்கள் கழித்து உடல் நலம் மிகவும் பாதிக்கப்பட்ட நிலையில் அந்த பெண்ணும் உயிரிழந்தார்.

இதுதொடர்பான வழக்கு திருச்சி மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் தொடரப்பட்டு நடந்து வந்தது. வழக்கில் வியாழக்கிழமை தீர்ப்பளிக்கப்பட்டது. இதில், குற்றம் நிரூபிக்கப்பட்டதையடுத்து விவசாயிக்கு வாழ்நாள் சிறை தண்டனையும், ரூ. 10,000 அபராதமும் விதித்து நீதிபதி ஸ்ரீவத்சன் தீர்ப்பளித்தார். இந்த வழக்கில் அரசுத்தரப்பு சிறப்பு வழக்குரைஞராக ஜாகிர் உசேன் ஆஜரானார்.

Next Story

வீடியோ காலில் பேசிக் கொண்டிருந்த மனைவியின் கையை வெட்டிய கணவன்!

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
husband cut the hand of his wife who was talking on video call

வேலூர் மாவட்டம் குடியாத்தம் பிச்சனூர்பேட்டை பகுதியை சேர்ந்தவர் சேகர் (41 ) நெசவுத் தொழிலாளி இவரது மனைவி ரேவதி (வயது 35) இவர்களுக்கு மூன்று மகள்கள் உள்ளனர். இரண்டு மகள்களுக்கு திருமணம் ஆகிவிட்ட நிலையில் மூன்றாவது மகள் பள்ளியில் படித்து வருகிறார் .

இந்த நிலையில் ரேவதி கடந்த சில மாதங்களாக சமூக வலைத்தளங்களில் ரீல்ஸ் பார்ப்பது, போட்டோ போடுவது, ஆன் லைன் நண்பர்களுடன் பேசுவது என அதிக அளவு நேரம் செலவிட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதனால் கணவன் மனைவிக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டு  குடும்பத்தில் சண்டை நடந்து வந்ததாக கூறப்படுகிறது.

நேற்று இரவு ரேவதி வீடியோ காலில் நண்பருடன் பேசிக் கொண்டிருந்தார். வீட்டுக்கு வந்த சேகரை கவனிக்காமல் மனைவி பேசிக்கொண்டே இருந்ததால் ஆத்திரம் அடைந்த சேகர் ரேவதியை கண்டித்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து இருவர்களுக்கும் இடையே வாய் தகராறு ஏற்பட்டது. இதில்  ஆத்திரமடைந்த சேகர் வீட்டிலிருந்த அருவாமனையை எடுத்தவர், இந்த கை தானே போன் எடுத்து பேசிக்கிட்டே இருக்குது, ரீல்ஸ் பார்க்கச்சொல்லுது, பேசச்சொல்லுது என ரேவதியின் வலது கையை வெட்டியுள்ளார்.

கையில் வெட்டுப்பட்டதால் அலறிய ரேவதியை அக்கம்பக்கத்தினர் மீட்டு குடியாத்தம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். வெட்டப்பட்ட கை பலத்த சேதம் அடைந்த நிலையில் அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல்சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து குடியாத்தம் நகர போலீசார் வழக்குப்பதிவு செய்து, சேகரை அழைத்துவந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அதில், குடும்பத்தை கவனிக்காமல் எப்போது பார்த்தாலும் போன் வைத்துக் கொண்டு யாருடனாவது பேசிக்கொண்டே இருக்கிறார். அல்லது ஏதாவது பார்த்துக் கொண்டே இருக்கிறாள். இதைக்கேட்டதற்கு என்னை எடுத்தெறிந்து பேசினாள். இதனால் குடும்பத்தில் அடிக்கடி தகராறு வர ஆரம்பித்தது அந்த கோபத்தில் தான் வெட்டினேன் எனக் கூறியுள்ளார்.